Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

நன்றி "யூத்ஃபுல் விகடன்"!!


இன்னொருமுறை யூத்ஃபுல் விகடனில் என் சிறுகதை ("சாபங்கள் பலிப்பதில்லை") வெளிவந்துள்ளது....
விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!! :)


விக‌னில் ப‌டிக்க‌: CLICK HERE

நன்றி நன்றி நன்றி!! :-)

சாபங்கள் பலிப்பதில்லை : சிறுகதை


"இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய்ப் போகட்டும்" - பி.எஸ்.வீரப்பா (ஒரு திரைப்படத்தில்!)

மழைக்கால மத்தியாணம்...எப்பவும் புழுதிவாரி இறைக்கும் வாகனங்கள் "ஸீசனல் ஆஃபராக" சகதியை வாரிஇறைத்துச் சென்றுகொண்டிருந்தன.....அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாய், கிடைக்கிற‌ "சைடு கேப்" பில் எல்லாம் புகுந்து மும்முரமாகத் தங்கள் தலைவனுக்கு ஏதோ விழா எடுப்பதாக‌ ஸ்பீக்கர்கள், தோரணங்கள்,ட்யூப் லைட்டுகள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகள் நட்டுவைக்கும் கலாச்சாரப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் செயல்வீரர்கள்....

ரோட்டின்மேல் இருக்கும் ராசய்யா_____ன் (ஏதாவது ஒரு ஜாதி பேரை வைத்து கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க) வீட்டு வாசல் கதவு முழுதுமாய்த் திறந்திருக்கிறது... வீட்டுக்குள் ஆள்நடமாட்டம் இருந்தவண்ணம் உள்ளது.... முன் அறையில் கொஞ்சம் பழசாகிவிட்ட‌ ஒரு மர சோபாவில் சற்று கண்ணயர்ந்தவனாய்த் தலைக்குக் கைவைத்து தூங்கிக் கொண்டிருக்கிறான் தருமராஜன்... உள் அறையில் உடைந்துபோய் அமர்ந்திருக்கிறார் சீதம்மாள்... அருகே சில பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.....

"யாரு....தருமனா இப்புடி சாய்ஞ்சு கிடக்குறான்... தேனி மாதிரி சுத்திட்டு இருப்பியேய்யா என் ராசாஆஆஆ...இப்புடி உடம்பு சோந்து கண்ணசந்து கிடக்குதியே.... உங்கப்பன் உன்ன‌ விட்டுட்டுப் போய்ட்டானேஏஏஏஏஏஏ......." என்று சவுண்டை ஸ்டார்ட்செய்து கை ரெண்டையும் விரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார் அந்தக் கிழவி, "அடியே சீத.. எஞ் சீத...உன்னய தனியா விட்டுட்டு போக எப்புடிடீ மனசு வந்துச்சு அந்தப் பயலுக்கு??.... பாவிமக கண்ணுல கத்திய போட்டுப் படுக்க வெச்சுட்டாண்டீ அந்த பாழா போற டாக்டரு... பாவிமவன்.... மூஞ்சிபாக்க குடுத்துவெக்கலியே இந்த பாழாப்போற கண்ணுக்கு...." ஐயோ ஐயோ ஐயோ!! என்று நடுநடுவே மூக்கைச் சிந்திக்கொண்டு நெஞ்சில் அடித்து அழத்தொடங்கினாள் "கிழவி" என்று அழைக்கப்படும் தருமனின் பாட்டி... ராசய்யா_____க்கு பெரியம்மா முறைவேண்டும்.... கண் ஆபரேஷன் செய்து படுத்துக் கிடந்தமையால் ராசய்யா____ன் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரால் முடியாமல் போய்விட்டது (ஓ! அதைக் கிழவியே சொல்லிடுச்சோ!!) "கிழவி"யின் அலறலிலும் தருமனின் அயர்வு அகலவில்லை.... உடலும் மனதும் உளைந்துபோக அவனையுமறியாமல் தூங்கிக் கிடக்கிறான்.....

வீட்டிற்கு வெளியே.... செயல்வீரர்கள் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் விழா துவங்குகிற வண்ணமாய், இரண்டடி இடைவெளியில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் எல்லாம் உயிர்பெற்றுப் பிளிரத் துவங்கின.... தெரித்துக் கண்விழித்தான் தருமன்.... சீதாம்மாளிடம் இருந்த கிழவி விழித்துவிட்ட தருமனை நோக்கி அழுதவண்ணம் எழுந்துவர... துக்கம் தீர்ந்தவனாய்க் கிழவியின் துஷ்டியைக் ஏற்று அமரவைத்தான் தருமன்.... இழவில் பங்கேற்று, சம்பிரதாயப்படி சொல்லாமல் சென்றுவிட்டு, இப்போது "கிழவி"யை அழைத்துக்கொண்டு வெள்ளையுஞ் சொள்ளையுமாய் வந்திருந்தார்கள் மாமன் மச்சான்கள்....

"சரி... நடந்தது நடந்துபோச்சு...."என்று ஒருவர் ஆரம்பித்தாக‌ வேண்டுமே....!!

தருமனின் தோள்மேல் கைவைத்து ஒருவர் பேச்சை ஆரம்பிக்க "இனி ஆகவேண்டியத பாக்கணும் இல்லையா..." என்று அடுத்தவர் தொடர்ந்தார்.... குடியிருக்கும் பங்காளிகள் ஆட்கொண்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் ராசய்யா____க்கு சொந்தமான‌ பிரச்னைக்குரிய சில வீடுகளின் பத்திரங்கள் கிடைத்ததா?? என்று அக்கறையாகக் கேட்டு விசாரித்தார்கள்....

"ஒருவாரமா வீடு முழுசும் அலசியாச்சு...
எங்க வெச்சுட்டுப் போனாருன்னே தெரியல...."

"சொந்தக்காரப் பயபுள்ளகளா போயிட்டானுங்க.. இல்லைன்னா... போய் அவனுகள‌..." என்று ஒரு மச்சான் செண்டிமென்டலாக‌ சீற.....

"என்னய்யா சொந்தம்?? செத்த வூட்டுக்குக் கூட வராத பயலுகள போய் சொந்தம் கிந்தம்னு சொல்லிக்கிட்டு.." என இன்னொரு மச்சான் டென்ஷனானார்...

ஓர் ஆக்ஷன் சீக்வன்ஸ் மெல்ல உருவெடுக்கத் துவங்க "அமைதியா இருங்கப்பா.... ஆகுறதப் பேசுங்க.... " என்று 'கட்' கொடுத்தார் பெரியப்பா ஒருவர்...அவரே தொடர்ந்து "குருஜி கிட்ட கேக்குறதுதானே... பத்திரம், சாவியெல்லாம் எங்க வெச்சுருப்பாருன்னு.... மை வெச்சு கண்டுபிடிச்சுச் சொல்லிடுவாறே...." என்று ஓர் அறிவுப் பூர்வமான ஐடியாவை எடுத்து விட்டார்....

"குருஜி வீட்டுக்கு வந்து பாத்துட்டு, ஐயாவோட ஃபோட்டோ முன்னாடி உக்காந்து நம்பிக்கையா கேளுங்க... யார் கனவுலயாவது வந்து பத்திரம் இருக்குற எடத்த சொல்லுவாறு"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு...." என்றான் இளைய மகன் வேலுராஜன்

" யய்யா... அப்பா கனவுல வந்தாராய்யாஆஆ..." என்று கிழவி கூவினாள்....

"தூங்குற முன்னாலயே இந்தப் பாட்டுச் சத்தத்துல முழிச்சிட்டேனே ஆத்தா...." என்று தருமன் கண்கலங்கினான்.....!!!

அப்போதும் கடும்சத்தமாய் வெளியே விழாக்கோலம் அலறிக்கொண்டுதான் இருந்தது.... "நாசமாப் போறவனுக......" என்று ஆரம்பித்து விழா அமைப்பினரையும்... விழா நாயகர்களையும் ஒட்டுமொத்தமாய் சபித்துத் தள்ளினாள் கிழவி.....

ரெண்டு நொடி அமைதியாய் ஏதோ நினைத்த தருமன்... வெகுண்டெழுந்தான்....

"ஒருபயலும் வேணாம்... நானே போறேன்.... எண்ணி ரெண்டே நாளு... அதுக்குள்ள பத்திரத்தக் கிரயம் பண்ணுறோம்.... அதுக்குள்ள அந்த வீட்டுல இருக்குறவனெல்லாம் தலதெறிக்க ஓட விடுறேன்.... யாருகிட்ட சொல்லி, எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எனக்குந் தெரியும்...." என்று தருமன் வெடித்துக் கிளம்பினான்....

அவன் கிளம்பும் முன்னமே.... உள் அறையிலிருந்து ஈனஸ்ருதியில் ஓர் ஒலி வந்தது... "வேணாம் தருமா... வேணாம் ராசா....பழியெல்லாம் உங்கப்பாவோட போவ‌ட்டும்... வீட்டுல இருக்குறவுகள‌ அடிச்சு விரட்டித் தெருவுல நிக்கவெச்சு அவங்க வாயில வுழ வேணாம்யா....யாரு வாயிலும் வுழ வேணாம்யா... இனிமேலும் வேணாம்யா ஏச்சும் பேச்சும்..." திடீரென்று அழத்துவங்கினார் தருமனின் தாய் சீதம்மா....

வெடித்துக் கிளம்பிய‌ தருமனின் காதில்வந்து விழுந்தது தாயின் விம்மல்.....

வேறுசில தொழில்களும் செய்திருந்தாலும் சாதாரண ராசய்யாவாக இருந்தவர் ஊர் போற்றும் ராசய்யா_____ஆக மாறியது என்னவோ வட்டிக் கொடுத்து பிழைக்க ஆரம்பித்த பின்புதான்... நிலத்தின்பேரில் கொடுக்கப்பட்ட சில வட்டிக் கடன்கள் அசலைப் பணமாய் அன்றி நிலமாகவே திருப்பிப் பெற்றுத்தந்தன‌.... வராக் கடன்களை வசூலிக்க அவர் மேற்கொண்ட சில காரியங்கள் கல்லடிபடாத ராசய்யாவுக்கு சொல்லடிகள் வாங்கிக்கொடுத்தன... கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க சுனாமிபோல் வந்து சூழ்ந்த‌ சுற்றமும் நட்பும், உச்சவரம்பை மீறிய சொத்துகளுக்கு பினாமிகளாய் மாறின‌.... வளர்பிறையெல்லாம் முடிந்து கோர்ட்டு கேஸ் என்று தேய்பிறை துவங்க "பாவம்....ந‌ல்லா வாழ்ந்த குடும்பம்" என்று ராசய்யாவின் இறந்தவீட்டில் வந்தவர்கள் சிலர் 'உச்' கொட்டும் அளவுக்கு ராசய்ய தலைவிழும் முன்னே செழித்துக் கொழித்த காலமெல்லாம் இறந்தகாலாமாகிப் போனது...... பத்திரங்களைக் கைப்பற்றி பிரச்னைக்குரிய வீடுகளையெல்லாம் விற்றே தீர வேண்டிய பொருளாதார நிர்பந்தத்தில் இப்போது மூத்தவன் தருமன்....

பலபேர் வாயில் விழுந்து சாபங்களைக் கட்டிக் கொண்டதன் பலன்தான் இப்படி ஊர்போற்ற வாழ்ந்த வீடு தூண் விழுந்து கிடப்பதாகப் பலரும் காதுபடவே பேசினார்கள் இறந்த வீட்டில்.... சீதாம்மாளின் நம்பிக்கையும் இதுதான்.... நல்ல பணம், கெட்ட பணம், பாவப்பட்ட பணம் என்றெல்லாம் பணத்தில் வகையுண்டு என்று இன்றும் ஸ்திரமாக நம்பும் பழி பாவத்துக்கு அஞ்சும் குடும்பத்தலைவி சீதாம்மாள்....

சீதாம்மாளின் அழுகை மற்றும் மூணாம் கிளாஸ், நாலாம் கிளாஸில் எப்போதோ வாத்தியார்கள் சொல்லக் கேள்விப் பட்டிருந்த‌ நியாயம், தர்மம் போன்றவை சார்ந்த உணர்வுகள் எல்லாம் சின்ன வேகத்தடை போட்டாலும் பொங்கிவந்த வேகமும் கோபமும் குறையுமுன்னமே சீற்றத்தோடு கிளம்பினான் தருமன்..... செல்ஃபோனில் யாரையோ அழைத்து காட்டமான சில காரியங்களை செய்துமுடிக்கும் வியூகங்களோடு உத்தரவுகளைப் பிறப்பித்தான்.... சீதம்மாளுடன் சேர்ந்து "வேணாம் ராசா...." என்று கோரஸ் போட்ட அவன் வீட்டுப் பெண்களின் ஓலம் வண்டியைக் கிளப்பிச் செல்லும்வரை அவன் காதில் விழந்துகொண்டுதான் இருந்தது.....

தூக்கம் விழித்த குழந்தைபோல விசும்பிக்கொண்டிருந்தது வானம்..... முந்தைய நாள் பெய்த மழையால் தேங்கிக்கிடந்த தண்ணீரும் சுற்றிச் சூழுந்துள்ள சகதிக்கும் நடுவே விடாது ஹார்ன் அடித்து.... கிடைக்கும் சந்தடியில் நுழைந்து செல்ல‌ வாகனங்கள் போராடிக்கொண்டிருந்த‌ சூழல், அதே சாலையில் வண்டிக்குள் சூடாய் அமர்ந்திருக்கும் தருமனுக்கு இன்னும் கொஞ்சம் வெறியேற்றுவதாய் இருந்தது.... வழிநெடுக ஸ்பீக்கர்கள் அலறவிடப் பட்டிருக்கின்றன‌... மழைமேகம் சூழ்ந்து வானம் கொஞ்சம் கறுத்துவிட்டதாம், ஸோ மதியம் மூணு மணிக்கே ரோட்டின் ஓரங்களில் நட்டுவைத்திருக்கும் ட்யூப் லைட்டுகளை ஒளிர வைத்துவிட்டார்கள்..... மழைபெய்யும் நேரம் ஓபன் லைனில் கரண்ட் எடுத்து லைட்டு களை எறிய வைத்திருந்தார்கள்..... ஷாக் அடித்து செத்தால் அவர்கள் தலைவனுக்கா நஷ்டம் என்று வழிநெடுக மக்கள் கூட்டம் மண்டையிலடித்துக் கொண்டு சென்றது...... அதே தலைவர் தன் காதில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு "ஙே" என்று பல்லைக்காட்டி சிரித்தவாறு போஸ் கொடுத்திருந்த ஒரு பிரம்மாண்ட க்ளோஸ் அப் ஷாட் ஃபோட்டோவை கிட்டத்தட்ட இருபதடி உயரத்தில் ஃப்ளக்ஸ் போர்டாகக் கட்டிக்கொண்டிருந்ததில் பேருந்து ஒன்று செல்ல முடியாமல் நிற்க.... ரோட்டில் டிராஃபிக் ஜாம்....

டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட தருமனின் மனதில் வெவ்வேறு விதமான சிந்தனைகளும் நினைவுகளும் அலையடித்த வண்ணமிருந்தன ... உடனிருந்த மச்சான்கள் இறுக்கமாய் அமர்ந்திருக்க.... தருமனின் காதில் இன்னும் "வேணாம் தருமா..." என்று சாபத்துக்கு அஞ்சிய‌ சீதம்மாளின் அழுகுரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் தந்தை வாங்கிக்கட்டிக் கொண்ட சாபங்களும் அடுத்தடுத்து காட்சிமாறிய வாழ்க்கையும்கூட மனதில் வேகமாய் ஓடியது......அதேநேரம் அந்த வீட்டில் குடியிருப்பவர்களை இன்றே அடித்துத் துரத்தும் வெறியும் குறைவின்றி எக்காளமிட்டது....

விழா நாயகர் தலைவருக்கு ஒருபுறம் சிங்கிள் போஸ்... மறுபுறம் அவர் ஃபேமிலி ஃபோட்டோ...இன்னொருபுறம் ஒரு சிங்கத்தின் உடலில் அதன் தலைக்குப் பதிலாக தலைவரின் தலையை மார்ஃபிங் செய்து ஒன்று என்று ஃப்ளக்ஸ்களாக அடுக்கி வைத்திருந்தார்கள் உயிரினும் மேலான தொண்டர்கள்... வைப்பரை இயக்குமளவு இப்பொழுது மழை பெய்தது.... இந்த அரசியல் அலப்பறைகளால் இடர்பட்டுக் கிடக்கும் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டு நனையத் துவங்கிய மக்கள் எல்லாரும் கடுப்பில் நெழியத்துவங்கினார்கள்....

வெறுப்பின் உச்சத்தில் வேக ஆரம்பித்த தருமன் காரின் ஜன்னலைக் கீழே இறக்கினான்.... காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தத்தையும் தாண்டித் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது பொதுஜனம்... டிராஃபிக் போலீஸ் படாதபாடுபட்டு அந்த பஸ்ஸை ஒருவழியாக நகர்த்த... டிராஃபிக் ஜாம் மெல்லக் கலையத் துவங்கியது..... இங்கு கலவரமே நடந்து ஓய்ந்தாலும் கொஞ்சமும் கவலை இல்லாமல் ரோட்டு ஓரங்களில் தலைவரின் மனைவியின் ஆளுயரப் போஸ்டர் ஒன்றில் கோந்து தடவி அவர் படத்தைச் சுவரில் நிறக வைத்து ஆறுபேர் சேர்ந்து தேய் தேய் என்று தேய்த்து ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள்..... கூட்டம் கலைந்து, போவோர் வருவோர் எல்லாருமே தலைவர் "ஙே" என்று சிரிக்கும் அந்த பிரம்மாண்ட கட்‍‍‍=அவுட்டைப் பார்த்து மண்ணை வாறி தூற்றாத குறையாய் சபித்துச் சென்றனர்.....

வண்டி நகர ஆரம்பித்தவுடனே ஜன்னலை மூடிய தருமன் மெலிதாக சிரித்தான்... "ஏன்டா...இவனுகள‌ ஊரே சபிக்குது...ஆனா எவனுக்கு என்ன ஆகியிருக்கு?? யாரோ ரெண்டு பேர் சாபத்துல நான் அழியப்போறேன்னு பயப்படுறாளே என் ஆத்தா!!!.." என்று சொல்லி "வேகமா விடுறா வண்டிய..." என்று ஓங்கி முழங்கினான் தருமன்.... சீதம்மாளின் அழுகுரல் இப்பொழுது அவன் காதில் ஒலிக்கவில்லை.....

சாபங்கள் பலிப்பதில்லை???!!!! :-)


"நன்று" என முடியும் குறள் - சிறுகதை

"சூரியன் மீதெல்லாம் கோபப் படுறதுல சத்தியமாஅர்த்தம் இல்லடா.... காம்டவுன் டா சுதன்!!"

தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வீறுகொண்டு எழுந்த‌ ஹை வோல்டேஜ் கோபத்துக்கு சடன் பிரேக் அடித்துத் துயில் முறித்தான் சுதன்!! லீவெடுத்துத்தூங்கும் போது ஏழுமணிக்கெல்லாம் சரியா மூஞ்சிலயே குறிவெச்சு வெயிலடித்து எழுப்பிவிட்டதால் சூரியன் மீது பொத்துக்கொண்டு வந்த கடுங்கோபம் அது!!

இந்த வாரத்தில் இதுவரைக் கடந்துள்ள நான்கு நாட்களில் இவ்வாறு சுதன் கட்டுப்படுத்தும் நானூற்று இருபத்து நான்காவது கோபம் இது என்பது பின் குறிப்பு!

வீட்டு சமையலறையில் தங்கை ஷாலினி கோதுமைப் பந்துகளை உருட்டித் தேய்த்துக் கொடுக்க அதைக் கொதிக்கும் எண்ணெயில் காட்டி வீங்கவைத்துப் பூரிகளாகச் சட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் "ஹோம் மேக்கரான" சுதனின் அம்மா!! சுதன் சிரித்தமுகமாய் "ஆ.. இன்னைக்கு பூரியா!!.. உடனே குளிச்சுட்டு வரேன்" என்று சொல்லி சிரித்துவிட்டுப் போனது கொஞ்சமும் செயற்கையாக இல்லைதான்.... ஆனாலும் ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.... கோபக்கார அண்ணனின் இன்முகம் பார்த்து இரண்டு நிமிடம் திகைத்துப் போன ஷாலினி , "அடுத்த பூரிக்கு மாவெங்கடி??" என்று அம்மா கதறிய குரல் கேட்டுதான் இயல்பு நிலை அடைந்தாள்!

அமைதியாக பூரி சாப்பிட்டுவிட்டு... "அம்மா நீங்களும் கையோட இப்பவே சாப்பிட்ருங்க..." என்று கணிவாக சொல்லிவிட்டு " பக்கத்தில கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடறேன் மா.... ஷாலினி உனக்கு ஏதோ புக் வாங்கணும்னு சொன்னியே.. என்னன்னு சொல்லு அண்ணன் வாங்கிட்டு வர்றேன்..." அக்கறையாய் கிளம்பிப் போன படு பொறுமையான சுதனைப் பார்க்கவே வியப்பாக இருந்தது அம்மாவுக்கும் ஷாலினிக்கும்!! ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொண்டார்கள் ஆனால் எதுவும் பேசிக்கொள்ளவில்லை!!

சுதனுக்கும் தன் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும்.... ஸாரி.... அவன் கஷ்டப்பட்டு ஏற்படுத்தியிருக்கும் இந்த மாற்றங்கள் அவனைச் சுற்றி எல்லோருக்கும் வித்தியாசமாய் இருக்கும் என்று தெரியாமல் இல்லை...... இனிமேல் தானொரு கோபக்கார சுதன் அல்ல... என்று அறிவிக்காத குறைதான்..... இந்த மாற்றங்களைப் பற்றியெல்லாம் வீட்டில் பேசவேண்டும் என்று சுதனுக்கு ஆசைதான்.... ஆனால்... யாருடன்?

அப்பாவிடம்?? " நோ.... அவர் கோபப்படுவதில் "சீனியர் சுதன்"

சரி.... அம்மாவிடம்?? .... " பேசலாம்தான் ஆனால் இதெல்லாம் அவர்களுக்குப் புரியாது"...

தங்கை....?? . "சே சே...சின்னப் பொண்ணு!!"

இப்படியெல்லாம் அவன் மனது ஒவ்வொருத்தர் பற்றியும் அனுமானம் சொன்னதால் யாரிடமும் பேசவில்லை... அதற்கும் ஒரு கோபம் மனதில் எழ,

" இது அவங்க சுபாவம்டா சுதன்... பொறுமையா போடா.... அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா!!"

என்று அட்வைஸ் பண்ணியது அவனுடன் அதிகம் பேசும் அவன் மனம்!! பொதுவாகவே அவர்கள் வீட்டில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்வதில்லை.... இதுவும் முக்கியமான ஒரு பின்குறிப்பு!

சுதனிடம் இந்த மாற்றமெல்லாம் நான்கு நாட்களாகத்தான்.... அதாவது சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று ஏற்பட்ட ஒரு குறிஞ்சிப் பூ மாற்றமிது!!! கடந்த ஞாயிரன்று ஓர் "ஆட்டோகிராஃப்" சந்திப்புக்கு அழைப்பு வந்திருந்தது சுதனுக்குப் பிரிந்து சென்ற தன் பள்ளி நண்பர்களிடமிருந்து!! பள்ளி நண்பர்கள் எல்லாரும் மீண்டும் அதே பள்ளியில் அதே ஆசிரியர்கள் முன்னிலையில் ஒன்று கூடி அந்தநாள் ஞாபகங்களை அசைபோட‌ ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் சுதனின் பள்ளித் தோழர்கள்....

" வர முயற்சி பண்றேன் டா.." தகவல் சொன்ன ஒரு நண்பனிடம் சுதன் இழுக்க......

"டேய்... பிரவீன் எல்லாம் அமெரிக்கால இருந்து வர்றான்டா... நம்மல்லாம் லோக்கல் ல இருந்துட்டே வரலன்னா நல்லா இருக்காதுடா...."

சொன்ன மாத்திரத்தில் சுதன், "அமெரிக்கால இருக்கிறவன் லீவுக்கு ஊருக்கு வந்திருக்கான்டா.... உள்ளூர்க்காரனுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்..... விடுடா.. நான் முயற்சி பண்ணுறேன்னு சொல்றேன்ல !!" என்று கோபத்தில் ஃபோனை வைத்தேவிட்டான்....

"அமெரிக்கா"..... சுதனுக்குப் பிடிக்காத சில வார்த்தைகளில் அதுவும் ஒன்று!!

நான்கு வருடங்களாக அதே டெலிகாம் கம்பெனியில் அதே மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை...... நாளொன்றுக்குக் குறைந்தது நாற்பது கிலோமீட்டராவது தன் மோட்டார் பைக்கின் ஆக்ஸலேரேட்டரைத் தொழில் நிமித்தம் திருகும் சுதன் ஒரு கடின உழைப்பாளி.... இப்போது மட்டுமல்ல படிப்பிலும் கூட ஒரு கடுமையாக உழைக்கும் மாணவன்...... கஸ்டமர்களிடம் மட்டும் கோபத்தைக் காட்டமாட்டான்....மற்றபடி உடன் வேலைபார்ப்போருக்குக் கூட ஒரு "டெரர்" இமேஜ் தான் சுதன்மீது..... எங்கிருந்து எகிறி வரும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது ஆனால் கோபம் எறிந்து எழுந்துவிட்டால் கொட்டித்தீர்த்திடத் தெரியும் அவன் நாக்கிற்கு..... அவன் மனது கடந்த பல வருடங்களாக அவனையே " Mr. பெர்ஃபெக்ட்" விருதுக்குப் போட்டியின்றித் தேர்வு செய்துவருகின்றது!!

அந்த வெள்ளிக்கிழமை திடீரென எதிர்பாராத ஓர் அங்கீகாரம் அவனது இத்தனை நாள் உழைப்புக்குக் கிடைத்தது...... மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டி விலிருந்து நேரே ஏரியா மேனேஜர் போஸ்டுக்குப் ப்ரமோஷன்!!! சம்பளத்திலும் நல்ல முன்னேற்றம்...... சந்தோஷத்தில் நிறைந்த மனது இப்போது ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவர்களின் மறு சங்கமத்திற்கு ஓர் ஏரியா மேனேஜராகச் செல்ல அனுமதித்தது!!

சாதாரணக் கோபங்களுடன்தான் விடிந்தது அன்றைய பொழுது .... பதவி உயர்வு பற்றி சுதன் தன் வீட்டில் சொல்லியிருக்க வில்லை...... ஏதோ புத்துணர்ச்சியோடு அவன் படித்த பள்ளி நோக்கி அன்று தன் ஸ்ப்ளண்டரை இயக்கினான்.... பேக்ரவுண்டில் "ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே " என்று பி.ஜி.எம் எஃபெக்ட் எல்லாம் கேட்டது..... பழைய நினைவுகளை வாழ்ந்து பார்க்கும் ஆனந்தத்துக்கும் குறைவில்லை அவனிடம்!!!

அற்புதத் தருணமாக இருந்தது அது..... பழைய நண்பர்கள்... அதே இடம்..... ஒரு பொதுத்தேர்வு முடிந்த அன்று மெழுகுவர்த்தி கொளுத்திப் பிரிந்த கூட்டம்...... இன்று மீசை வைத்து அதே இடத்தில் மீண்டும் கூட்டமாய்!!!

கொஞ்சம் நரைத்திருந்தாலும் அதே ஆளுமை செபாஸ்டின் சாரிடம்!! பசங்க ஒவ்வொருத்தரிடமும் சில மாறாத தன்மைகளும் பல மாற்றங்களும் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன........

ஒரு வகுப்புக்கு மூன்று "கார்த்திக்"குகள் இருந்தாக வேண்டுமே!! அவர்களின் வகுப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.... மூன்று மாணவர்களுக்கு ஒரே பெயர் "கார்த்திகேயன்" அதிலும் இருவருக்கு இனிஷியலும் ஒன்றாக அமைந்திருந்தது!! எனவே பட்டப்பெயர் தவிர வேறு வழியில்லாமல் போக...... சில பட்டப்பெயர் திலகங்கள் ஒன்றிணைந்து மூன்று கார்த்திகளுக்கும் அவர்களது உடல் பருமனிற்கேற்பப் பின்வருமாறு பட்டாபிஷேகம் செய்தார்கள்.... கொஞ்சம் ஒல்லியானவன் கார்த்திக் (Thick), ஒரு சுற்றுப் பெருத்தவன் கார்த்திக்கர் (thikcker), மற்றும் ரொம்பப் பெரியவர் கார்த்திக்கெஸ்ட் (Thickest!!)... ...

இப்போது பார்த்தபோது திக்கெஸ்ட் கார்த்திகேயன் வடக்கில் வேலை கிடைத்து சப்பாத்தி புண்ணியத்தில் கொஞ்சம் Thin ஆகியிருந்தார்..... திக்கு க்குத் திருமணமாகி திக்கரை விடக் கொஞ்சம் திக்காகிப் போயிருந்தார்!!! அவர்களுக்கு மாற்றுப் பட்டாபிஷேகங்கள் நடந்தன!!! அவர்களின் சின்னவயது ஹீரோவாக இருந்த செபாஸ்டியன் சார் அட்டெண்டன்ஸ் எடுத்து (!) அசத்தலாக ஓர் உரையாற்றினார்!! தொடர்ந்து பசங்க ஒவ்வொருவராக மேடையேறித் தங்கள் மறக்கமுடியாத பள்ளி நிகழ்வைப் பகிரத்தொடங்கினர்!!!

நடப்பதையெல்லாம் அமைதியாகப் பார்த்துக்கொண்டு அதிகம் பங்குபெறாமல் இருந்தான் சுதன்.... மாணவர்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் எல்லாம் ரொம்ப சேட்டைக்காரர்களான ரோமியோ, பாண்டி, விஷ்ணு மற்றும் சிலரே திரும்பத் திரும்ப நினைவுகூறப்பட்டனர்!! நினைவுகூறுமளவு சுதனுக்கே தன்னைப் பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை.... அதுசரி எப்பவுமே தானுண்டு தன் படிப்புண்டு என்றிருந்தால் என்னதான் நினைவிலிருக்கும்..... ஆனால் சுதனை மேற்கோள் காட்டி ஒரு ஃப்ளாஷ் பேக் பகிரப் பட்டது அந்த மேடையில் அவனை அதிகமாக ஆச்சர்யப்படுத்தி.........

சுதனுக்கு அடுத்த ரோல் நம்பர் மாணவன் சுந்தர பாண்டியன்..... சூனா பானா என்று அன்போடு அழைக்கப்படும் இப்போதைய சாஃப்ட் இன்ஞ்சினியரான சுந்தர பாண்டி தன்னுடைய நினைவுகளை சுவையோடு பகிர மேடையேறினார்.....

" நான் வாழ்க்கையில கடைசியா பரிச்சையில காப்பி அடிச்ச சம்பவம் அது!!" என்று ஆரம்பித்த சூனா பானா.....

" ஒரு தமிழ்ப் பரிட்சை.... அதிசியமா நான் நல்லா படிச்சிட்டு வேற போயிருந்தேன்..... நல்லாத்தான் எழுதிட்டு இருந்தேன்.... திருக்குறள் கேள்வி ஒண்ணு வந்திச்சு.... " நன்று" என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக என்று கேட்டிருந்தாங்க.... எனக்குக் கைக்கு எட்டுது ஆனா வாய்க்கு எட்டல..... ஏதோவொரு வேகத்துல முன்னால உக்காந்திருந்த சுதன் கிட்ட அந்தக் குறளைக் காண்பிக்க சொல்லிட்டேன்......

"இனரெறி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

என்கிற திருக்குறள் அது..... படிப்பாளி சுதன் வேகவேகமா எழுதிட்டு இருந்தவன் என்னை சட்டை பண்ணவேயில்லை..... "சுதன், அந்த திருக்குறள் ஸ்டார்ட்டிங் மட்டும் சொல்லுடா" ன்னு நான் தொடர்ந்து நச்சரிக்க...... "வெகுளாமை" கொஞ்சமும் தெரியாத‌ சுதன் வெகுண்டு எழுந்துட்டான்..... "பேப்பரக் குடு உனக்கும் நானே பரிச்சை எழுதித்தறேன்"னு அவன் கோபமாக் கத்த நான் கிழிஞ்சி போய்ட்டேன்!! அந்த நேரம் பாத்து சூப்பர்வைஸ் பண்ணிட்டு இருந்த தமிழ் வாத்தியார் பாத்துட்டாரு....... எல்லாம் முடிஞ்சுபோச்சுனு நினைச்ச நேரம்... அவர் வேகவேகமா ஓடிவந்து "என்னடா பிரச்னை" என்று பதற‌ நான் பயத்துல உண்மய சொல்லி அப்ரூவராகிட்டேன்..... கதை முடிஞ்சிச்சுடானு நான் இருந்த சமயம் அவர் திடீர்னு சிரிச்சுட்டாரு..... சுதனைப் பார்த்து " அடப்பாவி.. "வெகுளாமை நன்று" அப்படின்னு வள்ளுவர் சொன்ன குறளுக்கே இப்படி வெகுண்டு எழுறியே.... கோபத்தைக் குறைசுசுக்கோடா தம்பி... நீ கத்துனதை நம்ம ஹெட் மாஸ்டர் கேட்டுட்டா அப்புறம் எனக்கு இன்ரெறி தோய்ஞ்சுபோகும்டா!!!னு சொல்லி... என்பக்கம் திரும்பி " மவனே.... பரிச்சைல காப்பி அடிக்கக் கூடாதுனு வள்ளுவர் சொல்லியிருக்காரானு தெரியல இன்னொரு தடவ நீ பேசுறத பாத்தேன்....." என்று நாக்கைத் துருத்திக் காட்டிட்டு போயிட்டார்!!!....சத்தியமா சொல்லுறேன் அதுக்கப்புறம் நான் என் வாழ்க்கையில பரிச்சை எழுதும்போது பேசினது கூட கிடையாது..." என்று சொல்லி... "டேய் சுதன்.... உன்னையும் உன் கோபத்தையும் என்னால மறக்கவே முடியாதுடா" என்று சொல்ல அனைவருமே சிரித்தார்கள்.... கொஞ்சம் கூட இருக்கம் இல்லாமல் வாய்விட்டு சுதனும் சிரித்தான் மனமாற!!!

தொடர்ந்து எத்தனையோ சந்தோஷப் பரிமாற்றங்கள் அரங்கேற டவுசர் போட்ட காலத்துக்கே சென்றுவிட்ட உணர்வோடு.... மனக்கசப்புகளோ.... ஏற்றத்தாழ்வுகளோ கொஞ்சமுமின்றி... பாசமாகக் கண்ணீர்த்துளிகளுடன் ஆரத்தழுவி விடைபெற்றனர் அனைவரும்.... எல்லாருமே ஒரு நிறைவான மகிழ்வுடன் அங்கிருந்து சந்திப்பு முடிந்து கிளம்ப... கொஞ்சம் கலங்கியிருந்த கண்களுடன் சுதனும் தன் பைக்கை எடுக்கப் போனான்........ அவன் பைக்கை எடுக்க வழியில்லாமல் இரண்டு மூன்று சைக்கிள்கள் குறுக்கே நிறுத்தப் பட்டிருந்தன...!!!

அதிசியம்.... சுதனுக்குக் கோபம் வரவில்லை!! அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது....
" நன்று" என முடியும் அந்தக் குறளையும் அந்த நிகழ்வையும் நினைத்துப் பார்த்தவன் மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொண்டு மெதுவாக அந்த சைக்கிள்களை நகர்த்தி வைத்துவிட்டுத் தன் பைக்கை எடுத்துக் கிளம்பினான்.....

"இனறெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று"

சுதனுக்கு இந்தத் திருக்குறள் இப்போது நினைவில்லை ஆனால் அன்று பரிட்சையில் தெரியாமல் விழித்த சூனா பானாவுக்கு இன்றுவரை அடிபிறழாமல் நினைவிருப்பதை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டான்!!

"வெகுளாமை நன்று".... குறளின் இந்தக் கடைசி இரண்டு அடிகளுக்கு மட்டும்தான் அர்த்தம் தெரிந்தது....." ஹ்ம்ம்ம்ம்..வெகுளின்னா கோபம்.... வெகுளாமை நன்று.... கோபப்படாம இருக்குறது நல்லது!!" மற்ற அடிகளுக்கு அர்த்தம் தெரியவில்லை.... எவ்வளவோ முயன்றும் "தமிழ்" புரியவில்லை!!

"வள்ளுவருக்கு ஏன் இந்தப் பிடிவாதம்? நல்ல விஷயத்த எழவு புரியுற மாதிரி சொல்லிவெச்சாத்தான் என்னவாம்??!!" வெகுளாமை சொன்ன வள்ளுவரையே எறித்தது சுதனின் வெகுளி!!

"டேய் சுதன்..... டேய்.... இது ரொம்ப டூ மச்டா!! யாரைத் திட்டுற? திருவள்ளுவர்டா... கன்னத்துல போட்டுக்கோ!!"

கரெக்ட் !!... சுதனின் மனது பிரேக் அடித்த வாழ்க்கையின் முதல் கோபம் இதுதான்.... இப்படி ஆரம்பித்துதான் அடுத்த நான்கே நாட்களில் நான்கு செஞ்சுரிகளுக்கும் மேலான கோபத் தீக் கொழுந்துகளை கிடைக்கிற கேப்பில் எல்லாம் உள்புகுந்து ஊதி ஊதி அணைந்து வந்தது சுதனின் மனது!!!

பைக்கை நேரே ஓட்டிக்கொண்டிருக்கும் போது... மனது "கோபம்" எனும் டாபிக் கில் ஒரு பி.ஹெச்.டிக்கே அடிபோட்டுக்கொண்டு வந்தது!!.... "எப்படி நான் "கோபக்காரன்"னு ஊரெல்லாம் பேரெடுத்தேன்??" .........."ஏன் எனக்கு இவ்வளவு வேகமா கோபம் வருது???" ......... "
"எப்போ இருந்து நான் இப்படி கோபப் படுறேன்??.... எப்போ எல்லாம் கோபப்படுறேன்??" கேள்விகளில் கவனமிழந்து ஒரு நொடியில் "ஏலேய்... ரோட்டுல வண்டிய ஓட்டுடா" என ஒரு கோபக்குரல் வெளியிலிருந்து காதில் விழ்ந்தது... சுதனைத் தாண்டிச் சென்ற கார் காரனின் கோபம் அது!! " இப்படி மனச வேற எங்கேயோ வெச்சிக்கிட்டு பைக்கைத் தாருமாறா ஓட்டினா திட்டமாட்டானா??!!" முதன்முறையாக அடுத்தவனின் கோணத்திலிருந்தெல்லாம் சிந்தித்து அவன் மனம் அவனையே ஆச்சர்யப் படுத்தியது!!

அப்போது நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்த வலியை சுதன் ஒருகணம் அனுபவித்தான்!!!! ஆம்.... ஒரு மாபெரும் கண்டுபிடிப்பு....." யுரேகா.....யுரேகா!!!"

"கோபம் இந்த பாழாய்ப் போன கோபம்..... அடுத்தவர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளும்போது குறைகிறது..... அந்த குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொள்கிறபோது கோபம் காணாமலேயே போகிறது!!"

"ஆஹா... சுதன்.... சூப்பர்டா.... கலக்குறியே.... என்ன ஒரு கண்டுபிடிப்பு !!" என்கிற ரீதியில் சுதனின் மனம் சிலாகிக்கத் தொடங்கியது........ இப்படி யோசிக்கும் திற‌ன் அனைவ‌ருக்கும் இருந்தால் உல‌கில் கோப‌மே இருக்காது என‌ எண்ணிக்கொண்டான்!!

இப்போது யோசித்துப் பார்க்கும்போது சுதனின் உலகில் ஜனத்தொகை மிகவும் குறைவாகவே தோன்றியது மனதுக்கு.... அம்மா.... அப்பா.... தங்கை.... இவர்களிடம் இருக்கும் குறைகளை சகித்துக்கொண்டு (!) அந்தக் குறைகளோடு அவர்களை ஏற்றுக் கொண்டாலே போதும் கோபம் என்னும் தீயினால் தன் வாழ்க்கை இனி புகையாது.... என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான்......

இந்தப் புதிய பதிவியுயர்வு வேலையின் அலைச்சல்களை முற்றிலும் களைந்து விடும்!! எனவே எரிச்சல் இருக்காது... மேலும்.... ஒரு முற்றிலுமான மாற்றம் காட்ட இந்த புதிய ஆரோக்யமானதொரு தொடக்கத்தை மிகச்சிறந்த ஒரு வாய்ப்பாக‌ உணர்ந்தான் சுதன்!!

அவன் கன்னத்தை அவனே பிடித்து முத்திக்கொள்ளாத குறையாக (!) அடுத்தவர்களின் குறைகளை ஏற்றுக்கொள்ளும் முடிவெடுத்திருந்தான் "Mr. Perfect" சுதன்..... ஒருவாரம் லீவிற்க்குப்பின் புதிய பதவியில் டியூட்டி ஜாயின் செய்தால் போதும்.... நான்கு நாட்களாகிப் போனது...... கொழுந்துவிட்டு எழுந்த எத்தனையோ கோபங்களையெல்லாம் தடுத்து ஒருமுறை கூட வெடித்துச் சிதறாமல் உண்மையிலேயே கவனமாய்க் கச்சிதமாய் தன்னை நிதானமாக நிலை நிறுத்திக் கொண்டான்.....

குறைகள்..... எத்தனைக் குறைகள்.... ஆனால் அதையும் தாண்டி ஒரு பாசம் இருக்கத்தானே செய்கிறது!! இனிமேல் குறைகளைக் கண்ணோக்காமல் அந்த அன்பையே பிரதானப் படுத்திக் கொள்வோம் என்கிற ரேஞ்சில் ஒரு "சுதனானந்தாவாக" அவனையே அறியாமல் மெல்ல அவதாரம் தரித்துக் கொண்டிருந்தான்!!

ருசியாக நேரத்துக்கு சமைத்துப் போடுவதைத் தவிர வேறெதெவுமே அறியாத ஒரு அம்மா தனக்கு இருப்பதனால்தான் சுதனுக்குதான் எத்தனை குறைகள்.... ஆஃபீஸில் நடந்த‌ ஒரு விஷயத்தை சமையலறையில் ஆர அமர பகிர்ந்து கொள்ளமுடிகிறதா......

ஓர் இ‍மெயில் ஐடி இல்லாத கல்லூரி மாணவி அவன் தங்கை..... கோலப்புத்தகம் வாங்கிப் பத்துப் புள்ளிக் கோலம் போட ஃபோன் பன்ணி டிஸ்கஸ் செய்யும் தோழிகளை இந்த மாடர்ன் யுகத்தில் எப்படித்தான் அவள் தேடிக் கண்டுபிடித்தாளோ???

மகனுடன் கொஞ்சம் ஃப்ரண்ட்லியாகத்தான் பழகினால் என்ன இந்த அப்பாவுக்கு!! அச்சு அசலாக ஒரு தனுஷ் படத்தில் வரும் அப்பா கேரக்டரைப் பிரதிபலிக்கும் தந்தையாக இருக்கிறாரே!!!

எத்தனை எத்தனை குறைகள்.... அத்தனைக் குறைகளையும் ஏற்றுக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு அன்பாகவே நடந்துகொண்டிருந்தான் இந்த நாட்களில்........

புரமோஷன் விஷயத்தை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருந்தான்..... நேரம் பார்த்து ஜாலியாக சொல்லி சர்ப்ரைஸ் தர நினைத்திருந்தான் சுதன்......

வெள்ளிக்கிழமை....... அன்றைக்கு வாசலில் அட்டகாசமாக ஒரு கோலத்தைப் போட்டுக் கொண்டிருந்தாள் ஷாலினி..... "உங்க அண்ணன் மேனேஜர் ஆகிட்டாருன்னு ஸ்பெஷல் கோலமா!!" அசால்டாகக் கேட்டுவிட்டுப் போனாள் சுதனின் உடன்பணிபுரிபவன் ஒருவனின் த‌ங்கை!! கோல‌த்தை அப்ப‌டியே போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடினாள் ஷாலினி.... "அம்மா...அம்மா... ந‌ம்ம‌ அண்ண‌னுக்கு...."
சொன்ன‌வாறே உள்ளே குதித்துச் சென்றாள்....

மாலைவீட்டுக்கு வ‌ந்த‌ சுத‌னிடம் எதுவும் தெரியாத‌துபோல்தான் அவ‌னுடைய‌ அம்மா ந‌ட‌ந்துகொண்டார்.... ஷாலினிக்கோ அந்தள‌வு ப‌க்குவ‌ம் கைகூடாம‌ல் கொஞ்ச‌ம் குறும்பாக‌வே சுத‌னிட‌ம் பேசிக்கொண்டிருன்தாள்..... ஏதோ வித்தியாச‌த்தை உண‌ர்ந்து கொண்டிருந்த‌ சுத‌னிட‌ம் ஷாலினி... ம‌றைத்து ம‌றைத்து வைத்திருந்த‌ ஒரு ச‌ந்தோஷ‌ செய்தியைத் த‌ன் influence(!)மூல‌ம் க‌ண்டுபிடித்துவிட்ட‌ பெருமையில் ஹீராயிஸ‌மாக‌ப் ப‌த‌வியுய‌ர்வு விஷ‌ய‌த்தைத் தாங்க‌ள் க‌ண்டுபிடித்துவிட்ட‌தாக‌ அறிவித்தாள் ஷாலினி! ஏதோ ஒரு சந்தோஷ‌த்துக்காக‌, ச‌ர்ப்ரைஸ் த‌ருவ‌த‌ற்காக‌ வைத்திருந்த‌ விஷ‌ய‌ம் லீக் ஆகிவிட்ட‌ ஏமாற்ற‌ம் மெதுவாக‌ கோப‌மாக‌ க‌ண‌ன்ற‌து அவ‌னுக்குள்..... த‌ன் அண்ண‌னுக்குள் ஏற்ப‌ட்டிருந்த‌ த‌லைகீழ் மாற்ற‌ங்க‌ளுக் கெல்லாம் இந்த‌ப் ப‌த‌வியுய‌ர்வுதான் கார‌ண‌ம் என்கிற‌ ரீதியில் ஷாலினி க‌மெண்ட் அடிக்க‌ வீட்டில் எல்லாரும் சிரிக்க‌(ச‌ந்தோஷ‌மாக‌த்தான்!) சுத‌னால் இம்முறைக் கோப‌த்தைக் க‌ட்டுப்ப‌டுத்த‌வே முடிய‌வில்லை.... வெடித்து சித‌றிவிட்டான் ஒருவார‌ம் இன்முக‌ம் காட்டிய‌ த‌ன் அண்ண‌ன் த‌ன்முக‌ம் காட்டிய‌தில் ப‌ய‌ந்தே போய்விட்டாள் ஷாலினி.... யாருமே எதிர்பார்த்திருக்க‌வில்லை சுத‌னின் கோப‌த்தை எத‌ற்குக் கோப‌ப்ப‌டுகிறான் என்ப‌தையும் யாரும் புரிந்திருக்க‌ வாய்ப்பில்லை... வ‌ழ‌க்க‌ம் போல் கோப‌த்தில் வார்த்தைக‌ளில் அமில‌ம் தெளித்து கொட்டித் தீர்த்த‌ ச‌த்த‌த்தில் வீட்டுச் சுவ‌ரின் காரைக‌ள் பெய‌ர்ந்திருக்கும்..... கோப‌த்தின் முடிவில் "விர்ர்ர்ர்ர்ர்...." என்று பைக் ச‌த்த‌ம் கேட்ட‌து வீட்டு வாச‌லில்.....

கொஞ்ச‌ தூர‌த்தில் ரோட்டோர‌த்தில் பைக்கை நிறுத்திவிட்டு ஒரு ம‌ண‌ற்குவிய‌லில் அம‌ர்ந்திருந்தான் சுத‌ன்.... த‌ன் கோப‌த்தைக் கைவிட்ட‌து எவ்வ‌ள‌வு பெரிய‌ குறிப்பிட‌த்த‌க்க‌ ஒரு மாற்ற‌ம்.... தானாக‌வே த‌ன்னைப் ப‌ற்றிய‌ ஓர் உண்மையை உண‌ர்ந்து த‌ன்னையே மாற்றிக்கொள்வ‌த‌ன் ம‌க‌த்துவ‌த்தை அறியாத‌ இந்த‌க் கூட்ட‌ம் இங்கு என்னைப் பார்த்து சிரிக்கிற‌தே..... என்று த‌ன் ம‌ன‌திட‌ம் புல‌ம்பினான்.... முன்பு த‌ன் கோப‌த்தைக் கிண்ட‌ல் அடித்திருப்பார்க‌ள் இன்று தான் கோப‌ப்ப‌டாத‌த‌ற்குக் கேலியாய்க் கார‌ண‌ம் க‌ற்பிக்கிறார்க‌ள்....ஹ்ம்ம்ம்ம்ம்ம்.... இவ‌ர்க‌ளுக்குத் தெரியுமா என் சிந்த‌னையின் ஆழ‌ம்??? இவ‌ர்க‌ளுக்குப் புரியுமா அவ‌ர்க‌ளின் குறைக‌ளோடு அவ‌ர்க‌ளை ஏற்றுக்கொள்வ‌தின் வ‌லி??????

"இதுவும் அவ‌ர்க‌ள‌து குறைதான் என‌ ஏற்றுக்கொள்வோம்" என‌ வேண்டா வெறுப்பாக‌ ம‌ன‌தை அமைதிப் ப‌டுத்திக்கொண்டு வீடு திரும்பினான்....

வீட்டில் நுழைந்தான்.... ஷாலினி ஏதோ ப‌டித்துக் கொண்டிருந்தாள்... அப்பா டிவியில் வ‌ழ‌க்க‌ம்போல் செய்திக‌ள் பார்த்துக் கொண்டிருந்தார்.... அம்மாவுக்கு ச‌மைய‌ல்!! க‌த்திக் குவித்துவிட்டு வீடு திரும்பிய‌ சுத‌ன் வீடு திரும்பிய‌தில் யாரும் புதிதாக‌ எதுவும் காட்டிக்கொள்ளாத‌து ஏனோ சுத‌னுக்கு இப்போது புதிதாக‌ இருந்த‌து!!


"சுத‌ன் வ‌ந்துட்டியா எங்கே ராத்திரி சாப்பாடுக்கு வ‌ந்திடாம‌ போயிடுவியோனு க‌வ‌லைல‌ இருந்தேன்.... பாய‌ச‌ம் ப‌ண்ணியிருக்கேன்யா.... உனக்கு வேலைல‌ ப்ர‌மோஷ‌ன் ஆன‌துக்கு... ஏய் ஷாலினி அண்ண‌னுக்கு ஒரு ட‌ம்ள‌ர் எடுத்துட்டுவா..... "

என்று ச‌க‌ஜ‌ம் காட்டிய‌ அம்மாவிட‌ம் மெல்ல‌ சென்று... "அம்மா.... நான் கோப‌ப்ப‌ட்டு இப்ப‌டி க‌த்தி ஆர்ப்பாட்ட‌ம் ப‌ண்ணிட்டுப் போய் வ‌ந்திருக்கேன்... ஆனா நீங்க‌... நீங்க‌...எப்ப‌டி இவ்ளோ ச‌க‌ஜ‌மா.... என‌க்கு ஒண்ணும் புரிய‌ல‌ மா...." முத‌ன்முறையாக‌ வாழ்க்கையில் இப்ப‌டியெல்லாம் கேள்வி கேட்கிறான் சுத‌ன்.....

"இதுல‌ என்ன‌ய்யா இருக்கு.... ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு குண‌ம்... உன‌க்குக் கோப‌க்கார‌ சுபாவ‌ம்.... வீட்டுக்குள்ள‌ எல்லார் சுபாவ‌த்தையும் ப‌ழ‌கிட்டுப் போறதுதானே..... நீ சீக்கிர‌மா சூடு ஆறுற‌துக்குள்ள‌ அந்த‌ப் பாய‌ச‌த்த‌க் குடிச்சிடுப்பா.."

என்று சொல்லிவிட்டு சென்றார் சாதார‌ண‌மாக‌......

"ந‌ன்று" என‌ முடியும் குற‌ளுக்கு இன்னும் முழுமையாக‌ அர்த்த‌ம் தெரிய‌வில்லை சுத‌னுக்கு.... ஆனால் புரிந்த‌வ‌ரைப் போதுமான‌தாகத் தோன்றிய‌து இப்பொழுது..

"வெகுளாமை ந‌ன்று!!"

பிர‌பு. எம்

"தரிசனம்"- "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை



"தரிசனம்"- "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!

"இளமை"விகடனில் இரண்டாவது முறையாக என்னுடைய சிறுகதை வெளிவந்திருப்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். விகடனுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்!! இதைப் போன்று பொது ஊடகங்களில் எழுத்துக்கள் பிரசுரமாகிற பொழுது பலரின் பார்வை நம் படைப்புகளில் படும் அரியதொரு வாய்ப்பு கிடைக்கின்றது.... தொடர்ந்து ஊக்கமளித்துவரும் நண்பர்களுக்கு என் நன்றிகள்!!


Click here to view the story


தரிசனம்


மாலை 5:30 மணியிருக்கும். அது ஒரு பரபரப்பான மாலை வேளையாகத்தான் இருந்தது, சிபிக்கு. அவன் படிக்க வேண்டுமென்பதற்காக அவனுடைய அப்பா வீட்டு மாடியில் கட்டித் தந்த பத்துக்குப் பத்து அளவிலான சிறிய அறையில் கதிரவனின் மாலைக் களைப்பினால் கருமை மெல்லப் படர்ந்து வருகிறது... ஒரு மரமேசை அதற்கு ஒரு நாற்காலி, படுத்து உறங்குவதற்கென்று மெல்லிய மெத்தையிடப்பட்ட ஒரு கட்டில் ஆகியன மட்டுமே அந்த அறையை ஆக்கிரமித்திருந்தன.

மேசையில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கின்றன. சிபி கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கிறான். கட்டிலிலும் சில புத்தகங்களும், வினாத்தாள்களும், 'கணக்குப் போட்டுப் பார்க்கிறேன்' என்று கிறுக்கப்பட்ட வெள்ளைத்தாள்கள் சிலவும் சிதறிக் கிடக்கின்றன. அவன் மடியில் ஓர் எழுதும் பலகை, அதில் திறந்த மேனிக்கு ஒரு வினாவங்கிப் புத்தகம். அதற்கு வேகமாக விடையெழுதும் முகமாக கணக்குகளுக்கு விடைகளை ஒரு வெள்ளைத்தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கிறான் சிபி.
நாளைய தினம் +2 பொதுத் தேர்வு கணிதப் பரிட்சை!

ஒரு 10 மார்க் கணக்குக்கு விடையெழுத முனைகிறான் சிபி. ஏனோ கணக்குப் பாதியில் தடுமாறுகிறது. பதற்றம்... 'கடிகாரத்தின் நொடிமுள் இன்று மட்டும் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறது?', 'அதற்குள் இருட்டிவிட்டதே?' என மனம் பதை பதைக்கிறது.

அந்தக் கணக்குக்கு விடை தெரியவில்லை.

'நன்றாகப் படித்த கணக்கு தானே, ரிவிஷனில் கூட நான் எழுதினேனே, அப்படியானால் படித்தவை அனைத்தையும் நான்
மறந்த விட்டேனா?' என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதிய தாளில் மீண்டும் எழுதத் துவங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன...

அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது
சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம்.

அந்தச் சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது! அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' இதே போல் அவ‌னுக்கு விசித்திர‌
த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அதுவ‌ரை அவ‌னுக்கு ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று...

திடீரென்று "ச்ச்சீய்" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான்.

சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து.

இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேன்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டு த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா
டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு
சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா சில விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்தார்.

சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, "என்ன‌ சிபி சார்.. எங்கே கிள‌ம்பிட்டார்?" என்று
கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன்.

அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம்
அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து.

"ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா?" என்று எதிர்பார்ப்புட‌ன் தொட‌ர்ந்த‌ த‌ந்தையிட‌ம், "ப‌டிச்சிட்டேன்பா, ஒரு க‌ண‌க்கு ச‌ந்தேக‌மாயிருக்கு அதான் ச‌ந்திரா அக்காகிட்டே போய்க் கேட்க‌ப்ப போறேன்," என்று விடைபெற்றுக் கிள‌ம்பினான் சிபி.

ச‌ந்திரா அக்கா... எம்.எஸ்.சி க‌ணித‌ம் தேறிய‌வ‌ள். அர‌சாங்க‌ வேலைக்காக‌க் காத்துக் கொண்டு உள்ளூரில் ஒரு த‌னியார்ப் ப‌ள்ளியில் க‌ண‌க்கு டீச்ச‌ராக‌ வேலை பார்த்து வ‌ருப‌வ‌ள். காண்போர் அனைவ‌ராலும் ஓர் அறிவுஜீவியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுப‌வ‌ள். சிபியைப் பொறுத்தவ‌ரை, ச‌ந்திரா அக்கா ஒரு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம். க‌ண்சிமிட்டும் நேர‌த்தில் க‌ண‌க்குப் போட்டுக் காட்டும் ஒரு ம‌ந்திர‌வாதி! அவ‌ளிட‌ம் தொட‌ர்ந்து ப‌யின்றிருந்தால் இந்த‌ நிலைத் த‌ன‌க்கு வ‌ந்திருக்காது என‌ சிபி ந‌ன்கு அறிவான். மேலும் தன்னுடைய‌ இந்நிலையில் ச‌ந்திரா அக்காவால் என்ன செய்துவிட‌ முடியும்? ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே? என்றும் தன்னைத்தான் நொந்த‌வ‌னாய் சைக்கிளை வேக‌மாக‌ அழுத்தினான்.

மெயின்ரோடு வ‌ந்த‌து... அந்த ரோட்டைக் க‌ட‌ந்த‌தும் வ‌ரும் நேர் சந்தில் ச‌ற்று வேக‌மாக‌ சைக்கிளில் ப‌ய‌ணித்தால் ஐந்தாவ‌து நிமிட‌த்தில் ஒரு காய்க‌றி மார்க்கெட் வ‌ரும். அந்த மாலை நேர‌த்து மார்க்கெட்டின் ஜ‌ன‌ சந்த‌டியில் சைக்கிளை மூன்றாவ‌து சந்தில் செலுத்தினால் ச‌ந்திரா அக்கா வீடு வ‌ரும். ச‌ற்று தூர‌ம்தான், ஆனால் அதையெல்லாம் சிபி பொருட்ப‌டுத்த‌வே இல்லை.

அவ‌ன் மெயின் ரோட்டைக் க‌ட‌க்க‌ எத்த‌னித்துக் கொண்டிருக்கிறான். அந்த ரோட்டின் இருபுற‌மும் ஏதொவொரு க‌ளேப‌ர‌ம். யாரோவொரு பிர‌ப‌ல‌ம் அந்த ரோட்டு வ‌ழியே செல்ல‌ப் போகிறார் என்று புரிந்த‌து...

அது யார்? என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான்... சுவ‌ரெங்கும் அவனது அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன! சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் "ஹை த‌லைவ‌ர் வ‌றாரா?" என்று ஒரு திகைப்பு.
மெயின் ரோடு முழுவ‌தும் கூடும் கூட்ட‌த்தைக் க‌லைத்துக் கொண்டு பாதையை ஒழுங்கு செய்கிற‌து சிபிக்கு மிக‌வும்
ப‌ரிச்ச‌ய‌மான‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ப் ப‌ட்டாள‌ம்.

புத்த‌க‌ப் புழுவாக‌ வீட்டிலேயே முட‌ங்கிக் கிட‌ந்த‌ சிபிக்கு அந்த‌ ந‌டிக‌ர் என்றால் ஒரு த‌னி ஈர்ப்பு. அதுவும் சொந்த‌க்கார‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் த‌ன்னை அந்த‌ ந‌டிக‌னின் சாய‌லில் இருப்ப‌தாக‌ப் புக‌ழ்வ‌தைக் கேட்டால் பூரித்துப் போவான். அந்த‌ பூரிப்பு தான் அவ‌னைத் திசை மாற்றிய‌து. பாதிநாள் த‌ன் த‌னிய‌றையின் ர‌ச‌ம் தேய்ந்த‌ க‌ண்ணாடியின் முன்னேயே செல‌வ‌ழித்தான். "நீ
ந‌ம்ம‌ த‌லைவர் மாறியே இருக்கேடா!" என்று புக‌ழ்ந்து புக‌ழ்ந்தே ரசிக‌ர் ம‌ன்ற‌ விழாவில் அந்த‌ ந‌டிக‌ரைப் போல‌வே வேட‌ம‌ணிந்து மேடையேற்றின‌ர் சிபியை..

க‌ன‌விலேயே கால‌ம் க‌ரைந்த‌து. தேர்வு நாளும் வ‌ந்த‌து. அந்த‌ ந‌டிக‌ர் மேல் சிபிக்கு இன்றும் ஓர் இன‌ம் புரியாத‌ மோக‌ம் இருக்க‌த்தான் செய்த‌து.

அழுத்திப் பிடித்திருக்கிறான் சைக்கிள் பிரேக்கை... சில‌நொடி தாம‌தித்தால் ம‌ன‌ம் விரும்பும் நாய‌க‌னை முத‌ன்முறை நேரில் த‌ரிசிக்க‌லாம். ஆனால் ம‌ன‌மோ தொட‌ர்ந்து சைக்கிளை செலுத்துமாறு அழுத்துகிற‌து. எனினும் சிபி மீண்டுமொருமுறை ம‌றுப‌ரிசீல‌னை செய்கிறான். அதோ தூர‌த்தில் திற‌ந்த‌ ஜீப்பில் த‌லைக்குமேல் கைகாட்டிய‌ வ‌ண்ண‌ம் அந்த‌ உருவ‌ம் ம‌ங்க‌லாய்த் தெரிகிற‌து. ச‌ற்று நேர‌த்துக்கு முன்பு சுவ‌ற்றில் சுண்ணாம்புக் காரைக‌ளுக்கு இடையே தோன்றிய‌ அதே முக‌ம்!

"பார்த்துவிட்டுத்தான் போவோமே!" என்று முடிவுட‌ன் இருந்த‌ சிபியின் ம‌ன‌ம் திடீரென அந்த‌க் க‌டைசி க‌ட்ட‌த்தில், "உனக்கு இந்நிலை வ‌ர‌க்கார‌ண‌மே இந்த‌ மோக‌ம்தான், இத‌னை இக்க‌டைசி த‌ருண‌ம் வ‌ரை நீடிக்க‌ச் செய்தால் சிறிதும் நியாய‌ம் ஆகாது. இந்தத் தியாக‌த்தையாவ‌து நீ செய்தே ஆக‌ வேண்டும்!" என்று எச்ச‌ரித்த‌து. மேலும், வீட்டில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தந்தை, தாயின் பாச முகங்கள் ஒருமுறை மனதில் வந்து போக, தன் மனதின் இந்த‌க் க‌டைசிநேர‌ எச்ச‌ரிக்கைக்கு அடிப‌ணிந்த‌வ‌னாய்த் த‌ன் பார்வைக்கு எட்டும் தூர‌த்தில் இருக்கும் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ நாய‌க‌னைக் காணாம‌ல் க‌ண்ணுக்குக் க‌டிவாள‌ம் இட்டு நேரே த‌ன் பாதையைத் தொட‌ர்ந்தான்!

சைக்கிளில் இப்போது ஒரு புதுவேக‌ம், ம‌ன‌தில் ஒரு புதுத்தெம்பு, எங்கிருந்தோ துளிர்விடும் ஒரு புது ந‌ம்பிக்கை...
புத்துண‌ர்வுட‌ன் ச‌ந்திரா அக்கா வீட்டு வாச‌லில் சைக்கிளை நிறுத்திவிட்டு உத்வேக‌த்துட‌ன் கத‌வைத் த‌ட்ட‌ப்போன‌வ‌னை
திண்டுக்க‌ல் பூட்டுதான் வ‌ர‌வேற்ற‌து...

ம‌னதில் நிலைகொள்ளாத‌ ஒரு மிர‌ட்சியுட‌ன் ப‌க்க‌த்து வீட்டுப் பாட்டியிட‌ம், "அக்கா எங்கே?" என்று விசாரிக்க‌, "இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌!" என்று அச‌ராம‌ல் கூறி முடித்தாள் பாட்டி, வெற்றிலை குத‌ப்பிய‌ வாயால்.

ஏதேதோ எண்ண‌ங்க‌ள் மிரட்சியாய் ம‌ன‌தில் வ‌ந்து முட்ட‌ ஏமாந்து போன‌வ‌னாய் சைக்கிளை நோக்கித் திரும்பினான் சிபி...

பிர‌பு. எம்

"ஏகநாயகி" - "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!



"ஏகநாயகி" - "யூத்ஃபுல் விகடன்"ல் வெளியாகியுள்ள என் சிறுகதை!!


விகடனின் வலைதளத்தில் "யூத்ஃபுல் விகடன்"ல் இன்று என்னுடைய "ஏகநாயகி" சிறுகதை வெளிவந்துள்ளது!! "கிரேட்" பகுதியில் வெளியிட்டிருக்கும் விகடனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!! ஒரு பொது ஊடகத்தில் என்னுடைய சிறுகதை ஒன்று வெளிவந்திருப்பது இதுவே முதன்முறை...

என்னுடைய வலைப்பதிவிற்கு வருகை தந்து என்னுடைய எழுத்துக்களை உங்கள் கருத்துரைகளால் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருடனும் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறேன்!!


Click here to view the story in Vikatan.com

ஏகநாயகி

மாடிவீடுகளில் குடியிருப்பவர்களின் மனநிலையைக் கண்டிப்பாக‌ப் படிக்கட்டுகள் வெளிக்காட்டிவிடுகின்றன! அவர்கள் ஏறுகிற மற்றும் இறங்குகிற விதங்கள் அவர்களது அப்போதைய மன உணர்வுகளை நிச்சியம் பிரதிபலித்துவிடும்.

ஞாயிற்றுக்கிழமை...

காபியுடன் செய்தித்தாள் புரட்ட நேரம் தரும் ஒரேநாள். வீட்டு வாசலில் அமர்ந்து அன்றைக்கு டி.வியில் என்ன படம் என்று பார்த்துக் கொண்டிருந்த கீழ்வீட்டு வசந்தனின் உற்சாகத்தை "சொத்... சொத்"தென்று சுரத்தையே இன்றி வினோத் படியிறங்கும் விதம் கொஞ்சம் சீண்டிப்பார்த்தது...

தொங்கிய தோள்களுடன் வினோத் படியிறங்கும் கோலத்தைத் தனது திரைப்படத் தேடலை ஒரு நிமிடம் ஒத்திவைத்து ஏறிட்டார். வினோத் அந்த 'நடையழகு' மாறாமல் பைக்கை எடுக்க, பின்னேயே... படிக்கட்டில் இப்போது அவன் மனைவி. கிட்டத்தட்ட வாரநாட்களில் வேலைக்குப் போகும் அதே ஒப்பனை, படியிறங்கும் வேகம் மட்டும் கொஞ்சம் குறைச்சல். சின்னதொரு பதற்றத்துடன் வினோத்தையே பார்த்த வண்ணம் படியிறங்கி வசந்தனைக் கடக்கிறாள். பைக் ஸ்டார்ட் ஆகிறது... மனைவி பின்னிருக்கையில் அமரப் பயணம் தொடங்கியது... கணவன் மனைவி முகம் கொடுத்துப் பேசிக்கொள்ளவேயில்லை. வசந்தன் எதையோ புரிந்து கொள்கிறார்... தனது தேடலைத் தொடர்கிறார்!

வாரநாட்க‌ளின் நெரிச‌லின்றி சாலைக‌ள் கொஞ்ச‌ம் மூச்சுவாங்கிக் கொள்வ‌து போல் த‌ன் அக‌ல‌த்தைப் ப‌ர‌ப்பி வாக‌ன‌ங்க‌ளுக்குத் தார‌ள‌மாய் இட‌ம் கொடுத்திருந்த‌ன‌. வினோத் மிக‌வும் இருக்க‌மாக‌ அம‌ர்ந்திருக்கிறான். மௌன‌மாக‌வே அம‌ர்ந்திருந்த‌ ம‌னைவி வ‌ண்டியின் பின்புற‌ம் பார்க்கும் க‌ண்ணாடியில் த‌ன் முன்புற‌ம் உள்ள‌ க‌ண‌வ‌னின் முக‌த்தைத் தேடினாள். எதிர்க்காற்றில் கேச‌ம் க‌லைந்து, முக‌த்தில‌டிக்கும் புழுதிக்காக‌க் க‌ண்க‌ளை இடுக்கிக் கொண்டுத் த‌ன் பார‌த்தை சும‌க்கும் வ‌லியோடு வ‌ண்டியோட்டும்
வினோத்தின் முக‌த்தைப் பார்க்க‌ அவ‌ளுக்கு மிக‌வும் பாவ‌மாக‌ இருந்த‌து.

வினோத்தால் ஏமாற்ற‌ங்க‌ளைத் தாங்கிக் கொள்ள‌முடியாது. அவ‌ன‌து எதிர்பார்ப்புக‌ளும் மிக‌ப்பெரிதாக‌ இருக்காது. சின்ன‌ச்சின்ன‌ ச‌ராச‌ரி எதிர்பார்ப்புக‌ள்தான் அவ‌னுடைய‌து. ஆனால் அவை நிறைவேறாத‌போது மிக‌வும் உடைந்துபோவான். அவ்வாறு உடைந்துபோய் விடுவ‌தை ம‌றைக்க‌வும் அவ‌ன் அதிக‌ம் முனைவ‌தில்லை. அவ‌ன‌து வேதியிய‌ல் மாற்ற‌ங்க‌ள் யாவும் வெளிப்ப‌டையாக‌வே தெரியும். அத‌னாலேயே வினோத் முக‌த்தின் க‌வ‌லை ரேகைக‌ள் அவ‌ன் ம‌னைவிக்கு உள்ளே ஊடுறுவி வ‌லியை ஏற்ப‌டுத்தின‌...

ஒருவாறாக‌ப் ப‌ய‌ண‌ம் முடியும் நிலையை அடைந்த‌து. இதோ இந்த சாலையின் வ‌ல‌துப‌க்க‌த்தில்தான் மீராவின் வீடு உள்ள‌து. ந‌க‌ரின் பிர‌தான சாலைக‌ளில் அதுவும் ஒன்று, அத‌னைக் க‌ட‌க்க‌ வேண்டி இட‌துகையால் பைக்கைத் தாங்கிக் கொண்டுக் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வ‌ல‌துகையை நீட்டி சிக்ன‌ல் செய்த‌வாறே ரோட்டின் வ‌ல‌ப்புற‌ம் வினோத் இற‌ங்க‌... "நான் கை காட்டுறேன்... நீங்க‌ விடுங்க‌.." என்று ப‌ய‌ண‌த்தை முடித்து வைத்தாள் ம‌னைவி.

மீரா வீட்டு வாச‌லில் பைக்கிலிருந்து இற‌ங்கி, "ஈவினிங் நானே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வ‌ந்துட‌றேன், நீங்க‌ சிர‌ம‌ப்பட வேண்டாம்" என‌க்கூற‌, வினோத் த‌லையை ம‌ட்டும் ஆட்டிக்கொண்டு... "போன் ப‌ண்ணு... நானே வ‌ந்து பிக்‍ அப் செஞ்சுக்கிறேன்... ஆட்டோவெல்லாம் வேண்டாம்" என‌க்கூறிக்கொண‌டே இறுக்க‌ம் த‌ள‌ராம‌ல் பைக்கைத் திருப்பிக் கிள‌ம்பினான். அவ‌ன் த‌லைம‌றையும் வ‌ரை அங்கேயே நின்று பார்த்துவிட்டு மீராவின் வீடு நோக்கித் திரும்பினாள்.

வீட்டுமாடி ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌, "ஹாய்..! என்ன‌ப்பா இவ்ளோ லேட்டா வ‌ர்றே?" என வர‌வேற்ற‌ மீராவைப் பார்த்துப் புன்ன‌கைத்த‌வாறே வீட்டினுள் நுழைந்தாள்.

"உட‌ன் ப‌ணிபுரியும் நெருக்க‌மான‌ தோழி இர‌ண்டு நாட்க‌ளில் அமெரிக்கா செல்கிறாள், அலுவ‌ல‌க‌த் தோழிக‌ள் அனைவ‌ரும் க‌ல‌ந்துகொள்ளும் பார்ட்டியை எப்ப‌டிப் புற‌க்க‌ணிப்ப‌து? கொஞ்ச‌ம் புரிஞ்சுக்கோடா புருஷா!" என ம‌ன‌துக்குள் நினைத்துக் கொண்டே விருந்தில் ஐக்கிய‌மானாள் திரும‌தி. வினோத்!

"கிடைக்கிற‌ ஒருநாள் விடுமுறையையும் இப்ப‌டி க‌மிட் ப‌ண்ணிக்கிட்டா, வீட்டுவேலைக‌ளை எப்போதான் பார்ப்ப‌து?" என்று த‌ன்ப‌க்க‌ நியாய‌த்தை நினைத்துக் கொண்டே பைக்கைப் ப‌ள்ள‌த்துக்குள் விட்டான் வினோத்.

ச‌ரியான‌ ப‌ள்ள‌ம்... ந‌ல‌ல‌வேளை கீழே விழ‌வில்லை. என்ஜின் அணைந்துவிட்ட‌து. இருகால்க‌ளையும் த‌ரையில் ஊன்றி ப‌ல‌ம்திர‌ட்டி வ‌ண்டியைப் ப‌ள்ள‌த்திலிருந்து மீட்கிறான். சுற்றிமுற்றி அனைவ‌ரும் அவ‌னைப் பார்த்த‌வாறே க‌ட‌ந்து செல்வ‌தைப் பார்க்க‌க் கொஞ்ச‌ம் கூசிய‌து. ஒருவ‌ழியாக‌ப் ப‌ள்ளத்தைக் க‌ட‌ந்தாகி விட்ட‌து. அதுவ‌ரை ம‌ன‌தில் மைய‌ம் கொண்டிருந்த ஒரு விரைப்பு இள‌கிய‌து.

இய‌ல்பு நிலைய‌டைந்த‌வுட‌ன், "எத‌ற்காக‌ இத்த‌னை இறுக்க‌ம்?" என்கிற‌ ரீதியில் எதுவுமே தெரியாம‌ல் ஏதோ பாதியிலிருந்து க‌தை ப‌டிக்கும் ஒரு வாச‌கனைப் போல் அவ‌ன் ம‌ன‌ம் அவ‌னையே கேட்ட‌து!

வினோத்துக்கு நிச்சிய‌மாக‌ ஒரு "இடைவேளை" தேவைப்ப‌ட்ட‌து. ஆஹா... அருகிலேயே ஒரு டீக்க‌டை. பைக்கை ஓர‌மாக‌
நிறுத்திவிட்டு க‌டைக்குள் சென்று பெஞ்சில் அம‌ர்ந்தான். சூடாக‌ பாய்ல‌ர், அருகே த‌ள‌த‌ள‌வென‌ கொதிக்கும் பால், வ‌டிக‌ட்டியில் புது டிக்காஷ‌ன்...

அந்த‌ ந‌றும‌ண‌த்தை ஒருமுறை முக‌ர்ந்து முடிக்கும் முன்னேயே சுட‌ச்சுட நுறைபொங்க‌க் க‌ண்ணாடி த‌ம்ள‌ரில் தேநீர் முக‌ம‌ருகே நீட்ட‌ப்ப‌ட்ட‌து.

வாங்கிப் ப‌ருக‌ப் ப‌ருக‌ப் புது ர‌த்த‌ம் சுர‌ப்ப‌து போன்ற‌ ஓர் உண‌ர்வு...

இன்னும் இளமையாக‌ உண‌ர்ந்தான். த‌ன் க‌ல்லூரிக்கால‌ நினைவ‌லைக‌ளில் மூழ்கினான்.

ஸ்வேதா... அந்த‌ இனிய‌ நாட்க‌ளின் நாய‌கி! திரும‌ண‌த்துக்குப் பிற‌குதான் ம‌னித‌னுக்கு வாழ்வில் முடியுதிர்கால‌ங்க‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌. அதுபோன்ற‌ நேர‌த்தில் இதுபோல வாழ்வில் வ‌ந்துபோன‌ சில‌ வ‌ச‌ந்த‌கால‌ங்க‌ளை நினைத்து ம‌ன‌தாறிக்கொள்வ‌து வினோத்தின் வ‌ழ‌க்க‌ம். அவ‌ன் வாழ்வின் வ‌ச‌ந்த‌கால‌ம் என்றாலே அது ஸ்வேதாவுட‌னான‌ காத‌ல்கால‌ம் தான்!!

டீயை ருசித்து முடித்துப் ப‌ய‌ண‌ம் தொட‌ர‌ பைக்கைப் பார்த்தான், இப்பொழுது வ‌ண்டி புதிதாய்த் தெரிந்த‌து. ஏறிய‌ம‌ர்ந்தான் ஒரேமிதியில் வ‌ண்டி ஸ்டார்ட் ஆன‌து. வ‌ண்டிக் க‌ண்ணாடியில் முக‌ம்பார்த்தான். ச‌ற்று நேர‌த்திற்குமுன் அவ‌ன் ம‌னைவி த‌ன் க‌ண‌வ‌னின் அக‌த்தின் அழ‌கை முக‌த்தில் பார்த்த‌ அதே க‌ண்ணாடி... வினோத்திற்கு இப்பொழுது அதில் ஸ்வேதாவின் முக‌ம் தெரிந்த‌து.

கூந்த‌ல் ப‌ற‌க்க‌ சுடிதாரில் இள‌மையாக‌ வினோத்தின் பின்னால் ஸ்வேதா அம‌ர்ந்து வ‌ல‌ம் வந்த அந்த‌க்கால‌ம் இப்போது அந்த‌க் க‌ண்ணாடியில் தெரிந்த‌து.

ஸ்வேதாவோடு உற்சாக‌மாய் பைக்கை வீடு நோக்கி செலுத்தினான். வீடு வ‌ந்துவிட்டது.

வசந்தன் இன்னும் செய்திதாளைப் புரட்டி முடிக்கவில்லை. இம்முறை வினோத் இர‌ண்டிர‌ண்டு ப‌டிக‌ளாக‌த்தாவி வேக‌மாக‌ வீட்டை அடைந்தான். க‌த‌வு திற‌ந்த‌தும் அல‌ங்கோல‌மாய் பொருட்க‌ள் இறைஞ்சிக்கிட‌ந்த‌ன‌. ம‌னைவி மீது க‌டும் வெறுப்பு வ‌ந்து முட்டிய‌து. கைக்க‌டிகார‌த்தில் ம‌ணி பார்த்தான், காலை ப‌தினோரு ம‌ணி. ஒருமுறை உட‌ல் கோணி நெட்டிமுறித்துவிட்டு வீட்டை ஒழுங்குப‌டுத்தும் வேலையில் இற‌ங்கினான். முன்ன‌தாக‌ அது ப‌ல‌நாள் ஒத்திவைப்புக்குப் பின் இவ்வார‌ இறுதியில் இருவ‌ரும் இணைந்து செய்வ‌தாக‌த் திட்ட‌மிட‌ப் ப‌ட்டிருந்த‌ வேலை!

ச‌னிக்கிழ‌மை... ம‌னைவிக்கு வ‌ழ‌க்க‌ம் போல் ப‌ணிவிடுப்பு கிடைக்க‌வில்லை என்ப‌தால் ஞாயிற்றுக்கிழ‌மையான இன்று வேலையை முடித்தாக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம். இன்றைக்குள் வீட்டை சீர்ப‌டுத்திவிட‌ வேண்டும் என்று உறுதியாக‌ இருந்தான் வினோத். அது நன்கு தெரிந்தும் மீராவின் விருந்துக்கு சென்ற‌தை நினைக்க‌ நினைக்க‌ வினோத்துக்கு வெறுப்பு கொப்ப‌ளித்த‌து.
அத்தனை கோப‌த்தையும் செய‌லில் காட்டிப் ப‌டுவேக‌மாக‌ப் பொருட்களை ஒழுங்கு வைத்தான் வினோத். பெரும்பாலும் ஓர் ஒழுங்க‌ற்று சித‌றிக்கிட‌ந்த‌து அவ‌ன் ம‌னைவியின் பொருட்க‌ள்தான். அதிலும் குறிப்பாக‌ அவ‌ள‌து அல‌ங்கார‌ப் பொருட்க‌ள்தான்! வேலையின் சோர்வு தெரியாம‌லிருக்க‌ கூட‌ சேர்ந்து பாடிக்கொண்டிருந்த‌து எப்.எம் ரேடியோ.

"நேர‌ம் இப்பொழுது ப‌ன்னிர‌ண்டு ம‌ணி நாற்ப‌து நிமிட‌ம்."

பெருங்க‌ளைப்பாக‌ உண‌ர்ந்தான் வினோத். இத‌ற்குமேல் த‌னியாக‌ இந்த‌ வேலையை செய்ய‌ முடியாது என்ற‌ நிலையை அடைந்த‌க‌ண‌ம் அவ‌ன் க‌ண்ணில் ஒரு குட்டிப் பை ப‌ட்ட‌து. ப‌ல‌நாட்க‌ளாக‌ அவ‌ன் பொதிந்து வைத்திருந்த‌ பொக்கிஷ‌ம் அது!

ஸ்வேதாவின் நினைவுக‌ளைத்தான் பொதிந்து வைத்திருந்தான் அந்தப் பைக்குள்!

அவ‌னைப் பொறுத்த‌வ‌ரை அவை அவ‌ன‌து காத‌லின் நினைவுச்சின்ன‌ங்க‌ள் அல்ல‌, அவ‌ன‌து காத‌லின் அடையாள‌ங்க‌ள், காத‌லித்த‌த‌ன் அர்த்த‌ங்க‌ள்!

அவ‌ன் அதை ம‌றைத்தோ, ஒளித்தோ வைத்திருக்கவில்லை. அடிக்க‌டி அதை அவ‌ன் எடுத்துப் பார்ப்ப‌துண்டு. உள்ளே வ‌ழ‌க்க‌ம்போல் ஸ்வேதாவின் ப‌ழைய‌ கைக்குட்டைக‌ள், காலி நெயில் பாலிஷ் பாட்டில்க‌ள், ஹேர் கிளிப்புக‌ள் எல்லாம் இருந்த‌ன‌. அவ‌ற்றையெல்லாம் தொட்டுப்பார்த்தான். அவை ஒவ்வொன்றும் அவ‌னுக்கொரு க‌தைசொல்லும் போலும். உள்ளே பாதிப்புகைத்த‌ சிக‌ரெட் துண்டு ஒன்று கிடைந்த‌து. ஸ்வேதாவுக்குப் புகைபிடிக்கும் ப‌ழ‌க்க‌ம் கிடையாது. அது ஸ்வேதாவுக்குப் பிடிக்காது என்று வினோத் ம‌ங்க‌ள‌ம் பாடிய‌ க‌டைசி சிக‌ரெட்!

அதுமுதல் இன்றுவ‌ரை வினோத் புகைபிடித்த‌து கிடையாது. இப்படித் தோண்ட‌த் தோண்ட‌க் கிடைத்த‌ப் புதைய‌ல்க‌ளுக்கு அடியில் ஆழ‌த்தில் ஒரு க‌வ‌ர். அது ஒரு க‌ல்யாண‌ப் பத்திரிக்கை. அதைத் திற‌க்கிறான். வினோத்-ஸ்வேதாவின் திரும‌ண‌ அழைப்பித‌ழ் ஒரு ப‌ள‌ப‌ள‌ப்பான‌ காஸ்ட்லி கார்டில் அச்சிட‌ப்ப‌ட்டிருந்த‌து.

ஏதேதோ நினைவ‌லைக‌ளில் மூழ்கிய‌வ‌னாக‌ அதை அப்ப‌டியே ஒருமுறை த‌ன் விர‌ல்க‌ளால் வ‌ருடினான். அத‌ற்கும் ஆழ‌த்தில் ஒரு புகைப்ப‌ட‌ம். அதில் ம‌ண‌க்கோல‌த்தில் வினோத் ம‌ற்றும் ஸ்வேதா அருக‌ருகே நின்றிருந்தன‌ர். வினோத்திற்குத் த‌ன்னுள்ளார்ந்த‌ காத‌லை உயிர்ப்பித்த‌தோர் உண‌ர்வு. அதில் அதிக‌ நேர‌ம் ல‌யித்திருப்ப‌தைத் த‌ட‌ங்க‌ல் செய்த‌து காலிங்பெல் ச‌த்த‌ம். க‌த‌வைத் திற‌ந்தான்... அங்கு ஸ்வேதா நிற்கிறாள்..!

வினோத் அவ‌ளை ச‌ற்றும் எதிர்பார்த்திருக்க‌வில்லை.

"உங்க‌ளைத் த‌னியா இங்கே விட்டுட்டு என்னால‌ அங்கே பார்ட்டியில் நிம்ம‌தியா க‌ல‌ந்துக்க‌வே முடிய‌ல‌. அதான் பாதியிலேயே ஓர் ஆட்டோ பிடிச்சு வ‌ந்துட்டேன். ஐம் ஸோ ஸாரி வினோத்!" புன்முறுவ‌லுட‌ன் வீட்டிற்குள் நுழைந்தாள் திரும‌தி. ஸ்வேதா வினோத்!

பிரபு. எம்

பாட்டி கதை (சிறுகதை பாகம் -3)

வேக‌வேக‌மாகத் திரும‌ண‌ வீடாக‌க் க‌ளைக‌ட்ட‌த் துவ‌ங்கியிருந்தது ஜீவாவின் வீடு!!... வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ கையோடு அப்பா திருமண ஏற்பாடுகளில் பரபரப்பாகிறார்.... அம்மா அழைப்பித‌ழ்க‌ளின் ஓர‌ங்களுக்கு மஞ்சள் இட்டுக் கொண்டிருக்கிறார்... இதோ அடுத்த‌ வார‌ம் அவ‌ர்க‌ள் வீட்டிலேயே நிச்சிய‌தார்த்த‌ விழா.... தொட‌ர்ந்த‌ இர‌ண்டாவ‌து வார‌ம் திரும‌ணம்!!!.... பரீட்சை முடிந்து நாளைக்கே அஞ்சலி வ‌ந்துவிடுவாள் அவர்கள் வீட்டுக்கு!! அடுத்த இரண்டு நாட்க‌ளில் அஞ்ச‌லியின் பெற்றோரும் வ‌ந்துவிட‌ நிச்சிய‌தார்த்த‌ம் இனிதே ந‌ட‌க்க‌ப்போகிற‌து.... ஜீவாவுக்கோ, வீட்டில் இல்லையென‌த் தெரிந்தும் அந்த வெறுமையில் பாட்டியைத் தேடுகின்ற‌ன‌ க‌ண்க‌ள்...

ஒரு கார் ஷோரூமிலிருந்து அழைப்பு வ‌ருகிற‌து ஜீவாவின் அலைபேசிக்கு...அவர்களின் லேட்டஸ்ட் மாடல் காரை "டெஸ்ட் டிரைவ்" செய்துபார்ப்ப‌த‌ற்கு இன்று மாலை ஷோரூமிற்கு வ‌ர‌லாம் என்று க‌ண்ணியமாக‌ அழைப்பு விடுக்கிறார்க‌ள்!!

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!"

ஓட்டுந‌ர் இன்றித் தன் கம்பெனி காரை இம்முறை தானே பாட்டிவீடு நோக்கி ஓட்டிச்சொல்லும் ஜீவா சிரித்துக் கொள்கிறான் தன் பாட்டியை நினைத்து!!

"இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"

அஞ்ச‌லியிடம் ஆரோக்ய‌மாய் சவாலை ஏற்றுக்கொண்ட‌ ஜீவா தீர்க்கமாக உள்செல்கிறான் தன் பிரியமான பாட்டி வீட்டுக்குள்!!

இம்முறை எல்லாமே முன்பே திட்ட‌மிட‌ப் ப‌ட்டிருந்த‌து... தயாராக‌ இருந்த‌ பாட்டியை மிக‌வும் ம‌கிழ்ச்சியாக‌க் காரின் முன்னிருக்கையில் அம‌ர‌ வைத்துப் பாசமாய் ஸீட் பெல்ட் பொருத்திவிடுகிறான் பேர‌ன்... ச‌ரியான‌ அள‌வில் குளிரூட்ட‌ப்ப‌ட்ட‌ காரில் பாட்டியின் முகபாவங்களைக் க‌வ‌னித்த‌வாறே காரை அலுங்காமல் செலுத்துகிறான் ஜீவா!!! அமைதியாய்.. வசதியான இருக்கையில் "ஜம்" மென்று கம்பீரமாய் அம‌ர்ந்து வ‌ரும் பாட்டி அந்த‌ காரின் சொகுசான‌ வ‌ச‌திக‌ளைப் புதிதாக‌ப் பார்க்கிறார்...!! தென்ற‌ல்போல‌ மெலிதான‌ குளிர்ச்சியை இத‌மாய்த் தெளிக்கும் ஏசி... சுவாச‌த்துக்குச் சுக‌மாய் கார் ஃப்ரெஷ்ன‌ரின் வாச‌ம்..... பூப்போல‌ இய‌ங்கும் கிய‌ரும், ப‌வர் ஸ்டியரிங்கும்..... கொஞ்ச‌மும் இரைச்சலின்றி ப‌ள்ள‌ம் மேடுக‌ளில் அமுங்கிக் கொடுத்து அமைதியாய் ஊர்ந்து செல்லும் அந்த ஊர்தியின் உள்புற‌ அழ‌கை அதிகம் அசையாமல் க‌ண்க‌ளை மட்டும் உருட்டிப் புதிதாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் பாட்டி, அப்போது "இளைய நிலா.... பொழிகிறதே...!!" என இளையராஜா தாலாட்ட ஆரம்பித்தார்.... வ‌ண்டியை ஓட்டிக்கொண்டே ஓர‌க்கண்ணால் தன் பாட்டியை ஒரு குழந்தையாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான் ஜீவா!!... ஊரைவிட்டு வெளியேறிய‌து வாக‌ன‌ம்..... ஜீவா வேக‌மெடுக்க‌ ... இய‌ல்பாய் க‌ண்க‌ள் சொருகித் தூங்கிப்போனார் பாட்டிய‌ம்மா!! ராஜ‌ச‌ய‌ண‌ம்!! :)

முன்ன‌தாக.... ஜீவா த‌ன் பாட்டியிட‌ம் தான் ஏதோவொரு காரை வாங்கி ஏமாற‌த் தெரிந்த‌தாக‌வும் இப்போதுதான் தெளிவ‌டைந்து விட்ட‌தாக‌வும் கூறினான்.... பாட்டியின் ம‌கிழ்ச்சி குறையுமுன்பே.... ஜீவா, " எல்லா க‌ம்பெனிகாரர்களூம் எங்க‌ காரை வாங்குங்கனு ஒரே தொந்த‌ர‌வு பாட்டிம்மா..... உங்க‌ பேர‌ன் ஏமாறுவானா!! தெளிவா சொல்லிட்டேன் என் பாட்டி ச‌ம்ம‌த‌ம் சொல்லுற‌ காரைத்தான் நான் வாங்க‌ப்போறேன்னு!!"... கொஞ்ச‌ம் இடைவெளிவிட்டு மெதுவாக‌ " அத‌னால‌ நாளைக்கு ந‌ம்ம‌ ரெண்டுபேரும் சிட்டில‌ இருக்குற‌ எல்லா கார் ஷோரூமுக்கும் போறோம்!!" நைஸாக சொருகிய‌ ஜீவா.....எந்த‌வொரு ப‌திலுக்கும் பாட்டி த‌யாராகும் முன்பே " நாளைக்கே பாட்டிம்மா ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்திட‌ணும்.... உங்க‌ ஒரே பேர‌னுக்கு ந‌ட‌க்க‌ப்போற‌ ஒரே க‌ல்யாணம் இது.." என்று எப்ப‌டியோ சிரிக்க‌ வைத்துப் பேசிப்பேசிப் பாட்டியைத் த‌ன் ப‌க்க‌ம் மெல்ல‌ ந‌க‌ர்த்தினான்!!!

சுகமான பயணத்தில் தூங்கிப்போன‌ பாட்டி க‌ண்விழித்த‌போது கண்முன்னே முற்றிலும் ஒரு புதிய‌ உல‌க‌ம் ப‌ர‌ப‌ர‌வென‌ இய‌ங்கிக் கொண்டிருந்த‌து.... கிழ‌க்கு நோக்கி மேலேறித் திடுமென‌ வ‌ட‌கிழ‌க்கில் வ‌ளையும் ஒரு ஃப்ளைஓவ‌ரில் அனாய‌ச‌மாக‌ காரை வளைத்துக் கொண்டிருந்தான் ஜீவா.... இப்போது பாட்டிக்கு வண்டியின் வேக‌ம் புல‌ப்ப‌டுகிற‌து.... ப்ளைஓவ‌ரின் மேலேயிருந்து ஜ‌ன்ன‌லில் த‌லைக்குக்கீழே ரோட்டின் இருபுற‌மும் நகர இட‌மின்றி அடைத்துக்கொண்டு முன்னேறும் நூற்றுக்க‌ண‌க்கான‌ கார்க‌ளும் ப‌ஸ்க‌ளும் அந்த‌ இடைவெளிக‌ளிலும் க‌ப‌டியாடும் வித்தியாச‌மான‌ பைக்குக‌ளையும் பார்க்க‌த் த‌லைசுற்றிய‌து பாட்டிக்கு.... நான்கு ரோடுக‌ள் ச‌ந்திக்கும் ஒரு பிர‌ம்மாண்ட‌ சிக்ன‌லில் முத‌ல்வ‌ரிசையில் அவ‌ர்க‌ள் கார் நிற்கிற‌து..... சுற்றிமுற்றி நாற்புற‌மும் ஆக்ஸ‌லேட்ட‌ர்க‌ளை முறுக்கிக் கொண்டுக் காத்திருக்கும் அவ‌ச‌ர‌ம் ஒரு போர்க்க‌ள‌த் தோற்ற‌த்தைக் கொடுத்த‌து பாட்டிய‌ம்மாவுக்கு!! குழ‌ப்ப‌மான‌ சிக‌ப்பு ப‌ச்சை ஒளிவிளையாட்டில் வேகமாய்ப் ப‌ங்குபெறும் பாத‌சாரிகளையும்... அஸ்த‌ம‌ன‌ வேளையின் கோப‌மான‌ ஹார்ன‌க‌ளிலும் உண்மையிலேயே கொஞ்ச‌ம் கிறுகிறுத்துப் போன‌ பாட்டிய‌ம்மா.... இந்த‌த் திடீர் ப‌ர‌ப‌ர‌ப்புக‌ள் ஒவ்வாம‌ல் கொஞ்ச‌ம் உட‌ல்குறுக்கிக் க‌ஷ்ட‌மாய்த் த‌ன் கைகளால் காதுக‌ளை மூடிக்கொள்ள‌ப் போனார்.... அப்போது அருகிலிருந்த‌ கிய‌ர் மாற்றும் கரம் பாட்டியின் கையைப் பாச‌மாய்ப் ப‌ற்றிக்கொண்ட‌து!!! முற்றிலும் புதிய‌ சூழ‌லில் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்ட‌ப் பாச‌மான‌ அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் தான் தூக்கிவ‌ள‌ர்த்த‌ பேர‌னுடைய‌து என்று ம‌ன‌ம் அறிந்த‌ க‌ண‌ம் சில்லிடும் ஓர் அற்புத‌மான‌ உண‌ர்வை அனுபவித்தார் பாட்டிய‌ம்மா.... ப‌ட்ட‌ண‌த்து மிர‌ட்ட‌லைச் ச‌ந்திக்கும் புதுத்தெம்போடு இப்போது, ர‌க‌ர‌க‌மாய் மின் விள‌க்குக‌ள் க‌லர்க்கோல‌ம் போட்டிருக்கும் பட்டணத்து மாலை அழ‌கை ர‌சிக்க‌த் துவ‌ங்கினார் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே!!!

த‌ரையிலிருந்து பிர‌ம்மாண்ட‌மாய் எழுந்து நின்ற‌ ஒரு கார் ஷோ‍ரூமில் கால்ப‌தித்து இற‌ங்கினார்க‌ள் பாட்டியும் பேர‌னும்... முத‌ல்நாள் ஸ்கூல்செல்லும் பிள்ளைபோல் புதிதான‌ அந்த‌ சூழ‌லில் பாட்டிம்மா முற்றிலும் சர‌ண‌டைந்துவிட்டதோர் உட‌ல்மொழியை வெளிப்ப‌டுத்தித் த‌ய‌ங்கி ஒடுங்கி நின்றார்... பாட்டியின் சின்னச் சின்ன‌ அசைவுக‌ளைக் கூட‌ இப்போது மொழிபெய‌ர்க்க‌த் தெரிந்துகொண்ட‌ ஜீவா... காரிலிருந்து இற‌ங்கிக் கொஞ்ச‌ம் குறுகி நின்ற‌ பாட்டியின் தோள்பிடித்து உள் அழைத்துச் சென்றான்..... "ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்" என்று அல‌ட்டிக்கொள்ளும் பெரும் ஷோரூம் அது!! ஸ்டுடியோ எஃபெக்டில் மிர‌ட்ட‌லாய் அழ‌க‌ழ‌கு கார்க‌ள் பேராண்மையுடன் கம்பீரமாய் மின்னொளியில் ஜொலித்துக்கொண்டு ட‌ய‌ரூன்றி(!) நின்றுகொண்டிருக்கின்றன‌..... "ஹலோ ஐம் சீதாராமன்" என்று தானாக‌வே ஜீவாவிடம் அறிமுக‌மாகிக்கொண்டார் ஓர் எக்ஸிகியூட்டிவ்!! ப‌டுஸ்மார்ட்டான‌ ஓப‌னிங் கொடுத்துக் கை குலுக்கிக் கொண்ட‌ அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் த‌ன் தொழில்வாழ்வின் வித்தியாச‌மான‌தொரு சோத‌னையை சந்திக்க‌ப்போவ‌தை அப்போது உண‌ர்ந்திருக்க வாய்ப்பில்லை!!!

மார்க்கெட்டின் அதிர‌டி என்ட்ரியான அவர்களின் புதிய கார் ஒன்றின் அருகே ஜீவாவையும் பாட்டியையும் அழைத்துச் சென்றார் சீதாராமன்... "யூ ஸீ.." என்று ஜீவாவை நோக்கித் தங்க‌ள் வாக‌ன‌த்தைப் பற்றிப் பேச‌ ஆர‌ம்பித்த‌வ‌ரை.... இடைம‌றித்து "ஸாரி பாஸ், இங்கே என் பாட்டிதான் க‌ஸ்ட‌மர்.. நான் ஜஸ்ட் டிரைவர்தான்! அவ‌ங்க‌ளுக்கு எந்த‌ கார் பிடிக்குதோ அதைத்தான் வாங்க‌ப்போறோம்... ஸோ நீங்க அவங்ககிட்டயே பேசுறதுதான் கரெக்ட் !!" என்று நட்பாக சொல்லிவிட்டுப் பாட்டிய‌ருகே சென்றுப் ப‌வ்விய‌மாய்த் தோள்க‌ளைப் ப‌ற்றிக்கொண்டு "இந்த‌க் காரைப் பார்க்க‌லாமா பாட்டிம்மா?!!" என்று சொல்லி மெல்ல‌ ந‌க‌ர்ந்தான்!!

எதிர்பார்த்திராத‌த் த‌ன் புது வாடிக்கையாளரைப் பார்த்துப் புன்னகைத்துத் த‌ன் "டை"(tie)யை ஒருமுறை ச‌ரிசெய்துகொண்டார் சீதாராம‌ன்... சிரித்த‌முக‌மாய்த் த‌ங்க‌ள் காரின் டெக்னிக்க‌ல் ப்ள‌ஸ்பாயிண்டுக‌ளைப் பாட்டிக்கு ஏற்ற‌ மொழியில் எடுத்துச்சொல்ல‌த் த‌யாரானார்... அருகில் ஓர் ஓர‌மாய் சென்று அம‌ர்ந்துவிட்ட‌ப் பேர‌னை ஒருமுறை இத‌மாய்ப் பார்த்துவிட்டுப் பாட்டி மெல்ல‌ அந்த‌க் காரின் அருகே கொஞ்ச‌ம் முன்னேறி த‌ய‌க்க‌த்தோடு அதைத் தொட்டுப் பார்த்தார்!! "ஸாலிட் பாடி... ஹைட்ராலிக் ச‌ஸ்பென்ஷ‌ன்ஸ்..... ஹ்ம்ம்ம்ம்.. எப்ப‌டிச் சொல்ற‌து!!" என்று சீதாராம‌ன் த‌ன‌க்குள் மென‌க்கெடுவதையும்.... அவ‌ர் கூறுவ‌தைப் புரிந்துகொள்ள‌ அதிக‌ம் முய‌ற்சிக்காம‌ல் த‌ன் "point of view"ல் காரையே சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் பாட்டியையும் கொஞ்ச‌ம் வில‌கியிருந்து க‌ண்டு ர‌சிக்கையில் ஜீவாவுக்குக் க‌விதைக‌ள் தோன்றிய‌து ம‌ன‌துக்குள்!!! இறுதியில் "ஃபீல் ஃப்ரீ அம்மா...." என்று சிரித்துப் பாட்டியைக் காருக்குள் அம‌ர்ந்து பார்க்க‌ப் ப‌ணித்த‌ சீதார‌ம‌னுக்கு உத‌வ ஓர் அழகான, குட்டைப் பாவாடை இள‌ம்பெண்ணும் சேர்ந்துகொண்டாள்!! பாட்டிய‌ம்மாவைப் பாந்த‌மாய் அழைத்துக் காருக்குள் அம‌ர‌வைத்தார்க‌ள்... ஸீட்பெல்ட் பாட்டிக்குப் பொருத்திக்காட்ட‌ அந்த‌ இள‌ம்பெண் உத‌வ, அவளின் மிக்ச் சிக்கனமான உடையை வித்தியாச‌மாக‌ப் பாட்டி பார்த்த‌ பார்வை தூர‌த்திலிருந்து பார்த்த‌ ஜீவாவுக்கு சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து!!! பாட்டிய‌ம்மா இப்போது டிரைவ‌ர் ஸீட்டில்!!! ஓட்டுந‌ரின் வ‌ச‌திக்கேற‌ப‌ப் பொஸிஷ‌னிங் செய்துகொள்ளும் வ‌ச‌தியுள்ள‌ எல‌க்ட்ரானிக் ப‌வ‌ர்ஸ்டிய‌ரிங்கில் கைவைத்துக் கொண்டுக் க‌ண்ணாடி வ‌ழியே பேர‌னைத் தேட‌த் துவ‌ங்கினார் பாட்டிய‌ம்மா!! க‌டைசியாக‌ இத‌னை ஒத்த‌ ம‌ற்ற‌ கார்களுட‌னான‌ ஒப்பீடு ம‌ற்றும் ப‌ல‌ப்ப‌லத் த‌க‌வ‌ல்க‌ள் அட‌ங்கிய‌ ப‌ள‌ப‌ள‌ பாம்ப்ளெட்டுக‌ளைப் பாட்டியிட‌ம் கொடுத்து விடைகொடுத்தார்க‌ள் பாச‌மாக‌!!!

"முத‌லாளிய‌ம்மா"வை ம‌ரியாதைப் புன்ன‌கையுட‌ன் காரில் மீண்டும் அலுங்காம‌ல் அம‌ர‌வைத்து ஜீவா வ‌ண்டியை செலுத்தினான் அடுத்த‌ ஷோரூமுக்குள்!!! அடுத்த‌டுத்து மூன்று கார் ஷோரூம்க‌ளுக்கு ர‌க‌ளையான‌ அதிர‌டி விஜ‌ய‌ம் கொடுத்துவிட்டப் பாட்டிய‌ம்மா க‌ளைப்படைந்து விடும்முன்பாக‌வே த‌ன‌க்கு மிக‌வும் பிடித்த‌மான‌வ‌ர்க‌ளை எப்போதும் அழைத்துச் செல்லும் ரெஸ்டாரெண்டில் ஏற்கென‌வே 'புக்' செய்து வைத்திருந்த‌ டேபிளில் பாட்டியை அம‌ர‌வைத்து ஆர்ட‌ர் செய்த‌ ஸ்பெஷ‌ல் உண‌வுக‌ளையெல்லாம் தானே பாட்டிக்குப் ப‌ரிமாறினான்!! பல‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு கிராமத்தில், பாட்டிக்குக் குட்டிப் பேரனாய்க் க‌ழித்த‌ பொழுதுக‌ளுட‌ன் இன்று அவ‌ன் ம‌ன‌ம் அடைந்த‌ திருப்தியும் சேர்ந்துகொண்ட‌து..... மென்மையான‌ கைக‌ளால் இலையை வ‌ருடி வ‌ருடி பாட்டி சாப்பிடுவ‌தை அவ‌ர் கவ‌னிக்காத‌ பொழுதெல்லாம் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டே இருந்தான்!!! ம‌ண‌ம‌க‌ள் தான் விள‌க்கேற்றும் வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்துவிட்ட‌தாக‌க் குறுந்த‌க‌வ‌ல் வந்தது அஞ்ச‌லியிட‌மிருந்து!!!
வீடுநோக்கி ப‌ற‌ந்தார்க‌ள் பாட்டியும் பேர‌னும்... கார்ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ க‌ண‌க்க‌ற்ற‌ ப‌ள‌பள‌ ஃபாம்ப்ளெட்டுகள், நோட்டீசுக‌ளையெல்லாம் ப‌த்திர‌ப்ப‌டுத்தி சிர‌த்தையாய்த் த‌ன் பையில் வைத்துக்கொண்டார் பாட்டி!!

பார்த்த மாத்திர‌த்திலேயே அஞ்ச‌லியைப் பிடித்துப்போன‌து பாட்டிக்கு!! த‌ன் சொந்த‌ப் பாட்டியைப் போன்றேதான் ந‌ம் பாட்டிய‌ம்மாவையும் பார்த்தாள் அஞ்ச‌லி.... அஞ்ச‌லியின் த‌ந்தையும் ஜீவாவின் அப்பா ராஜ‌கோபால‌னும் முன்பே ந‌ண்ப‌ர்க‌ள் அத‌னால் சிர‌ம‌மின்றி எளிதில் ஒட்டிக்கொள்ள‌ முடிகிற‌து அஞ்ச‌லிக்கு!! அதிக‌ம் ப‌ரிச்சிய‌மில்லாத‌ ஜீவாவுட‌னும் இப்போது "ஃபோன் ஃபிரெண்ட்" ஆகிவிட்டாள் அல்ல‌வா!!! சிறிது நேர‌ம் அனைவ‌ரும் வீட்டு ஹாலில் அம‌ர்ந்து பேசிக் கொண்டிருந்தார்க‌ள் அஞ்ச‌லியைக் காக்க‌ வைத்துவிட்டு பாட்டியுட‌ன் சுற்றிக்கொண்டிருக்கும் ம‌க‌ன்மேல் கொஞ்ச‌ம் அதிருப்தி கொண்டிருந்தார் ராஜ‌கோபால‌ன்....!!! எவ்வ‌ள‌வு அன்பு செலுத்தினாலும் அதைப் புரிந்துகொள்ளாம‌ல் அல‌ட்சிய‌ம் செய்வ‌துதான் த‌ன் தாயின் வாடிக்கையென்று அவ‌ரை எண்ண வைத்திருந்தது தன் தாய்மீதான‌ அவருடைய‌ இத்த‌னை நாள் கோப‌ம்!!! நேர‌ம் அதிக‌மாகிப் போய்விட‌ ஜீவாவும் அஞ்ச‌லியும் பாட்டிக்கென்று ஏற்கெனவே ஜீவா த‌ன் வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்த‌ அறையில் மெத்தையில் ப‌டுக்க‌வைத்துக் க‌ம்ப‌ளியால் பொதிந்து விட்டார்க‌ள்..... நிம்ம‌தியாக‌ப் ப‌டுத்துத் தூங்குமாறு ப‌ணித்த ஜீவா ஏற்கென‌வே பாட்டியிட‌ம் சொல்லிவிட்டான்... அவ‌ர் தேர்வு செய்யும் காரைத்தான் வாங்க‌ப் போவ‌தாக‌!!!

அஞ்ச‌லியும் ஜீவாவும் பாட்டியைத் துயில‌விட்டுத் த‌த்த‌ம் அறைக‌ளுக்கு ந‌க‌ர்ந்தார்க‌ள் "ஸ்வீட் ட்ரீம்ஸ்" சொல்லிவிட்டு!! த‌ன் ம‌னைவியுட‌ன் பாட்டி அறைக்கு அருகில் சென்ற‌ ராஜ‌கோபால‌ன் த‌ன் தாயின் குண‌த்தைப் ப‌ற்றித் த‌ன‌க்கு ந‌ன்கு தெரியும் என்று த‌ன் ம‌னைவியிட‌ம் சொல்லிக்கொண்டு.... ஜீவா சிர‌த்தையோடு ப‌ஞ்ச‌னையும் க‌ம்ப‌ளியும் கொடுத்துப் பாச‌மாய்ப் ப‌டுக்க‌வைத்த‌தை உதாசின‌ப்ப‌டுத்திவிட்டு நிச்சிய‌ம் இந்நேர‌ம்‌ த‌ன் தாய் த‌ரையில் பாயை விரித்துப் ப‌டுத்திருப்பார் என்று ம‌னைவியிட‌ம் "பெட்"(bet) வைத்துக்கொள்ளாத‌ குறையாய் பாட்டியை மெதுவாக‌ப் பார்த்தார்க‌ள்.... ச‌ரியாக‌வே க‌ணித்திருந்தார் ம‌க‌ன் த‌ன் தாயை!! ப‌டுக்கையில் பாட்டியைக் காண‌வில்லை!! கீழே தரையில் ஒரு மெல்லிய‌ விரிப்பில்தான் போர்த்திப் ப‌டுத்திருந்தார் பாட்டிய‌ம்மா..... ஆனால் அவ‌ர் தூங்கியிருக்க‌வில்லை.... த‌ன் க‌ணிப்பு பொய்க்காத‌ப் பெருமித‌த்துட‌ன் ராஜ‌கோபால‌ன் இன்னும் கொஞ்ச‌ம் எட்டிப்போக‌ பாட்டி த‌ன் க‌ண்ணாடியைப் போட்டுக்கொண்டு ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ ஏடுக‌ளையெல்லாம் தரையில் விரித்துவைத்துக் கொண்டு மிக‌ சிர‌த்தையாய்ப் பேர‌னுக்குக் காரைத் தேர்வு செய்ய‌ மென‌க்கிட்டுக் கொண்டிருந்தார் ஏசி குளிருக்க்குக் கொஞ்சம் இடுங்கிக் கொண்டு!!!.... பேச வார்த்தையின்றி மௌன‌மாக‌த் த‌ன் அறைக்குச் சென்றார் க‌ண்க‌ல‌ங்கிப்போன ராஜ‌கோபால‌ன் .....

பாட்டியும் அஞ்ச‌லியும் வீட்டிலிருக்க‌ ஆன‌ந்த‌மாய்க் க‌ழிந்த‌து விடிந்த‌ அந்த‌ப் புதுப் பொழுது!!! அடுத்த‌ நாள் அஞ்ச‌லியின் பெற்றோரும் வ‌ந்துவிட‌ நிச்சிய‌தார்த்த‌ம் நாளை ம‌றுநாள்!! திரும‌ண‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பும் இல்லாம‌ல் இல்லை ஜீவாவுக்கு!! ஏதேதோ ச‌ந்தோஷ‌ அலைய‌டித்திட‌ வேலை முடிந்து வீட்டுக்கு வ‌ந்த‌ ஜீவாவிட‌ம் அன்று இர‌வு பாட்டி தான் தேர்வு செய்த‌ காரைக் கொடுத்தார்!!! ஆச்ச‌ர்யமாக... ச‌ரியாக‌ அது ஜீவா ஏற்கென‌வே த‌ன் ம‌ன‌துக்குள் வாங்க‌ நினைத்திருந்த‌ மாடலாக அமைந்திருந்தது.... அஞ்ச‌லிக்குப் பிடித்த‌ க‌ரும்ப‌ச்சை நிறத்திலேயே தேர்வு செய்திருந்தார் பாட்டிய‌ம்மா!!!

மூளைக் க‌ல‌ப்பில்லாது முழுக்க‌ முழுக்க‌ இத‌ய‌ப்பூர்வ‌மான‌ ஒரு ப‌ரிசோத‌னையில் அபார‌ வெற்றி க‌ண்டுவிட்ட திருப்தியை ஜீவா உண‌ர்ந்தான்... எப்ப‌டி இப்ப‌டி ஓர் அதிசிய‌ம் சாத்தியமானது? என்று ம‌னம் கேட்ட‌போது இந்தக் கேள்வியைக் கால‌ம்காலத்துக்கும் மனதுக்குள் கேட்டுக்கொண்டு விய‌ந்துகொள்ள‌லாம்... என்று தோன்றியது!!! த‌ட‌த‌ட‌வெனத் திட்ட‌ங்க‌ள் தீட்டினான் ச‌ந்தோஷ‌த்தைக் கொண்டாடித் தீர்த்திட‌!! பாட்டியிட‌ம் சென்று இன்று மாலை குடும்ப‌த்தோடு தாத்தா க‌ட்டிய‌ குல‌தெய்வ‌க் கோவிலுக்கு புதுக்காரில் முத‌ல்ப‌ய‌ண‌ம் என‌க் கூறினான்.... ஆயிர‌ம் யோச‌னைக‌ள் தோன்றியிருந்தாலும் பாட்டியை மகிழ்விக்க‌ இதுதான் மிக‌ச்சிற‌ந்த‌தாய்த் தோன்றிய‌து!!! அஞ்ச‌லியிட‌ம் ம‌ட்டுமின்றித் த‌ன் த‌ந்தையிட‌மும் த‌ன் சந்தோஷ‌த்தையெல்லாம் முழுமையாய் சுத‌ந்திர‌மாய்ப் ப‌கிர்ந்துகொள்ளமுடிகிறபொழுது பல வருட மன இறுக்கங்கள் முற்றிலுமாய்த் தளர்ந்ததுபோனது போல் ஓர் உணர்வு.... இன்று(முதல்) அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது வீட்டில் பாட்டியிருப்பார்!!!

தன்பாட்டியின் நினைவினாலோ என்னவோ அஞ்சலி பாட்டியம்மாவுடனேயேதான் தனது பெரும்பாலானத் பொழுதுகளை செலவிட்டுக் கொண்டிருந்தாள்... "பாட்டிம்மா... சந்தோஷமா இருக்கீங்களா?" என்று அடிக்கடி அஞ்சலி கேட்டுக்கொண்டே இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன...!! ஜீவா இந்த இரண்டு நாட்களும் வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் செய்துகொண்டேயிருந்தான்.... பாட்டி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்கக் கேட்கத் தனியே இத்தனை வருடங்கள் அந்தக் கிராமத்துவீட்டில் என்ன செய்திருந்திருப்பார் இந்த நேரங்களில் என்று கிரஹித்துப் பார்க்க முயற்சித்த‌வனாயிருந்தான்!!! ஜீவாவால் நிச்சியம் அதை உணர முடியாது என்று பாட்டிம்மாவுக்குத் தெரியும்... பேரனுக்காக சிறைபட்டிருக்கிறார் இம்முறை..... தன் அறையைவிட்டுப் பாட்டி வெளியே வரவேயில்லை... அந்த மாடிவீட்டு அறையிலிருக்கும் ஜன்னல் வழியே அடிக்கடி வெளியே கீழே பார்த்தவண்ணமாகவே இருந்தார்.... தனக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட உயரத்தைக் கணக்கிடுவதாக இருந்தது அந்தப் பார்வை... அந்த உயரம் ஏன் பாட்டியைத் துன்புறுத்துகிறது என்று புரியவில்லை.... காலையில் எழுந்ததுமுதலே உடலில் ஏதோவொரு உஷ்ணத்தை உணர்ந்து கொண்டேயிருந்தார் பாட்டியம்மா..... கார் பயணம்... ஜன்னல்வழியே பார்த்த புது பரபரப்புகள்.... கார் ஷோரூம்கள்.... புதுஇடத்துக்குப் பழக்கமில்லாது போதிய தூக்கமின்றி இடைவிழித்த இமைகள்.... அமர்ந்திருக்கும்போது கூட நகர்வதுபோலவே உணர்ந்தார்.... ஏதேதோ படபடப்புகளை உணர்ந்தார்... என்னவென்றே தெரியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டுப்போன பாட்டியம்மா வீட்டில் செய்வதுபோல் சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்துபார்த்தார்.... தாத்தா பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த சுவர் தந்த ஆறுதல் ஸ்பரிசத்தை இந்த சுவர்களால் தர இயலவில்லை... அஞ்சலியிடம் சொல்லியிருந்தால் டாக்டரிடம் அழைத்துச் சென்றிருப்பார்கள்....... தன் உடலுக்குள் இதுவரைப் பழக்கப்பட்டிருக்காதப் புதுவகை அழுத்த்தை உணர்ந்த பாட்டியம்மாவுக்கு உடல் வியர்க்கத் துவங்கியது... தனது பையைக் கண்களால் துழாவ ஆரம்பித்தார்......

ஜீவாவுக்கு வீட்டிலிருந்து அழைப்பு... கோபமாய் ராஜகோபாலன்..... ஆசைஆசையாய் அன்புமகன் போட்ட திட்டங்கள் அனைத்தும் காரணமின்றி தவிடுபொடி ஆன ஆற்றாமை மகன்மீதே கோபமாய் வெடித்தது...... மீண்டும் அதே கதை.... பாட்டி வீட்டில் இல்லை..... கிளம்பிவிட்டார்...

குழம்பிப்போன ஜீவா.... நிதானமாக அஞ்சலியை அழைத்தான்.... அஞ்சலியின் பேச்சின்மூலம் பாட்டியின் பதற்றத்தை ஓரளவு உணரமுடிந்தது ஜீவாவுக்கு... அஞ்சலியிடமும் அம்மாவிடமும் சொல்லிவிட்டுதான் சென்றிருக்கிறார் தன் பையைத் தூக்கிக்கொண்டு... ஆனால் ஏன்???

"பாட்டியம்மா.... பாட்டியம்மா... டிக்கெட் எடுத்தாச்சா??? பாட்டீ.... பாட்டியம்மா!!"
கண்டெக்டர் அழைக்கத் திடுக்கிட்டுத் திரும்பினார் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பாட்டி.... கை நடுங்க சுருக்குப் பையிலிருந்து பணமெடுக்கத் தடுமாறியதைப் பார்த்தவர்கள்... "கூட யாரும் வரலியாம்ம்மா??" என்று விசாரிக்கத் துவங்கினார்கள்.... தண்ணீர் கொடுத்தார்கள்... தன் மஞ்சள்பையின் கைப்பிடியைத் கையில் பிடித்துத் திருகிக்கொண்டே வந்தார் பயணம் முடியுமட்டும் பதற்றத்தின் வெளிப்பாடாய்... நல்லவேளை அதிக தூரமில்லை..... மிகுந்த தயக்கத்துடன் இறக்கிவிட்டார்கள் பாட்டியம்மாவை அவர் கிராமத்தில்.... உச்சிவெயிலில் உடல்வியர்த்த‌ப் பாட்டிக்கு வீடுபோய் சேர்ந்துவிட்டால்போதுமென இருந்தது..... மளிகைக்கடைக்காரர் ஷண்முகம் தன் டிவிஎஸ்50 யில் எங்கோ சென்றுகொண்டிருந்தார்.... மூச்சிரைக்க நகர்ந்து கொண்டிருந்த பாட்டி உதவிக்கு அழைப்பதை உணர்ந்தவர்.... அருகில் சென்றார்..... நிலையைப் புரிந்து வேகமானவரிடம் வேறெதுவும் வேண்டாம்... வீட்டுக்குச் செல்லமட்டும் தனக்கு உதவுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டார் பாட்டி... பாட்டி சொல்லை மீறமுடியாமல், பின்னால் அமர்ந்திருந்த கடைப்பையனை இறக்கிவிட்டு பாட்டியைத்தன் கடைக்கு அழைத்துச்சென்று ஒரு சோடா வாங்கிக்கொடுத்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டுதான் வீட்டில் இறக்கிவிட்டுச்சென்றார்....

பெருமூச்செறிந்து வீட்டுமையத்தில் தரையில் அமர்ந்தார் பாட்டி.... புடவைத்தலைப்பால் முகத்தின் வியர்வையை ஒற்றி எடுத்தார்..... சுவரில் சாய்ந்து சிறிது நேரம் களைப்பாற முயற்சித்தார்..... இன்னும்கூட காதுகளில் காரின் சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது..... ஏதோவொரு படபடப்பு மார்புக்குள்..... தன் செய்கையைப் பேரன் இந்நேரம் அறிந்திருப்பானா???? என்ற எண்ணம் அதீதமான‌ அழுத்தத்துடன் இரத்ததை நரம்புகளுக்குள் செலுத்தியது...... தனக்கு ஏதோ நிகழப்போகிறது என்று அறிந்துவிட்ட பாட்டியம்மா கடுங்காப்பியில் சுக்கு தட்டி அருந்தலாம் என்று அடுப்பங்கரைக்குத் தட்டுத்தடுமாறி சென்றார்..... சட்டியில் நீரைவார்த்து சுக்கு தட்டிப்போட்டு அடுப்பில் வைத்தவருக்கு கிறுகிறுத்தது தலை.... தலைக்குமேலே விட்டத்தில் கரிபிடித்த சுவர் கார்ஷோரூமில் அண்ணார்ந்து பார்த்த ஒளிவிளக்குகளால் அடுக்கப்பட்ட மேல்சுவர் போல் தோற்றமளித்தது பாட்டியின் தலை சுற்றிய பார்வைக்கு..... சுவரில் சாய்ந்துகொண்ட பாட்டியம்மாவுக்கு சரியாக‌ இதயத்திலேயே கணமாக ரீங்கரித்தது அந்த ஹார்ன் சத்தம்.....கால்கள் நடுங்கத்துவங்கின பாட்டியம்மாவுக்கு.... வாசலில் கார் நிறுத்தப்படுகிறது....

"பாட்டிம்ம்மா........."

அன்பான துடிப்போடு வீட்டிற்குள் பாட்டியைத் தேடும் ஜீவாவின் குரல்..... சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்ட தன்னைத் தேடிவந்திருக்கும் பேரனைப் பார்த்துப் பெரும்பதற்றம் கொண்டார் பாட்டி..... கையிலிருந்த சட்டியைப் பொத்தென்றுத் தரையில் போட்டு பேரனைப் பார்த்து பயந்துபோன பாவனையில் வாய்க்குழறத் துவங்கினார்..... செயலிழந்த ஜீவா, ஒருகணம் செய்வதறியாது திகைத்து நின்றாலும்...... சற்றும் தாமதிக்காமல் வேகமாக முன்னேறி அப்படியே ஆதரவாய்த் தன் உடலோடு அரவணைத்துக்கொண்டான் பதறும் பாட்டியை!!!!

இறுக்கமாக அணைத்துக்கொண்டு தலையை வருடிக் கொடுத்தவனிடம் "பாட்டிய மன்னிச்சுருப்பா... மன்னிச்சிடுப்பா" வாய்க் குழறிச் சொல்லிக்கொண்டிருந்தார் உஷ்ணம் தணியாமல்..... படுவேகமாய்ப் பட பட பட வெனக் கலவரமாய் அதிரும் பாட்டியின் இதயத்துடிப்பை அந்த அணைப்பிலேயே உணர்ந்தான் ஜீவா.... நிலையை மிகவிரைவில் புரிந்துகொண்டு... காதுக்குள் ரகசியமாய் "பாட்டிம்மாவை நான் எதுக்கு மன்னிக்கனும்??? என் பாட்டி எந்தத் தப்பும் செய்யலையே..... நான்தான் தப்பு செய்யப்போனேன்...... கோபம் இருந்தாதானே மன்னிக்கனும்.... எனக்குதான் கோபமே இல்லையே.... சத்தியமா எனக்குக் கோபமே இல்லையே.... " என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே பேரன் அழுத்தமாய் சீரான இடைவெளியில் தலையை வருடிக்கொடுத்துக் கொண்டிருக்கையில் நதியலைபோல் நிதானமாகத் துடித்திடும் பேரனின் இதயத்தை அதே அணைப்பிலேயே இப்போது பாட்டியம்மா உணர்ந்தார்.... நடுங்கிய கைகள் பேரனின் கைகளை முடிந்தவரை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள.... அதிரடித்துத் துடித்துக்கொண்டிருந்த இதயம் சாந்தியடைத்துவங்கியது....... மெதுவாக....மெதுவாக இதோ இப்போது இரண்டு இதயங்களும் ஒரே வேகத்தில் துடிக்கின்றன!!! இயல்பு நிலையை அடைவார் என்று பாட்டி நினைத்திருக்கவில்லை.... படபடப்பின்றிக் கண்கள் தெளிந்த நேரம் அஞ்சலி சுடசுடக் காஃபி கொடுத்தாள்....!! நிதானமாகப் பருகிய பாட்டியம்மாவுக்கு வாசலில் நின்றுகொண்டிருந்த புதுக்காரைக் காட்டினார்கள் ஜீவாவும் அஞ்சலியும்...."முதன்முதல்ல குலசாமி கோயிலுக்குத்தான் போகணும்னு கிளம்பி வந்திருச்சு உங்க‌ பேரனுக்கு நீங்க‌ வாங்கிக்கொடுத்த கார்!!!..... நீயும் தாத்தாவும் தான் எங்களுக்குக் குலசாமி.... வேற யாரும் இல்ல எங்களுக்கு.. உம்மேல போய் நான் கோபப் படுவேனா பாட்டிம்மா!!!! எனக்கு பாட்டியும் வேணும்... பாட்டிவீடும் வேணும்.... பாட்டி நீங்க இங்க இருந்தாதானே எனக்கு பாட்டிவீடு னு ஓர் இடம் உலகத்துல இருக்கும்.... நீங்க எனக்கு வேணும் பாட்டிம்மா... நீங்க ரொம்ப நாளைக்கு வேணும்...சந்தோஷமா வேணும்... எனக்கு அதுமட்டும்தான் வேணும்!!" எப்படியோ கூறிமுடித்தான் ஜீவா.....

மெல்ல மெல்லப் பாட்டி இப்போ back to form!!!!

பேரனுக்கும் அஞ்சலிக்கும் காருக்கும் சுற்றிப்போட்டுத் திலகமிட்டுக் "குலசாமி கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போங்கப்பா!!" என்று சிரத்தையாய் விடைகொடுத்தார் பாட்டிம்மா!!! புதுக்காரில் ஜீவா பயணம் துவங்க... ரோடு முடியும்வரை பாட்டிக்குக் கையசைத்து விடைபெற்ற அஞ்சலி... "எப்படி பாட்டி கரெக்டா நம்ம ரெண்டு பேருக்குமே பிடிச்ச காரை செலக்ட் பண்ணிக் கொடுத்தாங்க????" என்று கேட்டாள்.... ஜீவா ஒருகணம் புன்னகைத்துவிட்டு "அதான் பெரியவங்க... அவங்களுக்கு எப்பவுமே தெரியும்போல நம்ம விருப்பு வெறுப்பு தேவை ஆசை யெல்லாம்!! நம்ம பாட்டி தாத்தா ஆனப்புறம்தான் புரியும்னு நினைக்கிறேன் அந்தப் பாசம்!!!" என்று கூறிமுடித்தான்......

"அம்மாடி...நீயாவது புரிஞ்சுக்கோடா என் கண்ணு.... உலகம் தெரியாம இந்தக் கிழவி அவங்க தாத்தா வெச்சிருந்த காரையே வாங்கிடுப்பானு சொல்லிட்டேன் அதுக்காக நான் சொல்லுற காரைத்தான் வாங்குவேன்னு பிடிவாதமா இருக்கான் என் பேரன்.... நான் கிழவிம்மா... அந்தக்காலம்... கிராமம்... எனக்கு எதுவும் தெரியாது.... இந்தப் பேப்பர் எல்லாம் படிச்சுப்பாத்து ஒண்ணுமே புரியலமா இந்தக்கிழவிக்கு..... சும்மா ஒண்ணு வாங்கிப்போட இது அஞ்சு பத்து விளையாட்டில்ல.... உன்னக் கெஞ்சிக்கேட்டுக்கிறேன் கண்ணு இதுல உனக்கும் ஜீவாவுக்கும் பிடிச்ச காரு எதுனு சொல்லு நான் அதையே ஜீவாகிட்ட சொல்லிடுறேன் எனக்குப் பிடிச்ச காரும் அதுதான்னு!!!" எவ்வளவோ மறுத்தும் வேறுவழியின்றி பாட்டிக்கு அடி பணிந்த அஞ்சலி ஜீவாவிடம் சொல்லவில்லை இந்த ரகசியத்தை!!!

காரோட்டும் கணவனை ஒருமுறை தலைகோதிவிட்டுச் சிரிக்க ஜீவாவும் சிரித்தான் திருப்தியாக!!!!


முற்றும்


பிரபு. எம்

பாட்டி கதை (சிறுகதை - பாகம் 2)

சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி.......

மஞ்சள் நிற மாலை வெயிலில் கூட வெப்பத்தின் தடயங்கள் தோய்ந்திருக்கின்றன அந்தக் கிராமத்தில்... கரடுமுரடான பாதையில் கவனமாகக் காரை செலுத்துகிறார் ஓட்டுநர்... குளிரூட்டப்பட்ட பின்னிருக்கையில் ஜீவா!! அதே பாதை... ஆனால் இம்முறைப் பயணமோ தன் அணுதின வாழ்வை நோக்கி... அந்தக் காரிலும் சரி அவன் வீட்டிலும் சரி இன்னும் இடம் நிறையவே உள்ளது எனினும் பாட்டியின் நினைவுகளை மட்டும் முடிந்தவரை அந்தக் காரில் நிரப்பிக்கொண்டுப் பாட்டியை அந்த‌ச் சிறிய‌ வீட்டிலேயே விட்டுவிட்டுதான் சென்றுகொண்டிருக்கிறான்.... தன்னுடன் வந்துவிடுமாறு பாட்டியிடம் ஜீவா இறுதிவரை ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லை!! எப்படித் திடீரென்று என்னைத்தேடி வந்தான் என் பேரன்?? என்று இந்நேரம் பாட்டி நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் அந்த அழகிய கிராமத்துக் குடில் இன்று சந்தோஷத்தால் நிரம்பிப்போனது மட்டும் நிதர்சனம்.. இயல்பாகப் பனித்திருந்த கண்களைத் தன் கையால் துடைக்கையில் வலதுகையில் பருப்புருண்டைக் குழம்பு வாசம்!!!

சமையலறையில் பாட்டி சமைத்துக் கொண்டிருந்த‌ போது ஜீவா ஓர் அண்டாவைக் கவுத்திப்போட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பாட்டியின் ஒவ்வோர் அசைவையும் அதிசியத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... விடாது பல கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் பாட்டியும் பேரனும்!!! சட்டியில் குழம்பு கொதிக்கத் துவங்கிவிட்டது.... பாட்டியோ, வீட்டின் பின்புறம், கொள்ளைப்புற வாழைமரத்தில் இலைவெட்டிக்கொண்டிருந்தார்.... வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழம்பைச் சட்டியிலிருந்து இறக்கிவைத்து... ஒருமுறை ருசிபார்த்தபின்புதான் சந்தோஷமாய்ப் பரிமாறினார் தன் கைமணத்தை!!!.... மீண்டும் தனது கையை முகர்ந்து பார்க்கிறான் ஜீவா... பாட்டி வாசம்!!! .....செல்போன் அழைக்கிறது.... மறுமுனையில் அஞ்சலி!! "சொல்லுங்க....சொல்லுங்க.... என்ன ஆச்சு?? பாட்டி ஹேப்பியா??" ஜீவாவுக்கு இணையான ஆர்வமிகுதியில் அஞ்சலி துவங்க மீதமுள்ள பயணம் இனிமையாய் நகர்ந்தது....

"இனிமேலும் என் பாட்டியைத் த‌னிமையில் த‌விக்க‌விட‌ மாட்டேன்" என்று சூளுரைத்துக் கிள‌ம்பிய‌வ‌ன் பாட்டியைத் த‌ன்னுட‌ன் வந்துவிடுமாறு சொல்ல‌க்கூட‌ இல்லை என்ப‌து புதிராக இருந்தது அஞ்ச‌லிக்கு!! ஜீவாவோ, "ராஜா மாதிரி இருக்க வேண்டிய என் பேர‌ன் இப்படி நகர வாழ்வில் சிக்கித் தவிக்கிறானே!!" என்று தனக்காகப் பாட்டி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை எப்ப‌டிப் புரியவைப்பேன் நான்??? என்று ம‌ன‌துக்குள் குழ‌ம்பிக் கொண்டிருந்தான்!!!!

த‌ன்னையும் த‌ன் வ‌ள‌ர்ச்சியையும் க‌ண்டுப் பெருமித‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும்தான் க‌ட‌ந்த‌ சில ஆண்டுகளாகவே பார்த்திருக்கிறான் ஜீவா....ஆனால் த‌ன்மீது பேர‌ன்பு கொண்ட தன் பாட்டியோ தன் வாழ்வை நினைத்துத் தனக்காகப் பரிதாபப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அதிர்ந்து போய்விட்டான் ஜீவா!!! அஞ்சலியும் மௌனமாகிப் போனாள்!!! 'சிட்டியிலேயே ரொம்ப‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் சொந்த‌வீடு, இவ்வ‌ள‌வு சின்ன‌ வ‌ய‌சிலேயே வாங்கியிருப்பதுதான் ப‌ரிதாப‌நிலையா???' என்று இப்போது கேட்கும் அஞ்ச‌லியைப் போலத்தான் ஜீவாவும் எண்ணினான்.... ஆனால் பாட்டி,

"ஒரே க‌ட்ட‌ட‌த்துக்குள்ள மூச்சப் பிடிச்சுக்கிட்டு நாப்ப‌த்துயேழு வீட்டக் கட்டிவெச்சிருக்கான் ....வாசக்க‌த‌வ‌க்கூட‌ திற‌ந்து வெச்சுக்க‌ முடிய‌ல‌... ஆசையா ஓர் ஆட்டுக்குட்டி வ‌ள‌ர்க்க வழியிருக்குமா??"

என்று கேட்டால் பாவம் என்னதான் பதில் சொல்லுவான் ஜீவா!!! பூமியைத் தொழுது நிலத்தை உழுது வாழும் ம‌ண்வாச‌னை ம‌னித‌ர்க‌ளுக்கு சொந்த‌ பூமியில் வேய்ந்த குடிசை பெருமித‌மாக‌வும், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆட‌ம்ப‌ர‌வீடுக‌ள் அந்த‌ர‌த்தில் அம்மாஞ்சிகள் வாங்கிப்போடும் அசையா சொத்தாக‌வும்தான் தெரிகிறது போலும்!! அடுக்குமாடிக‌ளின் இன்றிய‌மையா தேவையான‌ லிஃப்டுக‌ளை ம‌னித‌ர்களின் வெளிஉல‌க‌த்தொட‌ர்பைத் துண்டிக்கும் வில்லனாக‌ விம‌ர்சிக்கிறார் பாட்டி!! (பாட்டிக்கு லிஃப்டை இயக்க‌த்தெரியாது.... ப‌தினோருமாடிக்கு ப‌டிக்க‌ட்டில் போவ‌தும் முடியாத‌ காரிய‌ம்.. அந்த‌ ஆற்றாமைதான்!!)

இதையெல்லாம் கூட‌ப் பொறுத்துக் கொண்டான் ஜீவா... மிக‌ப்பெரிய சாக்லேட் க‌ம்பெனியின் ரீஜின‌ல் ஹெட் என்ற தன்னுடைய அல‌ங்கார‌ப் பத‌வியைப் பாட்டி, த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!! அதோடு விடாமல் பாட்டி, ப‌க்க‌த்து வீட்டு அல‌மேலுவின் ம‌க‌ன் அந்த‌ கிராம‌த்தில் ப‌டித்த‌வ‌ன்தான் என்றாலும் ஒரு பெரிய்ய்ய்ய‌ மோட்டார் க‌ம்பெனியில் வேலைபார்ப்ப‌தாக‌ப் பெருமையாய்க் கூறினார்!! "என் பேர‌ன் பாவ‌ம்ப்பா உன்னைவிட‌ அதிக‌மாப் ப‌டிச்சிட்டு ஏதோவொரு மிட்டாய் க‌ம்பெனியில‌ வேலை பாத்துட்டு இருக்கான்... உன்ன‌ப்போல‌ ந‌ல்ல‌ பெரிய‌ க‌ம்பெனில‌ உத்தியோக‌ம் எதுவும் கிடைச்சா அவ‌னுக்கும் சொல்லுப்பா!!" என்று அவ‌னிட‌ம் பாட்டி சொல்லி வைத்திருந்ததை நல்லவேளை ஜீவா அறிந்திருக்கவில்லை!!... ஜீவாவின் க‌ம்பெனியில் அவ‌னுக்குக் கார் எல்லாம் கொடுத்திருக்கிறார்களே... அட.. அந்த‌ப் பைய‌னையும்தான் ஒரு பெரிய‌ வ‌ண்டியில் வைத்து சக மெக்கானிக்குகளுடன் வேலைக்கு தின‌மும் அழைத்துப் போகிறார்களே!!!

எக்க‌ச்ச‌க்க‌மாய் Damage ஆகிப்போயிருக்கும் தன் ஜீவாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌வா?... என்ன‌ சொல்லவோ? என்று மௌன‌மாகவே இருந்தாள் அஞ்சலி, இன்னொருபுற‌ம் அவனது பேச்சைவைத்து இந்த‌க் கணம் அவ‌ன் முக‌த்தைக் கணித்துப் பார்க்கையில் அவளுக்குக் கொஞ்ச‌ம் சிரிப்பும் வ‌ந்த‌து...!! இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... தாத்தாவுடைய‌ ப‌டைபுலன்க‌ளுட‌ன் தான் வாழ்ந்த‌ பெரிய‌ வீட்டைப் புற‌க்க‌ணித்துவிட்டு, க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் இது த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......

இர‌வுநேர‌த் த‌னிமை ஜீவாவுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து.... தின‌மும் இர‌வில் த‌ன் த‌னி அறையில் ம‌ன‌துக்குப் பிடித்த‌மான‌ ச‌ங்கீத‌த்தைத் த‌ன‌க்கு ம‌ட்டும் கேட்கும் ர‌க‌சிய‌ ஒலிய‌ள‌வில் கேட்டுக்கொண்டே தன் ம‌ன‌துட‌ன் கொஞ்சதூரம் "வாக்கிங்" போய்தான் தூக்க‌த்தைப் பிடிப்பான்... இன்று போகும் பாதையின் தூர‌ம் அதிக‌மாக‌ப் புல‌ப்ப‌டுகிற‌து!!
"பாட்டி வீடு" என்று தனக்கொரு இடம் பூமியில் இன்னும் எத்தனை நாள் இருக்கும்?? இன்று நாள்முழுதும் கேட்ட‌ அந்த‌க் கணிந்த‌ குர‌ல் இன்னும் எவ்வ‌ள‌வு நாள் ஒலிக்கும்...???.... இன்று உற‌ங்கிவிடுவ‌து அவ்வ‌ள‌வு எளித‌ல்ல‌ என்று புரிந்த‌து!!

பாட்டிவீட்டுச் சுவ‌ரில் க‌ம்பீர‌மாய் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் புகைப்ப‌ட‌ம் ம‌னதைக் காரணமின்றி வ‌ட்ட‌ம‌டித்துக் கொண்டேயிருந்தது... தான் புகைப்ப‌ட‌த்தில் ம‌ட்டுமே க‌ண்டிருக்கும் தன் தாத்தா, மிக‌க் க‌ம்பீர‌மாக‌த் த‌ன்னுடைய‌ பெருமித‌ அடையாள‌மான, அவருடைய‌ கார் அருகில் வைத்து எடுத்துக்கொண்ட‌ ப‌ட‌ம் அது!!
அந்த‌க் கிராம‌த்து ம‌ண‌ல்வெளியில் முத‌ன்முத‌லில் கார் ட‌யரின் அச்சுப்ப‌தித்த‌ பெருமைக்குரிய‌வ‌ர் அவ‌ர்!! அந்த‌ப் பெருமையை இன்றும் பாட்டி ச‌ந்தோஷ‌மாய்ச் சும‌ந்துவ‌ருகிறார் த‌ன் ஊருக்குள்!! இன்றைய உலகில் சாதார‌ண‌மாகிப் போய்விட்டாலும்... டிராஃபிக், பார்க்கிங்.. என‌ ஆயிர‌ம் இன்ன‌ல்க‌ள் இருந்தாலும்... "கார்"... தேவையும் ஆசையும் ஒருங்கே ஈடேறும் ஓர் அழ‌கிய‌ முத‌லீடு!! "தாத்தாவின் அந்த‌க் கார் இப்போது எங்கே??" கேள்விக்கு ஜீவாவிடம் போதுமான தகவல் இல்லை!... தாத்தா முக‌த்தின் பெருமித‌ப் புன்னகையோடு இன்றுவரைப் பாட்டியை அக‌ம‌கிழ‌ச்செய்கிற‌துபுகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ அந்தப் ப‌ழைய‌ மெட்ட‌லிக் ர‌த‌ம்!! கம்பெனி காரில் சென்றதைவிட சொந்த‌மாய் வாங்கிய‌ காரில் சென்று பாட்டி வீட்டுவாச‌லில் இற‌ங்கியிருந்தால் தன் பேர‌னின் செழிப்பை நிச்சிய‌ம் உண‌ர்ந்து உள‌ம் ம‌கிழ்ந்துபோயிருப்பார் பாட்டி என்று உறுதியாக‌த் தெரிந்த‌து ம‌ன‌துக்கு!!! இந்தத் திடீர் சிந்த‌னை மின்ன‌லில் ஜீவாவின் உள்ளுண‌ர்வுக‌ள் பிர‌காச‌ம‌டைந்த‌ன‌!!! ச‌ந்தையின் ச‌மீப‌த்தைய‌ ஆட‌ம்ப‌ரக் கார்களைக்கூட‌ சொந்த‌மாக்கிக் கொள்ளுமள‌வு வாங்கும் திற‌னுள்ள‌ ஜீவா பாட்டி ம‌ற்றும் கார் க‌ன‌வுக‌ளுட‌ன் தூங்கிப்போனான்!!

வேக‌மாய் விடிந்துவிட்ட‌து பொழுது..... முதுகைத் த‌ட்டிக்கொடுத்து ஆமோதித்தார் ராஜ‌கோபால‌ன் தன் ம‌க‌னின் கார் வாங்கும் திட்டத்தை!! வங்கிக‌ள் எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் லோன் த‌ர‌க்காத்திருப்ப‌தால் (க‌தைக்க‌ள‌த்தில் recission-ன் தாக்க‌ம் இல்லை!!)திரும‌ணச் செல‌வுக‌ளில் கார் குறுக்கிட‌ப் போவ‌தில்லை!! அடுத்தக்க‌ண‌மே ஃபோன் கால் ப‌ற‌ந்த‌து அஞ்ச‌லிக்கு.... அம்முனையும் ஆன‌ந்த‌ம‌ழை!!
"என்ன‌ கார் வாங்க‌லாம்??" என்ற‌ மில்லிய‌ன் டால‌ர் கேள்வியை அஞ்ச‌லியின் இஷ்ட‌த்துக்கு விட்டுவிட்டான் ஜீவா... ஆனால் த‌ன‌க்கு luxury கார் ப‌ற்றியெல்லாம் ஞான‌ம் அதிகம் கிடையாது என்று சொல்லிக் க‌ழன்றுகொண்ட‌ அஞ்ச‌லி த‌ன‌க்குப் பிடித்த‌ மெட்டாலிக் க‌ரும்ப‌ச்சை நிற‌ம் அமைந்தால் ம‌கிழ்ச்சி என்று ம‌ட்டும் கோரிக்கை வைத்தாள்!!!

"பாட்டிகிட்ட‌ சொல்லியாச்சா....??" ஆர்வமாய்க் கேட்ட அஞ்சலியிடம்...
"நேர்ல‌ போறேன்.. என் பாட்டியோட‌ப் ப‌ல்விழுந்த‌ சிரிப்பு பார்க்க‌..!!" சொல்லிக் கிள‌ம்பினான் ஜீவா!!!

முன்கூட்டி சொல்லாம‌ல்தான் இம்முறையும் பாட்டியின் முன்னால் போய் நின்றான் ஜீவா!!! மீண்டும் பேரனைக் கண்ட அதிர்ச்சி வில‌காத‌ பாட்டியை அப்ப‌டியே தாத்தாவின் ஃபோட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்று... "உன் பேர‌னும் கார் வாங்க‌ப் போறான் பாட்டி!!!" என்று போட்டுடைத்தான்.....

என்னவொரு த‌ருண‌மது!! "ஏழைப்பேர‌ன்" லாட்ட‌ரி அடித்தது போல் திடீரென பாட்டியின் ம‌ன‌தில் உச்ச‌த்துக்குப்போய் வெற்றிக்கொடி நாட்டினான்!!! இந்த‌ ம‌கிழ்ச்சிப் பேர‌லைக‌ளை அந்த‌ இத‌யத்தால் தாங்கமுடியுமா?? என்று ச‌ந்தேகமே வ‌ந்துவிட்ட‌து ஜீவாவுக்கு.... ஆன‌ந்த‌மாய்த் தாத்தா ஃபோட்டோ ப‌க்க‌ம் திரும்பி கைகூப்பி ஏதோ முணுமுணுத்துப் பேர‌னின் நெற்றியில் ப‌க்தியுட‌ன் தில‌க‌மிட்டார் பாட்டி... குழந்தையாய் சிரிக்கும் சந்தோஷப் பாட்டியிடம், தேர்வு செய்வ‌த‌ற்காக‌ வைத்திருக்கும் மிக‌வும் விலையுய‌ர்ந்த‌ லேட்ட‌ஸ்ட் ஆட‌ம்ப‌ர‌ ம‌கிழ்வுந்துக‌ளின் ப‌ட‌ங்க‌ளைத் தாங்கிய‌ மோட்டார் இத‌ழ்களைக் காட்ட‌ ஜீவா வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்..... அப்போது பாட்டி ச‌ற்று சீரிய‌ஸாக‌ ஜீவாவின் அருகில் வ‌ந்து....

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!" என்று சொல்ல‌ ஒரு நொடி திகைத்து நின்ற‌ ஜீவாவுக்கு கார் மீது லாரி மோதிய‌துபோல் இருந்த‌து!!

அப்ப‌டியே நின்றுவிட்ட‌ ஜீவாவிட‌ம் பாட்டி, இப்போது வ‌ந்திருக்கும் ப‌ல‌ கார்க‌ளைத் தான் பார்த்திருப்ப‌தாக‌வும் அந்த‌க் கால‌க் கார்க‌ளின் வ‌லுவான‌ உறுதி எதிலும் இல்லையென்றும்... காசுபோட்டுக் காரை வாங்கிக் காலை ம‌டக்கிக் குனிந்து அம‌ர்வ‌து அசௌக‌ரிய‌ம் என்றும் அடுக்கிக்கொண்டே போனார்!!! க‌வ‌ன‌மாக‌ ந‌ல்ல‌ அம்பாசிட‌ர் காராக‌ப் பார்த்துவாங்குமாறு பேரனுக்கு சீரிய‌ஸாக‌ அறிவுரை சொன்ன‌ பாட்டி ஜீவா சொல்ல‌ வ‌ந்த‌ எதையும் ஏற்ப‌தாக‌ இல்லை!!

வெள்ளையாக‌ விழுந்து விழுந்து ஃபோனில் சிரிக்கிறாள் அஞ்ச‌லி!!! ஜீவா ஃபோனைக் காதில் வைத்திகொண்டு அப்பாவியாய் பாட்டி சொன்ன‌தையெல்லாம் சொல்ல‌ச் சொல்ல‌ சிரித்து ர‌சித்த‌ அஞ்ச‌லி , "இப்போ என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?? அம்பாசிட‌ர் கார் லேட்ட‌ஸ்ட் மாட‌ல் புக் ப‌ண்ணிடுவோமா!!" என‌க் குறும்பாய்க் கேட்க‌ ஜீவாவும் த‌ன் பாட்டியின் உல‌க‌ம‌றியா குழந்தைத்த‌ன‌த்தை நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.....!!

"பாட்டிக்காக‌த்தான் கார் வாங்குற கான்செப்டே ம‌ன‌சுல‌ வ‌ந்திச்சு அதுல இப்பவும் எந்த‌ மாற்ற‌மும் இல்ல‌... பாட்டியோட விருப்பப் படி வாங்கினால்தான் அதுல அர்த்தமே இருக்கு.... அந்த அப்பாவி மனுஷியோட மனச இன்னும் கொஞ்சம் ஆழமா படிக்க‌ ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவ்ளோதான்!!!"... என்றும் பாட்டியைத் த‌ன் தொழில்சார்ந்த‌ பேச்சுத்திற‌னால், தான் வாங்க‌ எண்ணியிருக்கும் காரையே வாங்க‌ச் சொல்ல‌வைக்க தன்னால் மிக‌ எளிதில் முடியும் ... ஆனால் தான் அவ்வாறு செய்ய‌ப் போவ‌தில்லையென்று உறுதியாக‌ இருந்த‌ ஜீவாவிட‌ம் அஞ்ச‌லி.. "இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!" என்று க‌லாய்க்க‌ ஆரோக்ய‌மான‌ இந்த‌ ச‌வாலை ஜீவா ஏற்றுக்கொண்டான்!!!

பிரபு. எம்
தொட‌ரும்.....

(மூன்றாவ‌து பாக‌த்தில் முடிவ‌டையும்!)

பாட்டி க‌தை (சிறுக‌தை - பாக‌ம் 1)

அழகான அதிகாலை....அருகில் உள்ள‌ கிராமத்தில் சேவல் ஒன்று கூவுகிற‌து.... ஒரு சின்ன‌ பீப்பாய் நீர் பாய்ந்து வ‌ந்து ம‌ண்ணை நனைக்க .....ம‌ழைபெய்தால் கிளம்பும் ம‌ண்வாச‌னை ப‌ர‌வுகிறது... சாண‌த்தோடு க‌ரைத்த‌ நீரால் அந்த‌ ம‌ண்ணை மெழுகுகிறார் வாச‌ல்தெளிக்கும் அந்த‌ப் பாட்டிய‌ம்மா!!! தோல்சுருங்கி மென்மையான‌ ந‌ர‌ம்புக‌ள் கையெங்கிலும் வெளியே தெரிகின்றன... த‌சைக‌ளெல்லாம் முறுக்கின்றித் தொங்கிப் போயிருந்தாலும் வாளிக்குள் இருக்கும் நீரை வலுவாக அடித்துத் தெளிக்கின்ற‌ன‌ அந்தக் கைக‌ள்.... சில‌ நொடிக‌ளில் புழுதிம‌ண்ணின்றி ப‌க்காவாக‌ செட்டாகியிருக்கிற‌து வீட்டுவாச‌ல்.... வேண்டியோர் ப‌ல‌ரின் காலடி படுவதற்காகப் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக ஏங்கிக் காத்திருக்கும் அந்த வீட்டு வாசல்!! சில மணித்துளிகள்தான், பாட்டி இப்போது சமையலறையில்... அடுப்புப் பற்றவைத்ததுதான் தாமதம் அந்த அனுபவக் கைகளின் சமையல் ஜாலத்தில் இதோ சட்டியில் குபு குபு வென குமிழ்கள் வெடிக்கின்றன கொதிக்கும் புதுக் குழம்பில்!!! சரியாக எண்ணெய் சட்டியில் கடுகுகள் பட்டாசு வெடிக்கும் நேரத்தில்.... வாசலில் ஒரு மழலைப் புல்லாங்குழல்!!

"பாட்டிம்ம்மா...." அழைக்கிறாள் ஸ்கூல்யுனிபார்ம் போட்ட அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிதேவதை கையில் ஒரு காலி டிஃப‌ன்பாக்ஸுட‌ன்!! "ஏய்ய்ய்... பூட்ஸு காலோட‌ உள்ள‌ வ‌ராதேனு பாட்டி எத்தனை த‌ட‌வ‌ சொல்லியிருக்கேன்...." செல்ல‌மாக‌ அத‌ட்டிக்கொண்டே, வேக‌மாக‌ப் பாட்டி நடந்து வ‌ந்தாலும் ந‌டையில் த‌ள‌ர்ச்சி தெரிய‌த்தான் செய்கிற‌து!!! அந்த‌க் குழ‌ந்தை நாக்கை நீட்டி வ‌ழ‌க்க‌ம்போல் சிரித்துக்கொண்டே உட‌லை ஒருவித‌மாக‌க் கோணிக்கொண்டு நிற்கிற‌து... "அப்பா இன்னிக்கு இக்கிலி செஞ்சாங்க‌...!!" டிஃப‌ன் பாக்ஸில் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ பாட்டி வைத்த சாம்பார் ஊற்ற‌ப் ப‌டுகிற‌து!!! பாட்டி த‌லையைப் பின்னிவிட, டாட்டா காட்டிவிட்டு ஓடுகிற‌து குழ‌ந்தை..... அவ‌ள் அம்மாவுக்கு அர‌புநாடு ஒன்றில் நர்ஸ் வேலை!! சொந்த‌ப் பாட்டியில்லை பேத்திக்கு ஜ‌டை பின்னிவிட‌!!!

சில‌மைல் தொலைவில் சேவ‌லுக்குப் ப‌திலாக‌ ஸ்கூல்பஸ்களின் ஹார்ன்கள் கொக்கரிக்கும் ந‌க‌ர‌த்து அதிகாலை.... நூறுவ‌ய‌து ல‌ட்சிய‌த்துட‌ன் வேகமாய் ந‌டைப்ப‌யிற்சி செய்யும் குல்லாபோட்ட தாத்தாக்க‌ளுக்கு இடையே கொஞ்சம் இளமையாய் உண‌ர்கிறார் நிமிர்ந்து நடக்கும் ராஜ‌கோபால‌ன்...ட்ராக் சூட், கேன்வாஸ் புதிது... வாக்கிங் ரூல்ஸ் க‌ற்றுக் கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்!! "நேர‌மாகிவிட்ட‌தோ... ??? "அட!! நேரமானால்தான் என்ன‌!!!" அச‌ட்டுத் த‌ன‌மாக‌த் தெரிந்த‌து ம‌ன‌தின் இத்தனை வருடத்து வ‌ழ‌க்க‌மான‌ காலை நேரப் ப‌த‌ற்ற‌ம்... இன்னும் மனது முழுதாக‌ப் ப‌ழ‌க‌வில்லை இந்த‌ப் புது ரிட்டைய‌ர்மென்ட் வாழ்க்கைக்கு!!! சீரான‌ நடை வீடு நோக்கி..... இன்னும் சிறிது நேர‌த்தில் வெயிலும் தூசியும் ப‌ர‌ப‌ர‌ப்புமாக‌ இந்த அழ‌கை ஊர் இழ‌ந்துவிடும்.... அந்த‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பில் அவ‌ருக்கு வேலையேதுமில்லை.. குளிரூட்ட‌ப்ப‌ட்ட தன் சொந்த அறையில் நேற்று வாங்கிய, சின்ன‌ வ‌ய‌தில் ர‌சித்துப் பார்த்த, ஹிட்ச்காக்கின் ப‌ழைய‌ ப‌ட‌ டி.வி.டி ஒன்று பார்ப்பதற்குத் தயாராக‌ உள்ள‌து!!

ஒரு வ‌ருட‌மாகியும் கூட‌ இப்போது வ‌சிக்கும் வீடு இன்னும் புதிதாக‌த் தெரிகிற‌து.... ந‌க‌ர‌த்தின் மிக‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் ஒரே ம‌க‌ன் ஜீவா வாங்கிய‌ வீடு...! திரு.ராஜகோபாலன்.... க‌றாரான‌ அதிகாரி.... க‌ண்டிப்பான‌ அப்பா... திட்ட‌மிடுதலும் அதைச் சிறிதும் பிச‌காம‌ல் செய‌ல்ப‌டுத்தி முடித்தலும்தான் அவர் வாழ்க்கைக் க‌தையின் ஒன்லைன்!! ஜீவா பிற‌ந்த‌போதே அவ‌ன‌து முதல் இருப‌து ஆண்டுகளை அவர் திட்ட‌மிட்டுவிட்டார்... இடையே ப‌ள்ளிக்கால‌த்தில் அவ‌னுக்கு வ‌ந்த‌ ம‌ஞ்ச‌ள் காமாலையைத் தவிர மற்ற‌ அனைத்துமே அந்தத் திட்டத்தின்ப‌டிதான் ந‌ட‌ந்தது!

ஜீவா...எம்.பி.ஏ...சாக்லெட்டுகள், பிஸ்கெட்க‌ள் ம‌ற்றும் ஹெல்த்டிரிங்க்ஸ் தயாரிக்கும் பெரிய‌தொரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தின் ரீஜின‌ல் ஹெட்!! அலுவ‌ல‌க‌ ம‌ற்றும் சொந்த‌த் தேவைக‌ளுக்கென‌ விலையுய‌ர்ந்த‌ கார் ஒன்றை ஓட்டுந‌ருட‌ன் வ‌ழ‌ங்கியிருந்தது ஜீவா ப‌ணிபுரியும் நிறுவ‌ன‌ம்...இன்னும் ஒரு மாதத்தில் ஜீவாவுக்குத் திரும‌ண‌ம்... அப்பாதான் பெண் பார்த்தார், ஜீவாவின் ப‌ரிபூர‌ண‌ ச‌ம்ம‌த‌த்துட‌ன்!!

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்புதான் ஜீவா அஞ்ச‌லியிட‌ம் முத‌ன்முறையாக‌ போனில் பேசினான்.....

"பேசிட்டியா??.." வழக்கமான போலீஸ் தோரணையில் போனில் அதட்டினார் ராஜகோபாலன்.

"அப்பா...ஆஃபீஸ்ல இருக்கேன்.... அப்புறம் பேசுறேனே... ஏன் இப்படி ஆளாளுக்கு மிரட்டுறீங்க??!!!"

"இப்படித்தான் நேத்தும் சொன்ன... ...எட்டுமணிக்குப் போயிட்டு அஞ்சு மணிக்கு வரவனுக்குதான் ஆஃபீஸ் எல்லாம்... மணி ஏழரையாச்சு... உடனே கால் பண்ணு... Dont make me call again... அந்தப் பொண்ணுக்கு செமஸ்டர் நடக்குதாம்... படிக்காம உனக்காகக் காத்துக்கிட்டிருப்பா..."
..
....
......
........

சில நிமிடங்களில் சற்று தூரத்தில் செல்போனில் மணியடிக்கிறது....

"ஹலோ..... ஹலோ.... நான் அஞ்சலி பேசுறேன்....ஹலோ....."

"ஹம்..ஹலோ... ஹாய் அஞ்சலி.... நான் ஜீவா... சொல்லியிருப்பாங்கனு நினைக்கிறேன்.. நான் பேசுவேன்னு..."

மிக மெல்லிய புன்னகை உதட்டைக் கீறிக் குரலோடு கலந்தொலிக்கிறது..."ஓ! ஹலோ...ஹ்ம்ம்ம்ம்...சொன்னாங்க... ஆனா நேத்தே பேசுவீங்கனு சொன்னாங்களே....!!"

" ம்ம்...ஆமா... நானும் கால் ப‌ண்ணேனே...!!!"

"இல்லையே..!!!"

"நேத்து இதே டைம்ல‌ ரெண்டு ரிங் ம‌ட்டும் வ‌ந்து ஒரு கால் க‌ட் ஆகியிருக்குமே!!"
இருமுனையிலும் கொஞ்ச‌மே கொஞ்ச‌ம் சிரிப்பு....
.................
........................
மீண்டும் ஜீவாவின் அப்பா அழைக்க‌... என்கேஜ்ட் டோன் கேட்டது...சிரித்துக்கொண்டே தொலைபேசியை அணைத்தார்!!!

வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்துவிட்ட‌ ராஜ‌கோபால‌ன் இனிமேல் தன் ம‌க‌னின் முடிவுக‌ளின்ப‌டிதான் வாழ்க்கை என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்தார் சந்தோஷ‌மாக‌!!

இஷ்ட‌ப்ப‌ட்டு உழைப்ப‌தால் க‌ஷ்ட‌ம் தெரிவ‌தில்லை ஜீவாவுக்கு... தின‌ம்தினம் ஜீவா லேப்டாப்பை மூடுவ‌த‌ற்குள் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தின் தொலைதூர‌ ஊழிய‌ர்கூட‌ டிராஃபிக் ம‌ற்றும் சிக்ன‌ல்க‌ளைக் க‌ட‌ந்து வீடுபோய் சேர்ந்துவிடுவார்!! இப்போதெல்லாம் தின‌மும் வேலைமுடியும் நேர‌ம் உத‌ட்டோர‌ம் கொஞ்சம் இனிக்கிற‌து... அஞ்ச‌லியுட‌ன் பேசுவ‌து பிடித்திருக்கிற‌து ஜீவாவுக்கு!! ஓர் இனிமையான‌ அனுபவமாய் அறியாம‌லேயே அறிந்துகொள்கின்ற‌ன‌ர் ஒருவ‌ரையொருவ‌ர் அழ‌காக‌!!

"இந்தியாவுக்கு விளையாடுற‌ எல்லாரையும்தான் எனக்கு ரொம்ப‌ப் பிடிக்கும்... கிரிக்கெட் ஒரு டீம் வொர்க் இல்லையா!!!"

"எல்லாருமேதான் ந‌ல்லா ந‌டிக்கிறாங்க‌.... ஒவ்வொரு ப‌ட‌த்திலும் ஒவ்வொருத்த‌ரைப் பிடிக்கும்... பிடிச்சவங்கன்னா யாரைச் சொல்லுறது!!"

இதுதான் அஞ்ச‌லி!!! இருப்பினும் ஜீவா அறிந்திருந்தான் ச‌ச்சினும், க‌ம‌லஹாச‌னும் அவ‌ளுக்குக் கொஞ்ச‌ம் ஸ்பெஷ‌ல் என்று!! அஞ்சலியின் விருப்பங்களை அறிந்துகொள்ளும் சுவார‌ஸ்யமான சவால் எந்தவொரு கம்ப்யூட்டர் கேமும் கொடுத்திராத இன்பத்தைக் கொடுத்தது ஜீவாவுக்கு!! ம‌ணிர‌த்ன‌ம், ஏ ஆர் ர‌குமான், ர‌ச‌குல்லா, த‌யிர்சாத‌ம், மாதுள‌ம்ப‌ழ‌ம், ஸ்பைட‌ர்மேன், கொடைக்கான‌ல், எஸ்.பி.பி....இன்னும் இன்னும்....இன்னும்..!!!! எல்லாரையும் ம்ற்றும் எல்லாவ‌ற்றையும் ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தெரிந்த‌ அஞ்ச‌லிக்கே தெரியாது இவையெல்லாம் அவ‌ளுக்குப் பிடித்த‌வையென்று... ஆனால் ஜீவாவுக்குத் தெரிந்த‌து!!! அஞ்ச‌லியே த‌ன‌க்கு ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ப் பிடிக்குமென்று ஒத்துக்கொண்ட‌து இர‌ண்டே விஷ‌ய‌ங்களைத்தான் ஒன்று ப‌ச்சை நிற‌ம் இன்னொன்று அவ‌ளுடைய பிரியமான பாட்டி!!!

அஞ்ச‌லியின் த‌ந்தைக்கு உயிர‌ளித்த‌ அவ‌ள் பாட்டியால் அவ‌ள் க‌ல்லூரி சேர்ந்த‌ வயதுவரைதான் உட‌ன்வ‌ர‌முடிந்த‌து... அந்த‌ இத‌ய‌ம் இறுதியாகத் துடித்த‌து அஞ்ச‌லியின் அர‌வ‌ணைப்பில்தான்... "உன‌க்கு ஒன்னும் ஆகாது பாட்டி... நீ என்கூட‌த்தான் இருக்க‌ப்போற‌.." என்று தன் பாட்டியை அணைத்துக்கொண்டு அஞ்ச‌லி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த‌ இத‌ய‌த்தின் துடிப்பு தானாக‌ அட‌ங்கிப்போன‌தை அந்த‌ அணைப்பிலேயே நேர‌டியாக‌ உண‌ர்ந்தாள் அஞ்ச‌லி.... அவ‌ள் குழ‌ந்தையாக‌ இருந்த‌போது வலது கையில் சோறுபிடிக்கவும், இருகால் ஊன்றித் தரையில் நடக்கவும் கற்றுக் கொடுத்து, பின்பு தானே ஒரு குழந்தையாகிப்போய் டிவி ரிமோட்டில் சேன‌ல் மாற்றவும், மைக்ரோவேவில் சோறு சமைக்கவும் தன் பேத்தியிடம் கற்றுக்கொண்ட‌ செல்ல‌ப் பாட்டி!!! பாட்டியின் நினைவுக‌ள் ப‌சுமையாக‌வே தொட‌ர்ந்தன‌ அஞ்ச‌லியின் ப‌ய‌ண‌த்தில்.... அஞ்சலியின் 'பாட்டிகதைகள்' பொதுவாகப் பாட்டியில்லாதவர்களை ஏங்கவைக்கும் ஆனால் அவை ஜீவாவை வேறுவிதமாகப் பாதித்தன‌!!!

கிராம‌த்துவீட்டில் அதே ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிப்பாப்பாவுக்கு இர‌வு உண‌வு ஊட்டிக்கொண்டிருந்தார் பாட்டிய‌ம்மா.... பீம‌ன்தான் அந்த‌ப்பாப்பாவுக்குப் பிடித்தமான‌ ஹீரோ!!! பாப்பாக்க‌ளை ஓரிட‌த்தில் உட்கார‌வைத்துக் கதைசொல்லி உருண்டை உருண்டையாக சோறுதிணிப்ப‌து காலம்காலமாய் பாட்டிக‌ளுக்கும‌ட்டுமே கைவ‌ரும் லாவ‌க‌ம்!! பாட்டியின் க‌தைக‌ளில் துரியோதன சகோதரர்களை ம‌ட்டுமன்றி ப‌லப்பல‌ வில்ல‌ன்க‌ளையும் தின‌மும் த‌ன் க‌தாயுத‌த்தால் புர‌ட்டியெடுத்துவ‌ந்தான் பீம‌ன் அந்த‌க் குழ‌ந்தைக்காக‌!!! திடீரென‌ப் பாட்டிக்குத் தொண்டையில் ஏதோ உத‌றல்... பேச‌ முடிய‌வில்லை.... ஒருவித‌மாக‌த் தோட‌ர்ந்து புறையேறிக் கொண்டேயிருந்த‌து... க‌தை சொல்ல‌க் க‌ஷ்ட‌ப்ப‌ட்டப் பாட்டிக்கு த‌ண்ணீர் குடித்தும் அட‌ங்க‌வில்லை... மீண்டும் மீண்டும் விம்மியிழுத்துக் கொண்டேயிருந்தது நெஞ்சு... ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர்களை யெல்லாம் அழைத்து வ‌ந்துவிட்டாள் குட்டிப்பாப்பா...ஆளுக்கொரு வைத்திய‌ம் சொல்லியும் அட‌ங்க‌வேயில்லை... இர‌வு ரொம்ப‌ நேர‌ம்வ‌ரைக்கும் தொட‌ர்ந்த‌து தொண்டைக் குமுற‌ல்!!

பின்னே... இத்த‌னை நாள் இல்லாமல் கிட்டத்தட்ட‌ ம‌ற‌ந்தேபோய்விட்ட பேரன் த‌ன் பாட்டியைத் திடீரென்று நினைத்து நினைத்து தூக்க‌மின்றித் த‌விக்கையில் தொண்டை விக்காதா பாட்டிக்கு!! அஞ்ச‌லியின் பேச்சைக் கேட்ட‌திலிருந்தே தன் பாட்டியின் நினைவுகள் தொடர்ந்து வட்டமிட்டு வலிகொடுத்தது ஜீவாவுக்கு..."என்ன‌ பாவ‌ம் செய்தாள் என் பாட்டி இப்படி தனிமைத் தண்டனையில் துவழ‌??" என்று ம‌ன‌ம் கேட்கும் கேள்விக‌ளுக்கு விடைய‌ற்றுத் த‌விக்க‌த் துவ‌ங்கினான் ஜீவா!!

ஒன்ப‌தாம் வ‌குப்புப் ப‌டித்த‌போது வ‌ந்த‌ கொடுமையான‌ ம‌ஞ்ச‌ட் காமாலையால் க‌டும் அவ‌தியுற்ற‌ ஜீவாவை நாட்டுவைத்திய‌த்துக்காக‌ கிராம‌த்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய‌து அவன் பாட்டிதான்... உட‌ல் நோவு வாட்டியெடுத்த‌போது ம‌டியில்போட்டுத் த‌லைவ‌ருடிக்கொடுத்த‌ பாட்டியின் பாச‌ம் இப்போது ஜீவாவின் த‌லைய‌ணையை ந‌னைக்கிற‌து க‌ண்ணீர்த்துளியாய்... குண‌மாகிப் ப‌த்து நாள் பாட்டியின் ஊட்ட‌த்தால் தேறியதும்... அந்த‌ப் ப‌த்து நாளும் பூர்வீக‌ நில‌புல‌ன்க‌ளில் சின்ன‌ மைன‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்ததும்... குள‌த்தில் நேர‌ம்தெரியாம‌ல் குளித்துக் கிட‌ந்த‌வ‌னுக்காக‌க் க‌ரையிலேயே காத்துக் கிட‌ந்துப் பாட்டித் தலை துவ‌ட்டிவிட்டதும்...பாட்டியின் கைப்பக்குவத்தில் தேன்குழ‌ல் முருக்கு, அதிர‌ச‌ம், கேச‌ரி,ரொம்ப‌ப் பிடித்த‌ பால்ப‌னியாரம் ருசித்தது...!!! ப‌த்துநாளும் ப‌ல‌வித‌மாய்க‌ க‌ழிந்தன‌....

"பாட்டிய‌ விட்டுட்டு ம‌றுப‌டி போக‌ப்போறியா??"

"இதோ இப்ப‌வே ஜ‌ன‌வ‌ரி முடிஞ்சிருச்சு... பிப்ர‌வ‌ரி, மார்ச்..அவ்ளோதான்... ஏப்ர‌ல் மாச‌ம் லீவு.. நான் திரும்ப‌ வ‌ந்திடுவேன்!!!"

க‌ன்ன‌மிர‌ண்டிலும் முத்த‌ம் கொடுத்து நெற்றியில் முத்த‌ம் வாங்கித் தெரு முடியும்வ‌ரை திரும்பிப்பார்த்து கை காட்டிக்கொண்டே சென்றான்.... த‌ன் அம்மாவிட‌ம் அதிக‌ம் பேசிக்கொள்ளாத‌ ராஜ‌கோபால‌ன் சிரித்துக்கொண்டே எதுவும் பேசாம‌ல் ம‌க‌னை அழைத்துக்கொண்டு போனார்....ஏப்ர‌ல் வ‌ந்தது.... ப‌த்தாம் வ‌குப்புப் பாட‌ங்க‌ளை லீவிலேயே துவ‌க்க‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார் அப்பா!! பாட்டியை ம‌ற‌ந்து ப‌டிப்பில் தீவிர‌மானான் ஜீவா...முடிவில் ம‌திப்பெண்க‌ளோடு மெட‌ல்களும் குவிந்த‌ன‌...

"ப‌ப்ளிக் எக்ஸாம் டென்ஷ‌ன் எல்லாம் முடிஞ்சிபோச்சு பாட்டி.... அடுத்த‌ ரெண்டு மாச‌ம் நான் உங்க‌ கூட‌வேதான் இருப்பேன்!!!" ....

ஆனால் அந்த‌ இர‌ண்டுமாதங்களுக்கும் "ஸ்விம்மிங், க‌ராத்தே, ப்ரென்ச் க்ளாஸ், கிள‌ப் கிரிக்கெட்.. என்று குறுகிய‌ கால‌ க‌டமைக‌ளை அடுக்கிவைத்திருந்தார் ராஜ‌கோபால‌ன்... சார்ல‌ஸ் டிக்கின்ஸ், அக‌தா கிறிஸ்டி ப‌டிக்க‌ணும்... உல‌க‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌த்துக்கிற‌ வ‌ய‌தில் அந்த‌க் கிராம‌த்துக்குப் போவதாவது... விடாது சிவ‌ப்புக்கொடி ப‌ற‌க்க‌விட்டார்!!

ப்ள‌ஸ் ஒன் முடிந்து ப்ள‌ஸ் டூ கூட‌ முடிந்துபோன‌து.... "பாட்டீ நான் ப்ள‌ஸ் டூ பாஸாகிட்டேன்.." என்று "ப‌தினாறு வ‌ய‌தினிலே" ஸ்டைலில் ஆண்"ம‌யிலா"க‌ வ‌ய‌ல்வ‌ர‌ப்பில் அகவுகிற‌ ஜீவாவின் கனவுக்கு எம‌னாக‌ வ‌ந்த‌து எண்ட்ரென்ஸ் எக்ஸாம்.....சரி காலேஜ் போன‌ப்புறமாவது... ஸாரி நோ சான்ஸ்.. அவ‌ன் ப‌டித்த‌து அல‌காபாத்தில் உள்ள‌ ஆர்.ஈ.சி யில்!! பெங்க‌ளூரில் சாஃட்வேரில் இரண்டுவ‌ருட‌ம் வேலை...அத‌ன்பின் மீண்டும் எம்.பி.ஏ... அதுவும் மும்பையில்....

இரண்டொருமுறை கட்டாயப்படுத்திப் பாட்டியை நகரத்திலிருக்கும் தன்வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைத்தார் ராஜகோபாலன்... ஒரே வாரத்தில் அவர் வேலைக்குப் போயிருந்த நேரத்தில் ஏனோதெரியவில்லை பாட்டி சொல்லிக்கொள்ளாமல் பழையபடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்...!!

பாட்டிக்கு ஞான‌ப்ப‌ழ‌ம் வேண்டுமென்றால் தாத்தாவை ஒருமுறை சுற்றி வ‌ந்து வாங்கிக் கொண்டுவிடலாம்!!! அந்த‌க் கால‌த்திலேயே கார் வைத்திருந்த‌வ‌ர் ஜீவாவின் தாத்தா!! வீடு, வ‌ய‌ல் ம‌ற்றும் தோப்பெல்லாம் வைத்திருந்தும் அந்த‌க் கால‌த்தில் கார் வைத்திருந்த‌துதான் இந்த‌க்காலத்திலும் அவரது பெருமித‌ அடையாள‌மாக‌ இருந்துவ‌ருகிற‌து... குறிப்பாக‌ப் பாட்டியின் ம‌ன‌தில்!!..... த‌ன்னைவிட‌ப் ப‌ல‌வ‌ய‌து மூத்த‌வ‌ரான‌ த‌ன் க‌ண‌வ‌ருக்கு இறுதிவ‌ரை ஒரு குழ‌ந்தையாக‌த்தானிருந்தார் பாட்டிய‌ம்மா!! சொந்த‌ நில‌த்தைக் குல‌தெய்வ‌க் கோயிலுக்குக் கொடுத்துவிட்ட‌ திருப்தியுட‌ன் திடீரென்று தாத்தா மாண்டுபோவார் என்று யாருமே நினைத்திருக்க‌வில்லை.... சிறுவ‌ய‌திலிருந்தே த‌ன‌க்குத்தானே கோடுபோட்டு வாழ‌ப் ப‌ழ‌கிக்கொண்ட‌, அவ‌ர்க‌ளின் ஒரேம‌க‌ன் ராஜ‌கோபால‌ன், தன் த‌ந்தை ம‌ரணிக்கும்போதே ப‌ட்ட‌ண‌த்தில் அர‌சாங்க‌வேலையில் சேர்ந்திருந்தார்.... த‌ன‌க்கு உல‌க‌மாயிருந்த‌ க‌ண‌வ‌ன் திடீரென‌ ம‌றைந்துபோக‌ உயிராய் வ‌ள‌ர்த்த‌ ம‌க‌னிட‌ம் த‌ஞ்ச‌ம‌டைவார் என‌ அனைவ‌ரும் நினைத்திருக்க‌, த‌ங்க‌ள் பெரிய‌ வீட்டை அந்த ஊர்ப் ப‌ள்ளிக்கூட‌த்துக்குக் கொடுத்துவிட்டு ஆர‌ம்ப‌கால‌த்தில் த‌ன் க‌ண‌வ‌ன் க‌ட்டிய‌ சின்ன‌வீட்டில் த‌னியாக‌ப் பாட்டிய‌ம்மா வாழ‌த்துவ‌ங்கியது ஏனென்பது இன்றுவ‌ரை யாரும் அவிழ்க்க‌விய‌லாத‌‌ ஒரு ம‌ர்ம‌ முடிச்சு!! பேரன் ஜீவாவுக்கு ம‌ஞ்ச‌ள்காமாலை தாக்கியிருந்த‌போது பாட்டி போராடிக் காப்பாற்றிய‌ இதேவீட்டில்தான் இன்று அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குழ‌ந்தைக்கு சோறூட்டிவிடுகிறார்!! ந‌டு இர‌வில் தொண்டை விக்க‌ல் அட‌ங்கிப்போக, தின‌ம் தின‌ம் வாச‌ல்தெளித்து சுத்த‌ம் செய்த‌ முறைவாசலில் சொந்தப் பேரனின் பாதம் ப‌ட‌ப்போவ‌தை ய‌றியாம‌லேயே தூங்கிவிட்டார் பாட்டிய‌ம்மா!!!

வ‌ழ‌க்க‌ம்போல் அன்றும் வாச‌ல்தெளித்து மிக‌ச்சுத்த‌மாக‌ மொழுக‌ப்ப‌ட்டிருந்த‌து அந்த‌வீட்டின் முக‌ப்பு... கார் க‌தவு திற‌ந்து.. அரிசிமாவில் வ‌ரைந்த‌ எட்டு புள்ளிக் கோல‌த்தில் பட்டுவிடாத‌வாறு எச்ச‌ரிக்கையாய்த் த‌ரையில்தன் கால்ப‌தித்தான் ஜீவா.... வாச‌ல்க‌தைவை மூடும் வ‌ழ‌க்க‌ம்தான் அந்த‌க் கிராம‌த்துக்கே கிடையாதே!! காரிலிருந்து இற‌ங்கி ஒன்றுமே பேசாம‌ல் வீட்டுக்கு உள்ள்ள்ளே... வாச‌லிலிருந்து நேரே தூர‌மாய் அம‌ர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த, இன்னும் கொஞ்ச‌ம் முதுமைய‌டைந்துவிட்ட த‌ன் பாட்டியைத் த‌லையை ஒருபுற‌ம் ச‌ரித்த‌வ‌னாய்ப் பார்த்த‌வாறே நின்றிருந்தான் ஜீவா!!!! தூர‌த்தில் நிற்கும், நிழ‌லாய்த் தெரியும் அந்த‌ ம‌ங்க‌லான‌ உருவ‌ம் பாட்டியின் ம‌ன‌தில் மெதுவாகச் சின்ன‌ச் சின்ன‌ ம‌த்தாப்பூக்க‌ளைக் கொளுத்திப் போடத் துவங்கியது... முக‌ச்சுருக்க‌ங்க‌ள் கேள்விக்குறிக‌ளாய் மேலும் சுருங்கி... கையிலிருந்த‌தை அப்ப‌டியே போட்டு விட்டுத் திடீரென‌த் த‌ட‌புட‌லாய் எழுகிறார் பாட்டிய‌ம்மா!!! ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!! வேக‌ந‌டை ஓட்ட‌மாகி உத‌றிய‌ கைக‌ள் நேரே ஜீவாவின் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌திந்த‌த‌ன‌!! இய‌ல்பாக‌வே க‌ல‌ங்கியிருந்த‌ க‌ண்க‌ளால் காட்சியை முழுதாக‌ ந‌ம்ப‌ இய‌லாத‌து தெளிவாக‌வே தெரிந்த‌து....!!! "சொல்லிட்டுப் போன‌ மாதிரியே ஏப்ர‌ல் மாசம் வந்துட்டேனா!!" ஜீவா சிரிக்க‌.... " கண்ணீர்மல்க‌ த‌ன் பேர‌னை உச்சிமுக‌ர்ந்தார் பாட்டி பல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து......!!

--தொடரும்.....


(கொஞ்ச‌ம் நீண்ட‌க‌தை... இர‌ண்டாவ‌து பகுதியை விரைவில் எழுதிப் ப‌திவிடுகிறேன்...
அசௌக‌ரிய‌த்துக்கு ம‌ன்னிக்க‌வும்!! Hope you'll like this story!!)


பிர‌பு. எம்

கால்ஷீட் - சிறுக‌தை



"கருப்பு.....

......வெள்ளை


கருப்பு........

......மீண்டும் வெள்ளை...


லைட்ஸ் ஆன்.......

........லைட்ஸ் ஆஃப்


லைட்ஸ் ஆன்.......

.......லைட்ஸ் ஆஃப்"


கண்களை ஒரு சீரான இடைவெளியில் அகலத் திறந்து திறந்து மூடுவதால் நம்மாழ்வாருக்கு இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வரும் உணர்வைத் தந்தது!


"ஏன் மருத்துவமனைகள் எல்லாமே மொத்தமாகவே வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன???" என்று மனதில் கேள்வி தோன்றுகிறது.. அதற்கு பதில் தேடாமல்நம்மாழ்வார் மீண்டும் மல்லாந்து படுத்தவாறு விட்டச் சுவரின் வெள்ளையோடு தன் 'கண்மூடி' விளையாட்டைத் தொடர்கிறார்...இதுபோன்று சுவாரஸ்யமில்லாத பொழுதுகளை அவர்தனது கடந்தகாலங்களில் அனுமதித்ததேயில்லை. ஆனால் இன்று..... இத்தகைய பொழுதுகளையும் தன்னால் கடக்க முடிவதைக் காணும்போது, இலக்கு ஒன்றை அடையும் பொருட்டுத் தனக்கு இதுவும் சாத்தியமே என்று புரிந்துகொள்கிறார்... மீண்டும் அதே கண் சிமிட்டல்.... "ஏன் மாமா கண்ணை இப்படி அலட்டிக்கிறீங்க? கண் கூசுதா?? ஜன்னலை அடைச்சிடலாமா??" இன்ஞ்சினியரான தங்கைப் பையன் சுந்தர் கேட்க, அலுங்காமல் கழுத்தைமட்டும் அவன்புறம் அசைத்து மெலிதாகச் சிரித்துக் கண்ணடிக்கிறார்... "பேச முடியலையா மாமா??".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த‌போதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு!! எல்லாம் காதலுக்காக!! தான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான நடிப்பின்மீது கொண்ட வெறித்தனமான காதலுக்காக....!!


தொடர்ந்து ஒரேயிடத்தில் பார்வைப் பதித்துப் படுத்திருக்கும் தன் மாமாவிடம் அன்றைய செய்தித்தாளில் அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஒன்றை மெதுவாகக் காட்டினான் சுந்தர்... "மருத்துவமனையில் தேறிவருகிறார் நடிகர் நம்மாழ்வார்" என்று கூறியது அந்தப் பெட்டிச் செய்தி.... நம்மாழ்வார் முகத்தில் திடீர் பிரகாசம்... பிரபலமான நடிகருடன் நம்மாழ்வார் இணைந்து நடிக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம், நம்மாழ்வார் உடல் நலம் தேறிவருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறது அந்தச் செய்தி.. நம்மாழ்வாரை வைத்து மிக அண்மையில் மிகப்பெரியதொரு வெற்றிப்படம் கொடுத்த இளம் இயக்குனர் சுரேஷின் அடுத்தப்படம் அது... தனது முந்தைய படத்தைப் போன்றே இந்தப் படத்திலும் நம்மாழ்வாரின் பாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்றும் அவருக்காகக் கதையை வேண்டுமானாலும் மாற்றுவோமே தவிர வேறுயாரையும் ந‌டிக்க‌வைக்கும் எண்ண‌மில்லை என்று இய‌க்குன‌ர் சுரேஷ் திட்ட‌வ‌ட்ட‌மாக‌க் கூறியிருப்பதாகவும், மேலும் இது மிக‌ப்பிர‌ப‌லமான‌ தயாரிப்பாள‌ரான‌ ர‌ம‌ண‌ராஜனின் படம் என்றும் செய்தியில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து...செய்தியைப்பார்த்த‌வுட‌ன் ஏதேதோ ர‌சாய‌ண‌ மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மாழ்வாரிட‌ம்... சுந்த‌ரைப்பார்த்து பெருமித‌மாக‌ப் புன்ன‌கைக்கிறார்....

இந்த முறை மனதின் ஒருநிலையைத் தொடர முடியவில்லை அவரால்!!

"கருப்பு..வெள்ளை...லைட்ஸ் ஆன்...சுரேஷ்....அந்த சந்திப்பு...லைட்ஸ் ஆஃப்....ரமணராஜன்.....அந்த அறிவிப்பு...கருப்பு..வெள்ளை..."

மனம் இடையில் வேறொரு அலைவரிசையில் பயணித்தது....,சில பழைய உரையாடல்கள் மறுஒலிபரப்பாக எதிரொலித்தது அவருக்கு மட்டும்!!!

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார்!!!!..."

கருப்பு....வெள்ளை.... கருப்பு....வெள்ளை....

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

லைட்ஸ் ஆன்....லைட்ஸ் ஆஃப்......"

எழ‌ வேண்டும் என்று தோன்றியிருக்கும் போலும்....ம‌னித‌ர் இப்போதுதான் உண‌ர்கிறார் த‌ன்னுடைய‌ கால்க‌ள் முற்றிலுமாக‌ செய‌லிழ‌ந்து போயிருப்ப‌தை......சில நிமிடப் போராட்ட‌ம் ப‌லன‌ளிக்க‌வில்லை... அவ‌ரால் த‌ன் உட‌லை அசைக்க‌ இய‌ல‌வில்லை.....அதுவரை அவர் உணராத வேதனை அவரை ஆட்கொண்டு உடல் முழுதும் பரவுகிறது..... எழுந்து மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் தனது மனக்கணக்கு எங்கே பொய்த்துவிடுமோ?? என்று சதி செய்யும் தன் உடல்நிலையை நினைத்தவாறு சுந்தரை நோக்கி மீண்டும் த‌லை ச‌ரித்து சிரித்த‌முக‌மாய்ப் பார்க்கிறார்... அந்த அழுத்தமான பார்வையில் பல அர்த்தங்கள்.... இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் இறங்கிப் போகிறது....அதே புன்னகையோடு சுந்தரையே பார்த்தவண்ணமாய் இருக்கிறார் இமைக்காமல்......

சுந்த‌ர் பிற‌ந்த‌ போதே ந‌ம்மாழ்வார் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ந‌டிகர்தான். அவரைக் கையாள்வது மிகக் கடினம் என்று அவர் குடும்பத்திலேயே ஓர் உணர்வு இருந்தது. க‌தாநாய‌கனாக‌ சில‌ப‌ட‌ங்க‌ளிலும், வில்லனாக‌வும், குண‌ச்சித்திர‌ ந‌டிகராக‌வும் ப‌ல்வேறு ப‌ட‌ங்க‌ளிலும் நடித்துத் த‌ன‌து தனித்துவ‌மான‌ ந‌டிப்பாற்ற‌லால் எப்பொழுதுமே உச்ச‌த்திலிருந்தார். "சாதாரண‌ வாழ்க்கை வாழும் சராசரி ம‌னித‌ன் மிக‌க் கொடுத்துவைத்த‌வன், ஏனென்றால் அவ‌ன் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள‌ப்ப‌டுகிறான்!" என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஒரு பக்குவப்பட்ட மனிதனாய்.....

"சாதிக்கவே பிறந்தேன்" என்று தன்னை இள‌மையிலிருந்தே ஆழ‌மாக‌ ந‌ம்பி வாழ்ந்து வந்த‌ ந‌ம்மாழ்வார், தனது சாதனைக் க‌ள‌மான‌ நடிப்பைத்தவிர‌ வேறு எதிலுமே பொறுப்பாக‌ இருந்த‌தில்லை! அறுவைசிகிச்சை முடிந்திருந்த தன் த‌ந்தையை ஒருநாள் பார்த்துக் கொள்ள‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பிவைத்த‌போது, நடிக்க‌ வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளைஞனான நம்மாழ்வார், சாதிக்கக் காத்திருக்கும் த‌ன‌து நேர‌த்தைத் த‌ன் குடும்பத்தின‌ர் பாழ்ப‌டுத்துவதாகப் பயங்கரமாய்க் கொந்த‌ளித்ததையும் ச‌ரி, பிறகு பெரிய‌ ந‌டிக‌னாகித் தான் க‌ட்டிய‌ மிக‌ப்பெரிய‌ வீட்டில் ஆசையாய்த் த‌ன்னைப் பிர‌ம்மாண்ட‌மாய்ப் ப‌ட‌ம்பிடித்து வீட்டின் முக‌ப்பில் மாட்டிய‌ ப‌ட‌த்தில், மாட்டிய‌ அன்றே சிறுவ‌னான‌ த‌ங்கைப்பைய‌ன் சுந்த‌ர் மீசை வ‌ரைந்திட, அனைவ‌ரும் மிர‌ண்டுபோய்க் காத்திருந்த‌ போது வ‌ந்து பார்த்துவிட்டு "என‌க்கு மீசைவெச்சா ந‌ல்லாதானிருக்கும்போல‌...." என்றும‌ட்டும் கூறிவிட்டு அல‌ட்டிக் கொள்ளாம‌ல் சென்றது மட்டுமன்றி அந்தப் படத்தை இறுதிவரை மாற்றாமல் இருந்ததையும் ச‌ரி... உண்மையில் யாராலும் அவ‌ரைப் புரிந்துகொள்ள‌வே முடிய‌வில்லைதான்...!!

சுந்த‌ர் அறைக்கு வெளியே கொஞ்சம் பதற்றத்தோடு ம‌ருத்துவ‌ர்க‌ளோடு ஏதோ சீரிய‌ஸாக‌ப் பேசிக்கொண்டு இருக்கிறான்..... இர‌ண்டு ந‌ர்சுக‌ள் அறையைவிட்டு வெளியே வந்தபின்.....சுந்த‌ர் ந‌ம்மாழ்வாரின் மிக‌ அருகே சென்று அம‌ர்ந்து அவ‌ர் முக‌த்தைப் பார்க்க......ந‌ம்மாழ்வாரின் க‌ண்கள், சிரித்த முகமாய் இப்போதும் த‌ன் ம‌ரும‌க‌னின் க‌ண்க‌ளை ஆழ‌மாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌......மௌன‌த்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்க‌ள் போல‌...

அன்று காலையில் ஒரு ப‌தினோரு ம‌ணிய‌ள‌வில் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜனின் அலுவ‌ல‌க‌த்திற்கு இய‌க்குன‌ர் சுரேஷ் வ‌ந்திருந்தார்..... அவ‌ர்க‌ள‌து கூட்டுமுய‌ற்சியில் உருவாகிக் கொணடிருக்கும் திரைப்ப‌ட‌ம் கிட்ட‌த்த‌ட்ட எண்ப‌து ச‌த‌வீத‌ம் முடிந்துவிட்ட‌ நேர‌த்தில், உண்மையிலேயே இப்போது ந‌ம்மாழ்வாருக்காக‌த்தான் ப‌ட‌ப்பிடிப்பு வேலைக‌ள் காத்திருக்கின்றன..... இத‌ர‌க் காட்சிக‌ளெல்லாம் ப‌ட‌மாகிவிட்ட‌ வேளையில் தயாரிப்பாள‌ரிட‌ம், ரிலீஸ் மற்றும் அடுத்த‌ ப‌ட‌ப்பிடிப்பு ஷெட்யூல் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்..... "அவரோடத் த‌ங்க‌ச்சிப் பைய‌ன்தான் ஹாஸ்பிட்ட‌ல்ல‌ அவ‌ரைப் பாத்துக்கிறாரு... எதுவும் தெளிவா சொல்ல‌மாட்டறாரு... டாக்ட‌ரை இன்னும் பார்க்க‌ முடிய‌லைனு சொல்றாங்க‌..எப்டினாலும் ச‌ரி ந‌ம்மாழ் சார் சொல்லிட்டுப் போனபடி இன்னும் ரெண்டு நாள்ல‌ வ‌ந்துடுவார்னு ந‌ம்புறோம் சார்..." என்று சுரேஷ் சொல்ல‌... கருத்தாய்க் கேட்டுக்கொண்டிருக்கும் ரமணராஜன், "ஒண்ணும் பிர‌ச்னையில்ல‌... எவ்வ‌ள‌வு நாள் ஆனாலும் ச‌ரி.. அவ‌ர் முழுசா குண‌மாகிட்டு வ‌ர‌ட்டும்..." அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன் உத‌வியாள‌ரிட‌ம் "அவ‌ர் என்ன‌தான் ம‌றுத்தாலும் எப்படியாவது ஹாஸ்பிட்ட‌ல் செல‌வு முழுசும் ந‌ம்ம‌ளே செட்டில் ப‌ண்ணுற‌ மாதிரி ஏற்பாடு செஞ்சிடுங்க‌.." என்று உத்த‌ர‌விடுகிறார்.... சுரேஷ் எவ்வித‌ உண‌ர்வையும் முக‌த்தில் காட்டாத‌ப‌டி ர‌ம‌ண‌ராஜ‌னையே பார்த்துக்கொண்டிருந்தார்..... ப‌ல‌வ‌ருட‌ ப‌ரிச்சிய‌மும் ந‌ட்பும் கொண்ட‌வ‌ரான‌ ந‌ம்மாழ்வாரைப் ப‌ற்றி ஏனோ சிலநாட்களாக அடிக்க‌டி நினைவ‌லைக‌ளில் சிக்கிக் கொள்கிறார் ர‌ம‌ண‌ராஜ‌ன்....

தொழிலில் என்றுமே ஒரு சிர‌த்தையான‌ காத‌ல் உண்டு ந‌ம்மாழ்வாருக்கு... சிறிய‌ ந‌டிக‌ராய் சில‌கால‌ம் ம‌ட்டுமே இருந்தார், அந்த‌க்கால‌ம்தொட்டு ஒருநாள்கூட‌ப் ப‌ட‌ப்பிடிப்பு அவ‌ரால் தட‌ங்க‌ல் ப‌ட்ட‌தே இல்லை...சினிமாமீது தான் கொண்டிருக்கும் அதிதீவிர‌ ஈடுபாட்டை அனைவ‌ரிட‌மும் எதிர்ப்பார்ப்பார்... மீறுகையில் கடும்கோப‌ம் கொள்வார்! உண‌ர்ச்சிம‌ய‌மான‌ ம‌னித‌ர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி ந‌டிப்பார்..... க‌ளைப்பினால் தன் ந‌டிப்பின் த‌ர‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவித‌மான‌ ம‌னஅழுத்தம் அவ‌ர‌து ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்தை ரொம்ப‌வே பாதித்து வ‌ந்த‌து... அதிலிருந்து விடுப‌ட‌ எப்போதுமே அவ‌ர‌து விர‌ல்க‌ளுக்கிடையே சிக‌ரெட் ஒன்று அவ‌ரைப் போல‌வே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும்! ந‌ள்ளிர‌வு முழுதும் தூக்க‌மில்லாத‌தால் அதிக‌மாக‌வே குடிப்பார்.....

நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்.....ஒரு தீபாவ‌ளி தின‌ம்..... ந‌ம்மாழ்வாரின் நான்கு ப‌ட‌ங்க‌ள் அன்று ரிலீஸ்! இர‌ண்டில் வில்ல‌னாக‌வும், ஒன்றில் மிக‌வும் சாந்த‌மான‌ ம‌னித‌ராக‌வும் இன்னொன்றில் நாயகனின் பெரிய‌ ப‌ண‌க்காரத் தந்தையாகவும் ந‌டித்திருந்தார்... பாராட்டுக‌ள் வ‌ந்து குவிந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌, இந்நிலையில் அவ‌ர் கடந்த‌ வ‌ருட‌ம் ந‌டித்திருந்த‌ ஒரு ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்காக‌த் தேசிய‌ விருதுக்கு அவ‌ர் பெய‌ர் இறுதிச்சுற்றில் ப‌ரிசீலிக்க‌ப்ப‌டுவ‌தாகவும் செய்தி வெளியாகிய‌து... அதே நேர‌த்தில், மிகப்பெரிய‌ ந‌டிக‌ர் ஒருவ‌ரின் கால்ஷீட்டைப் பெற்றிருந்த‌ ந‌ம்ப‌ர் ஒன் தயாரிப்பாளரான‌ ர‌ம‌ண‌ராஜ‌ன் த‌ன்னுடைய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ வேண்டிக்கேட்டார்... முத‌லில் இய‌க்குன‌ர் வ‌ந்து க‌தை சொன்ன‌போது ந‌ம்மாழ்வார் த‌விர்க்க‌ எண்ணிய‌ க‌தை அது.... இருப்பினும் ர‌ம‌ண‌ராஜ‌னுக்காக‌ ச‌ம்ம‌தித்தார் சில நிப‌ந்த‌னைக‌ளோடு....

"தேசிய‌விருது அறிவிப்பு: ந‌ம்மாழ்வார் சிற‌ந்த‌ ந‌டிக‌ர்!!" என்று அறிவித்த‌து ஒரு மாலை நாளித‌ழ்..... திடீரென்று வாழ்த்தும‌ழை பெய்ய‌த்தொட‌ங்கிய‌து ந‌ம்மாழ்வாரின் தொலைபேசியில்..... இன்னும் அதிகார‌ப்பூர்வ‌மாகத் தான் தெரிவிக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தால் கொஞ்ச‌ம் சுதாரிப்புண‌ர்வுட‌ன்தான் அனைத்து வாழ்த்துக்க‌ளையும் பெற்றுக்கொண்டிருந்தார் ந‌ம்மாழ்வார்... அடுத்த‌ நாள் காலையில் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பில் மாபெரும் நாய‌க‌னான‌ ஒரு வ‌டநாட்டு ந‌டிக‌ர் சிற‌ந்த‌ ந‌டிக‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார்....ப‌ல‌ ச‌ல‌ச‌ல‌ப்புக‌ள் எழுந்த‌ன‌... அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ளும் கூற‌ப்ப‌ட்ட‌ன‌...

ந‌ம்மாழ்வார் அதிகாலையில் அழைக்க‌ப்ப‌ட்டார்.... அன்றைக்கு ஷூட்டிங் கேன்ச‌ல் என்று புரொட‌க்ஷ‌ன் மேனேஜ‌ர் கூறினார்..தெளிவான‌ கார‌ணமேதும் இல்லை.... பின்பு மெதுவாக, அந்தப் ப‌ட‌த்தின் க‌தாநாய‌க‌ன் திரைக்க‌தையில் ந‌ம்மாழ்வாருக்கு அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்கிய‌த்துவ‌த்தினால் க‌டும் அதிருப்தி அடைந்துள்ள‌தாக‌வும் அத‌ன் விளைவாக‌ திரைக்க‌தையில் மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌வும், கார‌ண‌ங்க‌ள் க‌சிந்த‌ன‌......இதெல்லாம் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டுப் போயிருந்தாலும் இம்முறை இந்த சம்பவங்கள் அர‌ங்கேறிய‌ வேளையும் வித‌மும் ந‌ம்மாழ்வாரை ரொம்ப‌வே காய‌ப்ப‌டுத்திய‌து.....

தன்னைச் சுற்றி இப்ப‌டி மாறி மாறி ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் வேளையில் ப‌ட‌ப்பிடிப்புத் த‌டைப‌ட்டிருப்ப‌தால் அவ‌ரின்மீது ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ தனிமை திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து...... இந்த‌ சூழ்நிலையில் ர‌ம‌ண‌ராஜ‌னை ச‌ந்தித்தார் ந‌ம்மாழ்வார்... இருத‌ர‌ப்பிலும் வெவ்வேறு விதமான அழுத்த‌ங்க‌ள் ஒரே பட‌த்தினால்.... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ப் பேச்சுவார்த்தையில் வார்த்தைக‌ள் த‌டித்துப் போய்விட‌...... நீண்ட நேரம் சத்தமாக வாக்குவாதம் நடந்தது.....ஒரு நிர்பந்தமான க‌ட்ட‌த்தில்.... நீண்ட‌ மௌன‌த்துக்குப்பின்.... ந‌ம்மாழ்வார்......

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

என்று சொல்லிவிட்டு அமைதியாக‌ வெளியேறினார்... ப‌ல‌ரும் அதிர்ச்சியில் பார்த்திருக்க‌... அவ‌ர் காரில் ஏறிச்செல்லும்வ‌ரை ப‌த‌ற்ற‌மாக‌ முறைத்திருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன். காரில் வீடு செல்லும் வ‌ழியில்.....தன் தொழில்வாழ்வில் ஏதோவொரு புய‌ல் வீசப்போவ‌தை உண‌ர்ந்திருந்தாலும்... ப‌ல‌ மைல்க‌ற்க‌ளைக் க‌ட‌ந்துவிட்ட‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌வா... அதனால் அதிக‌ம் அச‌ர‌வில்லை... மேற்கொண்டு இவ்விஷ‌ய‌த்தில் ம‌வுன‌ம் காப்ப‌து என்று முடிவெடுத்திருந்தார்...

"ந‌ம்மாழ்வார் ப‌ட‌த்திலிருந்து அதிர‌டி நீக்க‌ம்" என பரபரப்பாக செய்தி வெளியானது..... ச‌ற்றும் எதிர்பாராதவித‌மாக‌ த‌யாரிப்பாள‌ர் த‌ர‌ப்பிலிருந்து பிர‌ப‌ல‌ ப‌த்திரிக்கையொன்றில் விள‌க்கமும் வெளியாகியிருந்த‌து!! நம்மாழ்வரை வீழ்த்த ர‌ம‌ண‌ராஜ‌ன் எடுத்திருந்த‌ அஸ்திர‌ம் வித்தியாச‌மான‌து... "எந்த‌ நேர‌த்திலும் உயிரிழ‌ந்துவிடும் நிலையிலிருக்கும் ந‌டிக‌ரை வைத்துப் ப‌ட‌ம் எடுப்ப‌து த‌ன‌க்கு சாத்திய‌மில்லை!!" என்று கூறியிருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன்... "சிற‌ந்த‌ ந‌டிக‌ரான‌ ந‌ம்மாழ்வார் த‌ன‌து உட‌ல்ந‌‌ல‌னைப் ப‌ற்றிக் க‌ருத்தில் கொள்ள‌வில்லை, சொந்த‌ வாழ்க்கையில் க‌வ‌ன‌மின்றி ம‌ன‌ அழுத்த‌த்திற்கு ஆளான‌மையினால் போதைக்கு அடிமையாகி இப்போது க‌வ‌லைக்கிட‌மான‌ நிலையிலிருக்கிறார்... எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் அவரை வைத்துப் ப‌ல‌கோடி ரூபாய் முத‌லீடு செய்யும் தயாரிப்பாள‌ர்க‌ள் இப்ப‌டி ரிஸ்க் எடுக்க‌ முடியாது... வ‌ளர்ந்துவ‌ரும் ந‌டிக‌ர்க‌ள் ந‌ம்மாழ்வாரின் க‌தையில் பாட‌ம் க‌ற்றுக் கொள்ள வேண்டும், நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மொத்தமாகத் திரியைக் கொளுத்திப்போட்டிருந்தார்.....

சுந்த‌ரின் அலைபேசிக்குத் த‌ன் வீட்டிலிருந்த‌ப‌டி அழைப்புக்கொடுத்தார் இய‌க்குன‌ர் சுரேஷ் முத‌ல்முறை ம‌ணி முழுதாக‌ அடித்தும் ப‌தில் இல்லை அடுத்த‌முறை ஸ்விட்ச் ஆஃப் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌த் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து!!... ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் த‌னிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த‌ ஓய்வும் தேவையாக‌த்தானிருந்த‌து... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது....."ந‌ம்மாழ் சார்..!!" ......ம‌ற‌க்க‌ முடியாத‌ அந்த‌ முத‌ல் சந்திப்பு...!!

ர‌ம‌ண‌ராஜ‌னின் அறிக்கை வெளிவ‌ந்த‌துதான் தாம‌த‌ம்... ந‌ம்மாழ்வாரின் உட‌ல்நிலையைப் பற்றி தின‌ம்தின‌ம் வ‌த‌ந்திக‌ள்!! ந‌டித்திருந்த‌ இர‌ண்டுப‌ட‌ங்க‌ள் ப‌டுதோல்விய‌டைந்த‌ன‌.....காட்சிக‌ள் முற்றிலுமாக‌ மாறிப்போய்..... ந‌டிப்பில் ஊறித்திளைத்த‌ க‌லைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில‌ ஊறுகாய்ப் பாத்திர‌ங்க‌ளுக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்ட‌ர் இருளிலும் க‌ழிக்க‌த் துவ‌ங்கினார்..... இர‌ண்டுவ‌ருட‌ங்க‌ள் உருண்டோடிப் போயின‌.... அதீதமான மன அழுத்ததால் இய‌ல்பான‌ முதுமையுடன் உட‌ல் ந‌ல‌ம் இன்னும் கெட்டுப்போயிருந்த‌து, எனினும் உயிருட‌ன்தானிருந்தார்!! அப்போது ந‌ம்மாழ்வாரைத் தேடி சுரேஷ் என்று ஓர் இள‌ம் இய‌க்குன‌ர் வ‌ந்திருந்தார் த‌ன் முத‌ல்ப‌ட‌த்திற்குக் க‌தையைத் தூக்கிக் கொண்டு!!!

"வேண்டாம்ப்பா...ஒருவேளை ப‌டம் பாதி போய்கிட்டிருக்கும்போது நான் செத்துப்போயிட்டா உங்களுக்கெல்லாம் ரொம்ப‌ ந‌ஷ்ட‌மாகிடும்... நீ வேற‌ ஏதாவ‌து ஆரோக்ய‌மான‌ ஆளை வெச்சு இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்துக்கோ!!" கொஞ்ச‌மும் ஆர்வ‌மின்றி சொன்னார் ந‌ம்மாழ்....

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார் !!!!..." என்றுவ‌ந்த‌து ப‌தில்!!!
க‌தையைக் கேட்ப‌தைத்த‌விர‌ வேறுவ‌ழியில்லை ந‌ம்மாழுக்கு!!

கதையைக்கேட்ட‌ மாத்திர‌த்தில் நீண்ட‌ நாட்களாக ஓய்ந்து கிடந்த‌ ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌றக்க ஆரம்பித்தன‌ ந‌டிக‌ருக்குள்!! ப‌ட‌ம் ஆர‌ம்பித்த‌து..... த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ க‌தையாக‌ உண‌ர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்ப‌ட்டுத் த‌ன் வாழ்நாளில் முத‌ன்முறையாக‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுத் தன் ச‌க்திக‌ளையெல்லாம் சேக‌ரித்துக்கொண்டுத் திரும்பி வ‌ந்து ந‌டித்துக் கொடுத்தார்...... ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற்ற‌து!!!! மீண்டும் உச்ச‌த்தில் ந‌ம்மாழ்.... சுரேஷ் பெரும் பெய‌ர்பெற்றுப்போனார்.... அத‌ற்கு உட‌ன‌டி அங்கீகார‌ம், சுரேஷின் அடுத்த‌ ப‌ட‌த்திற்குத் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜ‌ன்!!! முக்கிய‌ப் பாத்திரத்தில் ந‌ம்மாழ்வார்.....! துவ‌க்க‌விழாவில் ம‌ரியாதையாக‌ இருவ‌ரும் ஒருவ‌ருக் கொருவ‌ர் வ‌ண‌க்க‌ம் வைத்துக்கொண்டார்க‌ள்..... ப‌ர‌ஸ்ப‌ர‌ம் வாழ்த்திப் பேசிக்கொண்டார்க‌ள் மேடையில்!!!! பாதிப்ப‌ட‌ம் முடிந்துவிட்ட‌ வேளையில் மீண்டும் உட‌ல்ந‌ல‌ம் குன்றிய‌மையால் அதே ம‌ருத்துவ‌ம‌னையில் மீண்டும் இப்போது ந‌ம்மாழ்வார்..... அவ‌ரது த‌ங்கைப் பைய‌ன் சுந்த‌ர்தான் அவ‌ரை அருகிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறார்.... நேற்றிர‌வு ம‌ருத்துவ‌ர்க‌ள் சுந்த‌ரிட‌ம் சொன்ன‌தை சுந்த‌ர் யாரிட‌மும் ப‌கிர்ந்துகொள்ளவேயில்லை....

ம‌ருத்துவ‌ம‌னையில்.... இன்னும் அதே பார்வை....ஆழ‌மாக‌ இருவ‌ரின் க‌ண்க‌ளும் வெறித்துப் பார்த்த‌வ‌ண்ண‌மிருந்த‌ன‌.... போதும் என்று எண்ணி ஒருமுறை க‌ண்க‌ல‌ங்கிவிட்டு அந்த‌ உண‌ர்ச்சிமிகு க‌ண்க‌ளை ஒரேய‌டியாக‌த் த‌ன‌து கைக‌ளால் மூடினான் சுந்த‌ர் த‌ன் மாமாவின் த‌லையை ம‌டியில் தாங்கிக்கொண்டு....சிரித்த‌முக‌மாக‌வே விடைபெற்றிருந்தார் ந‌ம்மாழ்வார் மொத்த‌மாக‌.....

பேர‌திர்ச்சிய‌டைந்த‌து திரையுல‌க‌ம்... மிக‌வும் ம‌ரியாதையாக‌ ஒருபுற‌ம் எந்த‌வொரு த‌னிமனித‌னும் பெருமைப் பட்டுக்கொள்ளும‌ள‌வு இறுதிச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கையில்... சுரேஷ் இயக்கிய‌ ந‌ம்மாழ்வாரின் முந்தைய‌ ப‌ட‌த்தின் தயாரிப்பாள‌ர் தொட‌ர்புகொள்ள‌ப்ப‌ட்டார்.... அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த‌ ஒரு குறிப்பிட்ட‌ ஒரு காட்சி அவ‌ரிடமிருந்து வாங்க‌ப்ப‌ட்ட‌து.... சிறிது நாட்க‌ளில் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் ந‌ம்மாழ்வாரின் க‌டைசிப‌ட‌ம் திரைக்குவ‌ந்தது..... ப‌ட‌த்தினிடையே திடீரென்று ந‌ம்மாழ்வாரின் க‌தாபாத்திர‌ம் ம‌ர‌ண‌மெய்துவ‌தாக‌க் க‌தை மாற்ற‌ப்ப‌ட்டிருந்தது.. ஒரு க‌ட்டிலில் அசைவேயின்றி இற‌ந்த‌ ச‌ட‌ல‌மாக‌ உயிருட‌னிருந்த‌போது அற்புத‌மாய் ந‌டித்திருந்தார் ந‌ம்மாழ்வார் அந்த‌ மிக‌ நீள‌மான‌ டேக்கில்.......

அந்த‌ப் ப‌ட‌மும் மாபெரும் வெற்றிபெற்ற‌து.... பாராட்டும‌ழையில் ந‌னைந்திருந்த சுரேஷ் த‌ன் ப‌டுக்கையில் கண்கள் மூடித் தூக்கமின்றி ப‌டுத்திருந்தார்... தூக்க‌ம் வ‌ர‌ம‌றுத்த‌து....ஒரு பிண‌மாக‌ ந‌ம்மாழ்வார் நடித்திருந்த‌ அந்த‌ நெடிய‌ காட்சி அவ‌ரை ரொம்ப‌வே தொந்த‌ர‌வு செய்து கொண்டேயிருந்த‌து...

"சுரேஷ், ஹாஸ்பிட‌ல்ல‌ என் உட‌ம்புல‌ மிச்ச‌மிருந்த‌ பேச்சு மூச்சு எல்லாத்தையும் த‌க்க‌வெச்சுக் கொண்டுவ‌ந்திருக்கேன், இன்னைக்கு அந்த‌ எமொஷ‌ன‌ல் சீனை எடுக்க‌ப்போறோமில்லையா நான் ரெடிப்பா...." ஒரு குழ‌ந்தையின் ஆர்வ‌த்துட‌ன் சிரித்துக்கொண்டே சொன்னார் ந‌ம்மாழ்வார்....

"இல்ல‌ சார் இன்னைக்கு அந்த‌ சீன் எடுக்க‌ முடியாது.... கொஞ்ச‌ம் சிக்க‌ல்...."

"என்ன‌ப்பா... ஏற்கென‌வே ஷெட்யூல் ப‌டிதானே போய்க்கிட்டிருக்கு... இன்னைக்கே எடுத்துட‌லாமே.." கெஞ்ச‌லாக‌வே கேட்டார்......

ஏதேதோ கார‌ண‌ங்க‌ளை அடுக்கினார் சுரேஷ்.... அன்று அந்த‌க் காட்சி எடுக்க‌ப்ப‌ட‌வில்லை...அவ‌ர் ஆழ்ந்து உற‌ங்குவ‌துபோல் சில‌ பேட்ச்- அப் காட்சிக‌ள் நீண்டநேரமாக எடுக்கப்பட்டன..... உண‌ர்ச்சிபொங்க‌ ந‌டிக்கும் ஆர்வ‌த்தில் தெம்புகூட்டி வ‌ந்திருந்த‌மையால் இப்ப‌டி அசைவின்றித் தூங்கும் காட்சியில் ந‌டிக்க‌ மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டார்.....மிக‌ மிக‌ நீண்ட‌ காட்சியாக‌ அது ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌து.....

க‌ட்டில் ஒன்றில் சாய்ந்தவாறு அவ‌ர் தூங்குவ‌தைச் சுற்றி சுற்றிப் ப்ட‌மெடுத்துக் கொண்டிருந்த‌ கேமிராமேன்..." சார் அசைவே இல்லாம‌ சார்... அப்டியே... ஜ‌ஸ்ட் ஒரு ஃபியூ செக‌ன்ட்ஸ்.....அசையாம..அசையாம..... சார்...யெஸ்..யெஸ்" என்று சொல்லிக் கோண்டே ப‌ட‌மெடுக்க‌.......

"யோவ்! தூங்க‌த்தான‌யா செய்யுறேன் என்ன‌மோ பிண‌மா ந‌டிக்கிற‌மாதிரி சொல்லிக்கிட்டே இருக்க‌....?? அசையாம‌....அசையாம‌னு....சீக்கிர‌ம் எடுங்க‌ய்யா..!!"
ந‌ம்மாழ்வார் குர‌ல் க‌ர‌க‌ர‌க்க‌....... திடுக்கிட்டு எழுந்தார் சுரேஷ். அத‌ற்குப்பின் தூக்க‌ம் வ‌ரவேயில்லை அவ‌ருக்கு அன்றிர‌வு முழுதும்.......

-பிர‌பு.