இது விவசாய நாடல்லவா....!!



இந்தக் காணொளி, சில மாதங்களுக்குமுன் நமது அரசு பேருந்து ஒன்றில் பயணாமாகையில் மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே கண்ணில் பட்ட ஒரு காட்சி! (மொபைலை நிற்க வைத்தாற்போல் படம்பிடித்து உங்கள் கழுத்தை சாய்த்துப் பார்க்கவைத்துத் துன்புறுத்திய மோசமான கேமராமேன் அடியேன்தான்!)

சண்டைபோட்டு இடம்பிடித்த பேருந்து ஜன்னலோரம்  நான் கண்ட காட்சியின் பின்னணியை விவரித்து விடுகிறேன்...

புஷ்பேக்... செமி ஸ்லீப்பர்.. வால்வோ டீலக்ஸ் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத நம்மூரு சாதாரண‌ அரசுபேருந்து ஒன்றில் (வத்தலகுண்டு டூ  மதுரை) வந்துகொண்டிருந்தேன்...  இந்தவருடம் வடகிழக்குப் பருவமழை பொய்க்காது தினமும் மாரி பொழிந்துவந்ததே அந்த மழைக்காலத்தின் ஒரு மதிய நேரமது..... வாடிப்பட்டியைத் தொட்டு முடியும் ஹைவே ஒன்று இருக்கிறதல்லவா.... அதில் ஏறுமுன் எதிர்கொள்ளும் ஒரு ரயில்வே லெவல் க்ராஸில் எங்கள் வண்டி காத்திருக்க..... பைபாஸில் இருந்து ஊருக்குப் பிரியும் சாலையில் காற்றுள்ள திசையில் நெல் தூற்றிக்கொண்டிருந்தார்கள் விவசாயிகள்...

வீடியோவில் தெரியும் அந்த அக்கா... அவரருகே இருக்கும் அந்த காவிநிற பக்கெட்டில் நெற்களை இட்டுவைத்து, அழகாகக் காற்றடிக்கும் திசைக்கேற்ப‌ லாவகமாய்ப் பிடித்தவாறு நெற்பயிரை சிதற்றிக் கொண்டிருந்தார்... உமியெல்லாம் காற்றில் பறக்கும் விதமாக‌...!!
.
காற்றின் திசைமறித்து எங்கள் பேருந்து நின்றமையால்... அந்தம்மா விசிறிவிடும் உமித்துகள்களெல்லாம் ஜன்னல் வழியே எங்கள்மேல் விழத்துவங்கியது..... வேகவேகமாக ஜன்னல்களை மூடிக்கொண்டோம்.....

"யம்மா... யம்மா.... நாங்க போனப்புறம் புடைங்க... பஸ்ஸுக்குள்ள நுழையுதுல்ல.."

எனக் குரல் கிளம்பியது..... சகோதரியோ பதில் சொல்லவெல்லாம் மெனக்கிடாமல், உமித்துகள்களைக் காற்றில் துமிப்பதை நிறுத்த முனையாமல்....அலட்டிக்கொள்ளாதவராய், பக்கெட்டிலிருந்து (காணொளியில் அவர் கையிலிருக்கும்) சொளவிற்குக் கைமாற்றிப் புடைக்கத் துவங்கினார்!!

அப்போதும் எங்கள் பஸ்ஸுக்குள் துகள்கள் பரவ... ஒரு கூட்டம் அந்தம்மாவை பேருந்து கடந்து செல்லும்வரை வேலையை நிறுத்திவைக்குமாறு குரல் உயர்த்தியது.... அதற்கு வண்டிக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்களால்தான்  புரிந்துகொண்டேன் இந்தியா ஒரு விவசாய நாடு என்று!!

கிராமத்தை பாரதிராஜா சினிமாவில் பர்த்தறிந்த என்போன்றோருக்கு நாங்கள்தான் அவரது வேலைக்கு இடையூராக நின்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்திருக்கவில்லை,  பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் 'மண்ணின் மைந்தர்கள்' அந்தப் பெண்ணின் 'வொர்க் ப்ரஷரை' நேட்டிவிட்டியோடு எடுத்தியம்பும்வரை!!

காணொளியில் முடிந்தவரை உரையாடலைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறேன்....!

" வண்டி போனப்புறம் புடைங்கம்மா யம்மா....."

" வீட்டுல போய்ப் புடைக்க வேண்டியதுதானே.." (யாரிந்த முதலமைச்சராகும் தகுதியுடைய அறிவாளி என்று தெரியவில்லை!!)

ப்ஸ்ஸிக்குள்ளிருந்தே கிளம்பிய பிரதிவாதத்தைப் பாருங்கள்...... :)

" யய்யா.. மழைக்கு முன்னாடி அவுக சோலிய முடிக்கணும்யா... களத்த விட்டுப்புட்டு வீட்டுக்குப் போயா தூத்துவாக??..... செத்த சன்னல மூடிக்குங்க ... ரயிலு போய்க்கிடட்டும்...."

" நாங்களும் வெவசாயம் செய்யுறவகதேன்.... செத்தப் பொறுத்துங்கப்பூ... யம்மா குறவுத் தூரம் தள்ளிப்போய் புடைக்கப் பாரும்மா.... நாங்களும் இன்னும் கொள்ளத் தொலவு போகணுமில்லே...."

ஆகா.... மண்மணம் கமழ ஓர் உண்மை காட்சியானது கண்முன்!!

பேக்ரவுண்டில் பழைய தூர்தர்ஷனின் "வயலும் வாழ்வும்" திருக்குறள் பாட்டு எம்.எஸ்.வி யின் குரலில் ஒலித்தது மனதுக்குள் எனக்கு!! (ஞாபகம் இருக்குதா??!!)

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை"

பொருள்:  உலகம் பலதொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும்
 ஏர்த்தொழிலே சிறந்த்து!!

அன்புடன்,

ஃபெவிகால் விளம்பரங்கள்...




பள்ளிக்கூட நாடகம் ஒன்றில் குட்டிமீசை ஒன்றை ஒட்டிக்கொண்டு வாள்வீசும் சிறுமி... அதே மீசையோடே படித்து... மீசைக்காரியாய் வாழ்க்கைப்பட்டு... அதே மீசையுடன் தலைசீவி..கிழவியாகி செத்துப்போய்... மீண்டும் அதே மருத்துவமனையில் அதே ஒட்டுமீசையுடன் பிறக்கும் (!)
 ஃபெவிகாலின் விளம்பரப் படத்தை ரசித்தீர்களா!! :))



இதுமட்டுமல்ல... ஃபெவிகாலின் விளம்பரங்கள் எல்லாமே சுவாரஸ்யமானவைதான்!!

கோழிமுட்டைகளை வரிசையாக உடைத்து உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருப்பார் ஒரு பெரியவர்... ஒரு முட்டை மட்டும் ஓங்கியடுத்தும் உடையாது சுத்தியால் அடித்தும் தப்பித்து ஓடும் முட்டை இடித்து குடத்தில் ஓட்டை விழுந்து நீர் ஒழுகும் (என்னா வில்லத்தனம்!!)..... அதிசியத்தில் அண்ணார்ந்து பார்த்தால் ஒரு ஃபெவிகால் டப்பாவின் மேல் தீணியைக்க் கொறித்துக் கொண்டிருக்கும் கோழி...!!



ஒரு வண்டியில் ஓர் ஊரே ஒட்டிக்கொண்டு பயணிக்கும் பின்னால் பார்த்தால் அது ஃபெவிகால் வண்டி!! இதெல்லாம் உச்சக்கட்ட சேட்டை!!



எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஃபெவிகால் விளம்பரப்படம் இந்த ராஜஸ்தானி படம்தான்!! ஒருமுறை ஏதோ மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இது ஒளிபரப்பப்பட் நானும் என் நண்பர்களும் தரையில் உருண்டு சிரித்தோம்!! கடைசியில் 'ஒட்டிக்கொள்ளும்' சிறுவனின் உடல்மொழி.. ஹாஹாஹா...



கேத்ரினா கைஃப் தோன்றும் இதுவும் செம்ம சேட்டையான கற்பனை...



இன்னும் ஒன்று...



இன்னும்கூட எத்தனையோ விளம்பரப்படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள் இதே "ஸ்டிக்கி" தீமிற்காக!!
ஒரே ஒரு தீம் ஐ வைத்துக்கொண்டு எவ்வளவு சிரிக்க வைக்கிறாய்ங்க!! எல்லாமே ஆரோக்யமான கற்பனைகள்!!

ஃபெவிகால் பற்றி யோசித்தபோது... "ஒட்டு" உலகின் ஒரே ராஜா பிடிலைட் நிறுவனத்தின் ஃபெவிகால்தான்....
யாராவது கடையில் சென்று, " ஒரு பாக்கெட் 'அதெஸிவ்' கொடுங்க" என்று எங்காவது இந்தியாவில் கேட்டிருப்பார்களா?? நேரடியாக "ஃபெவிகால்" என்று ப்ராண்ட் நேமைத் தான் கேட்போம்!! அந்தளவுக்குப் பொருளின் பெயரை மறந்து ப்ராண்ட் நேமே, ப்ராடக்ட் நேமாகிப் போயிருக்கிறது!! (இதேபோல் இன்னொரு உதாரணம் "டால்டா" என்று அழைக்கப்படும் வணஸ்பதி!!)


ஒருவேளை.. இந்த சுதந்திரம்தான் ஃபெவிகாலின் விளம்பரங்களைத் தனித்துவமான‌ அழகான கற்பனைகளாக வழங்க வழிவிடுகிறதோ!!


ஏனெனில் நமது விளம்பரங்கள், போட்டி என்கிற பெயரில் அடுததடுத்த ப்ராண்ட்களுடன் தங்களை அப்பட்டமாக கம்பேர் செய்துகொண்டேதான், பாதிக்குமேல் தரமிழந்து போகின்றன!!

எனக்கு அல்சரைக்காட்டிலும் அதிகமாய் வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொள்ளும் விளம்பரம் "ஃபேர் அன்டு லவ்லி" விளம்பரம்தான்!! அவர்களின் எல்லா விளம்பரங்களிலும் ஒரு சப்பை ஃபிகர் (மன்னிக்கவும்)  திறமைகளோடு கவனிப்பற்றுக் கிடப்பாள் அவளுடைய மானங்கெட்ட அப்பனோ அல்லது வீணாப்போன தோழியோ ஒரு "ஃபேர் அண்டு லவ்லி" ட்யூபைக் கையில் கொடுக்க, அடுத்த ஏழே நாட்களில் அவள் சூப்பர் ஃபிகராகிவிடுவாள் அவளை எல்லாரும் சைட் அடிக்க அவள் குடும்பமே பூரித்துப் போகும்!!

"சைண்ட் கோபைன்" (Saint-Gobain Glasses) கண்ணாடிகளின் விளம்பரங்களும் கைதட்டி விசிலடிக்கவைத்த‌ ரகங்கள்....

மேலும் பலப்பல அழகான கற்பனைகளால் மின்னும் குட்டிக் குட்டி விளம்பரப் படங்கள் யூ டியூப் எங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன... பார்த்து ரசிக்கலாம்.... :)

ஐம்பது வருட விற்பனை சாம்பியனாக இருப்பதாகத் தன் லேட்டஸ்ட் விளம்பரத்தில் பெருமையுடன் அறிவிக்கும் பிடிலைட்டின் "ஃபெவிகாலு"க்கு வாழ்த்துக்கள்!!!!


மகிழ்வுடன்,

இது சேவாக் ஸ்டைல் :-)



"ஆறடி உயரம்.... டயர்டே ஆக மாட்டான்.. பந்து எங்க குத்தும் எப்படி எகிறும் எதுவுமே தெரியாது.... 140 கிமீக்கு அஸால்டா பவுல் பண்ணுவான்.... பிட்சு வேற சரியல்ல... இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்..... ரெண்டு நாளைக்கு பேட்டிங் பண்ணனும் ...தோத்துட்டா நம்பர் ஒன் ஸ்பாட் போயிடும்... கேர்ஃபுள்...கேர்ஃபுள்...."

இப்படி எச்சக்கச்சமாய் பில்டப்புகள் கொடுத்துக்கொண்டே போனாலும்  அலட்சியமாய்  இடைமறித்து "ஹலோ....சப்ப மேட்டர்..." என்று ஸ்டீய்னின் பந்தில் ஒரு பவுண்டரியை சுழற்றினால் அவர்தான் வீரேந்திர சேவாக்!!!

டெல்லி தந்த டேர்டெவில்.... கல்லியில் சிக்காத ஓப்பனிங் புயல்... (விகடன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன் அவ்ளோதான்!!)

சச்சினின் முதுகுவலி ஒட்டுமொத்த தேசத்துக்கே தலைவலியாக இருந்த சமயம்.... அதிரடி சச்சின் இல்லாமல் ஓபனிங் இறங்கிய கங்குலியைப் பார்க்கவே பாவமாய் இருந்தது...... திடீரென உடன் இறங்கிய சேவக், ஏதோ அதிரடி காட்சிகளில் சச்சினுக்கு "டூப்" போடுபவர் போல் கிட்டத்தட்ட அதே பாவனையில் அவரை விட அதிவேகமாக பவுலர்களைப் பிரித்து மேய்ந்து 60+ பந்துகளில் சதம் தொட்டுக் காட்டினார்!!

ஆரம்பத்தில் சச்சினின் ரெப்ளிகாவாகவே பார்க்கப்பட்ட சேவக் பின்னாளில் கிரிக்கெட் பேட்டை வைத்து பிட்சில் டென்னிஸ் எல்லாம் ஆடிக்காட்டினார்..... எம் ஆர் எஃப் பேட்டில் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட மரண அடியை புதியதொரு ஹீரோ ஹோண்டா பேட் வழங்கி வறுத்தெடுக்கத் துவங்கியது....

" இந்தியாவின் கேப்டனாகும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்..." என்று,  இந்திய அணியில் ஜொலிக்க ஆரம்பித்திருந்த காலத்திலேயே, முத்துதிர்த்து சர்ச்சையைக் கிளப்பியவர்... சமீபத்தில் தோணிக்குப் பதிலாக வங்கதேசத்தொடரில் ஒரு டெஸ்ட்டுக்குத் தலைமை தாங்கியபோது "வங்கதேசம் பலவீனமான அணி அவர்களால் இந்தியாவின் இருபது விக்கெட்டுகளை வீழ்த்தவியலாது எனவே தொடரை வெல்வது எளிது" என்று குட்டையைக் குழப்பினார்!!

பொதுவாக 99க்கும் 98க்கும் ஒரு ரன்தான் வித்தியாசம் ஆனால் 100க்கும் 99க்கும் ஒரு மைல்கல்லின் வித்தியாசம் உண்டு என்பது பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டின் நியதி!! நம்ம ஆளோ... 90க்குள் நுழைந்துவிட்டாலே எதிரணி மாற்றியமைக்கும் ஃபீல்டிங் வியூகங்களுக்கும், ஒவ்வொரு ரன்னுக்கும் ஆர்ப்பரிக்கும் ஆடியன்ஸ் அலறலுக்கும் எரிச்சல் பட்டு சனியன் பிடித்த சதத்தை சீக்கிரம் கடக்க்கிறேன் பார் என்று சிக்ஸருக்காக க்ரீஸைவிட்டு இறங்கி வரும் ஒரு தனி ரகமான ஆள்!!

எனக்கு சேவக்கைப் பிடிக்கும்.... முற்குறிப்பிட்ட அவரின் பேச்சுக்கள் "திமிர்" என்று வர்ணிக்கப்பட்ட போது கூட வங்கதேச அணி தற்போதைய  இந்திய அணியுடன் பார்க்கையில் ஒரு வலுவிழந்த அணி என்பது நிதர்சனம் தானே!!
கேப்டனாகும் ஆசையும் யாருக்குத்தான் இருக்காது!! அதை முன்கூட்டியே அறிவிப்பதில் "தவறு" என்று என்ன இருக்கிறது??

மேலும் பொதுவாக இப்படியெல்லாம் பேசுவது நம்மேல் நாமே சுமையைக் கூட்டிக்கொள்வது என்பதுதான் உண்மை!!
கேப்டனாகும் தருணத்திற்குக் காத்திருப்பதாக வந்த புதிதிலேயே பரபரப்பைக் கிளப்பிவிட்டு அடுத்த சீரீஸிலேயே அணியிலிருந்து நீக்கப் பட்டால் காலாகாலத்துக்கும் "டம்மி பீஸா"க நேரிடும் என்பதை அறிந்திருக்க மாட்டாரா?

 "வங்கதேசத்தால் இருபது விக்கெட்டுகளை  வீழ்த்த முடியாது" என்று வம்பிழுத்த அடுத்த நாளே இந்தியாவின் பத்து விக்கெட்டுகளை மளமள வென வீழ்த்திக் காட்டியது வங்கதேசம்..... அப்போதும் தன் முரட்டு பாவனையை மறைத்துக்கொள்ள முனையவில்லை சேவாக் .. அன்றைய ப்ரஸ்மீட்டிற்கு இணக்கமாக சச்சினை அனுப்பிவைத்தது அணி!! (சச்சின் அழகாக சமாளித்தது அவர் ஸ்டைல்!) அடுத்த இன்னிங்ஸில் சுதாரித்துக் கலக்கியது இந்தியா.. சேவக்கும் பேட்டிங்கில் கலக்கி கம்பீரமான கேப்டனாக நடந்து வந்தார் :)

பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டித் தப்பிப்பிழைப்பதைப் பரிந்துரைக்கும் இன்றைய அவசர உலகில் புலிவாலை விரும்பிப் பிடிக்கும் சேவக்குகளையும் உலகம் ரசிக்கத் தவறுவதில்லை...!! They're Entertainers!!

 I mean.....There's no harm to try doing a Sehwag in our lives, at times, when there's room.... ;)

ப்ரியமுடன்,

குழந்தைகள் மனநலம் : மதுரை கருத்தரங்கம்

அந்த அருமையான மாலை வேளையில் நம் பதிவுலக நண்பர்களுடன் நானும் இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!

ஒருவேளை, அன்று இரவு நான் சென்னைக்குப் போக வேண்டியதைக் காரணமாகக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றிருக்கலாம்.... அதன்பின் கருத்தரங்கைப் பற்றிய நண்பர்களின் இடுகைகளில் படித்துவிட்டு வரமுடியாமல் போனதற்காக‌ தூர்தர்ஷன் போல "வருந்துகிறேன்" என்று ஸ்லைடு போட்டிருக்கலாம்... ஆனால் அப்படி நேர்ந்திருந்தால் எத்தனை அற்புதமான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று கலந்துகொண்டபின்புதான் புரிந்துகொண்டேன்!! அப்படிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும், எனவே ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்பான நண்பர்களின்  இடுகைகளைப் படித்துவிட்டேன் என்றாலும் இங்கு நானும் ஒரு பார்வையாளனாகப் பதிய விழைகிறேன்....

அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹால்... கல்லூரி வாழ்வின் பல ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளப்பியது..... முதன்முதலில் ஒரு சின்ன உரையாற்ற வாய்ப்பளித்த இடம் எனக்கு!!.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்!! ஓகே நோ   ஃப்ளாஷ்பேக்ஸ்......

கருத்தரங்கைப் பொறுத்தவரை  நான் செய்த ஓர் உருப்படியான காரியம் ,"குழந்தைகள் மனநலம்"... சிறுவர் சிறுமிகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு என்ற‌ தலைப்பை அறிந்ததுமே, என் அம்மாவை என்னுடன் அழைத்து சென்றதுதான்!! குழந்தைகளின் பரிட்சை மார்க்குகளைவிட அவர்களின் மனநலத்தில் அதிக அக்கறை கொண்டு முப்பது வருடம் குழந்தைகள் உலகில் ஆசிரியையாகப் பணியாற்றியர் அல்லவா... அதனால் தலைப்பைச் சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார்...மிகுதியான‌ மனநிறைவுடன் இருவரும் வீடு திரும்பினோம்!!

டாக்டர் ஷாலினி....

பொதுவாகஓர் இதய சிகிச்சை நிபுணரோ அல்லது  ஒரு மூளை நரம்பியல் நிபுணரோ வந்து மனித உடலைப் பற்றியும், உள்ளுறுப்புகளையும் பற்றி ஓர் உரையாற்றுகிறார் எனில் அதற்கான வரவேற்பும் சரி... தயாரிப்பும் சரி முற்றிலும் "ஒன்வே ட்ராஃபிக்" காகத்தான்  இருக்கும்.... ஏனெனில் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றியெல்லாம் ஹார்ட் அட்டாக்கோ, நியூரோ ப்ராப்ளமோ வராமல் நாம் கூகுளில் கூடத் தேட‌மாட்டோம்...

ஆனால் "மனநலம்" பற்றி இன்றைய‌ காலகட்டத்தில் கருத்தரங்கம் வழங்குவது நிச்சியம் சவாலனது... ஏனெனில் ஒரு சிறுகதையில்கூட‌ "சைக்கலாஜிக்கல் டச்" வைக்கும் காலமிது....
டான்ஸ் ஷோவில்கூட "கெமிஸ்ட்ரி"க்குதானே  பத்து மார்க் கிடைக்குது!!!
 கனவுல காளமாடு முட்டுச்சுன்னு சொன்னால்,  என் நண்பன் , "மச்சான் இதுக்கு ஃப்ராய்டு என்ன விளக்கம் சொல்றாருன்னா..." என்று தாடையைச் சொறிய ஆரம்பிக்கிறான்......அந்த  அளவுக்கு "மனநலம்" சார்ந்த கருத்துகளும், புத்தகங்களும், சொற்பொழிவுகளும் மலிந்துகிடக்கின்றன...

சீரியல் ரேப்பிஸ்ட் ஒருத்தன் போலீஸிடம் சிக்கினால் நம்ம "ஜூவி", "ரிப்போர்ட்ட"ருக்கெல்லாம் ஏக குஷியாகி வக்கிரம் சொட்ட வர்ணித்துவிட்டு டாக்டர். நாராயணரெட்டியிடம் கருத்துகேட்டு அவற்றை "மனவியல் ரீதியாக‌"  அணுகும் (கொடுமடா சாமி!!) அன்றாடக் கூத்துகளுக்கு மத்தியில்.....

கல்வியாளர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் முன் ஒரு தேர்ந்த "உளவியல் மருத்துவராக" டாக்டர். ஷாலினி, அன்றாட வாழ்வின் உளவியல் நிதர்சனங்களுக்கு சாதாரண உடற்கூறு சார்ந்த காரணங்களில் தொடங்கி... ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசம்வரைதொட்டு விளக்கி எங்களையெல்லாம் கட்டிப்போட்டு  மனித மனத்தின் படம் வரைந்து பாகம் குறித்த பாங்கிற்கு ரசிகர் மன்றமே வைக்கலாம்!!

"குட் டச், பேட் டச்" என்று பேசத் துவங்கியதுமே "எங்களைப் (மனநல மருத்துவர்கள்) பொறுத்தவரை எதுவுமே குட் என்றும் பேட் என்றும் கிடையாது என்ற டாக்டரின் துவக்கமே "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று திருக்குறள் சொன்னது!!

குழந்தைகள் என்று துவங்கி... மனித ஆண் மற்றும் மனிதப் பெண் என்று பிரித்து ... அவர்களின் தொடு உணர்வு சார்ந்த சைக்காலிஜிகளையெல்லாம் வெள்ளிடை மலையாகத் தெளிவுபடுத்தி.... விலங்குகளிட‌மிருந்து பரிணாம வளர்ச்சியினால் பிரிந்து வந்த மனிதப் பெண்  தன் உடல், தோல், உரோமங்கள் முதலியவைகளில் இயற்கைக்கு மாறாகக் கண்டிருக்கும் பரிணாம மாற்றங்கள்.... அதனால் அவளுக்கு ஏற்படும் ஸ்பரிசம் உள்ளிட்ட  விளைவுகள்..... அதன்மீதான கலாசாரப் பார்வைகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று விரிந்துகொண்டே சென்ற கான்செப்டை உளவியல் கூறுகளாக உள்ளடக்கி அன்றாடம் அவர் சந்திக்கின்ற‌, சிகிச்சை அளிக்கிற‌ பொதுமக்களின், அனுபவங்களை மேற்கோள்காட்டி டாக்டர். ஷாலினி அவர்கள் விளக்கியது, நிச்சியம் அவரின் துறை சார்ந்த மற்ற நிபுணர்களுக்குமே கூட சாத்தியமாவது சந்தேகமே!! விஷயங்கள் தெரிந்தாலும் விளக்கிச் சொல்ல வேண்டுமே..... கேட்போர் அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டுமே!!!

Hats off to you ma'am!!

Dr.  ஷாலினி சொன்ன விஷயங்கள் அதே ஆழத்தோடு நம் சமுதாயத்திற்குப் போய்ச்சேர்வது... குறிப்பாக நம் பெண்கள் சமுதாயத்தைச் சென்றடைவது அவசியம்... மொத்தக் கருத்தரங்கமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது... நிச்சியம் அது இன்னும் பலரை சென்றடையும் என்று நம்புகிறேன் மேலும் தூரத்தைப் பொருட்படுத்தாது "ஒரு சக பதிவராகவே என்னிடம் கலந்துரையாடுங்கள்" என்று ரொம்பவே தோழமையாக முன்வந்து தன் அழகான, ஆழமான உரையை வழங்கிய டாக்டரே தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சி மற்றும் வேறு மீடியாக்களின் வழியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.... என்ன... நம் மக்கள் கிசுகிசுக்களைப் படிக்கும் ஆர்வத்தையும், ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒருகாலத்தில் அவமதிக்கப்பட்ட ஆட்டத்திற்கு இன்று மூன்று பேர் உட்கார்ந்து மார்க் போடும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காட்டும் ஈடுபாட்டை இதுபோன்ற ஆரோக்யமான எழுத்துகளைப் படிப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும், யாருக்காகவும் அல்ல.... பேசுற பாஷை முழுசா பிடிபடாத.. தன்னோட உறுப்புகளுக்கு தனக்கே பெயர் தெரியாத உங்க‌ வீட்டு பிஞ்சுகளுக்காக...!!

குழந்தைகளுக்கு அவர்களின் உறுப்புகளின் பெயர்களை எப்போது சொல்லித்தர வேண்டுமோ அப்போதே உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்... விரசமான பெயர்களாக‌ அவற்றை அவர்கள் அறியாவண்ணம் உறுப்புகளுக்கு ஆங்கிலப் பெயரைச் செல்லிக் கொடுக்கலாம்...

குழந்தைகள் சில சமயங்களில் ப்ரைவேட் உறுப்புகள் மற்றும் ஆண் பெண் உடல் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைத்தனமாக விளையாடும் சில வில்லங்கமான விளையாட்டுகளை விளையாட எத்தணிக்கும் சமயங்களில் வன்மையாகக் கண்டித்து அதன் ஆர்வத்தை மேலும் தூண்டாமல்..... குழந்தைகள் தனியாக விளையாடும்போது பெற்றோர்களும் இணைந்து விளையாடுவதுபோல் கண்காணிக்கலாம்....

இவையெல்லாம் டாக்டர் சொன்னபோது எளிமையாகத் தென்பட்டாலும், எண்ணிப் பார்க்கையில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துபோய்க் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சென்ஸிடிவான விஷயங்களாகக் கவனிக்கப் பட வேண்டியவைகளாகவே தோன்றியது....

பெண்களுக்கு டிஃபென்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அப்படியே உல்டாவாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அவளை நம் கலாச்சாரம் தயார் படுத்தும் எதிர்மறையையும் கம்பீரமாகத் தெளிவு படுத்தினார்.....

குழந்தைகளுக்கு எதிராகப்போய் ஏனிது போன்ற வக்கிரங்கள் சில ஆண்களால் ஏற்படுகிறது?? என்னும் கேள்வியை அனைவருமே கேட்க மறந்திட... அவராகவே அந்தக் கேள்வியை எழுப்பி அதன் பின்னால் அமிழ்ந்துள்ள சைக்காலஜியை விளக்கினார்.... ஆண்கள் பொதுவாகவே குழந்தை முகமுள்ள பெண்களால் கவரப்படுவது என்னும்  இயல்புதான் இந்த அநீதிகளுக்கு ஆரம்பப்புள்ளியாக‌ அமைந்துவிடுகிறது என்று சிம்பிளாக சொன்னார் ஒரு மருத்துவராக :)

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு திறமான Root cause Analysஸாக‌... இதுமாதிரியான குற்றங்களுக்குக் கூட அதைப் புரிபவர்களைவிட  இந்தக் குற்றங்களுக்குக் காரணமான பின்னணியாக அமைகிற சில விஷயங்களைப் பக்குவமாக அடிக்கோடிட்டுக் காட்டியது அற்புதம்....

அதாவது ஆரோக்யமான இல்லறம் அமைந்தாலே இதுபோன்ற மிருகத்தனங்கள் பெரும்பாலும் தலைதூக்குவதில்லை.... என்று குழந்தைகள் மனநலத்தைப் பாதுகாக்க ப்ராக்டிகலாக ஏராளமான யோசனைகளை வழங்கியதோடு,  இதனை சமுதாயத்திலுருந்தே களையெடுக்க அடல்ட்களின் மனநலத்தின் அத்தியாவசியத்தைக் சுட்டிக்காட்டி முடித்து நிகழ்ச்சிக்கு ஒரு முழுமையைக் கொடுத்து முடித்துவைத்தார்!!

மனதார சொல்கிறேன் ஒரு பிரஜையாக.... டாக்டர். ஷாலினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :)

இந்த நிகழ்ச்சி தொடர்பான இடுகையில் நண்பர் கார்த்திகை பாண்டியன் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் சாத்தியமான நிகழ்வாக இதைக் குறிப்பிட்டிருந்தார்... நம் பதிவர்கள் சாதித்திருக்கும் ஓர் அரும்காரியமாக இது நடந்தேறியது என்று உரக்கவே கூறலாம் மார்தட்டி.....

வெறும் பார்வையாளனாக வந்து கலந்துகொண்டுவிட்டு முதல் ஆளாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.... கைக்கெட்டும் தூரத்தில் உன்னதமான ஒரு முயற்சி நடந்துகொண்டிருகுக்கும்போது அதில் பங்கெடுக்காது போனதற்காகத் தலைகுனிகிறேன்.... அடுத்தமுறை இதுபோன்ற முயற்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று இப்போது முகமறிந்த நண்பர்களாகிவிட்ட மதுரை பதிவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்...

பதிவர்களையெல்லாம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசியது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுத்தது... எழுத்தால், தமிழால் இணைந்த நண்பர்கள்.... பள்ளி, கல்லூரி தோழர்களைப் போல் யதார்த்தமாகப் பழகுவதைக் கண்டு ரொம்பவே கண் வைத்துவிட்டேன்!! என்னையும் ஒரு பதிவராக இணைத்துக் கொண்டு ஒன்றாக ஃபோட்டோவுக்கு நின்றோமே.... உண்மையாக அகமகிழ்ந்தேன்... அந்த புகைப்படத்தில் நிச்சியம் சிரித்த முகமாகத்தான் இருந்திருப்பேன் அது ஃபோட்டோவுக்கு சிரித்த சிர்ப்பல்ல.... மனமகிழ்ந்து முகம் மலர்ந்த தருணம் அது....

அதிகமான சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன்,

தூரம்


நிலாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அன்று அலுவலகத்தில்.... ஆளாளுக்கு ஒரு கதை.. ஒன்றிரண்டுபேர் கவிதைகூட சொன்னார்கள்....

திடீரென ஒரு யதார்த்த கேள்வி வந்து விழுந்தது....  

"இவ்ளோ பேசுறோமே... நேற்றிரவு நிலவை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருப்போம்.. கடைசியாக நிலவைப் பார்த்த நாளாவது நமக்கு நினைவிருக்குமா?" 

துபாயில் உடன் பணிபுரியும் சக சாஃப்ட்வேர் தமிழ் சகா ஒருவன் கேட்டபோது.... அங்கே முந்தைய நாள் பிறை நிலவைக் கண்டிருந்த ஒரே நபர் அவர்களின் மரியாதைக்குரிய சீனியர் பிரபாகர் மட்டும்தான்!!  

" ஊர்ல இருக்குற என் பொண்ணும் நானும் ஒண்ணா பார்க்க முடிஞ்ச‌ ஒரே நிஜப் பொருள் அதுதானே!!... தினமும் பார்ப்பேன்.. என் பொண்ணும் பார்ப்பா.... நான் ஊரைவிட்டு வரும்போதும் ஊர்ல இருந்து இங்க வரைக்கும் கூட வர்றதும் அதுதானே!! அதுனால தினம் பார்ப்பேன்... ரொம்ப ஓவரா இருக்கோ!!" ஒரு சிரிப்புடன் முடித்தார்....  

கலகலப்பான ஆள்தான் என்றாலும் இரவு நேரங்களில் ரூம்மேட்களிடம்கூட அதிகம் பேசுவதில்லை பிரபாகர்... 
பதினான்காவது மாடியில் இருக்கும் அவர் வீட்டு பால்கனியில் நின்று வானத்தையும், துபாயின் இரவு நேர ஜொலிப்பையும் வெறித்த வண்ணம் சில நிமிடங்கள் கழித்தபின்தான் உறங்கச் செல்வார் தினமும்....  

கேட்டால் அமைதியைக் காதால் கேட்க முடியாது கண்களால்தான் பார்க்க முடியும் என்று சொல்வார்! 

உண்மைதான்.... இரவு நேர கருப்பு வானத்திடம் ஓர் ஆட்கொள்ளும் அமைதி உண்டுதானே.... கண்களால் அந்த அமைதியைத் தொடர்ந்து உள்வாங்க உள்வாங்க பூலோக இரைச்சல்கள் கவனத்தைவிட்டே கரைந்துபோகும்!! அந்த அமைதி ஒரு பொய்தான்... வானத்துப் பேரிரைச்சலைக் கேட்கும் தொலைவில் நாமில்லை என்பதால்தான் இந்த நிசப்தம்....!!

ஆம் தூரம் அமைதி தரும்.... தூரத்தில் இருப்பதால் பிரபாகருக்கு அழகான அவர் குடும்பத்தில் இரைச்சல்கள் எதுவுமில்லை...

தொடரும்....

(பி.கு : சிறுகதை ஒன்றை எழுதத் துவங்கினேன் அது இப்படியெல்லாம் விரிந்து சென்றது... எழுதிய வரை இன்று பதித்துவிட்டுச செல்கிறேன்.. நாளைக்குத்தான் தெரியும் இக்கதையின் தலைஎழுத்து!! சிறுகதையாகப் போகிறதா அல்லது சைஸ் கூடுமா என்று!! Anyways ur comments please....)


2010 : புதுசு கண்ணா புதுசு...!!


31 12 2009 23:59:57
31 12 2009 23:59:58
31 12 2009 23:59:59


01 01 2010 00:00:00

இந்த நொடி சிறப்பாகக் கொண்டாடப் பட்டது!! 

வான வேடிக்கைகள்... தூரத்து வெடி முழக்கம்... அதற்கு இணையாக பக்கத்து சர்ச்ச்சுகளின் கோஷம்..!! 1982ல் வெளியாகி கால் நூற்றாண்டு கழிந்துவிட்டாலும் அதே "சகலகலாவல்லவன்" கமல்தான் இவ்வருடமும் அதே பைக்கில் திரையைக் கிழித்துக் கொண்டு வந்து 'பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்.... பப்பாய்ங்" சவுண்டுடன் விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் என்று தெருவுக்குத் தெரு ஸ்பீக்கர்களில் பாடிக் கொண்டிருந்தார்!! பைக்கில் "வ்வ்ர்ர்ர்ர்ரூரூம்ம்" என்று ஹேப்பி நியூ இயர் சொன்னவாறே குட்டிக் குட்டி ஜாலி ஊர்வலங்களையும் காணமுடிந்தது.... நிச்சியம் ஓர் ஐநூறு பேர் "இன்று முதல்" குடிப்பதையோ, புகைப்பதையோ நிறுத்தியிருப்பார்கள்!! (மார்ச் மாதம் கொஞ்சம் கொஞ்சமாய் அத்தனை பேரும் பேக் டு ஃபார்ம் ஆகிவிடுவது வரலாறு!!)

எங்கும் மகிழ்ச்சி... செல்ஃபோன் சிணுங்கல்கள்... எல்லாமே மெல்ல மெல்ல அடங்கிப்போக பூமி சலனமில்லாமல் அடுத்த ரவுண்டைத் துவங்கிவிட்டது!! 2010ல் இரண்டு மணி நேரங்கள் ஓவர் பிரதர்!! என்று என்னைப் பார்த்து சிரிக்கிறது வீட்டுக் கடிகாரம்!! :)

கைமேல் 365 புத்தம் புதிய நாட்கள்... புதிய சிந்தனைகள்... மகிழ்வான துவக்கம்.... நல்ல வார்த்தைகள்... ஆசீர்வாதங்கள்... ஜனவரியில் வெயிலும் அதிகம் எறித்திடாத‌ வசந்தகாலம்... எனவே, நேற்று இரவு வரை அதிருப்தியிலும் தோல்வியிலும் வலித்திருந்தாலும்... மென்மையாக ஒரு புதிய துவக்கத்தைப் புதிய காலண்டரின் கவரைக் கிழித்துச் சுவரில் மாட்டி இனிதே துவங்கலாம் முதலிலிருந்து இன்று!!  

விடிந்தவுடன்... டிவிப் பெட்டியின் அர்த்தமற்ற "சிறப்பு நிகழ்ச்சிகளை"ப் பார்க்காமல், நம் வாழ்வில் இந்த வருடம் "மோஸ்ட் ப்ராபப்ளி " நடக்கப் போகும் "சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு"த் தயாராவோமாக‌..... !!  

இந்த வருடம் நிறைய நிறைய படிக்க வேண்டும் என்று சிரத்தையாக ஒரு முடிவெடுத்துள்ளேன்.... முதல் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டிய புத்தகங்களை நீண்ட காலமாய்த் தேக்கி வைத்திருக்கிறேன்... வாசிக்காமலும், பாதி வாசித்தும்!! நிறைய படிக்க வேண்டும்... நிறைய பார்க்க வேண்டும்... நிறைய நிறையப் பழக வேண்டும்.... சொல்கிறேன்... செய்ய வேண்டும்!! பார்த்த, கேட்ட, படித்தவை அனைத்தையும் பதிவுலகில் பகிர்ந்து கொள்வதும் செயல் திட்டத்தில் அடங்கும்... பார்க்கலாம் செய்கிறேனா என்று!! :)  

இந்தப் புதுவருஷம் நம்ம எல்லாரும் எல்லா விதத்திலும் மகிழ்ச்சியயும் நம் முனைப்பில் தெளிவும்.... இலக்குகளை நோக்கி உழைக்கப் போதுமான நேரமும், அத்தியாவசியமான மன நிம்மதியும் பெற்று, வெற்றிகளில் மயங்கிடாது, தோல்விகளில் துவண்டிடாது... இந்தப் புத்தாண்டு பிறப்புதின மகிழ்ச்சி அதிர்வுகளை இந்த ஆண்டு முழுதுமாக நாம் அனைவருமே எதிரொலித்திருப்போமாக!! :)  

ரொம்பவே சத்தமாக சொல்லிக்கொள்கிறேன்...
"ஹை எவரிப்டி ஐ விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்ர்ர்ர்" 
பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பப்பாய்ங்.... பப்பாய்ங்..... பப்பாய்ங்....!! :)  

அன்புடன்,


2009 சில வெற்றிகளும் தோல்விகளும்...



"எல்லாப் புகழும் இறைவனுக்கே.." என ஆஸ்கர் இரவில் தமிழ் ஒலித்த 2009ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மணித்துளிகள்தான் உள்ளன!!  

"இப்போ தான் புதுவருஷம் பொறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திருச்சு!!" எல்லாருமே ஒருமுறையேனும் கேட்டிருப்போம் இந்த வசனத்தை!! நம் வாழ்க்கைச் சுழல் பூமியின் சுழல் வேகத்தை விஞ்சி எங்கோ சென்றுவிட்டதன் விளைவு.. கடிகார நொடிமுள்ளும்... காலண்டர் தினங்களும் தடதடத்து ஓடும் பிரமை வருடந்தோறும் தொடர்கிறது!!

எல்லா பக்கமும் ஜனவரி முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் விடாது அசைபோடப் பட்டுக்கொண்டிருக்கிறது!! ஒட்டுமொத்தமாகக் கடந்த 365 நாட்களில் பதிவுகொள்ளப் பட்ட வெற்றி, தோல்விகளின் மொத்தக் கணக்கை உலகம் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை... இதில் என் கவனத்தைக் கவர்ந்த சில வெற்றிகளையும் தோல்விகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.....  

அதற்குமுன் ஒரு விஷயம்....

இந்த வெற்றி, தோல்விகளுக்கு இடையே, இந்த வருடம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம் ஒன்று உள்ளது.... "வென்றது என்று அறிவிக்கப் படுவதெல்லாம் வெற்றியல்ல... " என்பதுதான் அது... !! 

ஆம்... வெற்றிகளிலேயே பலவகைகள் உண்டு.. அதிலும் சுத்தமான சில வெற்றிகளும், பெருமைக்குரிய சில‌ தோல்விகளும் உலகில் உள்ளன என்பதை முன்பைவிட ரொம்பவே தெளிவாக உணர்ந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது இந்த வருடம்தான்!! 

இனி சில வெற்றிகளும் தோல்விகளும்...  

ஏ.ஆர் ரகுமான் ‍ - உன்னத வெற்றி :

"ரோஜா" காலங்களில் எஸ்.பி.பி ஒருமுறை ரஹ்மானிடம் "சாதிச்சுட்டப்பா.." என்கிற ரீதியில் பேசியபோது.. "இங்கே போட்டிகள் ரொம்பப் பெருசு... ஓர் ஐந்து வருடம் இந்தக் களத்தில் தாக்குப் பிடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்" என்று பதில் சொன்னாராம்..... அதே ரஹ்மானிடம் "உயிரே" சமயம் அதே கேள்வியை எஸ்.பி அவர்கள் மீண்டும் நினைவூட்டியபோதும் ரஹ்மான், " இறைவன் எனக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் பீரியட் கொடுத்திருக்கிறார் போல!" என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்!!  

ரகுமானின் கூற்று அவரது தன்னடக்கத்தைக் காட்டினாலும்.... அவர் சொல்லியிருப்பதில் ஓர் அழுத்தமான உண்மை உள்ளதை மறுக்க முடியாது! விடாத உழைப்பிற்கும், மங்காத திறமைக்கும் அவ்வப்போது கிடைக்கும் இளைப்பாறல்தான் "வெற்றிகள்" ஒரு வெற்றிக்கு செலவிட்ட உழைப்பு இன்னொரு வெற்றியைப் பெற்றுத்தராது!! அதைவிட அதிக உழைப்போடும் தேடலோடும் களத்தில் முன்பைவிட வேகமாக மீண்டும் முதலிலிருந்து துவங்கினாலே மீண்டும் வெற்றி கிட்டும்..... இதற்கு சரியான உதாரணம் ஏ ஆர் ரஹ்மான்!! 

முதல்படத்திலேயே தேசிய விருதுடன் ஆட்டத்தைத் துவக்கிய இசைப்புயல் அடுத்தடுத்து கண்டது வெவ்வேறு களங்கள்... முற்றிலும் வேறு இலக்குகள்... பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒவ்வொரு களத்தையும் சரியாகப் புரிந்துகொண்டுத் தன்னை அவற்றுக் கேற்றவாறு சிறிதும் பிசகாமல் மாற்றியமைத்துக் கொண்டு, உழைப்பிலும் தன் கவனத்திலும் சிறிதும் குறைவைக்காமல் அடுத்தடுத்த களங்களுக்கு வெற்றிநடையைத் தொடர்ந்த நம் ஏ ஆர் ரகுமான் நீண்ட நாட்களாக இந்திய சினிமா ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக அள்ளிக் கொண்டுவந்தார்!!.. அப்படி வந்தபோதும், தொடரும் தன் இசைவாழ்விலும் இன்னும் அதே ரகுமானாகத்தான் இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு!! வெற்றிகளாலும் தோல்விகளாலும் மாறாதவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கும் சரியான உதாரணம்: ஏ ஆர் ரஹ்மான்!! :) 

ரஹ்மானின் 2009ஆம் ஆண்டு வெற்றி குறுக்கு வழியின்றி முழுக்க முழுக்க உழைப்பால் பெற்ற உன்னதமான வெற்றி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது!!  

சன் பிக்சர்ஸ்!! - __________ வெற்றி  :

"கலாநிதி மாறன் வழங்கும்" என்று டைட்டிலுடன் இந்த வருடம் எட்டு படங்கள் வெள்ளித்திரையிலும் அதற்கு எட்டு லட்சம் டிரெய்லர்கள் சின்னத் திரையிலும் திரைகண்டன!! கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தனையுமே வெற்றிப் படங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை..!! அதாவது... ஒரு திரைப்படமானது எடுத்தவர்க்கும், எடுத்த படத்தை அப்படியே விலை கொடுத்து வாங்கியவர்க்கும் போட்ட காசைவிட ஏதாவது ஒரு வழியில் போட்டதைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தால் "வெற்றி" என்ற நியதி உண்மையென்றால் சன் பிக்சர்ஸின் படங்கள் எல்லாமே வெற்றிகள்தான்!! ஆனால் அதையும் தாண்டி "கனவு தொழிற்சாலை" , "கலைக்குடும்பம்" என்றெல்லாம் (ஒரு காலத்தில்) அழைக்கப் பட்டது நம் தமிழ் சினிமா... இப்போது சினிமா... ஜஸ்ட் பிசினஸ்!!  

இதுவும் வெற்றிதான் ஆனால் எப்படிப் பட்ட வெற்றியென்று நீங்களே கோடிட்ட இடத்தில் ஒரு வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள் (அந்த நேரமும் உங்கள் டி.வி "புலி உருமுது... புலி உருமுது.. " என்று மிரட்டிக் கொண்டிருக்கும்!!) 

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" - அழகிய வெற்றி :

(2009 தமிழ்ப்படங்களில் என்னுடைய ஹிட்லிஸ்ட்!!  

ரசித்துப் பார்த்தவை : " பசங்க", " யாவரும் நலம்" , "உன்னைப்போல் ஒருவன்" , " நாடோடிகள்" , "ஈரம்" மற்றும் சில..  

கொடுமைகள் : "கந்தசாமி", "வில்லு", "வேட்டைக்காரன்", "அயன்", "ஆதவன்", "படிக்காதவன்", "எஸ் எம் எஸ்" மற்றும் பல....)  

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" என்னைப் பொறுத்தவரை கோடம்பாக்கம் கொடுத்த அழகிய வெற்றிகள்!! (உன்னைப்போல் ஒருவன் ரீமேக் என்பதால் விடுபடுகிறது!!)  

"பசங்க" : 
தயாரிப்பாளர் சசிகுமாரின் அற்புதமான தேர்வு!! சசிகுமார் அன்ட் கோ வின் அலட்டிக்கொள்ளாமல் அடித்த‌ இன்னுமொரு அழுத்தமான வெற்றி!! உலக சினிமாக்களின் பாதிப்பு, எதையும் சாத்தியமாக்கிக் காட்டும் தொழில்நுட்பம், விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் புதிய மார்க்கெட்டிங் முறை என்று பல உக்திகளை நம்பிக்கொண்டு எங்கெங்கோ கதை தேடும் மற்ற மேக்கர்களுக்கு இடையே..... நமக்குள்ளும், நமக்குக் கொஞ்சம் தள்ளி அக்கம் பக்கத்திலும் புரளும் சாதாரண உணர்வுகளை மற்றும் சுற்றியுள்ள உலகு என்னதான் மாறினாலும் மாறாத ஒரே நிதர்சனமான சிறுவர் உலகை அப்படியே அச்சு அசலாகப் பிடித்துக் கொடுத்து பாண்டிராஜ் வெற்றிக் கோப்பையை லாவிக்கொண்டு சென்றது உண்மையிலேயே ரொம்ப அழகுதான்!!  

யாவரும் நலம்: "அயன்" போன்ற படங்களைப் பார்த்தபோது.... தமிழ்சினிமா டெக்னாலஜியின் வீச்சும், மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவமும் தெளிவாகத் தென்பட்டன.... அப்போது மனதில் பட்ட ஒருவிஷயம்..... 

"இப்போது நம்மிடம் இருப்பது புதுமையான, உலகத்தரம் வாய்ந்த கேமரா... அடுத்த தலைமுறை தொழில் நுட்ப சாதனங்கள், உலகத்தர நிபுணர்கள்... என எல்லாம் மாறிவிட்டது ஆனால் கதைகளை எழுத மட்டும் அதே அந்தப் பழைய பேனாவையும், கெட்டுப் போன இங்கையும் தான் தூக்கியெறிய மறந்துவிட்டோம்"  என்று தோன்றியது!  

ஆனால் முற்றிலும் புதிய கதையுடன் வந்து அடித்து ஜெயித்த விக்ரம்குமாரின் வெற்றியும் சந்தேகமில்லாமல் ஓர் அழகிய வெற்றிதான்!! நல்ல சினிமா எடுக்க‌ எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும், "திரைக்கதை" என்னும் மந்திரம் மட்டுமே போதுமானது அல்லது அதுதான் பிரதானமானது என்று ஓங்கியடித்துக் கூறிய படம்.. படம் ஹாலிவுட்டுக்குப் போகுதாமே... சிம்ப்ளி சூப்பர்ப்!! :)  

விஜய் - தொடர் தோல்வி  :

2009ல் ரொம்பவும் ரிவிட்டு வைத்தது திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்குதான் என நினைக்கிறேன்  

"வாழ்வின் பொருள் என்ன.. நீ வந்த கதை என்ன.."  

ஏனோ எனக்கு இந்த பழைய பாடல் வரிதான் நினைவில் ஒலித்தது விஜய் தன் அரசியல் முயற்சிகளை இந்த ஆண்டு அறிவித்தபோது!! 
ரஜினி, கமல் உட்பட எல்லா நடிகர்களுக்குமே சில வெற்றிகள்தான் அவர்களை நிலை நிறுத்தியிருக்கும்... ஆனால் தொடர் தோல்விகளால் நிலை நிறுத்தப் பட்ட ஒரே "ஸ்டார்" ஹீரோ விஜய் என்றுதான் நினைக்கிறேன்!! " நாளைய தீர்ப்பு" துவங்கி "காலமெல்லாம் காத்திருப்பேன்" வரைக்கும் தொடர்ந்து எத்தனை தோல்விகளைத் தாங்கினார் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்!! எப்படியோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்தாகி விட்ட நிலையில்.... ரொம்பவே அசால்டாக அரசியல் பக்கம் போய் அடிமேல் அடி வாங்கி இவ்வருடத்தை முடித்திருக்கிறார் விஜய்!! 

"ஒருதடவ முடிவு பண்ணிட்டா தன் பேச்சைத் தானே கேட்காத" போக்கிரியார், யார் பேச்சைக் கேட்டு "வில்லு", "வேட்டைக்காரன்" படங்களைத தேர்வு செய்தார் என்பதுதான் ஒரே கேள்வி.... அப்படி ஒருவர் இருந்தால் விஜய் அவரை, "தமிழ் நாட்டுல என்னை மரண அடி அடிச்ச மொத ஆள் நீங்கதாங்ணா.." என்று சொல்லி ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துக் கொள்ளலாம்..... விஜய்யைப் பொறுத்தவரை யாரு அடிச்சா பொறிகலங்கி பூமி அதிருரது கண்ணுல தெரியுமோ அதுதான் 2009!!  

தன் பொதுவாழ்வின் பெரிய தோல்விகளைத் தொடர்ச்சியாக‌ சந்தித்திருக்கிறார் விஜய்.... அவருக்கு 2010க்கு குட்லக்!! 

ராமதாஸ் - பலநாள் ஒத்திவைக்கப்பட்ட பெரிய தோல்வி

ஏனோ சிலர் தோற்கும்போது மனது சந்தோஷப் படுகிறது.... !! ஹி ஹி

ஒரு காலத்தில் ரஜினியுடன் வீண் மல்லுக்கட்டிய போது "ரஜினி ஒரு பலூன்.. "டொப்" அதன் காற்றைப் போக்கியாச்சு" என்று ஸ்டைலாக சொன்னவரின் நிலை "எப்புடி இருந்த நான் இப்புடி ஆகிட்டேன்" என்பதுதான்!! 

"சூரியன்" சுட்டு விட்டால் "அன்பு சகோதிரி" , "சகோதிரியுடன் சண்டையென்றால் மீண்டும் சூரியன்"என்றே இத்தனை வருடம் இருந்த தீராத தலைவலிக்கு, ஒருவேளை சூரியனும், இலையும் சேர்ந்து கைவிரித்தால் என்ன ஆகும்? என்று எப்படியோ 2009ல் கழகங்களுக்குத் தோன்றிவிட, கசப்பான மருந்து கொடுத்து தலைவலி அடக்கப் பட்டிருக்கிறது!! விளைவு...மாம்பழம் சீசனிலாமல் தவிக்கிறது.... 

ஜாதி அரசியல், மரங்களை வெட்டியது, கூட்டணி கேம் ஆடியது, மகனை அரசியலில் திணித்தது.. என அப்போதெல்லாம் தப்பித்து நீண்ட ஒத்திவைப்புக்குப் பின் மருத்துவருக்குக் கிட்டியிருக்கும் பெரிய தோல்வி இது....  

2010ல் மீண்டு வர வாய்ப்பு இல்லாமலும் இல்லை!! பார்ப்போம்!! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....  

அழகிரி - போட்டியில்லா வெற்றி

சினிமாவில் கலாநிதி மாறன் என்றால், இடைத்தேர்தல்களில் அழகிரி!!

2009 முழுதும் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்..... ஆனால் அவர் லேசாகத் தொட்டவற்றையெல்லாம் பின்னாலேயே பணமும், பவரும் அழுத்தித் தொட்டிருப்பதை மறைக்கவியலாது, மறைக்க யாரும் முயலக்கூட இல்லை!! 

காசு கொடுத்தால் மட்டும் வோட்டு விழுந்திடுமா?? ஏன் மற்றவர்கள் காசு கொடுத்ததில்லையா?? என்றெல்லாம் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன... பதில்... இவர் தேர்தலின்போது மட்டும் பாய்ந்துவிட்டு மற்ற நாட்களில் கொடநாடு போய்த் தூங்குவதில்லை... நல்லதோ கெட்டதோ 2009 முழுதும் விடாது எதிர்முகாம்களின் வேர்களில் வெந்நீரைப் பாய்ச்சிக் கொண்டேதான் இருந்தார்.... விளைவு.. கட்டதுரைகளெல்லாம் தாய்க்கழகம் திரும்பிவிட எதிர்த்தது எல்லாமே கைப்புள்ளகள் தான்!! 

கட்- அவுட் ஹீரோவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு பலமான வில்லன் யாரும் திரையில் வரவேயில்லை 2009ல்.... 2010ல் பார்ப்போம்... மதுரை தேர்தலில் இவருக்குத்தான் நான் வாக்களித்தேன் என்பது பின்குறிப்பு!!  

தோணி - ஆரோக்யமான வெற்றி

ப்ளேயர் ஆஃப் தி இயர் ICC விருதை 2008ஐத் தொடர்ந்து 2009லும் ஒருநாள் போட்டிகளுக்காகப் பெற்றிருக்கிறார் கேப்டன் கூல்!! கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நம்பர் ஒன் அணியாக இந்தியா டெஸ்ட் அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது.. கிரிக்கெட் என்பது பதினோரு பேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டு என்ற உண்மையையே இந்திய அணியும் சரி பிசிசிஐயும் சரி புரிந்து கொண்டது 2009ல் தான் என்று சொன்னாலும் தகும்!! இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தத்தை மொத்தமாகத் தானே தனியாக சுமந்து கொள்வதும், கேப்டன், விக்கெட் கீப்பிங் என்று பொறுப்புகள் இறுக்கினாலும் பேட்டிங்கில் இன்றும் வலிமை குறையாமல் பார்த்துக் கொள்வதும் தோணியின் ஆரோக்யமான வெற்றிக்கு அரிச்சுவடிகள்.... அப்படியே 2010லும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்!!  

இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன..... நேரமிருந்தால் 2009ன் இன்னும் சில வெற்றி தோல்விகளும் தொடரும்!!


புத்தாண்டு வாழத்துக்களுடன்,