Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

என்னது.....?? கிஸ் தி டம்மியா!!!




சமீபத்தில் என் தாய்வழி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்த ஒரு நன்னாளில் நாங்கள் எல்லாரும் சிரித்து மகிழ்ந்த ஒரு விஷயத்தைப் பதிவுலகில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..... :)

 தமிழர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதால் தமிழ் படும் பாட்டைப் பற்றியது இந்த இடுகை...!!

என் அம்மாவுக்கு உடன்பிறந்த மூன்று தங்கைகளில் (என் அன்பு சித்திகள்) ஒரு சித்தி, எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார், என்னை ஏரோப்ளேன் பார்த்து ஏங்கவைத்துவிட்டு!! ..... அது ஆகிவிட்டது இருபத்துமூன்று வருடங்கள்.... :) சமீபத்தில் சித்தி தன் குடும்பத்துடன் தாய்வீடு வர ஏகக்குஷியில் எக்கச்சக்க அரட்டைக் கச்சேரிகள் அடித்து மகிழ்நதோம்..... 

சரி...விஷயத்துக்கு வருகிறேன்....

என் சித்தி பிள்ளைகளில் மூத்தவளுக்கு மட்டுமே தமிழ் சிறப்பாகத் தெரியும்..... மற்ற மூவருக்கும் கொன்ச்சம் கொன்ச்சம் தான் டாமில் டெரியும்!! :(

தமிழ் தெரிந்த என் தங்கை, சித்திக்கு சமையலறையில் உதவும்போது இருவரும் "தமிழ்"க் கதைப்பது வழக்கமாம்.... அன்றைக்கு ஒருநாள் ஏதோவொரு சாண்ட்விட்ச்சை செய்துகொண்டே, " இளைய நிலா பொழிகிறதே.." பாடல் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்....கவிஞர் வைரமுத்துவின் எவர்கிரீன் வரிகளல்லவா அவை.... என் சித்தியும் வைரமுத்துவின் ரசிகையாதலால் அவர் ரசித்த வைர வரிகளையெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.... "டாமில் கொன்ச்சமாகத் தெரிந்த" இரண்டாமவள் கவிதைகளின் அர்த்தம் புரியாமல் அங்கு இந்த‌ இரண்டு தமிழ் ரொட்டிகளின் நடுவே சிக்கி சாண்ட்விட்சாகி நைய்ந்திருக்கிறாள் நெடுநேரமாக‌!! இவர்களோ அவள் கஷ்டம் புரியாமல் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.... 

போதாதற்கு ...... "வைரமுத்துவின் கவிதைகளை உனக்கு ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை அவர் சிறந்த கவிஞர்..." என்கிற ரீதியில் மூத்தவள் தன் தங்கையை வெறுப்பேற்றியிருக்கிறாள்.... 

அதற்கு அவளோ வெறுப்பில்.... " உங்க வைரமுத்து சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் அவர் பெயரைப் பாருங்கள்... தி மோஸ்ட் ஃபன்னியஸ்ட் நேம் ஆன் எர்த்.... ஹி ஹி ஹி...." (The most funniest name on earth)என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறாள்...!!!

"அவரு பேருக்கென்ன....அழகுபெத்த பேரு.... வைரம் + முத்து.... இதுல என்ன ஃபன் இருக்கு????" 

ரொம்பவெல்லாம் யோசித்து பன் ஆகவேண்டாம்.... இதற்கு என் "டாமில்" தங்கை கொடுத்த விளக்கம்....

"அவரு பேரு என்ன‌ .... "வயிரமுத்து"... வயிரை எதுக்கு முத்தணும்??... வொய் டூ கிஸ் தி  டம்மி??!! ஹி ஹி.... ஃபன்னி நேம்!!"

ஆகவே நல்லா கேட்டுக்குங்க வலைத்தமிழ் மக்களே...... வைரமுத்துவின் "டாமில்" அர்த்தம் கிஸ் தி டம்மி யாம்!!! :))) 

வைரமுத்துவின் கவிதையை ரசிக்கும் நேரத்தில் இந்த செந்தமிழ்த் தேன்மொழியாளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கலாம் என் சித்தி :)))))

பிள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக்குடுங்கப்பா!!!

அன்புடன்,

இது விவசாய நாடல்லவா....!!



இந்தக் காணொளி, சில மாதங்களுக்குமுன் நமது அரசு பேருந்து ஒன்றில் பயணாமாகையில் மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே கண்ணில் பட்ட ஒரு காட்சி! (மொபைலை நிற்க வைத்தாற்போல் படம்பிடித்து உங்கள் கழுத்தை சாய்த்துப் பார்க்கவைத்துத் துன்புறுத்திய மோசமான கேமராமேன் அடியேன்தான்!)

சண்டைபோட்டு இடம்பிடித்த பேருந்து ஜன்னலோரம்  நான் கண்ட காட்சியின் பின்னணியை விவரித்து விடுகிறேன்...

புஷ்பேக்... செமி ஸ்லீப்பர்.. வால்வோ டீலக்ஸ் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத நம்மூரு சாதாரண‌ அரசுபேருந்து ஒன்றில் (வத்தலகுண்டு டூ  மதுரை) வந்துகொண்டிருந்தேன்...  இந்தவருடம் வடகிழக்குப் பருவமழை பொய்க்காது தினமும் மாரி பொழிந்துவந்ததே அந்த மழைக்காலத்தின் ஒரு மதிய நேரமது..... வாடிப்பட்டியைத் தொட்டு முடியும் ஹைவே ஒன்று இருக்கிறதல்லவா.... அதில் ஏறுமுன் எதிர்கொள்ளும் ஒரு ரயில்வே லெவல் க்ராஸில் எங்கள் வண்டி காத்திருக்க..... பைபாஸில் இருந்து ஊருக்குப் பிரியும் சாலையில் காற்றுள்ள திசையில் நெல் தூற்றிக்கொண்டிருந்தார்கள் விவசாயிகள்...

வீடியோவில் தெரியும் அந்த அக்கா... அவரருகே இருக்கும் அந்த காவிநிற பக்கெட்டில் நெற்களை இட்டுவைத்து, அழகாகக் காற்றடிக்கும் திசைக்கேற்ப‌ லாவகமாய்ப் பிடித்தவாறு நெற்பயிரை சிதற்றிக் கொண்டிருந்தார்... உமியெல்லாம் காற்றில் பறக்கும் விதமாக‌...!!
.
காற்றின் திசைமறித்து எங்கள் பேருந்து நின்றமையால்... அந்தம்மா விசிறிவிடும் உமித்துகள்களெல்லாம் ஜன்னல் வழியே எங்கள்மேல் விழத்துவங்கியது..... வேகவேகமாக ஜன்னல்களை மூடிக்கொண்டோம்.....

"யம்மா... யம்மா.... நாங்க போனப்புறம் புடைங்க... பஸ்ஸுக்குள்ள நுழையுதுல்ல.."

எனக் குரல் கிளம்பியது..... சகோதரியோ பதில் சொல்லவெல்லாம் மெனக்கிடாமல், உமித்துகள்களைக் காற்றில் துமிப்பதை நிறுத்த முனையாமல்....அலட்டிக்கொள்ளாதவராய், பக்கெட்டிலிருந்து (காணொளியில் அவர் கையிலிருக்கும்) சொளவிற்குக் கைமாற்றிப் புடைக்கத் துவங்கினார்!!

அப்போதும் எங்கள் பஸ்ஸுக்குள் துகள்கள் பரவ... ஒரு கூட்டம் அந்தம்மாவை பேருந்து கடந்து செல்லும்வரை வேலையை நிறுத்திவைக்குமாறு குரல் உயர்த்தியது.... அதற்கு வண்டிக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்களால்தான்  புரிந்துகொண்டேன் இந்தியா ஒரு விவசாய நாடு என்று!!

கிராமத்தை பாரதிராஜா சினிமாவில் பர்த்தறிந்த என்போன்றோருக்கு நாங்கள்தான் அவரது வேலைக்கு இடையூராக நின்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்திருக்கவில்லை,  பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் 'மண்ணின் மைந்தர்கள்' அந்தப் பெண்ணின் 'வொர்க் ப்ரஷரை' நேட்டிவிட்டியோடு எடுத்தியம்பும்வரை!!

காணொளியில் முடிந்தவரை உரையாடலைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறேன்....!

" வண்டி போனப்புறம் புடைங்கம்மா யம்மா....."

" வீட்டுல போய்ப் புடைக்க வேண்டியதுதானே.." (யாரிந்த முதலமைச்சராகும் தகுதியுடைய அறிவாளி என்று தெரியவில்லை!!)

ப்ஸ்ஸிக்குள்ளிருந்தே கிளம்பிய பிரதிவாதத்தைப் பாருங்கள்...... :)

" யய்யா.. மழைக்கு முன்னாடி அவுக சோலிய முடிக்கணும்யா... களத்த விட்டுப்புட்டு வீட்டுக்குப் போயா தூத்துவாக??..... செத்த சன்னல மூடிக்குங்க ... ரயிலு போய்க்கிடட்டும்...."

" நாங்களும் வெவசாயம் செய்யுறவகதேன்.... செத்தப் பொறுத்துங்கப்பூ... யம்மா குறவுத் தூரம் தள்ளிப்போய் புடைக்கப் பாரும்மா.... நாங்களும் இன்னும் கொள்ளத் தொலவு போகணுமில்லே...."

ஆகா.... மண்மணம் கமழ ஓர் உண்மை காட்சியானது கண்முன்!!

பேக்ரவுண்டில் பழைய தூர்தர்ஷனின் "வயலும் வாழ்வும்" திருக்குறள் பாட்டு எம்.எஸ்.வி யின் குரலில் ஒலித்தது மனதுக்குள் எனக்கு!! (ஞாபகம் இருக்குதா??!!)

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை"

பொருள்:  உலகம் பலதொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும்
 ஏர்த்தொழிலே சிறந்த்து!!

அன்புடன்,

ஃபெவிகால் விளம்பரங்கள்...




பள்ளிக்கூட நாடகம் ஒன்றில் குட்டிமீசை ஒன்றை ஒட்டிக்கொண்டு வாள்வீசும் சிறுமி... அதே மீசையோடே படித்து... மீசைக்காரியாய் வாழ்க்கைப்பட்டு... அதே மீசையுடன் தலைசீவி..கிழவியாகி செத்துப்போய்... மீண்டும் அதே மருத்துவமனையில் அதே ஒட்டுமீசையுடன் பிறக்கும் (!)
 ஃபெவிகாலின் விளம்பரப் படத்தை ரசித்தீர்களா!! :))



இதுமட்டுமல்ல... ஃபெவிகாலின் விளம்பரங்கள் எல்லாமே சுவாரஸ்யமானவைதான்!!

கோழிமுட்டைகளை வரிசையாக உடைத்து உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருப்பார் ஒரு பெரியவர்... ஒரு முட்டை மட்டும் ஓங்கியடுத்தும் உடையாது சுத்தியால் அடித்தும் தப்பித்து ஓடும் முட்டை இடித்து குடத்தில் ஓட்டை விழுந்து நீர் ஒழுகும் (என்னா வில்லத்தனம்!!)..... அதிசியத்தில் அண்ணார்ந்து பார்த்தால் ஒரு ஃபெவிகால் டப்பாவின் மேல் தீணியைக்க் கொறித்துக் கொண்டிருக்கும் கோழி...!!



ஒரு வண்டியில் ஓர் ஊரே ஒட்டிக்கொண்டு பயணிக்கும் பின்னால் பார்த்தால் அது ஃபெவிகால் வண்டி!! இதெல்லாம் உச்சக்கட்ட சேட்டை!!



எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஃபெவிகால் விளம்பரப்படம் இந்த ராஜஸ்தானி படம்தான்!! ஒருமுறை ஏதோ மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இது ஒளிபரப்பப்பட் நானும் என் நண்பர்களும் தரையில் உருண்டு சிரித்தோம்!! கடைசியில் 'ஒட்டிக்கொள்ளும்' சிறுவனின் உடல்மொழி.. ஹாஹாஹா...



கேத்ரினா கைஃப் தோன்றும் இதுவும் செம்ம சேட்டையான கற்பனை...



இன்னும் ஒன்று...



இன்னும்கூட எத்தனையோ விளம்பரப்படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள் இதே "ஸ்டிக்கி" தீமிற்காக!!
ஒரே ஒரு தீம் ஐ வைத்துக்கொண்டு எவ்வளவு சிரிக்க வைக்கிறாய்ங்க!! எல்லாமே ஆரோக்யமான கற்பனைகள்!!

ஃபெவிகால் பற்றி யோசித்தபோது... "ஒட்டு" உலகின் ஒரே ராஜா பிடிலைட் நிறுவனத்தின் ஃபெவிகால்தான்....
யாராவது கடையில் சென்று, " ஒரு பாக்கெட் 'அதெஸிவ்' கொடுங்க" என்று எங்காவது இந்தியாவில் கேட்டிருப்பார்களா?? நேரடியாக "ஃபெவிகால்" என்று ப்ராண்ட் நேமைத் தான் கேட்போம்!! அந்தளவுக்குப் பொருளின் பெயரை மறந்து ப்ராண்ட் நேமே, ப்ராடக்ட் நேமாகிப் போயிருக்கிறது!! (இதேபோல் இன்னொரு உதாரணம் "டால்டா" என்று அழைக்கப்படும் வணஸ்பதி!!)


ஒருவேளை.. இந்த சுதந்திரம்தான் ஃபெவிகாலின் விளம்பரங்களைத் தனித்துவமான‌ அழகான கற்பனைகளாக வழங்க வழிவிடுகிறதோ!!


ஏனெனில் நமது விளம்பரங்கள், போட்டி என்கிற பெயரில் அடுததடுத்த ப்ராண்ட்களுடன் தங்களை அப்பட்டமாக கம்பேர் செய்துகொண்டேதான், பாதிக்குமேல் தரமிழந்து போகின்றன!!

எனக்கு அல்சரைக்காட்டிலும் அதிகமாய் வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொள்ளும் விளம்பரம் "ஃபேர் அன்டு லவ்லி" விளம்பரம்தான்!! அவர்களின் எல்லா விளம்பரங்களிலும் ஒரு சப்பை ஃபிகர் (மன்னிக்கவும்)  திறமைகளோடு கவனிப்பற்றுக் கிடப்பாள் அவளுடைய மானங்கெட்ட அப்பனோ அல்லது வீணாப்போன தோழியோ ஒரு "ஃபேர் அண்டு லவ்லி" ட்யூபைக் கையில் கொடுக்க, அடுத்த ஏழே நாட்களில் அவள் சூப்பர் ஃபிகராகிவிடுவாள் அவளை எல்லாரும் சைட் அடிக்க அவள் குடும்பமே பூரித்துப் போகும்!!

"சைண்ட் கோபைன்" (Saint-Gobain Glasses) கண்ணாடிகளின் விளம்பரங்களும் கைதட்டி விசிலடிக்கவைத்த‌ ரகங்கள்....

மேலும் பலப்பல அழகான கற்பனைகளால் மின்னும் குட்டிக் குட்டி விளம்பரப் படங்கள் யூ டியூப் எங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன... பார்த்து ரசிக்கலாம்.... :)

ஐம்பது வருட விற்பனை சாம்பியனாக இருப்பதாகத் தன் லேட்டஸ்ட் விளம்பரத்தில் பெருமையுடன் அறிவிக்கும் பிடிலைட்டின் "ஃபெவிகாலு"க்கு வாழ்த்துக்கள்!!!!


மகிழ்வுடன்,

குழந்தைகள் மனநலம் : மதுரை கருத்தரங்கம்

அந்த அருமையான மாலை வேளையில் நம் பதிவுலக நண்பர்களுடன் நானும் இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!

ஒருவேளை, அன்று இரவு நான் சென்னைக்குப் போக வேண்டியதைக் காரணமாகக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றிருக்கலாம்.... அதன்பின் கருத்தரங்கைப் பற்றிய நண்பர்களின் இடுகைகளில் படித்துவிட்டு வரமுடியாமல் போனதற்காக‌ தூர்தர்ஷன் போல "வருந்துகிறேன்" என்று ஸ்லைடு போட்டிருக்கலாம்... ஆனால் அப்படி நேர்ந்திருந்தால் எத்தனை அற்புதமான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று கலந்துகொண்டபின்புதான் புரிந்துகொண்டேன்!! அப்படிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும், எனவே ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்பான நண்பர்களின்  இடுகைகளைப் படித்துவிட்டேன் என்றாலும் இங்கு நானும் ஒரு பார்வையாளனாகப் பதிய விழைகிறேன்....

அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹால்... கல்லூரி வாழ்வின் பல ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளப்பியது..... முதன்முதலில் ஒரு சின்ன உரையாற்ற வாய்ப்பளித்த இடம் எனக்கு!!.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்!! ஓகே நோ   ஃப்ளாஷ்பேக்ஸ்......

கருத்தரங்கைப் பொறுத்தவரை  நான் செய்த ஓர் உருப்படியான காரியம் ,"குழந்தைகள் மனநலம்"... சிறுவர் சிறுமிகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு என்ற‌ தலைப்பை அறிந்ததுமே, என் அம்மாவை என்னுடன் அழைத்து சென்றதுதான்!! குழந்தைகளின் பரிட்சை மார்க்குகளைவிட அவர்களின் மனநலத்தில் அதிக அக்கறை கொண்டு முப்பது வருடம் குழந்தைகள் உலகில் ஆசிரியையாகப் பணியாற்றியர் அல்லவா... அதனால் தலைப்பைச் சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார்...மிகுதியான‌ மனநிறைவுடன் இருவரும் வீடு திரும்பினோம்!!

டாக்டர் ஷாலினி....

பொதுவாகஓர் இதய சிகிச்சை நிபுணரோ அல்லது  ஒரு மூளை நரம்பியல் நிபுணரோ வந்து மனித உடலைப் பற்றியும், உள்ளுறுப்புகளையும் பற்றி ஓர் உரையாற்றுகிறார் எனில் அதற்கான வரவேற்பும் சரி... தயாரிப்பும் சரி முற்றிலும் "ஒன்வே ட்ராஃபிக்" காகத்தான்  இருக்கும்.... ஏனெனில் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றியெல்லாம் ஹார்ட் அட்டாக்கோ, நியூரோ ப்ராப்ளமோ வராமல் நாம் கூகுளில் கூடத் தேட‌மாட்டோம்...

ஆனால் "மனநலம்" பற்றி இன்றைய‌ காலகட்டத்தில் கருத்தரங்கம் வழங்குவது நிச்சியம் சவாலனது... ஏனெனில் ஒரு சிறுகதையில்கூட‌ "சைக்கலாஜிக்கல் டச்" வைக்கும் காலமிது....
டான்ஸ் ஷோவில்கூட "கெமிஸ்ட்ரி"க்குதானே  பத்து மார்க் கிடைக்குது!!!
 கனவுல காளமாடு முட்டுச்சுன்னு சொன்னால்,  என் நண்பன் , "மச்சான் இதுக்கு ஃப்ராய்டு என்ன விளக்கம் சொல்றாருன்னா..." என்று தாடையைச் சொறிய ஆரம்பிக்கிறான்......அந்த  அளவுக்கு "மனநலம்" சார்ந்த கருத்துகளும், புத்தகங்களும், சொற்பொழிவுகளும் மலிந்துகிடக்கின்றன...

சீரியல் ரேப்பிஸ்ட் ஒருத்தன் போலீஸிடம் சிக்கினால் நம்ம "ஜூவி", "ரிப்போர்ட்ட"ருக்கெல்லாம் ஏக குஷியாகி வக்கிரம் சொட்ட வர்ணித்துவிட்டு டாக்டர். நாராயணரெட்டியிடம் கருத்துகேட்டு அவற்றை "மனவியல் ரீதியாக‌"  அணுகும் (கொடுமடா சாமி!!) அன்றாடக் கூத்துகளுக்கு மத்தியில்.....

கல்வியாளர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் முன் ஒரு தேர்ந்த "உளவியல் மருத்துவராக" டாக்டர். ஷாலினி, அன்றாட வாழ்வின் உளவியல் நிதர்சனங்களுக்கு சாதாரண உடற்கூறு சார்ந்த காரணங்களில் தொடங்கி... ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசம்வரைதொட்டு விளக்கி எங்களையெல்லாம் கட்டிப்போட்டு  மனித மனத்தின் படம் வரைந்து பாகம் குறித்த பாங்கிற்கு ரசிகர் மன்றமே வைக்கலாம்!!

"குட் டச், பேட் டச்" என்று பேசத் துவங்கியதுமே "எங்களைப் (மனநல மருத்துவர்கள்) பொறுத்தவரை எதுவுமே குட் என்றும் பேட் என்றும் கிடையாது என்ற டாக்டரின் துவக்கமே "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று திருக்குறள் சொன்னது!!

குழந்தைகள் என்று துவங்கி... மனித ஆண் மற்றும் மனிதப் பெண் என்று பிரித்து ... அவர்களின் தொடு உணர்வு சார்ந்த சைக்காலிஜிகளையெல்லாம் வெள்ளிடை மலையாகத் தெளிவுபடுத்தி.... விலங்குகளிட‌மிருந்து பரிணாம வளர்ச்சியினால் பிரிந்து வந்த மனிதப் பெண்  தன் உடல், தோல், உரோமங்கள் முதலியவைகளில் இயற்கைக்கு மாறாகக் கண்டிருக்கும் பரிணாம மாற்றங்கள்.... அதனால் அவளுக்கு ஏற்படும் ஸ்பரிசம் உள்ளிட்ட  விளைவுகள்..... அதன்மீதான கலாசாரப் பார்வைகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று விரிந்துகொண்டே சென்ற கான்செப்டை உளவியல் கூறுகளாக உள்ளடக்கி அன்றாடம் அவர் சந்திக்கின்ற‌, சிகிச்சை அளிக்கிற‌ பொதுமக்களின், அனுபவங்களை மேற்கோள்காட்டி டாக்டர். ஷாலினி அவர்கள் விளக்கியது, நிச்சியம் அவரின் துறை சார்ந்த மற்ற நிபுணர்களுக்குமே கூட சாத்தியமாவது சந்தேகமே!! விஷயங்கள் தெரிந்தாலும் விளக்கிச் சொல்ல வேண்டுமே..... கேட்போர் அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டுமே!!!

Hats off to you ma'am!!

Dr.  ஷாலினி சொன்ன விஷயங்கள் அதே ஆழத்தோடு நம் சமுதாயத்திற்குப் போய்ச்சேர்வது... குறிப்பாக நம் பெண்கள் சமுதாயத்தைச் சென்றடைவது அவசியம்... மொத்தக் கருத்தரங்கமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது... நிச்சியம் அது இன்னும் பலரை சென்றடையும் என்று நம்புகிறேன் மேலும் தூரத்தைப் பொருட்படுத்தாது "ஒரு சக பதிவராகவே என்னிடம் கலந்துரையாடுங்கள்" என்று ரொம்பவே தோழமையாக முன்வந்து தன் அழகான, ஆழமான உரையை வழங்கிய டாக்டரே தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சி மற்றும் வேறு மீடியாக்களின் வழியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.... என்ன... நம் மக்கள் கிசுகிசுக்களைப் படிக்கும் ஆர்வத்தையும், ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒருகாலத்தில் அவமதிக்கப்பட்ட ஆட்டத்திற்கு இன்று மூன்று பேர் உட்கார்ந்து மார்க் போடும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காட்டும் ஈடுபாட்டை இதுபோன்ற ஆரோக்யமான எழுத்துகளைப் படிப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும், யாருக்காகவும் அல்ல.... பேசுற பாஷை முழுசா பிடிபடாத.. தன்னோட உறுப்புகளுக்கு தனக்கே பெயர் தெரியாத உங்க‌ வீட்டு பிஞ்சுகளுக்காக...!!

குழந்தைகளுக்கு அவர்களின் உறுப்புகளின் பெயர்களை எப்போது சொல்லித்தர வேண்டுமோ அப்போதே உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்... விரசமான பெயர்களாக‌ அவற்றை அவர்கள் அறியாவண்ணம் உறுப்புகளுக்கு ஆங்கிலப் பெயரைச் செல்லிக் கொடுக்கலாம்...

குழந்தைகள் சில சமயங்களில் ப்ரைவேட் உறுப்புகள் மற்றும் ஆண் பெண் உடல் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைத்தனமாக விளையாடும் சில வில்லங்கமான விளையாட்டுகளை விளையாட எத்தணிக்கும் சமயங்களில் வன்மையாகக் கண்டித்து அதன் ஆர்வத்தை மேலும் தூண்டாமல்..... குழந்தைகள் தனியாக விளையாடும்போது பெற்றோர்களும் இணைந்து விளையாடுவதுபோல் கண்காணிக்கலாம்....

இவையெல்லாம் டாக்டர் சொன்னபோது எளிமையாகத் தென்பட்டாலும், எண்ணிப் பார்க்கையில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துபோய்க் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சென்ஸிடிவான விஷயங்களாகக் கவனிக்கப் பட வேண்டியவைகளாகவே தோன்றியது....

பெண்களுக்கு டிஃபென்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அப்படியே உல்டாவாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அவளை நம் கலாச்சாரம் தயார் படுத்தும் எதிர்மறையையும் கம்பீரமாகத் தெளிவு படுத்தினார்.....

குழந்தைகளுக்கு எதிராகப்போய் ஏனிது போன்ற வக்கிரங்கள் சில ஆண்களால் ஏற்படுகிறது?? என்னும் கேள்வியை அனைவருமே கேட்க மறந்திட... அவராகவே அந்தக் கேள்வியை எழுப்பி அதன் பின்னால் அமிழ்ந்துள்ள சைக்காலஜியை விளக்கினார்.... ஆண்கள் பொதுவாகவே குழந்தை முகமுள்ள பெண்களால் கவரப்படுவது என்னும்  இயல்புதான் இந்த அநீதிகளுக்கு ஆரம்பப்புள்ளியாக‌ அமைந்துவிடுகிறது என்று சிம்பிளாக சொன்னார் ஒரு மருத்துவராக :)

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு திறமான Root cause Analysஸாக‌... இதுமாதிரியான குற்றங்களுக்குக் கூட அதைப் புரிபவர்களைவிட  இந்தக் குற்றங்களுக்குக் காரணமான பின்னணியாக அமைகிற சில விஷயங்களைப் பக்குவமாக அடிக்கோடிட்டுக் காட்டியது அற்புதம்....

அதாவது ஆரோக்யமான இல்லறம் அமைந்தாலே இதுபோன்ற மிருகத்தனங்கள் பெரும்பாலும் தலைதூக்குவதில்லை.... என்று குழந்தைகள் மனநலத்தைப் பாதுகாக்க ப்ராக்டிகலாக ஏராளமான யோசனைகளை வழங்கியதோடு,  இதனை சமுதாயத்திலுருந்தே களையெடுக்க அடல்ட்களின் மனநலத்தின் அத்தியாவசியத்தைக் சுட்டிக்காட்டி முடித்து நிகழ்ச்சிக்கு ஒரு முழுமையைக் கொடுத்து முடித்துவைத்தார்!!

மனதார சொல்கிறேன் ஒரு பிரஜையாக.... டாக்டர். ஷாலினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :)

இந்த நிகழ்ச்சி தொடர்பான இடுகையில் நண்பர் கார்த்திகை பாண்டியன் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் சாத்தியமான நிகழ்வாக இதைக் குறிப்பிட்டிருந்தார்... நம் பதிவர்கள் சாதித்திருக்கும் ஓர் அரும்காரியமாக இது நடந்தேறியது என்று உரக்கவே கூறலாம் மார்தட்டி.....

வெறும் பார்வையாளனாக வந்து கலந்துகொண்டுவிட்டு முதல் ஆளாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.... கைக்கெட்டும் தூரத்தில் உன்னதமான ஒரு முயற்சி நடந்துகொண்டிருகுக்கும்போது அதில் பங்கெடுக்காது போனதற்காகத் தலைகுனிகிறேன்.... அடுத்தமுறை இதுபோன்ற முயற்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று இப்போது முகமறிந்த நண்பர்களாகிவிட்ட மதுரை பதிவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்...

பதிவர்களையெல்லாம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசியது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுத்தது... எழுத்தால், தமிழால் இணைந்த நண்பர்கள்.... பள்ளி, கல்லூரி தோழர்களைப் போல் யதார்த்தமாகப் பழகுவதைக் கண்டு ரொம்பவே கண் வைத்துவிட்டேன்!! என்னையும் ஒரு பதிவராக இணைத்துக் கொண்டு ஒன்றாக ஃபோட்டோவுக்கு நின்றோமே.... உண்மையாக அகமகிழ்ந்தேன்... அந்த புகைப்படத்தில் நிச்சியம் சிரித்த முகமாகத்தான் இருந்திருப்பேன் அது ஃபோட்டோவுக்கு சிரித்த சிர்ப்பல்ல.... மனமகிழ்ந்து முகம் மலர்ந்த தருணம் அது....

அதிகமான சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன்,

2009 சில வெற்றிகளும் தோல்விகளும்...



"எல்லாப் புகழும் இறைவனுக்கே.." என ஆஸ்கர் இரவில் தமிழ் ஒலித்த 2009ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மணித்துளிகள்தான் உள்ளன!!  

"இப்போ தான் புதுவருஷம் பொறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திருச்சு!!" எல்லாருமே ஒருமுறையேனும் கேட்டிருப்போம் இந்த வசனத்தை!! நம் வாழ்க்கைச் சுழல் பூமியின் சுழல் வேகத்தை விஞ்சி எங்கோ சென்றுவிட்டதன் விளைவு.. கடிகார நொடிமுள்ளும்... காலண்டர் தினங்களும் தடதடத்து ஓடும் பிரமை வருடந்தோறும் தொடர்கிறது!!

எல்லா பக்கமும் ஜனவரி முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் விடாது அசைபோடப் பட்டுக்கொண்டிருக்கிறது!! ஒட்டுமொத்தமாகக் கடந்த 365 நாட்களில் பதிவுகொள்ளப் பட்ட வெற்றி, தோல்விகளின் மொத்தக் கணக்கை உலகம் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை... இதில் என் கவனத்தைக் கவர்ந்த சில வெற்றிகளையும் தோல்விகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.....  

அதற்குமுன் ஒரு விஷயம்....

இந்த வெற்றி, தோல்விகளுக்கு இடையே, இந்த வருடம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம் ஒன்று உள்ளது.... "வென்றது என்று அறிவிக்கப் படுவதெல்லாம் வெற்றியல்ல... " என்பதுதான் அது... !! 

ஆம்... வெற்றிகளிலேயே பலவகைகள் உண்டு.. அதிலும் சுத்தமான சில வெற்றிகளும், பெருமைக்குரிய சில‌ தோல்விகளும் உலகில் உள்ளன என்பதை முன்பைவிட ரொம்பவே தெளிவாக உணர்ந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது இந்த வருடம்தான்!! 

இனி சில வெற்றிகளும் தோல்விகளும்...  

ஏ.ஆர் ரகுமான் ‍ - உன்னத வெற்றி :

"ரோஜா" காலங்களில் எஸ்.பி.பி ஒருமுறை ரஹ்மானிடம் "சாதிச்சுட்டப்பா.." என்கிற ரீதியில் பேசியபோது.. "இங்கே போட்டிகள் ரொம்பப் பெருசு... ஓர் ஐந்து வருடம் இந்தக் களத்தில் தாக்குப் பிடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்" என்று பதில் சொன்னாராம்..... அதே ரஹ்மானிடம் "உயிரே" சமயம் அதே கேள்வியை எஸ்.பி அவர்கள் மீண்டும் நினைவூட்டியபோதும் ரஹ்மான், " இறைவன் எனக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் பீரியட் கொடுத்திருக்கிறார் போல!" என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்!!  

ரகுமானின் கூற்று அவரது தன்னடக்கத்தைக் காட்டினாலும்.... அவர் சொல்லியிருப்பதில் ஓர் அழுத்தமான உண்மை உள்ளதை மறுக்க முடியாது! விடாத உழைப்பிற்கும், மங்காத திறமைக்கும் அவ்வப்போது கிடைக்கும் இளைப்பாறல்தான் "வெற்றிகள்" ஒரு வெற்றிக்கு செலவிட்ட உழைப்பு இன்னொரு வெற்றியைப் பெற்றுத்தராது!! அதைவிட அதிக உழைப்போடும் தேடலோடும் களத்தில் முன்பைவிட வேகமாக மீண்டும் முதலிலிருந்து துவங்கினாலே மீண்டும் வெற்றி கிட்டும்..... இதற்கு சரியான உதாரணம் ஏ ஆர் ரஹ்மான்!! 

முதல்படத்திலேயே தேசிய விருதுடன் ஆட்டத்தைத் துவக்கிய இசைப்புயல் அடுத்தடுத்து கண்டது வெவ்வேறு களங்கள்... முற்றிலும் வேறு இலக்குகள்... பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒவ்வொரு களத்தையும் சரியாகப் புரிந்துகொண்டுத் தன்னை அவற்றுக் கேற்றவாறு சிறிதும் பிசகாமல் மாற்றியமைத்துக் கொண்டு, உழைப்பிலும் தன் கவனத்திலும் சிறிதும் குறைவைக்காமல் அடுத்தடுத்த களங்களுக்கு வெற்றிநடையைத் தொடர்ந்த நம் ஏ ஆர் ரகுமான் நீண்ட நாட்களாக இந்திய சினிமா ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக அள்ளிக் கொண்டுவந்தார்!!.. அப்படி வந்தபோதும், தொடரும் தன் இசைவாழ்விலும் இன்னும் அதே ரகுமானாகத்தான் இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு!! வெற்றிகளாலும் தோல்விகளாலும் மாறாதவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கும் சரியான உதாரணம்: ஏ ஆர் ரஹ்மான்!! :) 

ரஹ்மானின் 2009ஆம் ஆண்டு வெற்றி குறுக்கு வழியின்றி முழுக்க முழுக்க உழைப்பால் பெற்ற உன்னதமான வெற்றி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது!!  

சன் பிக்சர்ஸ்!! - __________ வெற்றி  :

"கலாநிதி மாறன் வழங்கும்" என்று டைட்டிலுடன் இந்த வருடம் எட்டு படங்கள் வெள்ளித்திரையிலும் அதற்கு எட்டு லட்சம் டிரெய்லர்கள் சின்னத் திரையிலும் திரைகண்டன!! கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தனையுமே வெற்றிப் படங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை..!! அதாவது... ஒரு திரைப்படமானது எடுத்தவர்க்கும், எடுத்த படத்தை அப்படியே விலை கொடுத்து வாங்கியவர்க்கும் போட்ட காசைவிட ஏதாவது ஒரு வழியில் போட்டதைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தால் "வெற்றி" என்ற நியதி உண்மையென்றால் சன் பிக்சர்ஸின் படங்கள் எல்லாமே வெற்றிகள்தான்!! ஆனால் அதையும் தாண்டி "கனவு தொழிற்சாலை" , "கலைக்குடும்பம்" என்றெல்லாம் (ஒரு காலத்தில்) அழைக்கப் பட்டது நம் தமிழ் சினிமா... இப்போது சினிமா... ஜஸ்ட் பிசினஸ்!!  

இதுவும் வெற்றிதான் ஆனால் எப்படிப் பட்ட வெற்றியென்று நீங்களே கோடிட்ட இடத்தில் ஒரு வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள் (அந்த நேரமும் உங்கள் டி.வி "புலி உருமுது... புலி உருமுது.. " என்று மிரட்டிக் கொண்டிருக்கும்!!) 

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" - அழகிய வெற்றி :

(2009 தமிழ்ப்படங்களில் என்னுடைய ஹிட்லிஸ்ட்!!  

ரசித்துப் பார்த்தவை : " பசங்க", " யாவரும் நலம்" , "உன்னைப்போல் ஒருவன்" , " நாடோடிகள்" , "ஈரம்" மற்றும் சில..  

கொடுமைகள் : "கந்தசாமி", "வில்லு", "வேட்டைக்காரன்", "அயன்", "ஆதவன்", "படிக்காதவன்", "எஸ் எம் எஸ்" மற்றும் பல....)  

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" என்னைப் பொறுத்தவரை கோடம்பாக்கம் கொடுத்த அழகிய வெற்றிகள்!! (உன்னைப்போல் ஒருவன் ரீமேக் என்பதால் விடுபடுகிறது!!)  

"பசங்க" : 
தயாரிப்பாளர் சசிகுமாரின் அற்புதமான தேர்வு!! சசிகுமார் அன்ட் கோ வின் அலட்டிக்கொள்ளாமல் அடித்த‌ இன்னுமொரு அழுத்தமான வெற்றி!! உலக சினிமாக்களின் பாதிப்பு, எதையும் சாத்தியமாக்கிக் காட்டும் தொழில்நுட்பம், விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் புதிய மார்க்கெட்டிங் முறை என்று பல உக்திகளை நம்பிக்கொண்டு எங்கெங்கோ கதை தேடும் மற்ற மேக்கர்களுக்கு இடையே..... நமக்குள்ளும், நமக்குக் கொஞ்சம் தள்ளி அக்கம் பக்கத்திலும் புரளும் சாதாரண உணர்வுகளை மற்றும் சுற்றியுள்ள உலகு என்னதான் மாறினாலும் மாறாத ஒரே நிதர்சனமான சிறுவர் உலகை அப்படியே அச்சு அசலாகப் பிடித்துக் கொடுத்து பாண்டிராஜ் வெற்றிக் கோப்பையை லாவிக்கொண்டு சென்றது உண்மையிலேயே ரொம்ப அழகுதான்!!  

யாவரும் நலம்: "அயன்" போன்ற படங்களைப் பார்த்தபோது.... தமிழ்சினிமா டெக்னாலஜியின் வீச்சும், மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவமும் தெளிவாகத் தென்பட்டன.... அப்போது மனதில் பட்ட ஒருவிஷயம்..... 

"இப்போது நம்மிடம் இருப்பது புதுமையான, உலகத்தரம் வாய்ந்த கேமரா... அடுத்த தலைமுறை தொழில் நுட்ப சாதனங்கள், உலகத்தர நிபுணர்கள்... என எல்லாம் மாறிவிட்டது ஆனால் கதைகளை எழுத மட்டும் அதே அந்தப் பழைய பேனாவையும், கெட்டுப் போன இங்கையும் தான் தூக்கியெறிய மறந்துவிட்டோம்"  என்று தோன்றியது!  

ஆனால் முற்றிலும் புதிய கதையுடன் வந்து அடித்து ஜெயித்த விக்ரம்குமாரின் வெற்றியும் சந்தேகமில்லாமல் ஓர் அழகிய வெற்றிதான்!! நல்ல சினிமா எடுக்க‌ எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும், "திரைக்கதை" என்னும் மந்திரம் மட்டுமே போதுமானது அல்லது அதுதான் பிரதானமானது என்று ஓங்கியடித்துக் கூறிய படம்.. படம் ஹாலிவுட்டுக்குப் போகுதாமே... சிம்ப்ளி சூப்பர்ப்!! :)  

விஜய் - தொடர் தோல்வி  :

2009ல் ரொம்பவும் ரிவிட்டு வைத்தது திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்குதான் என நினைக்கிறேன்  

"வாழ்வின் பொருள் என்ன.. நீ வந்த கதை என்ன.."  

ஏனோ எனக்கு இந்த பழைய பாடல் வரிதான் நினைவில் ஒலித்தது விஜய் தன் அரசியல் முயற்சிகளை இந்த ஆண்டு அறிவித்தபோது!! 
ரஜினி, கமல் உட்பட எல்லா நடிகர்களுக்குமே சில வெற்றிகள்தான் அவர்களை நிலை நிறுத்தியிருக்கும்... ஆனால் தொடர் தோல்விகளால் நிலை நிறுத்தப் பட்ட ஒரே "ஸ்டார்" ஹீரோ விஜய் என்றுதான் நினைக்கிறேன்!! " நாளைய தீர்ப்பு" துவங்கி "காலமெல்லாம் காத்திருப்பேன்" வரைக்கும் தொடர்ந்து எத்தனை தோல்விகளைத் தாங்கினார் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்!! எப்படியோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்தாகி விட்ட நிலையில்.... ரொம்பவே அசால்டாக அரசியல் பக்கம் போய் அடிமேல் அடி வாங்கி இவ்வருடத்தை முடித்திருக்கிறார் விஜய்!! 

"ஒருதடவ முடிவு பண்ணிட்டா தன் பேச்சைத் தானே கேட்காத" போக்கிரியார், யார் பேச்சைக் கேட்டு "வில்லு", "வேட்டைக்காரன்" படங்களைத தேர்வு செய்தார் என்பதுதான் ஒரே கேள்வி.... அப்படி ஒருவர் இருந்தால் விஜய் அவரை, "தமிழ் நாட்டுல என்னை மரண அடி அடிச்ச மொத ஆள் நீங்கதாங்ணா.." என்று சொல்லி ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துக் கொள்ளலாம்..... விஜய்யைப் பொறுத்தவரை யாரு அடிச்சா பொறிகலங்கி பூமி அதிருரது கண்ணுல தெரியுமோ அதுதான் 2009!!  

தன் பொதுவாழ்வின் பெரிய தோல்விகளைத் தொடர்ச்சியாக‌ சந்தித்திருக்கிறார் விஜய்.... அவருக்கு 2010க்கு குட்லக்!! 

ராமதாஸ் - பலநாள் ஒத்திவைக்கப்பட்ட பெரிய தோல்வி

ஏனோ சிலர் தோற்கும்போது மனது சந்தோஷப் படுகிறது.... !! ஹி ஹி

ஒரு காலத்தில் ரஜினியுடன் வீண் மல்லுக்கட்டிய போது "ரஜினி ஒரு பலூன்.. "டொப்" அதன் காற்றைப் போக்கியாச்சு" என்று ஸ்டைலாக சொன்னவரின் நிலை "எப்புடி இருந்த நான் இப்புடி ஆகிட்டேன்" என்பதுதான்!! 

"சூரியன்" சுட்டு விட்டால் "அன்பு சகோதிரி" , "சகோதிரியுடன் சண்டையென்றால் மீண்டும் சூரியன்"என்றே இத்தனை வருடம் இருந்த தீராத தலைவலிக்கு, ஒருவேளை சூரியனும், இலையும் சேர்ந்து கைவிரித்தால் என்ன ஆகும்? என்று எப்படியோ 2009ல் கழகங்களுக்குத் தோன்றிவிட, கசப்பான மருந்து கொடுத்து தலைவலி அடக்கப் பட்டிருக்கிறது!! விளைவு...மாம்பழம் சீசனிலாமல் தவிக்கிறது.... 

ஜாதி அரசியல், மரங்களை வெட்டியது, கூட்டணி கேம் ஆடியது, மகனை அரசியலில் திணித்தது.. என அப்போதெல்லாம் தப்பித்து நீண்ட ஒத்திவைப்புக்குப் பின் மருத்துவருக்குக் கிட்டியிருக்கும் பெரிய தோல்வி இது....  

2010ல் மீண்டு வர வாய்ப்பு இல்லாமலும் இல்லை!! பார்ப்போம்!! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....  

அழகிரி - போட்டியில்லா வெற்றி

சினிமாவில் கலாநிதி மாறன் என்றால், இடைத்தேர்தல்களில் அழகிரி!!

2009 முழுதும் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்..... ஆனால் அவர் லேசாகத் தொட்டவற்றையெல்லாம் பின்னாலேயே பணமும், பவரும் அழுத்தித் தொட்டிருப்பதை மறைக்கவியலாது, மறைக்க யாரும் முயலக்கூட இல்லை!! 

காசு கொடுத்தால் மட்டும் வோட்டு விழுந்திடுமா?? ஏன் மற்றவர்கள் காசு கொடுத்ததில்லையா?? என்றெல்லாம் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன... பதில்... இவர் தேர்தலின்போது மட்டும் பாய்ந்துவிட்டு மற்ற நாட்களில் கொடநாடு போய்த் தூங்குவதில்லை... நல்லதோ கெட்டதோ 2009 முழுதும் விடாது எதிர்முகாம்களின் வேர்களில் வெந்நீரைப் பாய்ச்சிக் கொண்டேதான் இருந்தார்.... விளைவு.. கட்டதுரைகளெல்லாம் தாய்க்கழகம் திரும்பிவிட எதிர்த்தது எல்லாமே கைப்புள்ளகள் தான்!! 

கட்- அவுட் ஹீரோவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு பலமான வில்லன் யாரும் திரையில் வரவேயில்லை 2009ல்.... 2010ல் பார்ப்போம்... மதுரை தேர்தலில் இவருக்குத்தான் நான் வாக்களித்தேன் என்பது பின்குறிப்பு!!  

தோணி - ஆரோக்யமான வெற்றி

ப்ளேயர் ஆஃப் தி இயர் ICC விருதை 2008ஐத் தொடர்ந்து 2009லும் ஒருநாள் போட்டிகளுக்காகப் பெற்றிருக்கிறார் கேப்டன் கூல்!! கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நம்பர் ஒன் அணியாக இந்தியா டெஸ்ட் அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது.. கிரிக்கெட் என்பது பதினோரு பேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டு என்ற உண்மையையே இந்திய அணியும் சரி பிசிசிஐயும் சரி புரிந்து கொண்டது 2009ல் தான் என்று சொன்னாலும் தகும்!! இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தத்தை மொத்தமாகத் தானே தனியாக சுமந்து கொள்வதும், கேப்டன், விக்கெட் கீப்பிங் என்று பொறுப்புகள் இறுக்கினாலும் பேட்டிங்கில் இன்றும் வலிமை குறையாமல் பார்த்துக் கொள்வதும் தோணியின் ஆரோக்யமான வெற்றிக்கு அரிச்சுவடிகள்.... அப்படியே 2010லும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்!!  

இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன..... நேரமிருந்தால் 2009ன் இன்னும் சில வெற்றி தோல்விகளும் தொடரும்!!


புத்தாண்டு வாழத்துக்களுடன்,



"மொழி" போல் ஒரு திரைப்படம்....!!



" நிறைகுடம் போலப் படம் ஒன்று வந்தால் ரசிகனுக்கு அது சுபதினம்.." 

என்று ஒரு பழைய படப் பாடலில் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருக்கிறார்... அதுபோல ஒரு சுபதினம்தான் நம் தமிழ்த் திரையுலகத்துக்கு 2007 ஆம் வருடம் பிப்ரவரி 23ஆம் நாள் !!

தமிழ்த்திரையின் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் அன்று ஒரே நாளில் வெளிவந்தன... 

ஒன்று... இயல்பான வியர்வை வாசனையில் செண்ட்டைத் தெளிக்காமல், யதார்த்தத்தையே இன்னும் படு யதார்த்தமாகக் காட்டித் திகைக்க வைத்த‌ "பருத்திவீரன்". 

இன்னொன்று.. வாழ்க்கையின் அழகை, ஆனந்தத்தை, இயல்பான புன்னகையை இரட்டிப்பாக இனிக்க இனிக்க வழங்கிய "மொழி".

"மொழி"யைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அப்படத்தைப் பற்றி அதன் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வரும்.... அப்போது அவர் ஆனந்த விகடனில் "சொல்லாததும் உண்மை" என்கிற தன் சுயசரிதம் போன்றதொரு தொடரை எழுதிவந்தார்.... அதில் "மொழி" வெளிவந்த வாரத்தில் அவர் சொல்லியிருந்தவை: 

"ஒரு காலேஜுக்குப் பேசப் போயிருந்தேன்..... அப்போ அங்கே ஒரு பொண்ணு ஓடிவந்து...' இப்போ இருக்குற சினிமா போஸ்டர்ஸ்ல எல்லா ஹீரோக்களும் அரிவாள்ல ரத்தம் சொட்ட கோபமா முறைக்கிறாங்க, ஹீரோயின்கள் ரொம்ப எக்ஸ்போஸ் பண்ணி போஸ் தர்றாங்க... திரும்புற பக்கமெல்லாம் இந்த மாதிரிதான் போஸ்டர்ஸ், ஹோர்டிங்ஸ் இருக்குது... ஆனா "மொழி" பட போஸ்டர்ல எல்லோருமே மனசு விட்டுச் சிருக்கிறாங்க.. பார்க்கவே சந்தோஷமா இருக்கு சார்... ஆல் தி பெஸ்ட்' நு சொல்லிட்டுப் போனா...... இருபது வயசு இளைஞர் கூட்டத்தில் ஒருத்தி.... எனக்கு அவளோட சந்தோஷம் பார்க்கப் பிடிச்சிருந்தது!!"

இதைப் படிக்கும்போது நமக்கும் அந்தப் பொண்ணு குறிப்பிடுகிற போஸ்டர் கண்முன் ஞாபகம் வரும்... ஏன்னா "சிரிப்பு" அவ்ளோ அழகான விஷயம்!! "மொழி" யின் போஸ்டர், ஹோர்டிங், விளம்பரங்கள், ஏன் டிவிடி கவர்களைக் கூட, கதாபாத்திரங்களின் இயற்கையான புன்னகைதான் அலங்கரித்திருந்தது..... திரையில் கதாபாத்திரங்கள் கபடின்றி சிரிக்கப் படத்தைப் பார்த்து சென்ற கூட்டமும் இன்முகத்துடன்தான் தியேட்டரை விட்டு வெளியேறியது....!  

"எனக்குப் படம் பார்த்த மாதிரியே இல்ல... ஏதோ ஒரு புத்தகத்தை ரசிச்சு வாசிச்சு முடிச்ச உணர்வு வந்திச்சு!!"  
என்று கூறினான் படத்தைப் பார்த்துவிட்டு ஃபோன் பண்ண என் நண்பன் ஒருவன்!! ரசிகர்கள் மட்டுமல்ல பத்திரிக்கைகளும், சேனல்களும்கூட கவனமாகத் தேர்ந்தெடுத்த‌ வார்த்தைகளைக் கொண்டே "மொழி"யை விமர்சித்தன.....!!!

நான் "மொழி"யில் வியந்த ஒரு விஷயம்...  

சினிமா என்பது கண்டிப்பாக ஒரு மாபெரும் கூட்டுமுயற்சி... இதன் கேப்டனான இயக்குனரின் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு மற்ற கலைஞர்களும், டெக்னீஷியன்களும் தங்கள் திறமையால் திரைப்படத்துக்கு நயமாக மெருகேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நம்பிக்கையின் அடிப்படையிலான விதி... இருப்பினும் நடைமுறையில் எந்தவொரு கூட்டுமுயற்சியிலும் இது சாத்தியமாக வேண்டுமெனில் இயக்குனரின் கற்பனையானது ஒவ்வொரு கலைஞனின் மனத்திரையில் ஓடும்போதும் அவர் மூளையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும் (இதை ஏதோவொரு டிவிடி யில் பார்த்தோமே... என்று ஞாபகப் படுத்தக்கூடாது!! ஹி..ஹி!!) ... அதனை உள்வாங்கிய நொடியில் இசையாய், ஒளியாய் அவரவர் மொழியில் பெயர்த்திட‌ துடித்தால்தான் உண்மையில் அந்த கூட்டுமுயற்சி வெற்றிபெறுவது நியாயம்.... "மொழி"யைப் பொறுத்தவரை அந்த நியதி முழுமையாய் ஒருங்கேறிக் கைகூடியதுதான் வியந்து பார்க்க வைக்கிறது.... 

"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதனுக்கு மொழியே தேவையில்லை..." 

ராதாமோகனும் தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜும் படத்தின் கதையை சொல்லி முடித்ததுமே கவிஞர் வைரமுத்து உதிர்த்த வரிகளாம் இவை..... ராதாமோகன் கற்பனை செய்த, மவுன மொழிபேசும் "அர்ச்சனா"வை அப்போதே அவர் அள்ளி அரவணைத்து தன் தோளில் போட்டுக்கொண்டார் என்றுதானே அர்த்தம்!! 

சாதாரணமாகக் காதல் வசனம் பேசும்போதே ஜோதிகாவின் கண்களும் முகமும் நாசியும் அவர் வாயோடு சேர்ந்து தானும் பேசிக்கொண்டிருக்கும்.... எனவே மவுனத்தாலே பேசவேண்டிய கதாபாத்திரத்துக்குள் உடலோடும் உயிரோடும் அவர் கலந்து போனதில் எவ்வித ஆச்சர்யமும் இல்லை.....ஆனால் யோசித்துப் பார்க்கையில் ஒரு "காக்க.. காக்க"வும் "சந்திரமுகி"யும் முத்தாய்ப்பாய் இந்த "மொழி"யும் வந்திருக்காவிடில் ஒரு சாதரண அழகிய‌ பப்லி கேர்ளாகவே (Bubbly Girl) சூர்யாவோடு அவர் செட்டிலாகிவிட‌ நேர்ந்திருக்கும் என்பதுதான் ஆச்சர்யம்!! 

"மியூசிக்" எப்படி இருக்கும்? என்று கேட்டு ஸ்பீக்கர்களில் கைவைத்து அதன் அதிர்வுகளால் "இசை"யை உணரும் ஊமைப் பெண்ணாக அவர் நடித்த அந்தக் காட்சிதான் ஏனோ மனதில் ஒருமுறை வந்துபோனது அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான விருது "முத்தழகி"க்குக் கிடைத்தற்காகக் கை தட்டிக் கொண்டிருந்தபோது!!

பக்கத்து ஸ்டேட்டின் ஆக்ஷன் ஹீரோ, இங்கு ஒரு சின்ன பாக்யராஜாகத் தன்னை செதுக்கிக்கொண்டு மந்தைவெளியில் மணிக்கு அறுபது கி.மீ வேகத்தில் ஓடி அந்த angry dog கிடம் கடி வாங்கும் நாயகன் பிருத்வி..... தான் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் நம்மை லயித்து சிரிக்க வைத்த பிரகாஷ்ராஜ்...... பிருத்விராஜுக்கு சைகை மொழி கற்றுக் கொடுக்கும்போது உண்மையிலேயே அதுபோன்ற ஒரு குழந்தைக்கு பேசக் கற்றுக்கொடுக்கும் ஒரு டீச்சர் போலவே கணிவான உடல்மொழி காட்டிய ஸ்வர்ணமால்யா..... பெரும்பாலும் ஓர் அறைக்குள்ளேயே காட்சிகள் நகர்வது போல திரைக்கதை அமையப் பெற்றிருந்தாலும், ஏதேதோ ஆங்கிள்களில் கேமராவை நகர்த்தி நகர்த்தியே அழகு செய்த குகன்.... வீடுகளையும், ஜோதிகாவின் அறையையும் அந்த அபார்ட்மெண்ட்டையும் ரம்மியமாய் அரங்கமைத்த கதிர்.... மௌனத்தை ஓர் இசையாகவும், இசையை ஒரு மொழியாகவும் ஆராதிக்கும் படத்துக்குத் தேர்ந்த மெட்டுக்களால் இசையமைத்த வித்யாசாகர்... என்று எல்லாருமே அற்புதமான இந்தக் கற்பனையை உள்வாங்கிக் கொண்டு ஒருங்கே மெருகேற்றிச் செதுக்கிக் கொடுத்த, நினைவில் நீங்கா செல்லுலாய்ட் கல்வெட்டு, டூயட் மூவீஸ் (கடன் வாங்கி) வழங்கிய இந்த அழகிய "மொழி"!! 

பாதசாரிகள் ரோட்டைக் கடக்க ரோடுகளில் வரையப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைக் கோடுகளை, ஆர்மோனியக் கட்டைகளாய், அதன் இசை கேட்க முடியாத‌ ஜோதிகா உணர்வதும்.... அதே வாத்தியப் பின்னணி இசைக்கு பிருத்வி, பிரகாஷ்,ஸ்வர்ணமால்யா அழகாய் நடனமாடுவதும்.... ஒரு மௌனக் கவிதையாய் "காற்றின் மொழி.." பாடலில் படமாக்கப் பட்டிருக்கும் அந்தக் காட்சி... மேலே சொன்னக் கூட்டு முயற்சிக்கு ஒரு சோறு பதம்!! :)  

நான் ரொம்ப ரொம்ப ரசித்துப் பார்த்த "மொழி"யைப் பற்றி என் வலைப்பூவில் ஒரு பதிவு எழுத வேண்டும் என்றொரு உணர்வு இருந்துவந்தது... இதோ எழுதிவிட்டேன்..... :) இன்னும் இதுபோல் ரசித்துப் பார்த்த ஒரு நீண்ட லிஸ்ட் இருக்கிறது சாத்தியம் இருந்தால் அந்தப் படங்களை சிலாகித்ததையும் பகிர்ந்து கொள்கிறேன்... 

அன்புடன்...

விஜய் டி.வி கோபிநாத்: ஒரு பார்வை


உங்களுக்குப் பிடித்தத் தமிழ்த் தொலைக்காட்சிப் பிரபலம் யார்? என்று கேட்டால் இப்போதெல்லாம் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் பெயர் விஜய் டி.வியின் கோபிநாத்! (ஆதாரம்: ஒரு பத்துபேர்கிட்ட கேட்டேன்!!) பல வீடுகளில் "நீயா? நானா?" நிகழ்ச்சியை விடாது பார்க்கிறார்கள்... நிகழ்ச்சியில் பேசுபவர்கள் அவரவரின் அலைவரிசையில் கருத்துகளை சொல்ல, விவாதத்தில் கிளம்பும் சூடு தணிந்து விடாமல், அப்படியே சுடுதண்ணியில் படகுவிட்டுக் கரைசேர்ந்திடும் லாவகத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளார் கோபிநாத் தன்னுடைய இந்த நீண்டகால அனுபவத்தில்...!

'ஹாய்'மதன், அனுஹாசன் வரிசையில் ஒரு வெயிட்டான விக்கெட்டாக இவரையும் விஜய் டி.வியும் நேரம் பார்த்துக் களமிறக்க ஆரம்பித்துவிட்டார்கள்... பர்சனலாக எனக்கு "நீயா? நானா?" நிகழ்ச்சியின் மீது எவ்வித ஈர்ப்பும் கிடையாது... இருப்பினும் சேனல் மாற்றும்போது கண்ணில் பட்டால், எரிச்சலைக் கிளப்புமாறு ஒருவர் பேசும் வரை பொறுமையிருந்தால் பார்ப்பேன்! (இம்சையக் கூட்ட எபிஸோடுக்கு ரெண்டுபேர் கண்டிப்பா இருப்பானுங்க‌!)

பத்துப் பதினைந்து வருடங்களாகத் தமிழ்த் (தனியார்த்) தொலைக்காட்சிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வந்திருந்தாலும், பெரும்பாலும் நம் சின்னத்திரை, பெரியத்திரை பெருசுகளின் 'பென்ஷன்' வாங்கும் களமாகத்தான் இருந்திருக்கிறது.... சன் டி.வியைத்தான் சொல்லவேண்டும்... அழகுப் பதுமைகளை வைத்து ஓட்டிவிடும் கமர்ஷியல் நிகழ்ச்சிகள் தவிர ஏதாவது டாக் ஷோ மாதிரி ஏதாவது என்றால் விசு, டி.ஆர் என்று கோடம்பாக்கத்திலிருந்து அழைத்து வந்து விடுவார்கள்... 'அறிவாளிகள்' என்கிற இமேஜோடு திரையுலகைவிட்டு ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொண்டு இங்கு சின்னத்திரையில் விசுவின் வழித்தோன்றல்களாக லட்சுமி,ரேவதி,ரோகிணி,குஷ்பு எனறு வரிசையாக ஆளுக்கொரு டாக் ஷோவை எடுத்துக்கொண்டு கடையைத் திறந்தார்கள்... எல்லாம் ஆரம்பப் பரபரப்புக்களோடு புஸ்வானமாகிப் போனது கண்கூடு!!

உண்மையில் தொலைக்காட்சி மீடியம் என்பது முற்றிலும் வேற ஏரியா... விஷுவல் கம்யூனிக்கேஷன், ஜர்னலிசம் என்று முறைப்படி எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் படித்து வெளிவருகிறார்கள் இருப்பினும் வாரத்துக்கு ஒரு சேனல் துவங்கும் தமிழ் தொ.கா உலகில் இன்னும் டயட் மீறிய ஹீரொயின்களின் அழுகாய்ச்சி சீரியல்களும் சினிமா கிளிப்பிங்குகளும் மட்டுமே ஆக்கிரமித்துக் கிடப்பது நம் தலையெழுத்து!!

ச‌ரி ந‌ம்ம‌ கோபியிட‌ம் வ‌ருவோம்... ஒரு "மீடியா ப‌ர்சன்" என்கிற ரீதியில் ம‌க்க‌ள் ம‌த்தியில் மேலோட்ட‌மாக‌ எதிர்பார்க்க‌ப்ப‌டும் ஒருவித‌ மிடுக்கு கோபிநாத்திட‌ம் நிச்சிய‌மாக‌ உள்ள‌து.... அதாவ‌து "மீடியா" என்கிற‌ தோர‌ணையில் எவ‌ரையும், எத‌னையும் 'கேஷுவ‌லாக‌' அணுகும் பாங்கு என்று எளிதாக‌ச் சொல்ல‌லாம்.... (க‌ட்சிக்கார‌ர்க‌ள் எல்லாம் ஆளுக்கொரு சேன‌ல் ஆர‌ம்பித்து வைத்திருக்கும் நிலையில் (ஸ்டார்) விஜ‌ய் டி.வியில் வேலை கிடைத்த‌து இவரிடம் இந்த‌ 'மிடுக்கு' மிச்ச‌ம் இருப்ப‌த‌ற்கு ஒரு முக்கிய‌க் கார‌ண‌ம் என்பதை இங்கு சொல்லித்தான் ஆக‌வேண்டும்!!)

அர‌சிய‌ல் நிக‌ழ்ச்சிக‌ளில் ஆர‌ம்பித்து த‌ற்போது இவ‌ர் நிர‌ந்த‌ர‌மாக‌ கோலொச்சிவ‌ரும் " நீயா? நானா?" வ‌ரை கோபிநாத்தின் வ‌ள‌ர்ச்சி நிதான‌மான‌து.... நிறுத்தி நிதான‌மாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ந்து இப்போது வலுவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் திரு.கோபிநாத், தொகுத்து வ‌ழ‌ங்குத‌லிலும் வ‌ர்ண‌னையிலும் விடாது த‌ன் ஆளுமையால் க‌வ‌ர்ந்தாலும்... ஹோம் ஒர்க்கில் ரொம்ப‌வே கோட்டை விடுகிறாரோ என்று தோன்றுகிறது....

இவரது நிகழ்ச்சிகளில் எடுத்தாளப்படும் த‌லைப்புகளை ஒட்டி எந்த‌ள‌வு இவ‌ர் த‌ன்னைத் த‌யார்ப‌டுத்திக்கொள்கிறார் என்ப‌து நிச்சிய‌ம் கேள்விக்குறிதான்.... உதார‌ண‌மாக‌ கிராம‌த்துத் திருவிழாக்க‌ளைப் ப‌ற்றி விவாத‌ம் செய்யும் எபிஸோடில் ச‌ர்ச்சைக்குரிய‌ ந‌ள்ளிர‌வு ந‌ட‌ன‌ங்க‌ளைப் ப‌ற்றி ஒருவ‌ர் சொல்ல‌ "அப்ப‌டியா? என்று நிமிர்ந்து, எங்கே? எந்த‌ப் ப‌குதியில்? .." என்கிற‌ ரீதியில் புதிதாக கேட்கிறார்.... இந்த‌ மேட்ட‌ர் எல்லாம் ஜு.வி, ரிப்போர்ட்ட‌ர், ந‌க்கீர‌னில் எல்லாம் வ‌ந்து வ‌ந்து புளித்துப்போய் ந‌டைமுறையாகிவிட்ட‌ ஒன்றாச்சே....! இதுபோன்று ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் க‌வ‌னிக்க‌ முடிகிற‌து அவ‌ரிட‌ம், த‌லைப்பு சார்ந்த‌ போதுமான‌ ஆய்வு இல்லாத‌தை.... அதேபோல் பேட்டியெடுக்கும்ப் போதும் சினிமா, அர‌சிய‌ல் என்றால் ஓரளவு ஓகே(அதுவும் தற்காலிக நிகழ்வுகளில்தான் ஸ்ட்ராங்காக இருக்கிறார்) அதுத‌விர‌ ம‌ற்ற‌ துறை சார்ந்த‌வ‌ர்க‌ளைப் பேட்டியெடுக்கும்போது அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி இன்னும் அதிக‌ ஆய்வுக‌ள் மேற்கொண்டு க‌ல‌க்க‌ வேண்டும் இவ‌ர்....சில‌கால‌ம் முன்பு இவ‌ர் எழுத்தாள‌ர் ஜெய‌காந்த‌னைப் பேட்டிக‌ண்ட‌ போது வெட்ட‌ வெளிச்ச‌மாக‌த் தெரிந்த‌து இல‌க்கிய‌ம் ம‌ற்றும் ஜெய‌காந்த‌னின் எழுத்துக்க‌ளோடுமான‌ இவ‌ர‌து ப‌ரிச்சிய‌மின்மை.....

ந‌ம்பிக்கை த‌ரும் ஒரு mighty wicket ஆக‌ உருவெடுத்து வ‌ருவ‌த‌ற்கான‌ ஸ்கோப் இருக்கிற‌து கோபிநாத்துக்கு அதை அவர் இன்னும் சிற‌ப்பாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌லாமே.....!!

கோபிநாத் போன்றோருக்கு அவ‌ர்க‌ளின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்....

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!! ;-)

The Shawshank Redemption (1994)


The Shawshank Redemption

படம் வெளிவந்த ஆண்டு: 1994
இயக்கம்: Frank Darabont
க‌தை: Stephen King
ந‌டிப்பு: Tim Robbins, Morgan Freeman

இதோ இந்த நொடி, பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கிறது.... இன்றும் இரவும் பகலும் ஏற்பட்டதால் இதை நான் நம்புகிறேன்.... ஜன்னலுக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத பெரிய மரம் ஒன்று இன்றும் ஓர் அங்குலமாவது வளர்ந்திருக்கும்... பாத்ரூமில் வாழும் சிலந்தி இன்றும் தன் எச்சிலால் தனது கூட்டின் கட்டுமானத்தில் மேலும் ஒரு வரிசைப் பின்னியிருக்கும்.... சுற்றுவது தன் தொழில் என்று பூமிக்கும், வளர்வது தன் தொழில் என்று மரத்துக்கும், உறைவிடம் அமைப்பது தன் தொழில் என்று சிலந்திக்கும் தெளிவாகத் தெரியும்... சுற்றி என்ன நடந்தாலும்... எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் தன் தொழிலை அவை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.... தங்கள் இலக்குகளை மறந்திடப் போவதில்லை....!! சுற்றிய பாதையையே மீண்டும் மீண்டும் பைத்தியக்காரத்தனமாகச் சுற்றிவரும் பூமிப் பந்தின் உருளைப் பயணத்துக்கு என்ன இலக்கு இருக்கப் போகிறது....?? நிச்சியம் ஒரு பிரம்மாண்ட இலக்கு இருக்கக்கூடும்.... அது சுற்றுகின்ற பூமிக்குத்தான் தெரியும்..... இலக்கு ஒன்று இன்றி எந்தவொரு பயணமோ அல்லது அசைவோ கூட சாத்தியமல்ல....!! இலக்கை அடைந்து வெற்றிகொண்டபின் செயல்களுக்குக் காரணங்கள் கிடைக்கலாம் பார்வையாளனுக்கு!!

"இலக்கு" எனும் முக்கியத்துவம் வாய்ந்த‌ வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை அறுதியிடும் இந்தப் படம் ஒரு வெற்றிப்படம் அல்ல.... தியேட்டரில் அரங்கு நிறைந்து ஓடாத இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று ஆர்ப்பரித்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் படம் பார்த்த அனைவருக்குமே அந்த உச்சக்காட்சியில் உடலில் இருக்கும் ஒவ்வொரு மயிரும் எழுந்துநின்று புல்லரித்துதான் அடங்கியிருக்கும்!!

ஷாஷாங்க் சிறைச்சாலையில் சுமார் இருபத்தியிரண்டு ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஸ்மக்ளர், "ரெட்" என்று படத்தில் அழைக்கப்படும் மார்கன் ஃப்ரீமேனுக்கு "பரோலில்" வெளிவர அனுமதி தொடர்ந்து மறுக்கப் படுகிறது.... அதே வேளையில் (கள்ளக்)காத‌ல‌னுட‌ன் உல்லாச‌மாக‌ இருக்கும் ம‌னைவியையும் அவள் காதலனையும் போதையில் சுட்டுக்கொன்ற‌தாக‌ கௌர‌வ‌மான‌ "பேங்க‌ர்" (Banker) டிம் ராபின்ஸ் அதே சிறைச்சாலையில் இர‌ண்டு ஆயுள்த‌ண்ட‌னைக‌ளைத் தொட‌ர்ச்சியாக‌ அனுப‌விக்க‌ ச‌ட்ட‌த்தால் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டு குற்ற‌வாளிக‌ளுட‌ன் ஷாஷாங்க் சிறைச்சாலைக்குள் அடியெடுத்து வைக்கிறார்.....

இந்த‌ ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளிலேயே....ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்த‌ல‌ங்களான "சிறைச்சாலைகள்" எல்லாம் யாரோ குற்ற‌வாளிக‌ளுக்கு ம‌ட்டும்தான், என்று "ந‌ல்ல‌வ‌ர்"க‌ளாக‌ ஒதுங்கிக்கொள்ளும் நமக்கு, நம்மைப் போலவே ஒரு சாதாரணமான, கவுரவமான மனிதன்(டிம் ராபின்ஸ்) உணர்ச்சிவேகத்தில் செய்துவிட்ட குற்றத்துக்காக‌ அந்த‌ சாத்தான்க‌ளின் தேச‌த்துக்குள் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ குடிம‌க‌னாய் ஒரு கைதி வேடம் தரிக்கும்போது, அந்தக் காட்சிக‌ளின் ரிய‌லிசம்.... சிறை ம‌ற்றும் வாழ்வின் அடிப்ப‌டை ச‌ட்ட‌ங்க‌ளை எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் ஒருமுறை நினைத்துப் பார்க்க‌ வைக்கிறது நம்மையும் ஒரு குற்றவாளியாய், அந்த வலியுடன்..!

மனிதக் கனவுகள் எல்லாம் நீர்த்துப்போகும் ஜெயில் ஒன்றில் சுமார் முப்ப‌தாண்டுகால‌ த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் தன் வாழ்வின் எதிர்காலத்தைக் க‌ன‌வு காண்கிறான்...!!! அதுவும்... மெக்ஸிகோவின் எழில்வாய்ந்த‌ ப‌சிஃபிக் பெருங்க‌ட‌லோர‌ம் சென்று செழிப்பாய் இயற்கையோடு இணைந்து ம‌னித‌ர்க‌ள் அண்டாத ஓர் அழ‌கு வாழ்வு வாழ்வ‌து, என்று ஒரு கலர் கனவு....!!

"இல‌க்கு" மற்றும் "க‌ன‌வு" .... அடிக்க‌டி ஒன்றாக‌ ந‌ம்ப‌ப்ப‌டும் இந்த‌ இருவேறு வார்த்தைக‌ளின் அர்த்தரீதியிலான வித்தியாச‌ங்க‌ளை நான் விரும்பிப் படித்த‌ ஒரு ம‌ன‌வ‌ள‌ நூலில் பின்வருமாறு ப‌டித்திருக்கிறேன்.....


"இல‌க்கு" என்பது...... ச‌ரியான‌ திட்ட‌மிடுதல், அறிவாற்றல், மற்றும் உழைப்பின் ப‌ல‌னாய் ஒருவ‌ன் நியாய‌மாய்த் தன் வாழ்நாளில் அடைய‌க்கூடியதாய்க் கிரகிக்கும் தூர‌ம்..

"க‌ன‌வு"... தொடுவான‌ங்க‌ளையும் தாண்ட‌க்கூடிய‌... லாஜிக் தேவைப்ப‌டாத‌... காரிய‌மாற்றிக் காட்ட‌ வேண்டாத‌ சௌக‌ரிய‌ம்...!!! கனவுலகிலேயே வெற்றிகளையும் களிப்புகளையும் ஏன் சாதனைகளைக் கூட‌ அனுபவிப்பதும் சாத்தியம்!!

இங்கு இந்த சிறைக்கைதி தன் "கடலோற‌ ச‌ந்தோஷ வாழ்வு" என்னும் க‌னவையே ஓர் இல‌க்காக, அதாவ‌து நியாய‌மாக‌த் த‌ன் திட்ட‌மிட‌லாலும், அறிவாலும், கடின‌ உழைப்பாலும் அடைந்துவிட‌க் கூடிய‌ ல‌ட்சிய‌மாக‌க் கொண்டு யாரும் க‌ன‌விலும் நினைத்துப்பார்க்க‌த் துணியாத‌தை... விடாம‌ல் முய‌ன்று நிஜ‌த்தில் சாதித்துக்காட்டும் அதிசிய‌ம்தான் ப‌ட‌ம்!!!

சிறைவாழ்வின் ஆர‌ம்ப‌ இன்ன‌ல்க‌ள்.... ஜெயில் சிநேக‌ம்.... ஜெயிலுக்குள் இருந்துகொண்டே வெளிஉல‌கத் தொட‌ர்பால் உள்ளே "வியாபார‌ம்" ந‌ட‌த்தும் சுவார‌ஸ்ய‌ம்..... ஜெயில‌ர், வார்டன்க‌ளின் காட்டுவாசி ம‌னோபாவ‌ம்..... என்று உருளும் ப‌ட‌த்தில்....

சிறைக்குள்ளேயே, கைதிகள் கேட்கும் "அதிசியப் பொருள்"களை சிறைச்சுவர்களையும் தாண்டிய தன் செல்வாக்கின் (!) மூலம் வாங்கிக் கொடுத்து அமோக‌மாக‌ வியாபார‌ம் ந‌ட‌த்திவ‌ரும் மார்க‌ன்ஃபரீமேனிட‌ம் "Rock Hammer" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஊசிபோன்ற கூரான‌ ஒரு சின்ன‌ உளி வேண்டுமென‌ உள்ளே வந்து சில நாட்களிலேயே கேட்டுவாங்குவார் டிம் ராபின்ஸ்..... க‌ற்க‌ளில் சின்ன‌ச் சின்ன‌ உருவ‌ங்க‌ள் செதுக்குவது தன் ஹாபி என்று சொல்லி....!! அடுத்த சில காட்சிகளில் சிறு சிறு கல்பொம்மைகள் அவ‌ர் செல்லின் ஜ‌ன்ன‌ல் க‌ம்பியிடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கும்!!!!

ஒருக‌ட்ட‌த்தில், த‌ன் வ‌ருடாந்திர‌ வ‌ருமான‌ வ‌ரியைத் தாக்க‌ல் செய்ய‌க் குழ‌ம்பும் ஜெயில‌ருக்குத் த‌ன் அபார‌மான‌ Banking திற‌மையால் அந்த‌ வ‌ருட‌த்துக்கு "Tax Free" ப‌ண்ணித்த‌ருகிறார் டிம் ராபின்ஸ்.... அந்த‌ப் புக‌ழ் ஜெயிலெங்கும் ப‌ர‌வ‌.... ஜெயிலின் நூல‌க‌த்தில் லைப்ர‌ரிய‌ன் வேலை த‌ர‌ப்ப‌ட்டு அங்கேயிருந்த‌வாறு போலீஸ்கார‌ர்க‌ளுக்கு வ‌ருமான‌ வ‌ரி ஆலோச‌கராக‌க் கிள‌ப்புகிறார் டிம்.... தனி அறையும், ஜெயிலில் தன் அறைச்சுவரில் மார்லின் ம‌ன்றோ புகைப்ப‌ட‌ம் ஒட்டிக்கொள்ளும் ச‌லுகையும் இல‌வ‌ச‌ இணைப்பாகக் கிடைக்கிற‌து!!

கொம்பு முளைத்த‌ சாத்தானாய் ஜெயிலின் வார்ட‌ன்.... கைதிக‌ளின் உழைப்பைத் த‌ன் சொந்த‌ லாப‌த்துக்கான‌ ஒரு க‌ட்டுமான‌ வேலைக்குப் ப‌ய‌ன்ப‌டுத்தி அந்த‌ப் ப‌ண‌த்தை "வெள்ளைப் ப‌ண‌மாக‌" வெளியே சேர்க்க (Money Laundering) அடிமை டிம் ராபின்ஸின் மாஸ்டர் ப்ளானை உப‌யோகிக்க முன்வ‌ருகிறான்.... டிம் ராபின்ஸின் திட்ட‌ப்ப‌டி Randall Stephens எனும் இல்லாத ஒரு ம‌னிதன் பேரில் வெளுப்பான‌ ப‌ண‌ம் சேமிக்க‌ப் ப‌டுகிற‌து.....

டிம் ராபின்ஸின் தொட‌ர் முய‌ற்சியால் ஒரு க‌ட்ட‌த்தில் நாட்டின் சிறந்த‌ ஜெயில் நூல‌க‌மாக‌ டிம் ராபின்ஸால் ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ நூல‌க‌ம் தேர்வாகிற‌து!!

கிட்ட‌த்த‌ட்ட‌ இருப‌து வ‌ருட‌ங்க‌ள் ஓடிப்போகிற‌து.....இப்போது டிம்மின் அறையில் ம‌ர்லினுக்குப் ப‌தில் அப்போதைய லேட்டஸ்ட் கவர்ச்சிக்கன்னி ரேச்சுல் வெல்க் கின் க‌வ‌ர்ச்சிப்ப‌ட‌ம் ஒட்டப்ப‌ட்டுள்ள‌து!!! அடிக்க‌டி ந‌ண்ப‌ன் மார்க‌ன் ஃப்ரீமேனிட‌ம் த‌ன்னுடைய‌ ப‌சிபிக் க‌ட‌லோர‌க் க‌ன‌வு வாழ்க்கையை ர‌சித்துக் கதைக்கிறார் டிம் ராபின்ஸ்..... Money Laundering வெற்றிக‌ர‌மாய்த் தொடர்ந்துகொண்டிருக்கத்.... திடீர் திருப்ப‌மாக‌... இன்னொரு கைதி ஒருவன் மூல‌ம் உண்மையில் த‌ன் ம‌னைவியை சுட்டுக்கொன்ற‌து டிம் இல்லை என்று போதையில் தான் கொன்ற‌தாக‌ ந‌ம்பும் டிம்முக்கு ஆதார‌ப் பூர்வ‌மாக‌த் தெரியவருகிறது...!!

வார்ட‌னிட‌ம் கெஞ்சுகிறார் தன் விடுத‌லைக்காக‌.... ஆனால் த‌வ‌றான வழியில், இர‌ட்டை ஆயுள் கைதி டிம்மின் உட‌ந்தையுட‌ன் பெரும்ப‌ண‌ம் பார்த்திருக்கும் வார்டனோ அவ்வ‌ள‌வு சுல‌ப‌மாக‌ மாட்டிக்கொள்ள‌ விரும்பாம‌ல் டிம்மை ஓர் இருட்ட‌றையில் அடைத்து மேலும் த‌ன‌க்கு ப‌ண‌ம் ஈட்ட‌ உத‌வுமாறு துன்புருத்துகிறான்... அதும‌ட்டுமின்றி.. டிம்முக்கு ஆத‌ர‌வாக‌ சாட்சி சொல்ல‌ முன்வ‌ந்த‌ அந்த‌ இள‌ம்கைதியை வார்ட‌ன் மற்றும் ஜெயில‌ர் இணைந்து கொன்றும் விடுகிறார்க‌ள்....

முடிந்துபோன‌ அத்தியாய‌மாய் மீண்டும் வார்டனுக்கு ஆதரவாய்த் த‌ன் க‌ருப்புப் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்ட‌ச் ச‌ம்ம‌திக்கும் டிம் ராபின்ஸ் திடீரென்று ஒருநாள் காலையில் அந்த‌ச் சிறையில் இருந்து காணாம‌ல் போகிறார்!!!

அவ‌ரின் அறையில் இர‌வு அடைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் எப்ப‌டி மாய‌மாக‌ ம‌றைந்திருக்க‌க் கூடும்??? என்று பூட்டப்பட்ட அந்த செல்லுக்குள் நின்று வார்ட‌ன் குழம்பி...டிம்மின் அறையில் க‌வ‌ர்ச்சியாய் போஸ் கொடுக்கும் ரேச்சுல் வெஸ்க்கின் ப‌ட‌த்தில் ஒரு க‌ல்லை ஓங்கி எறிய, அந்தக் காகித‌ப் பட‌த்தின் பின்னே சுவ‌ர் இன்றி படத்தில் ஓட்டை விழுகிற‌து.... ப‌ட‌த்தை விலக்கிப்பார்த்தால் சுமார் முப்ப‌து மீட்டர் தூர‌த்துக்கு சுவ‌ர் குடைய‌ப் ப‌ட்டிருக்கிற‌து!!! க‌ற்க‌ளில் சிற்ப‌ம் செதுக்க‌ப் ப‌ய‌ன்ப‌டும் "உளி" கொண்டு குடைந்த‌ சுர‌ங்கப்பாதை அது!!

ஒரு குண்டூசியைவிடக் கொஞ்சமே வ‌லிமையான‌ கூர் ஆயுத‌ம் அந்த‌க் க‌ல்லுளி.. அதைவைத்து இத்த‌னை நீள‌மான‌ ஒரு சுர‌ங்க‌த்தை உருவாக்க‌க் குறைந்தது முந்நூறு ஆண்டுக‌ள் ஆகும் என்று கூறுவார் ப‌ட‌த்தின் "Story Narrotor"!!! ஆனால் டிம் ராபின்ஸ், வந்த நாள்தொட்டு, இர‌வெல்லாம் தூங்காம‌ல்..... சுமார் இருப‌து ஆண்டுகாலம் விடாம‌ல் தோண்டி அந்த சுர‌ங்க‌ப்பாதை அமைத்திருப்பார்......

அந்த‌ சுர‌ங்க‌த்தில் ஊர்ந்து ஊர்ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு கிரிக்கெட் பிட்ச்சின் தூர‌த்திலான..... கைதிக‌ளின் ம‌ல‌ம் ம‌ற்றும் சிறுநீர் வெளியேறும் செப்டிக் டேங்க்கில் மூச்சு விட‌முடியாத‌ கொடூர‌ துர்நாற்ற‌த்தினிடையே த‌வ‌ழ்ந்து த‌வ‌ழ்ந்து வெளிஉல‌கை அடைவார் டிம்!!!

ஒரு ம‌ழையில் த‌ன்னைக் க‌ழுவிக்கொண்டு ஜெயில் வார்ட‌னின் ஊழ‌லுக்கு ஏதுவாய்த் தான் உருவாக்கி வைத்திருக்கும் நிழ‌ல் ம‌னித‌ன் Randall Stephensஆக‌ அவ‌தார‌ம் த‌ரித்து அவ‌ன்பேரில் போட‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ல‌ மில்லிய‌ன் டால‌ர்க‌ளைத் த‌ன‌தாக்கிக் கொண்டு மெக்ஸிகோ நாட்டின் ப‌சிஃபிக் கோஸ்ட்டை நோக்கிக் காரில் சென்றுகொண்டிருப்பார் டிம் ராபின்ஸ்........

ஊழல் வெளியாகிவிட அவமானத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னையே இரையாக்கிக் கொள்கிறான் வார்டன்!!!

சிறு உளியின் கூர்முனையால் சுவ‌ற்றைச் சுர‌ண்டி மெல்ல‌ மெல்லத் தான் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளையே சாத்திய‌மாக்கிவிட்ட‌ ஜெயில் ந‌ண்ப‌ன் டிம் ராபின்ஸிட‌மிருந்து ஒரு ம‌ட‌ல் வ‌ருகிற‌து மார்க‌ன் ஃப்ரீமேனுக்கு!!! த‌ன் க‌ன‌வுப் பிர‌தேச‌த்தை ந‌ண்ப‌ன் அடைந்துவிட்டான் என்று அறிந்துகொள்ளும் ஃப்ரீமேனுக்கு நாற்ப‌து ஆண்டுகால‌ம் சிறைக்குப் பிற‌கு தொட‌ர்ந்து ம‌றுக்க‌ப்ப‌டும் "ப‌ரோல்" கிடைக்க‌ மெக்ஸிகோவுக்குப் ப‌ய‌ண‌மாகிறார் ஜெயில் சிநேக‌ம் தேடி.....

ப‌சிஃபிக் க‌ட‌ற்க‌ரையில் இரு ந‌ண்ப‌ர்க‌ளும் க‌ட்டித் த‌ழுவிக்கொள்ள‌ ம‌யிர்க்கூச்சரிய‌ முடிகிற‌து The Shawshank Redemption!!!

இன்று ப்ளாக்ஸ்பாட்டில் எழுத்துப் ப‌யிலும் என்போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌தில் இன்னும் ப‌த்து அல்ல‌து இருப‌து முப்ப‌து ஆண்டுகளுக்கு மனதுக்குள் "மெகா கனவுகள்" வைத்திருக்கலாம்.... "கனவை" அதன் வாய்ப்புகளுடனும் சாத்தியங்களுடனும் தெளிவு ப‌டுத்திக்கொண்டால் இல‌க்கும் க‌ன‌வும் ச‌ங்க‌மிக்கும் வாழ்விய‌ல் அதிசிய‌ம் சாத்தியமாகும் என்று சாட்சி ப‌க‌ரும் பட‌ம் இது!!

ஏற்கெனவே எழுதியிருப்பது போல் வெறும் மேல்தோலின் மயிர்க்கால்களுடன் சாகசம் புரியும் வெகுஜனப் படங்களைவிட, இதைப்போல் அம் மயிர்க்கால்களினூடே உள்ளிறங்கி செல்களில் செய்தி பதித்திடும் படங்கள்தான் என்னை மேலும் மேலும் கவர்கிறது.... அந்த வகையில் மறக்க முடியாத திரைப்படம் எனக்கு!!



இது "க‌ந்த‌சாமி" திரைவிம‌ர்ச‌ன‌ம் அல்ல‌!


இது "க‌ந்த‌சாமி" திரைவிம‌ர்ச‌ன‌ம் அல்ல‌!!

"கந்தசாமி" ... நொந்தசாமி... கந்தல் சாமி.... எனப் பதிவுலகம் துவங்கிப் பத்திரிக்கை உலகம் வரை டார் டாராகக் கிழிக்கப்பட்டுவரும் இந்தப் படத்தை வந்த அன்றே பார்த்தாகிவிட்டது!

இந்தமாதத்திலிருந்து கொஞ்சம் ஜரூராக எழுதிவருவதால்... "கந்தசாமி: விமர்சனம்" என்று ஓர் இடுகை இன்று இரவு எழுதுவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் என்ற‌ உற்சாகத்தோடு நண்பர்களுடன் கிளம்பிப்போனேன்.... படம்பார்த்து வந்தவுடன் கணிணியைத் திறந்து ஒரு விமர்சனத்தையும் தடதடவென கொட்டித் தீர்த்துவிட்டேன்..... மூன்று மணிநேரத்துக்கும் மேலாகப், படத்தின் வில்லன்களை விட அதிகமாக அடிவாங்கிய கோபத்தில், பதிலடிகளை வெடித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்..... அப்போது ஏதோவொன்று மனதுக்குள் தோன்ற அந்த இடுகையைப் பதியாமலேயே விட்டுவிட்டேன்....

வேறென்ன..... "இன்னா செய்தாரை ஒறுத்தல்..." திருக்குறள்தான் மனதுக்குள் தோன்றியது!!!...... "நன்னயம் செய்து விடல்" என்று பாஸிடிவ்வாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கலாமே (விகடனைப் போல!) என்று கூடத் தோன்றியது ஆனால் ஒரு பாவமும் அறியாத என் நண்பர்களுக்கு இன்னா செய்தலையும் நான் விரும்பவில்லை...... அவர்களாகவே ஆசைப்பட்டு ஆளுக்கொரு தியேட்டரில் அகப்பட்டு யான்பெற்ற "இன்பத்தை"த் தானும் பெற்று ஐ.எஸ்.டி கால்போட்டு எனக்கு அர்ச்சனைகள் செய்தபின்தான் இதையும் எழுதுகிறேன்.....!! எப்படியோ எந்தப் பாவத்திலும் எனக்குப் பங்கில்லை!!!

இனிமேல் "விமர்சனம்" எழுதப்போவதில்லை என்று நினைத்திருக்கிறேன்.... எதற்கு விமர்சனம்....?? சினிமா பார்க்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம்.... எனது "காரணங்களை"த் தெளிவுபடுத்திக் கொள்ள உதவியமைக்குக் "கந்தசாமி"க்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்!! இத்தனைக்கும் நான் எந்த மரத்திலும் எதுவும் எழுதிவைக்கவில்லை.... தானாக வந்து வேண்டிய வினைதீர்த்தார் கந்தஸ்வாமி!!

நிச்சிய‌ம் ப‌ட‌ங்க‌ளில் ந‌ல்ல‌ப‌ட‌ம் கெட்ட‌பட‌ம் என்று எதுவும் இல்லை.... என‌க்குச் சின்ன‌ வ‌ய‌து க‌ன‌வு ஒரு திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ராவ‌து என்ப‌து!! அந்த ஆர்வத்தில் "திரைக்க‌தை" என்னும் ம‌ந்திர‌த்தைத், திரையுலக வாசம் கொஞ்சமுமின்றிப் புத்த‌க‌ங்க‌ளாலும், சினிமாக்க‌ளாலும் ப‌யில‌த் தொட‌ர்ந்து முய‌ற்சித்து வ‌ருகிறேன்.. அட‌ ரெண்டு ஸ்க்ரிப்ட் கூட‌ வைத்திருக்கிறேன்!!

1) INT Day / xxxxxx

Fade in

xxxx xxxxx xxxxx

என்றெல்லாம் பக்கா Proffessional ஆக "முவீ மேஜிக்" சாஃப்ட்வேர் வைத்தெல்லம் நாங்க‌ திரைக்கதை எழுதியிருக்கோம்ல‌!!!

இப்ப‌டியெல்லாம் ப‌ம்ப் அடித்தாலும்.... பீட்டர் விட்டாலும்.... திரையுல‌க‌த்துக்கு வெளியே இருந்துகொண்டு திரைப்ப‌ட‌ம் ப‌யிலமுயற்சிப்பது, அஞ்ச‌ல்வ‌ழியில் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ம‌மான‌ காமெடிதான்... தெரிந்திருந்தும் ஏனோ நான் இன்றுவரையிலும் கோட‌ம்பாக்க‌த்துக்கு ஒரு கேஷுவ‌ல் விசிட் கூட‌ அடித்த‌தில்லை.... ஆனாலும் இன்றுவரை யார்கேட்டாலும் த‌வ‌றாம‌ல் சொல்லும் ப‌ஞ்ச் ட‌ய‌லாக்....

"நாங்க‌ளும் வ‌ருவோம்ல...!!" என்ப‌துதான்!!
ஹி ஹி ஹி.... கிடக்கட்டும்... அது த‌னிக‌தை.....

ஸோ ப‌ர்ச‌ன‌லாக‌ நான் "க‌ந்த‌சாமி" பார்த்த‌தால் குறையொன்றுமில்லை!! அதைத் திட்டி விம‌ர்ச‌ன‌ம் எழுதும் நேர‌த்தில் வேறு ஒரு ந‌ல்ல‌ப‌ட‌ம் பார்க்க‌லாம்.... அல்ல‌து ஒரு சிறுக‌தை எழுதுவது எனக்கு நலம்... என்று தோன்றிய‌து..... ஒருவேளை என் க‌ன‌வு நினைவாகித் திரைஉல‌க‌த்தின் "டைர‌க்ட‌ர்" சேரில் அமர நேர்ந்தால்.... மூன்றும‌ணி நேர‌ம் இந்த‌த் தியேட்ட‌ர் இருக்கையில் நெழிந்த‌ த‌ருண‌ங்க‌ளை நினைவில் வைத்து சில‌ த‌வ‌றுக‌ளைக் கூட‌க் க‌ளைய‌லாம் பாருங்க‌ள்!! (எப்ப‌டியெல்லாம் யோசிக்க‌ வைக்கிறாய்ங்க‌!!)

மொத்த‌மாக‌ப் ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் தாக்க‌ங்க‌ள் ஆக்கிர‌மித்தாலும் "கந்தசாமி"யில் சில‌ ப‌ளிச் விஷயங்களும் இருந்தன என்பதையும் குறிப்பிடுவ‌துதான் நேர்மை...

Well..... சினிமா ஆசையைப் ப‌திவுல‌கில் ப‌கிர்ந்துகொள்ள‌ விழைந்தேன்.... அதற்கொரு வாய்ப்பாக‌ அமைந்துவிட்ட‌ க‌ந்த‌.. க‌ந்த‌... க‌ந்த‌...கந்த... க‌ந்த‌சாமீக்கு மீண்டும் ந‌ன்றி!! குறையொன்றுமில்லை க‌ந்தா!!!


ஒரே ஒரு சச்சின்..எத்தனை வினோத் காம்ப்ளிகள்?? -- 2



சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி....

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஒரு வலிமை வாய்ந்த அணியாகத்தான் களம்கண்டது இந்தியா. கென்யாவுடனான முதல்போட்டியில் 127 ரன்கள் குவித்துக் கலக்கினார் சச்சின்.. கடுமையான பயிற்சி, இலக்குகளின் மீதான சிதறாத கவனம் என சச்சின் அந்தக் காலகட்டத்தில் தனது விஸ்வரூபத்தைத் துவக்கிவிட்டிருந்தார்.... காம்ப்ளியோ ஒரு காதில் கடுக்கன், ஒட்ட வெட்டிய தலைமுடி,ஃப்ரெஞ்ச் தாடி, அவரின் டிரேட் மார்க்காகிப் போயிருந்த தங்க நகைகள் என வித்தியாசமான உருவம் தரித்துப் போயிருந்தார்....

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழ்நிலையில் ஆட்டம் மெல்ல வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக நகரும் சூழ்நிலை... சித்து, அசார், சச்சின் அடுத்தடுத்து அவுட்டாகிவிட மனோஜ் பிரபாகர் ஒரு முனையில் மறுமுனையில் காம்ப்ளி.... க்வாலியரில் நடந்த மேட்சில் பிரபாகரைக் கூட நம்பும் மக்கள் காம்ப்ளியை நம்பவில்லை அந்தளவு விளையாட்டில் கவனமின்றி அதிருப்தி சம்பாதித்து வைத்திருந்தார்... ஒரு கட்டத்தில் பிரபாகரும் அவுட்டாகிவிட... மோங்கியாவும், காம்ப்ளியும் நிற்கிறார்கள் கர்ட்லி அம்புரோஸ் பந்துவீச வர ரசிகர்கள் நகம் கடித்துக் கொண்டிருந்தனர்.... காம்ப்ளியை நோக்கி அம்புரோஸ் வீசிய பவுண்சரை லெக் திசையில் ஹூக் செய்து சிக்ஸராக்கினார் காம்ப்ளி.... புத்துணர்வுடன் ஆடி (33ரன்கள்*) வெற்றியும் தேடித்தந்தார்!! காம்ப்ளியின் கம் பேக் (come back) என மகிழ்ந்தது இந்தியா!!

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டி ச‌ச்சின், காம்ப்ளியின் சொந்த‌ ம‌ண்ணாம் வான்க‌டே மைதான‌த்தில்... இந்தியா தோல்விய‌டைந்த‌ இந்த‌ப் போட்டியில் ச‌ச்சின் க‌டுமையாக‌ப் போராடி 90ர‌ன்க‌ள் குவித்தார் காம்ப்ளியோ ட‌க்-அவுட் ஆகிவிட்டு அல‌ட்சிய‌மாக‌ப் பெவிலிய‌ன் திரும்பினார்.... க‌டும் அவுட் ஆஃப் ஃபார்மினால் அதிக‌ப்ப‌டியான‌ விம‌ர்ச‌ன‌த்துக்குத் தின‌ம் ஆளாகிவ‌ந்த‌ காம்ப்ளி தான் ஒரு சாதார‌ண‌மான‌ குடும்ப‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர் என்ப‌தையெல்லாம் ம‌ற‌ந்துவிட்டு ஏதோ ஒரு ஹாபி போல‌க் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த‌து தேர்வுக் குழுவின‌ரைக் கூட‌ எரிச்ச‌லுக்குள்ளாக்கிய‌து... ஜிம்பாப்வேக்கு எதிரான‌ ஆட்ட‌த்தில் அதிர்ச்சியாக சச்சின் 3 ரன்களுக்கு போல்டாகிவிடத் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை 106ரன்கள் அடித்து மீட்டார் ஆட்ட நாயகன் காம்ப்ளி....

அதன்பின் காலிறுதியில் அதிரடியாகப் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி சென்ற இந்திய அணி தன் வ‌ர‌லாற்றின் க‌ருப்புதின‌மாக‌, இல‌ங்கைக் கெதிராக‌ ஈட‌ன் கார்ட‌ன் மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌ ஆட்ட‌த்தைப் ப‌திவுசெய்த‌து.... இந்தியா வெறும் 120 ர‌ன்க‌ளுக்கு 8 விக்கெட்டுக‌ள் இழ‌ந்த‌ நிலையில் க‌டுப்ப‌டைந்த‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌க‌ளையில் ஈடுப‌ட‌, காம்ப்ளி க‌ண்ணீர் சிந்தி அழுத‌வாறே மைதான‌த்தைவிட்டு வெளியேறினார்.... இந்தியா தோல்விய‌டைந்த‌து.... ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் அர‌ங்கில் இத்த‌னை பெரிய‌ அவ‌மான‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌தைத் தொட‌ர்ந்து க‌டுமையான‌ சில‌ முடிவுக‌ளைத் தேர்வுக்குழு எடுக்கத் த‌யாரான‌து.... "குட் ஸ்டூட‌ண்ட்" ஆக‌ எல்லார் ந‌ன்ம‌திப்புக‌ளையும் பெற்றிருந்த‌ "ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம்" ச‌ச்சின் அணியின் கேப்ட‌ன் ஆனார்... அனைத்துத் த‌ர‌ப்பின‌ரின் கோப‌ம் ம‌ட்டும் அவ‌ந‌ம்பிக்கைக்கு ஆளாகிப் போயிருந்த‌ காம்ப்ளி அணியிலிருந்தே நீக்க‌ப்ப‌ட்டார்...

அந்த‌ சூழ்நிலையில் கூட‌ விழித்துக்கொண்டு உத்வேக‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டிருந்தால் அணிக்குள் மீண்டு வ‌ந்திருக்க‌லாம் ஆனால் அவ‌ரோ ஃபோர் ஸ்க்ய‌ர், செவ‌ன் அப் என‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் த‌ன்னை பிஸியாக்கிக் கொண்டார்... அல‌ட்சிய‌த்தின் மொத்த‌ உருவாகிப் போன‌ காம்ப்ளிக்குக் க‌டைசிவ‌ரைக் கைகொடுத்த‌து உண்மை ந‌ண்ப‌னாக‌ இருந்த‌ ச‌ச்சின்தான். காம்ப்ளிக்காக‌த் தொட‌ர்ந்து போராடி மீண்டும் அணியில் இட‌ம் வாங்கிக் கொடுத்தார்... ப‌ல‌னில்லை... பின்னொரு க‌ட்ட‌த்தில் காம்ப்ளி ப‌ழைய‌ சேட்டைக‌ளைக் குறைத்துக் கொண்டு பொறுப்பான‌ ஆட்ட‌க்கார‌ராக‌ ச‌ச்சின் கொடுத்த‌ தைரிய‌த்தில் அணியில் இண்டிபெண்ட‌ன்ஸ் க‌ப், ச‌ஹாரா க‌ப், பாகிஸ்தான் ப‌ய‌ண‌ம் என‌ வ‌ந்துகொண்டிருந்த‌ போது... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ ஓர் ஆட்ட‌த்தில் ப‌ந்தைத் த‌டுக்கையில் கால் எலும்பு முறிவுக்கு ஆளானார்.... அத்துட‌ன் முடிந்துபோன‌து அவ‌ர‌து கிரிக்கெட் வாழ்க்கை.... க‌ங்குலி, டிராவிட், ராபின் சிங் என‌ இவ‌ர் இட‌த்துக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் தொழிலில் மிகுந்த‌ சிர‌த்தையாக‌த் த‌ங்க‌ள் இட‌த்தைத் த‌க்க‌வைத்துக் கொள்ள‌க் காம்ப்ளியோ த‌ன் ஒழுங்கீன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் அற்புத‌மான‌ திற‌மையையும், க‌டின‌ உழைப்பையும், ர‌சிக‌ர்க‌ளின் எதிர்பார்ப்புக‌ளையும், நண்பன் ச‌ச்சின் க‌டைசிவ‌ரை கொடுத்த‌ ஊக்க‌த்தையும் எல்லாவ‌ற்ற‌வையும் ஒருங்கே கோட்டைவிட்டு இன்று கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் துவ‌ங்கி அந்த‌ விழாவிலேயே த‌ன் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவ‌தாக‌ எவ்வித‌ப் ப‌ர‌ப‌ர‌ப்புமின்றி அறிவித்திருக்கிறார்!!

ஒரு தோற்றுப்போன‌ ஒருவ‌னைப் ப‌ற்றி, ஒரு சாதார‌ண‌ப் பெட்டிச் செய்தியை எத‌ற்கு இவ்வ‌ள‌வு விரிவாக‌ எழுத‌வேண்டும் என்று நிச்சிய‌ம் தோன்றலாம்... அத‌ற்கான‌ கார‌ண‌ம்.... ந‌ம்மிடையே ஓரிரு ச‌ச்சின்க‌ளைத் தான் காண‌முடியும் ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ ந‌ம் எல்லோருக்குள்ளுமே எண்ண‌ற்ற‌ வினோத் காம்ப்ளிக‌ள் இருக்கிறார்க‌ள்.... வாழ்வில், இல‌க்கில் க‌வ‌ன‌மின்றி, சின்ன‌ச் சின்ன‌க் க‌ளிப்புக‌ளில் க‌வ‌ன‌மிழ‌ந்து ந‌ம்முன் நாமே வைத்து நட‌க்க‌த் துவ‌ங்கிய‌ இல‌க்கு நோக்கிய‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் பிச‌கும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்க‌ வேண்டிய‌ விளையாட்டு வீர‌ர் ந‌ம‌து வினோத் காம்ப்ளி.... காம்ப்ளியின் க‌தையிலிருந்து பாட‌ம் க‌ற்றுப் ப‌ல‌ ச‌ச்சின்க‌ள் ப‌ல்வேறு துறைக‌ளிலும் உருவாக‌ வேண்டும்.... சுக‌வாசம் ப‌ழ‌கிவிட்டால் வாழ்வில் வ‌ன‌வாச‌ம் வ‌ந்தே தீரும் என்று எங்கெருந்தோ ம‌வுன‌ சாட்சியாகியிருக்கிறார் காம்ப்ளி....

அவ‌ரின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ வாழ்த்துவோம்!

பிர‌பு எம்

ஒரே ஒரு ச‌ச்சின்.. எத்த‌னை வினோத் காம்ப்ளிக‌ள்??



செய்தி: வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்...

37 வயதாகிவிட்ட வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு நாள் ஓய்வில்தானே இருந்தார் என்று மனதில் கேள்வி எழுந்தால் ஆச்சர்யம் அல்ல... அவர் கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2000ம் ஆண்டில்! ச‌ச்சின் ஒரு ச‌காப்த‌ம் என்றால் அவ‌ருட‌ன் இணையாய்க் கிள‌ம்பிய‌ காம்ப்ளி வெகுசீக்கிர‌ம் ம‌ற‌ந்துபோய் விட‌க் கூடிய‌ ஒரு வ‌ர‌லாறாகிப் போன‌த‌ற்கு முழுப்ப‌ங்கும் அவ‌ரையே சாரும்... ச‌ச்சினின் க‌தையைப் போல் காம்ப்ளியின் க‌தையும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து... இவ‌ர்க‌ளின் எழுச்சியையும், காம்ப்ளியின் வீழ்ச்சியையும் அவை சொல்லும் பாட‌த்தையும் ப‌திய‌ முனைகிறேன்.....

குட்டிப் புயல்களாய் சச்சினும் காம்ப்ளியும் பள்ளிக் கிரிக்கெட்டில் 664 ரன்கள் குவித்து உலகசாதனை புரிந்தனர்... அடுத்த சில நாட்களிலேயே சச்சின் எனும் இளம்புயல் சர்வதேச கிரிக்கெட்டில் மையம் கொண்டது... சச்சின் எனும் ஒரு வரலாறு விதையாகி வேறூன்ற ஆரம்பித்திருந்த நாளில் மூன்று வருடம் கழித்து ஷார்ஜாவில் நடந்த விலஸ் டிராபி'91ல் பெவிலியனில் இருந்து புது பேட்ஸ்மேனாகக் கள்மிறங்கினார் வினோத் காம்ப்ளி... அதே போட்டியில் இந்திய அணியில் களம்கண்ட இன்னொரு புதுமுகம் ஜவகல் ஸ்ரீநாத்!!

ஆர‌ம்ப‌த்தில் த‌டுமாறினாலும் மிக‌விரைவில் ச‌ர்வ‌தேச‌ ஆடுக‌ள‌த்தைப் புரிந்துகொண்டு துடிப்பான‌ இளைஞ‌னாக‌ ஜொலிக்க‌த் தொட‌ங்கிய‌ காம்ப்ளியும், "எவர்கிரீன் அட்ராக்ஷன்" ச‌ச்சினும் இந்திய‌ அணியின் அப்போதைய‌ ர‌ஜினி-க‌ம‌ல் ஆனார்க‌ள்!! ஆஸ்திரேலியாவிட‌மும் பாகிஸ்தானிட‌மும் த‌வ‌றாம‌ல் ம‌ர‌ணஅடி வாங்கும் அன்றைய‌ இந்திய‌ அணியில் ஸ்ரீகாந்துட‌ன் சித்துவோ அல்ல‌து ர‌விசாஸ்திரியோ துவ‌க்க‌ ஆட்ட‌க்காரராக‌க் க‌ள‌மிற‌ங்குவ‌ர்... அதிர‌டி ஸ்ரீகாந்த் அவுட் ஆகிவிட்டால் அடுத்து க‌ள‌மிற‌ங்குப‌வ‌ர் கேப்ட‌ன் அசாருதீன்... அடுத்த இடமான பொறுப்பான 2- டவுனை (2-down) நீண்ட‌ நாட்க‌ளாக‌ ஆக்கிர‌மித்துவ‌ந்த‌ ச‌ஞ்ச‌ய் ம‌ஞ்ச்ரேக்க‌ரிட‌மிருந்து ச‌ச்சினுக்கு முன்பாக‌வே ப‌றித்துவிட்டார் காம்ப்ளி.... அசார்-காம்ப்ளி இணை அணியை ச‌ரிவிலிருந்து மீட்கும் வ‌லுவான‌ மிடிலஆர்டர் அஸ்திரமாகப் ப‌ல‌முறை புக‌ழ‌ப்ப‌ட்ட‌து.... அசார், காம்ப்ளி, ம‌ஞ்ச்ரேக்க‌ர் ஆகியோருக்கு அடுத்துக் க‌ள‌மிற‌ங்குவ‌தால் ச‌ச்சினால் கபில்தேவோடு இணைந்து நாற்ப‌து ஓவ‌ருக்கு மேலான‌ அதிர‌டி ஆட்ட‌ம் ம‌ட்டுமே ஆட‌ முடிந்தது.... அந்த‌ நேர‌த்தில் இங்கிலாந்திற்கு எதிரான‌ ஹோம்சீரிஸ் ஒன்றில் திடீரென்று த‌ன் முத‌ல் ச‌த‌ம‌டித்துக் க‌ல‌க்கினார் காம்ப்ளி!!

த‌ட‌த‌ட‌வென‌ முன்னேறிய‌ காம்ப்ளி ச‌ச்சினை மெல்ல‌ மெல்ல‌ ஓவ‌ர்டேக் செய்து ஸ்டார் அவ‌தார‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ எடுத்தாகிவிட்ட‌ நாட்க‌ளில் ச‌ச்சினும் காம்ப்ளியும் ப‌ங்குபெறும் பெப்ஸி விள‌ம்பரம் டிவிக்க‌ளில் மிக‌வும் ஹாட்டான‌து!! ஸ்பின்ன‌ர்க‌ளை ச‌மாளித்து ஆடுகையில் காம்ப்ளியின் அபார‌மான‌ ஃபுட் வொர்க் உல‌க‌ம் முழுவ‌தும் பிரிசித்து பெற்றுவ‌ந்த‌து... அதற்கேற்ப ஓர் ஒருநாள் போட்டியில் ஷேன் வார்னின் ஒரே ஓவ‌ரில் காம்ப்ளி அனாய‌ச‌மாக‌ 22 ர‌ன்க‌ளை விளாசித்த‌ள்ளினார்.... 90க‌ளில் ஷேன் வார்ன் ஓர் உயிர்வாங்கும் ப‌ய‌ங்க‌ர‌ சுழ‌ல் அஸ்திர‌ம் என்ப‌தையும், அப்போதைய‌ ச‌ராச‌ரி ர‌ன்ரேட்க‌ள் 3 அல்ல‌து 4 ஆக‌த்தான் இருக்கும் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்! தொட‌ர்ந்து இர‌ண்டு இர‌ட்டை ச‌த‌ங்க‌ள் அடித்த‌ காம்ப்ளி கிட்ட‌த்த‌ட்ட‌ ச‌ச்சினை முந்திக்கொண்டு அணியில் த‌ன‌க்கென‌ ஓர் த‌னி இட‌த்தை முத்திரை வீர‌ராக‌ ஆட்கொண்டேவிட்டார் என்றுதான் சொல்ல‌வேண்டும்....

ம‌றுபுற‌ம் ச‌ச்சினுக்கோ தொட‌ர்ந்து சோத‌னைகள்... அருமையாக‌ ஆடிவ‌ந்தாலும் நிலையான‌ ஃபார்ம் இல்லாத‌து ச‌ச்சினுக்குப் பெரும் த‌லைவ‌லியாக‌ இருந்துவ‌ந்தது. பெரும் எதிர்பார்ப்புக‌ளால் க‌டுமையான‌ அழுத்த‌த்தையும் அவர் ச‌ந்தித்து வ‌ந்தார்... இருப்பினும் த‌ன்ன‌ம்பிக்கையுட‌ன் த‌ன் தொழிலில் ஆர்வ‌த்துட‌னும் சிர‌த்தையுட‌னும் தொட‌ர்ந்து செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌ ச‌ச்சினுக்கு ஒரு நியூசிலாந்து ப‌ய‌ண‌த்தில் நீண்ட‌நாள் காத்திருந்த‌ துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ர் வாய்ப்பு கிடைக்க‌த் த‌ன்னை முழுமையாக‌ நிலை நிறுத்திக் கொண்டார் மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன்!! தொட‌ர்ந்து சிற‌ப்பாக‌ ஆடிவ‌ந்த‌ ச‌ச்சின், "நீண்டநாட்களாகியும் ஒரு ச‌தம்கூட‌ அடிக்கவில்லை" எனத் தொடர்ந்து விம‌ர்சிக்க‌ப் ப‌ட்டுவ‌ந்த‌ க‌ள‌ங்க‌த்தையும் துடைத்தார், கொழும்புவில் ந‌ட‌ந்த‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ராக‌ இற‌ங்கிய‌ ச‌ச்சின் த‌ன் ஒருநாள் போட்டியின் முத‌ல் ச‌த‌த்தைக் க‌ட‌ந்தார் அந்த‌ப் போட்டியில் 110 ர‌ன்க‌ளைக் குவித்திருந்தார்... அடுத்த‌டுத்து ச‌த‌ங்க‌ளைக் குவிக்கத் தொடங்கிய ச‌ச்சின் பின்னாளில் உல‌கில் யாருமே குவித்திராத‌ அள‌வுக்கு ச‌த‌ங்க‌ளைக் குவிப்பார் என்று அந்நாளில் அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ளே கூட‌ நினைத்திருக்க‌ மாட்டார்க‌ள்!!

ச‌ச்சினின் க‌வன‌மும் ஆர்வ‌மும் தொட‌ர்ந்து ர‌ன்குவிப்பிலேயே ஊறித்திளைத்துக் கொண்டிருந்த‌ அதேக‌ண‌ம் த‌ங்க‌ ந‌கைக‌ள் அதிக‌ம் அணிந்துகொள்ளும் ஆர்வ‌த்துக்காக‌ சில‌ ப‌த்திரிக்கைக‌ளில் க‌வ‌ர்ஸ்டோரி ஆனார் வினோத் காம்ப்ளி.... வித‌வித‌மான‌ கெட்-அப்க‌ளோடு ஆட‌ ஆர‌ம்பித்த‌ காம்ப்ளி ஷார்ட் பால்க‌ளுக்குத் (Short ball) தொட‌ர்ந்து இறையாக‌ ஆர‌ம்பித்தார்... ஹேர் ஸ்டைலையும், கேர்ள் ஃப்ரெண்டையும் அடிக்க‌டி மாற்ற‌த் துவ‌ங்கிய‌ காம்ப்ளி க‌ல்லி பொஸிஷ‌னில் (Gully Slips) ப‌ல‌முறைத் தொட‌ர்ந்து த‌ன் விக்கெட்டைப் ப‌றிகொடுத்தும்கூட‌ப் பிர‌ச்னைக்குரிய‌ த‌ன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள‌வே இல்லை!!

1996ம் ஆண்டு வில்ஸ் உல‌க‌க்கோப்பை இந்தியாவில் ந‌ட‌ந்த‌போது காம்ப்ளி உள்ளிட்ட‌ப் ப‌ல‌வீர‌ர்க‌ளுக்குத் தெரியாது அது அவ‌ர்க‌ளின் த‌லையெழுத்தையே மாற்ற‌ப் போகிற‌து என்று!


தொட‌ரும்......


பி.கு

(ச‌ச்சினின் க‌தை இன்ஸ்பிரேஷ‌ன் என்றால் காம்ப்ளியின் க‌தை நம் அனைவ‌ருக்கும் ஒரு எச்ச‌ரிக்கைப் பாட‌ம்... திற‌மை, உழைப்பு, வாய்ப்பு மூன்றும் வாய்த்த‌போதும் காம்ப்ளி ஒரு தோல்வி நாய‌க‌னாய்ப் மாறிப்போன‌து துர‌திர்ஷ்ட‌ம்!! அவ‌ர் க‌தை முன்னேற‌த் துடிக்கும் ஒவ்வொரு இளைஞ‌னுக்கும் ஓர் எச்ச‌ரிக்கை ம‌ணி... ச‌ச்சினிட‌ம் do's ஐயும் , காம்ப்ளியிட‌ம் dont's ஐயும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்!!)

ஷாருக்கானின் க‌ச‌ப்பான‌ அமெரிக்க‌ அனுப‌வ‌ம்!


உலகளாவிய பாலிவுட் ரசிகர்களின் "மோஸ்ட் வான்டட் ஹீரோ" ஷாரூக் கான் நியூஜெர்ஸி விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இம்மிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டடு சோத‌னைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்கிறார்!!

விதிகளுக்கு உட்பட்ட சந்தேகக் காரணங்களால் இரண்டாம் கட்ட இமிகிரேஷன் சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டவர்களின் பட்டியலில் ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்டமே!! மிகவும் பொதுப்படையான பெயரைக் கொண்டிருப்பதால் இரண்டாம் கட்ட குடியேற்ற சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார் என்பது அமெரிக்க அதிகாரிகளின் விளக்கம்...ஆனால் "இதுவரைத் தன் வாழ்வில் "ஷா ருக்" எனும் பெயரில் வேறு எந்தவொரு மனிதரையும் நான் சந்தித்ததேயில்லை அப்படியிருக்க எப்படிப் பொதுவான பெயராகக் கருத முடியும்?" இது ஷாரூக்கின் வாதம்... பிரச்னை "ஷாரூக்" இல் இல்லை இரண்டாவது பெயர் "கான்" இல் தான் இருந்திருக்கிறது!!!

"என் பெயர் கான்"(My Name is Khan) இதுதான் கரண் ஜோகர் இயக்கத்தில் ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் அடுத்த படத்தின் பெய‌ர்.... ஆனால் பாவ‌ம் இவர் பெயர் கான் என்று சந்தேகிக்கப் பட்டதாலேயே இவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்கிறார் மிஸ்டர். கான்!!

அமெரிக்க அதிகாரிகளைச் சொல்லியும் குற்றமில்லைதான்... அனைத்து விஜயகாந்த் பட வில்லன்களின் பெயரும் அநேகமாகக் "கான்" என்றுதானே முடிந்துத் தொலைக்கிறது!! உல‌க‌ளாவிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ப் போர்க‌ளினால் ஒட்டுமொத்த‌மாக‌ ஒரு ம‌த‌த்தின் பெய‌ரால் ஒரு சமூகமே துன்புறுவ‌து வேத‌னையாக‌ இருந்தாலும் அதற்கான‌ பதிலைப் பாதிக்க‌ப்ப‌டும் பொதும‌க்க‌ள் அந்த ம‌தத்தின் பெய‌ரால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச் செய‌ல்க‌ளில் ஈடுப‌டும் வ‌ன்முறையாள‌ர்க‌ளிட‌ம்தான் கேட்க‌ முடியும்...

ச‌ரி.. மாட்டிக்கொண்ட‌ ஷாருக்கிடம் வ‌ருவோம்.... ப‌ய‌ண‌ம் செய்த‌ பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான‌ம் ஏற்கென‌வே ஷாரூக்கின் ல‌க்கேஜ்க‌ளைக் கொண்டுவ‌ருவ‌தில் தாம‌த‌ம் நேர்ந்திருக்கிற‌து என‌வே நிச்சிய‌ம் நொந்து நூடுல்ஸாக‌த் தான் இமிகிரேஷ‌னுக்கே சென்றிருப்பார் ஷாருக்... அவ‌ரின் போர்ட்(Boarded) செய்ய‌ப்ப‌ட்ட‌ உட‌மைக‌ள் ம‌ட்டும‌ன்றி ஹேண்ட் ல‌க்கேஜ்க‌ளையும் கூட‌ சோத‌னை செய்திருக்கிறார்க‌ள் அதிகாரிக‌ள்... "நான் ஒரு ந‌டிக‌ன்... இங்கு அட்லாண்டிக் சிட்டியில் ஒரு ஷோ வுக்காக‌த்தான் வ‌ந்திருக்கிறேன்" என்று ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையைச் செய்துகொண்டிருக்கும் போது அப்பாவியாகப் புல‌ம்பியிருக்கிறார் "கிங் கான்"!!

"நான் மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டேன்... மிக‌வும் கோப‌மாக‌வும் எரிச்ச‌லாக‌வும் உண‌ர்ந்தேன்... ந‌ல்ல‌வேளை என் குடும்ப‌த்துட‌ன் நான் வ‌ர‌வில்லை, வ‌ந்திருந்தால் என்னென்ன‌ இன்ன‌ல்க‌ளுக்கு ஆளாகியிருப்பேனோ!!... சுத‌ந்திர‌ தின‌த்தன்று எனது சுத‌ந்திர‌ இந்தியாவிலேயே நான் இருந்திருக்க‌லாம் போலும்!!" என்றெல்லாம் நொடித்துப் போய் இப்பொழுது முத்துதிர்த்திருக்கும் ஷாருக்... இவ்வாறு ந‌ட‌ப்ப‌து முத‌ன்முறைய‌ல்ல‌ எப்போதுமே அமெரிக்கா செல்லும்போது தான் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆட்ப‌டுவ‌தாக‌வும் முண‌கித் தீர்த்திருக்கிறார்....!!

ஷாரூக்கிற்கு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்....

"அமெரிக்கா செல்லும்போதெல்லாமே நான் க‌டும் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆளாகிறேன்" என்று இப்பொழுது கதறும் பாலிவுட் பாட்ஷா... சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு பூச்சி ம‌ருந்து க‌ல‌ப்பு போன்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளால் பெப்ஸியை இந்தியாவில் த‌டை செய்ய‌க்கோரி மாண‌வ‌ர்க‌ளும் சுற்றுச்சூழ‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ளும் ஒட்டுமொத்த‌மாகக் கிள‌ர்ந்தெழுந்த‌போது இதே ஷாரூக் கான்,
"பெப்ஸியை இந்தியாவில் த‌டைசெய்தால் நான் அமெரிக்கா சென்று பெப்ஸி பான‌ங்க‌ளைப் ப‌ருகுவேன்!" என்று நிர‌ந்த‌ர பிராண்ட் அம்பாஸிடராக ஆண்டுதோறும் கூலி கொடுத்த‌ அமெரிக்க‌ முத‌லாளிக‌ளுக்காக‌ முந்திக்கொண்டு வ‌ந்து ஜால்ரா அடித்தார்... அடுத்த‌முறை மீண்டும் பெப்ஸிக்குப் பிர‌ச்னை வ‌ந்தால் தங்க‌ள் பெய‌ருக்குப் பின்னால் உள்ள‌ "கானை" நீக்கிக்கொண்டு அமெரிக்கா போய் பெப்ஸி குடிப்பீங்க‌ளா ஷாருக் சார்??!!

டெயில் பீஸ்:

இதே அமெரிக்க‌ விமான‌த‌ள‌த்தில் "மொஹ‌ம‌த் குட்டி" என்ற‌ இய‌ற்பெய‌ர் தாங்கியதால் ந‌ம்ம‌ "த‌ள‌ப‌தி தேவராஜ்" ம‌ம்முட்டியும் இதேபோன்ற‌தொரு அசௌக‌ரிய‌த்துக்கு ஆளாகியிருக்கிறார் ஆனால் அவ‌ர் இதைப் ப‌ற்றி யாரிட‌மும் முணுமுணுத்துக் கொண்டிருக்க‌வில்லை.... உண‌ர்ச்சி வேக‌த்தில் உளறித்தள்ளும் ஷாருக்கைப் பொறுத்த‌வரை யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ஃப்ளாஷ்பேக்கால் சொல்லிழுக்குப் ப‌ட்டு!!

பேருந்துக்குள் வன்முறை


(குறிப்பு: இது நான்குபேர் உருட்டுக்கட்டையுடன் வழிமறித்து வண்டியேறி அட்டகாசம் செய்த வன்முறையல்ல... கதை, திரைக்கதை வசனமெழுதித் திரைத்துறையினருடன் போக்குவரத்துத் துறை இணைந்து வழக்கமாகவே பேருந்துகளில் அரங்கேற்றப்படுகின்ற ஒரு வன்முறை!!)

குடும்ப அலுவலாகச் சென்னை சென்றிருந்தேன்... அங்கிருந்து திரும்ப மதுரைக்கு வர எப்போதும் செல்லும் பிரபல தனியார் டிராவல்ஸின் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம்.. இதுவரை நான் அந்த டிராவல்ஸின் பஸ்ஸில் பயணித்தது எல்லாமே நள்ளிரவுப் பேருந்துகளில்தான்... அப்போதெல்லாமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இரு இருக்கை வரிசைகளுக்கு இடையே உயரத்தில் அமைதியாகத் தொங்கிக்கொண்டு வந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.... அவர்களது பேருந்துகளில் திரைப்படங்கள் போடுவதில்லைப் போலும் என்று தப்புக் கணக்கு போட்டவனாக எப்போதும் போல் அதே கம்பெனி பஸ்ஸில் இம்முறை மாலை 7 மணி பஸ்ஸில் பயணமானேன்...

இதுவரை சும்மாவே தொங்கிக்கொண்டு வந்தே நான் பார்த்த அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி பயணம் ஆரம்பித்த‌ சில நிமிடங்களிலேயே உயிர்பெற்றது... ஓபனிங்கிலேயே பெருங்குரலெடுத்து மிரட்டத்துவங்கிய டிவிப்பொட்டியில் சிம்பு மற்றும் தனுஷ் குத்தாட்டம் போட்ட பாடல்கள் மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.... இந்தப் பாடல்கள் எல்லாம் பிரபலமானதாக இருந்தும், சுதந்திர‌ இந்தியாவின் பேச்சுரிமை எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் பெற்ற குடிமகனாகிய நான் எனது சொந்த உரிமைகளின் பேரால் "பார்க்க வேண்டாம்" எனத் தவிர்த்திருந்த திரைப்படங்கள் இவை என்ற காரணத்தினால், இந்தப் பாடல்கள் எனக்குப் புதிதாக இருந்தன....

"சிலம்பாட்டம்" படத்தில் ஒருபாடலில் சிம்பு ஒரு கூட்டத்தோடு ஆடிக்கொண்டிருந்தார்... அவ்வப்போது சுற்றி ஆடுபவர்கள் அனைவரும் சுற்றி நின்று ஆர்ப்பரிக்க சிம்பு மட்டும் நடுவே தனியாவர்த்தண நடனம் (?) செய்வதாகக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது.... சிம்பு முழங்காலில் நின்றுகொண்டு "வெடுக் வெடுக்" கென எழுந்து நிற்கிறார்.... பின்பு முழங்காலில் நின்றவாறே கைகளைப் பின்பக்கமாகத் தரையில் ஊன்றிக்கொண்டு இப்பொழுது கால்பாதங்களைத் தரையில் பதித்து, மல்லாந்த உடலைக் கை ஊன்றித் தாங்கிக் கொண்டு கால்களை மேலே உதறுகிறார்... பிறகு மீண்டும் "வெடுக் வெடுக்" என எழுந்து அமர்கிறார்.... பின்னணியில் அதிரடிக்கும் குத்தாட்ட இசை வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது.... அந்த‌ ந‌ட‌ன‌க்காட்சியை என் ம‌ன‌துக்குள் இசையைத் தவிர்த்து 'ம்யூட்' செய்து பார்க்கையில்.... க‌டுமையான‌ ம‌ல‌ச்சிக்க‌லால் ப‌ல‌ச்சிக்க‌லுக்கு ஆளாகிவிட்ட‌ ஓர் இளைஞ‌ன் காலையில் ஃப்ரீயாக‌ப் போவதற்காக‌ மேற்கொள்ளும் க‌டும் பிர‌ய‌த்த‌ன‌ங்கள் இவை என்று டைட்டில் போட்டுக் காட்டினால் ந‌ம்பும் மாதிரியாக‌ இருந்த‌து!!

இவ்வாறாக‌ செங்க‌ல்ப‌ட்டு தாண்டி எங்கோ ஒரு மோட்டலில் சாப்பாடுக்காக‌ நிறுத்தினார்க‌ள்.... சாப்பிட்டு ஏறிய‌தும் அதே டி.வி மீண்டும் உயிர்பெற்று எழுந்த‌து!
இம்முறை ஒரு திரைப்ப‌ட‌ம்.... க‌லாநிதி மாற‌ன் வ‌ழ‌ங்கும், த‌னுஷ் ந‌டிக்கும் என்று பில்ட‌ப் கொடுத்து "ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தைப் போட்டார் டிரைவ‌ர்.... அடுத்த‌ சில‌ நொடிக‌ளிலேயே புரிந்தது இத்த‌னை நாள் இந்த‌ ப‌ஸ்ஸில் நான் அல‌ட்சிய‌மாக‌ப் பார்த்துவ‌ந்த‌ அந்த‌த் தொலைக்காட்சி இய‌ந்திர‌ம் தூங்கும் ஓர் மிருகம் என்று! அது விழித்துக் கொண்டால் என்னென்ன‌ அவ‌ல‌ங்க‌ளை உருவாக்கும் என்ப‌த‌ற்கு நான் க‌ண்ணால் க‌ண்ட ஒரு சாட்சியானேன்!!

"ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தை நான் பார்த்திருக்க‌வில்லை... ஆனால் அதுவொரு வெற்றிப் ப‌ட‌ம் என்று கேள்வியுற்றிருக்கிறேன்.... வ‌ன்முறையாக‌ அந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்தேயாக‌ வேண்டுமென்று நிர்ப‌ந்திக்க‌ப் ப‌ட்ட‌தில் நான் பார்த்த‌வ‌ரை அப்ப‌ட‌த்தில் ச‌த்த‌த்தையும் ர‌த்த‌த்தையும் த‌விர‌ வேறெதுவுமே இல்லை! ஸ்பென்ஸ‌ர் ப்ளாஸாவிலும் ஆந்திராவின் ஒரு ப‌ப்ளிக் மார்க்கெட்டிலும் துப்பாக்கி ம‌ற்றும் வாள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் தாங்கிய‌ இர‌ண்டு ப‌டைக‌ள் பெரும்போர் புரிகின்ற‌ன‌... மூன்று நான்கு ர‌வுடிகளைப் போர்வீர‌ர்க‌ளுட‌னும் அர‌ண்ம‌னையோடும் குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளாக‌க் காட்டுகிறார்க‌ள்.... அட‌ எதுக்கு இந்த டுபாக்கூர் ப‌ட‌த்த‌ப் ப‌த்தி இவ்ளோ பேசிக்கிட்டு.... கேவ‌ல‌மான‌ ஒரு குப்பைப் ப‌ட‌ம் பாஸ்.... ப‌ஸ்ஸூக்குள்ள‌ ஏத்தி மூச்சுத் திண‌ற‌த் திண‌ற‌ முழுப் ப‌ட‌த்தையும் போட்டுக்காட்டித் திருச்சி வ‌ரைக்கும் சாவ‌டிச்சுட்டுதான் விட்டாங்க...

இப்போ மேட்ட‌ருக்கு வ‌ர்றேன்....

பேருந்துக‌ளுக்குள் க‌ண்டிப்பாக‌த் திரைப்ப‌ட‌ம் போட‌வேண்டுமா?

இது வியாபார‌ உல‌க‌ம்... ந‌ட‌ந்துகொண்டிருப்ப‌தோ "இல‌வ‌ச‌" யுக‌ம்....
வார‌ இத‌ழ் வாங்கினால் சிம்கார்டு இல‌வ‌ச‌ம்.... காஃபித்தூள் வாங்கினால் பாத்திர‌ம் துல‌க்கும் ஜெல் இல‌வ‌ச‌ம்... ஏன் வோட்டு போடுற‌துக்கு இல‌வ‌ச‌மா ஹாட்கேஷ் (hot cash) கொடுக்கும் அள‌வு வ‌ந்துவிட்ட‌ இந்த‌ உல‌கில் ப‌ஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் இல‌வ‌ச‌மாக‌ ஒரு ப‌ட‌ம் போடுவ‌து சாதார‌ண‌ம்தான்... ஆனால் கோதுமை ரொட்டி வாங்கினால் ரெண்டு வாழைப்ப‌ழ‌ம் இல‌வ‌ச‌ம் என்று கையில் கொடுத்தால் ஓகே... ஆனால் வாங்குப‌வ‌ன் ச‌ர்க்க‌ரை நோயாளியாக‌ இருந்தாலும் கூட‌ கோதுமை ரொட்டி வாங்கிவிட்டாய் என்று இல‌வ‌ச‌ வாழைப்ப‌ழ‌த்தை வ‌ன்முறையாக‌ வாயில் திணித்தால்???... அதுபோன்ற‌தொரு ம‌னித‌ உரிமை மீற‌லாக‌த்தான் என‌க்குத் தெரிகிற‌து பேருந்துக்குள் இப்படி ம‌கா ச‌த்த‌மாக‌ப் ப‌ட‌ம் போட்டு மிர‌ட்டுவ‌து! "உன‌க்குப் பிடிக்குதோ பிடிக்க‌லையோ போடுற ப‌டத்த நீ பாத்துத்தான் ஆகணும்... என்ன‌து தூங்கிடுவியா??...அடீங்க்க‌... ம‌வ‌னே எங்க‌ ஹீரோ ப‌ற‌ந்து பறந்து தாவி... தார‌ த‌ப்ப‌ட்டையெல்லாம் தெறிக்க‌ வில்ல‌னை வ‌த‌ம் செய்யுற‌ ச‌வுண்டு எஃபெக்ட்ல‌ நீ எப்டி டா ராசா தூங்குவ‌!!" என்று க‌ண்ட‌க்டர் க‌லாய்க்காத‌ குறைதான்....

சரி... லீக‌லா ஒரு லா பாயிண்ட்டு வைக்கிறேன்..... எல்லா திரைப்ப‌ட‌ங்களிலும் டைட்டில் கார்டு போடுவ‌த‌ற்கு முன்பாக‌ ச‌ம்பிர‌தாய‌மாக‌ இன்றும் கூட‌ "யு" , "ஏ" , "யுஏ" என்றெல்லாம் சென்சார் போர்டு ச‌ர்டிஃபிகேட்டுக‌ள் போடுகிறார்க‌ள்.... 18 வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் என்று (ஏட்டில் ம‌ட்டும்) சில‌ க‌ட்டுப்பாடுக‌ள் இன்றும் இருக்கிற‌து... அட்லீஸ்ட் இதை வெகுசில‌ வீட்டிலாவ‌து சில‌ பெற்றோர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள்.... இப்ப‌டி பொத்தாம் பொதுவாக‌ ஆபாச‌ம் வ‌ன்முறை என்று எந்த‌க் கட்டுப்பாடும் இல்லாம‌ல் ஏற‌க்குறைய‌ எல்லா ப‌ஸ்ஸிலுமே திருட்டு விசிடிக் க‌ளில் ப‌ட‌ம் போடுகிறார்களே.... ஆபாச‌ போஸ்ட‌ர்க‌ளில் சாய‌ம் அடிக்கும், தியேட்ட‌ர்க‌ளை உடைக்கும் ந‌ம‌து "க‌லாச்சார‌ பாதுகாவ‌ல‌ர்க‌ள்" இதையெல்லாம் க‌ண்ட‌தே இல்லையா???

ப‌ர்ச‌ன‌லாக‌ அன்றைக்கு நான் பேருந்தில் வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் விப‌த்தில் ப‌லியான‌ உற‌வின‌ரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வ‌ந்து கொண்டிருந்தேன்... இப்ப‌டிப் ப‌ல‌ரும் ப‌ல‌ க‌வ‌லைக‌ளுட‌னும் நிம்ம‌தியான‌ ஒரு ப‌ய‌ண‌த்தைத் தேடி வ‌ந்து அம‌ர்ந்திருக்க‌லாம்... அந்த‌ வேளைக‌ளில் அத்துமீற‌லாக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை வ‌ம்ப‌டியாக‌த் திணிப்ப‌து என்ன‌ ம‌னிதாபிமான‌மோ தெரிய‌வில்லை.....

பேருந்துக‌ளில் ப‌ய‌ண‌க்க‌ளைப்பு இல்லாம‌ல் இருக்க‌ வாத்திய‌ இசை இசைக்க‌லாம்... அல்ல‌து ப‌ய‌னுள்ள‌ சில‌ வீடியோக்க‌ளைக் கூட யாருக்கும் கஷ்டம் தராத வண்ணம் ஒளிப‌ர‌ப்ப‌லாமே.... அட‌... அப்போகூட‌ த‌மிழ‌னுக்கு சினிமாதான் வேணுமா?? அம‌ர‌ர் ஊர்திக‌ளிலும் ஆம்புல‌ன்சிலும் நான் ப‌ய‌ணித்த‌து இல்லை.. அதில் கூட‌ திரைப்ப‌ட‌ம் போடுகிறார்க‌ளா?? தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்க‌ள்...

பிர‌பு. எம்