ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது இரட்டை சதத்தைப் பார்த்து ரசித்தீர்களா!! :)
ஆஸ்காரையும் தாண்டி ரஹ்மான் கிராமியையும் வென்றதுவந்தது போல இருந்ததா!!!
நமது வாழ்வின் நாயகர்கள் அவர்கள் வாழ்வில் ஜெயிக்கும்போது ஏதோ நாமே ஜெயித்ததைப் போல் உணர்கிறோமே.... துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறோமே....இந்த உணர்வுக்கு.... ஒரு ரசிகனின் இந்த மானசீக உறவிற்குப் பெயர்தான் என்ன!!
இன்றைக்கு சச்சின் ஹெல்மெட்டைக் கழற்றி இருகைகளையும் உயர்த்தி வானத்தைப் பார்த்த தருணத்தில் அவர் வீட்டில் என்னென்ன கொண்டாட்டங்கள் நடந்திருக்கும் என்பதை என் வீட்டிலேயே நான் பார்த்துக்கொண்டேன்!! :)
நூற்றைம்பதைக் கடந்தபின்னர் கொஞ்ச நேரத்திலேயே முதுகை வளைத்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.... அவரின் முதுகுவலிதான் உலகப் பிரசித்தி பெற்றதாயிற்றே!! தசைப்பிடித்த இடத்தில் தன் க்ளவுஸ் அணிந்த கரங்களை மடக்கி எப்போதும்போல் அவர் குத்திக்கொள்ள..... ஆடியன்ஸ் தொடங்கி...நம்ம வீட்டு அம்மாவரைக்கும் "ஐயோ" வெனப் பதறுகிறார்கள் அவரது வலிக்காக!!! இதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் "எனக்கு ஐ.ஜி ய நல்லாத் தெரியும்.. பட் அவருக்கென்னை தெரியவே தெரியாது!!" என்கிற விவேக்கின் காமெடியைப்போல்இல்லையா???!! :)
"இந்த இரட்டை சதத்தை, எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு மனதால் உடனிருந்த இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்"
என இன்றைய ஆட்டம் முடிந்ததும் சொன்னாரே சச்சின் அதுதான் இதற்கெல்லாம் பதில்!!!
சாதனைகளை யெல்லாம் மீறிய சாதனையாய் இரட்டை சதமடித்துவிட்டு இன்று அமைதியாய் பரிசுகளையும் பாராட்டுகளையும் அள்ளிச்சென்ற சச்சினும் சரி..... ஆஸ்காரையும், கிராமியையும் அலேக்காக அள்ளிக்கொண்டு அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து வந்து அடுத்த படத்துக்கு ட்யூன் போட்ட ரஹ்மானும் சரி... அவர்கள் வாழ்வில் அவர்கள் உழைத்தார்கள்.... அவர்களே வென்றார்கள்...."அவ்வளவுதான்" என உடனே அடுத்தக் கட்டத்துக்கு ஆயத்தமாகி விடுகிறார்கள்!!!.... ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியையும் அவர்களைவிட அதிகமாய் நாம் கொண்டாடி மகிழ்கின்றோமே.... நமது கனவுகளை நாம் அவர்கள் கண்களில் காண்பதாலா!! அல்லது அவர்களின் கனவுகளை நமது கண்களில் பொருத்திக்கொண்டு தூங்கச் செல்வதாலா!!
சத்தியமாக இது ஒரு நெகடிவ் பதிவல்ல ..... சச்சினும் ரஹ்மானும் என் வாழ்வின் ஆதர்ஷ நாயகர்கள்.... இருவரின் மெல்லிய குரல்கள்..... இணக்கமான உடல்மொழி..... வெற்றிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டும் மாறாத மேன்மை.....சர்ச்சைகளுக்கு சாதனைகளால் பதில் தரும் வீரம்.....வாழ்க்கையில் சிறிதும் அகலாத சீரியஸ்னஸ்..... சிறிதும் பிசகாத வார்த்தைகள்......தொழிலில் விட்டுக்கொடுக்காத சிம்மத்தனம்..... அந்த கம்பீரம்..... தன்னம்பிக்கை..... இன்னும்கூட சொல்லிக்கொண்டே போவேன்...... ஏழு எட்டு வயதில் இவர்களைப் பார்த்து உயர்ந்த புருவங்கள்... இன்றும் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து நிற்கிறது இவர்களின் சிலிர்க்க வைக்கும் சாதனைகளுக்கு!!!
சச்சினையும் ரஹ்மானையும் அவர்களிடமிருக்கும் ஏதோவொன்று இருவரையும் எப்போதும் ஒன்றாகவே பார்த்து வியக்க வைக்கிறது என்னை!!!
எவ்வளவு உண்டாலும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமென்று.... அடங்காது பசித்துக் கிடக்கும் இந்த சிங்கங்களின் ரசிகன் என்பதையே பெருமிதமாக உணர்கிற அதே சமயம்...." வாழ்வில் எப்போதும் பசித்திரு!!" எனப் பெருங்குரலெடுத்து அதிரும் இவர்களின் கம்பீர கர்ஜனையையும் மனதுக்குள் ஆழ ஒலிப்பதிவு செய்துகொள்வோமாக!!
இந்தவொரு சாதனை உண்மையில் மகத்தானது... 36 வயதில் முழுதும் தானே ஓடி எடுத்த முத்தான ரன்கள் இவை...
சச்சினின் இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கை ஓர் இரட்டை சதத்தால் மீண்டும் புதிதாய்த் தொடங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்..... ரசிகர்கள் அனைவருக்கும் தன் சாதனையை அர்ப்பணித்த தலைவன் இருக்கிறான் இன்றும் அப்படியே!!! :)
ரஹ்மானின் பாடலால் சச்சினை வாழ்த்துவோம் "ஜெய் ஹோ!!!!"
அன்புடன்,



