சமீபத்தில் என் தாய்வழி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்த ஒரு நன்னாளில் நாங்கள் எல்லாரும் சிரித்து மகிழ்ந்த ஒரு விஷயத்தைப் பதிவுலகில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..... :)
தமிழர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதால் தமிழ் படும் பாட்டைப் பற்றியது இந்த இடுகை...!!
என் அம்மாவுக்கு உடன்பிறந்த மூன்று தங்கைகளில் (என் அன்பு சித்திகள்) ஒரு சித்தி, எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார், என்னை ஏரோப்ளேன் பார்த்து ஏங்கவைத்துவிட்டு!! ..... அது ஆகிவிட்டது இருபத்துமூன்று வருடங்கள்.... :) சமீபத்தில் சித்தி தன் குடும்பத்துடன் தாய்வீடு வர ஏகக்குஷியில் எக்கச்சக்க அரட்டைக் கச்சேரிகள் அடித்து மகிழ்நதோம்.....
சரி...விஷயத்துக்கு வருகிறேன்....
என் சித்தி பிள்ளைகளில் மூத்தவளுக்கு மட்டுமே தமிழ் சிறப்பாகத் தெரியும்..... மற்ற மூவருக்கும் கொன்ச்சம் கொன்ச்சம் தான் டாமில் டெரியும்!! :(
தமிழ் தெரிந்த என் தங்கை, சித்திக்கு சமையலறையில் உதவும்போது இருவரும் "தமிழ்"க் கதைப்பது வழக்கமாம்.... அன்றைக்கு ஒருநாள் ஏதோவொரு சாண்ட்விட்ச்சை செய்துகொண்டே, " இளைய நிலா பொழிகிறதே.." பாடல் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்....கவிஞர் வைரமுத்துவின் எவர்கிரீன் வரிகளல்லவா அவை.... என் சித்தியும் வைரமுத்துவின் ரசிகையாதலால் அவர் ரசித்த வைர வரிகளையெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.... "டாமில் கொன்ச்சமாகத் தெரிந்த" இரண்டாமவள் கவிதைகளின் அர்த்தம் புரியாமல் அங்கு இந்த இரண்டு தமிழ் ரொட்டிகளின் நடுவே சிக்கி சாண்ட்விட்சாகி நைய்ந்திருக்கிறாள் நெடுநேரமாக!! இவர்களோ அவள் கஷ்டம் புரியாமல் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்....
போதாதற்கு ...... "வைரமுத்துவின் கவிதைகளை உனக்கு ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை அவர் சிறந்த கவிஞர்..." என்கிற ரீதியில் மூத்தவள் தன் தங்கையை வெறுப்பேற்றியிருக்கிறாள்....
அதற்கு அவளோ வெறுப்பில்.... " உங்க வைரமுத்து சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் அவர் பெயரைப் பாருங்கள்... தி மோஸ்ட் ஃபன்னியஸ்ட் நேம் ஆன் எர்த்.... ஹி ஹி ஹி...." (The most funniest name on earth)என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறாள்...!!!
"அவரு பேருக்கென்ன....அழகுபெத்த பேரு.... வைரம் + முத்து.... இதுல என்ன ஃபன் இருக்கு????"
ரொம்பவெல்லாம் யோசித்து பன் ஆகவேண்டாம்.... இதற்கு என் "டாமில்" தங்கை கொடுத்த விளக்கம்....
"அவரு பேரு என்ன .... "வயிரமுத்து"... வயிரை எதுக்கு முத்தணும்??... வொய் டூ கிஸ் தி டம்மி??!! ஹி ஹி.... ஃபன்னி நேம்!!"
ஆகவே நல்லா கேட்டுக்குங்க வலைத்தமிழ் மக்களே...... வைரமுத்துவின் "டாமில்" அர்த்தம் கிஸ் தி டம்மி யாம்!!! :)))
வைரமுத்துவின் கவிதையை ரசிக்கும் நேரத்தில் இந்த செந்தமிழ்த் தேன்மொழியாளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கலாம் என் சித்தி :)))))
பிள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக்குடுங்கப்பா!!!
அன்புடன்,
