விஜய் டி.வி கோபிநாத்: ஒரு பார்வை


உங்களுக்குப் பிடித்தத் தமிழ்த் தொலைக்காட்சிப் பிரபலம் யார்? என்று கேட்டால் இப்போதெல்லாம் பெரும்பாலும் உச்சரிக்கப்படும் பெயர் விஜய் டி.வியின் கோபிநாத்! (ஆதாரம்: ஒரு பத்துபேர்கிட்ட கேட்டேன்!!) பல வீடுகளில் "நீயா? நானா?" நிகழ்ச்சியை விடாது பார்க்கிறார்கள்... நிகழ்ச்சியில் பேசுபவர்கள் அவரவரின் அலைவரிசையில் கருத்துகளை சொல்ல, விவாதத்தில் கிளம்பும் சூடு தணிந்து விடாமல், அப்படியே சுடுதண்ணியில் படகுவிட்டுக் கரைசேர்ந்திடும் லாவகத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளார் கோபிநாத் தன்னுடைய இந்த நீண்டகால அனுபவத்தில்...!

'ஹாய்'மதன், அனுஹாசன் வரிசையில் ஒரு வெயிட்டான விக்கெட்டாக இவரையும் விஜய் டி.வியும் நேரம் பார்த்துக் களமிறக்க ஆரம்பித்துவிட்டார்கள்... பர்சனலாக எனக்கு "நீயா? நானா?" நிகழ்ச்சியின் மீது எவ்வித ஈர்ப்பும் கிடையாது... இருப்பினும் சேனல் மாற்றும்போது கண்ணில் பட்டால், எரிச்சலைக் கிளப்புமாறு ஒருவர் பேசும் வரை பொறுமையிருந்தால் பார்ப்பேன்! (இம்சையக் கூட்ட எபிஸோடுக்கு ரெண்டுபேர் கண்டிப்பா இருப்பானுங்க‌!)

பத்துப் பதினைந்து வருடங்களாகத் தமிழ்த் (தனியார்த்) தொலைக்காட்சிகள் அசுர வேகத்தில் வளர்ந்து வந்திருந்தாலும், பெரும்பாலும் நம் சின்னத்திரை, பெரியத்திரை பெருசுகளின் 'பென்ஷன்' வாங்கும் களமாகத்தான் இருந்திருக்கிறது.... சன் டி.வியைத்தான் சொல்லவேண்டும்... அழகுப் பதுமைகளை வைத்து ஓட்டிவிடும் கமர்ஷியல் நிகழ்ச்சிகள் தவிர ஏதாவது டாக் ஷோ மாதிரி ஏதாவது என்றால் விசு, டி.ஆர் என்று கோடம்பாக்கத்திலிருந்து அழைத்து வந்து விடுவார்கள்... 'அறிவாளிகள்' என்கிற இமேஜோடு திரையுலகைவிட்டு ரிட்டையர்மெண்ட் வாங்கிக்கொண்டு இங்கு சின்னத்திரையில் விசுவின் வழித்தோன்றல்களாக லட்சுமி,ரேவதி,ரோகிணி,குஷ்பு எனறு வரிசையாக ஆளுக்கொரு டாக் ஷோவை எடுத்துக்கொண்டு கடையைத் திறந்தார்கள்... எல்லாம் ஆரம்பப் பரபரப்புக்களோடு புஸ்வானமாகிப் போனது கண்கூடு!!

உண்மையில் தொலைக்காட்சி மீடியம் என்பது முற்றிலும் வேற ஏரியா... விஷுவல் கம்யூனிக்கேஷன், ஜர்னலிசம் என்று முறைப்படி எத்தனையோ பேர் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் படித்து வெளிவருகிறார்கள் இருப்பினும் வாரத்துக்கு ஒரு சேனல் துவங்கும் தமிழ் தொ.கா உலகில் இன்னும் டயட் மீறிய ஹீரொயின்களின் அழுகாய்ச்சி சீரியல்களும் சினிமா கிளிப்பிங்குகளும் மட்டுமே ஆக்கிரமித்துக் கிடப்பது நம் தலையெழுத்து!!

ச‌ரி ந‌ம்ம‌ கோபியிட‌ம் வ‌ருவோம்... ஒரு "மீடியா ப‌ர்சன்" என்கிற ரீதியில் ம‌க்க‌ள் ம‌த்தியில் மேலோட்ட‌மாக‌ எதிர்பார்க்க‌ப்ப‌டும் ஒருவித‌ மிடுக்கு கோபிநாத்திட‌ம் நிச்சிய‌மாக‌ உள்ள‌து.... அதாவ‌து "மீடியா" என்கிற‌ தோர‌ணையில் எவ‌ரையும், எத‌னையும் 'கேஷுவ‌லாக‌' அணுகும் பாங்கு என்று எளிதாக‌ச் சொல்ல‌லாம்.... (க‌ட்சிக்கார‌ர்க‌ள் எல்லாம் ஆளுக்கொரு சேன‌ல் ஆர‌ம்பித்து வைத்திருக்கும் நிலையில் (ஸ்டார்) விஜ‌ய் டி.வியில் வேலை கிடைத்த‌து இவரிடம் இந்த‌ 'மிடுக்கு' மிச்ச‌ம் இருப்ப‌த‌ற்கு ஒரு முக்கிய‌க் கார‌ண‌ம் என்பதை இங்கு சொல்லித்தான் ஆக‌வேண்டும்!!)

அர‌சிய‌ல் நிக‌ழ்ச்சிக‌ளில் ஆர‌ம்பித்து த‌ற்போது இவ‌ர் நிர‌ந்த‌ர‌மாக‌ கோலொச்சிவ‌ரும் " நீயா? நானா?" வ‌ரை கோபிநாத்தின் வ‌ள‌ர்ச்சி நிதான‌மான‌து.... நிறுத்தி நிதான‌மாக‌ வ‌ள‌ர்ந்து வ‌ந்து இப்போது வலுவாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் திரு.கோபிநாத், தொகுத்து வ‌ழ‌ங்குத‌லிலும் வ‌ர்ண‌னையிலும் விடாது த‌ன் ஆளுமையால் க‌வ‌ர்ந்தாலும்... ஹோம் ஒர்க்கில் ரொம்ப‌வே கோட்டை விடுகிறாரோ என்று தோன்றுகிறது....

இவரது நிகழ்ச்சிகளில் எடுத்தாளப்படும் த‌லைப்புகளை ஒட்டி எந்த‌ள‌வு இவ‌ர் த‌ன்னைத் த‌யார்ப‌டுத்திக்கொள்கிறார் என்ப‌து நிச்சிய‌ம் கேள்விக்குறிதான்.... உதார‌ண‌மாக‌ கிராம‌த்துத் திருவிழாக்க‌ளைப் ப‌ற்றி விவாத‌ம் செய்யும் எபிஸோடில் ச‌ர்ச்சைக்குரிய‌ ந‌ள்ளிர‌வு ந‌ட‌ன‌ங்க‌ளைப் ப‌ற்றி ஒருவ‌ர் சொல்ல‌ "அப்ப‌டியா? என்று நிமிர்ந்து, எங்கே? எந்த‌ப் ப‌குதியில்? .." என்கிற‌ ரீதியில் புதிதாக கேட்கிறார்.... இந்த‌ மேட்ட‌ர் எல்லாம் ஜு.வி, ரிப்போர்ட்ட‌ர், ந‌க்கீர‌னில் எல்லாம் வ‌ந்து வ‌ந்து புளித்துப்போய் ந‌டைமுறையாகிவிட்ட‌ ஒன்றாச்சே....! இதுபோன்று ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் க‌வ‌னிக்க‌ முடிகிற‌து அவ‌ரிட‌ம், த‌லைப்பு சார்ந்த‌ போதுமான‌ ஆய்வு இல்லாத‌தை.... அதேபோல் பேட்டியெடுக்கும்ப் போதும் சினிமா, அர‌சிய‌ல் என்றால் ஓரளவு ஓகே(அதுவும் தற்காலிக நிகழ்வுகளில்தான் ஸ்ட்ராங்காக இருக்கிறார்) அதுத‌விர‌ ம‌ற்ற‌ துறை சார்ந்த‌வ‌ர்க‌ளைப் பேட்டியெடுக்கும்போது அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி இன்னும் அதிக‌ ஆய்வுக‌ள் மேற்கொண்டு க‌ல‌க்க‌ வேண்டும் இவ‌ர்....சில‌கால‌ம் முன்பு இவ‌ர் எழுத்தாள‌ர் ஜெய‌காந்த‌னைப் பேட்டிக‌ண்ட‌ போது வெட்ட‌ வெளிச்ச‌மாக‌த் தெரிந்த‌து இல‌க்கிய‌ம் ம‌ற்றும் ஜெய‌காந்த‌னின் எழுத்துக்க‌ளோடுமான‌ இவ‌ர‌து ப‌ரிச்சிய‌மின்மை.....

ந‌ம்பிக்கை த‌ரும் ஒரு mighty wicket ஆக‌ உருவெடுத்து வ‌ருவ‌த‌ற்கான‌ ஸ்கோப் இருக்கிற‌து கோபிநாத்துக்கு அதை அவர் இன்னும் சிற‌ப்பாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌லாமே.....!!

கோபிநாத் போன்றோருக்கு அவ‌ர்க‌ளின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்....

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!! ;-)

நன்றி "யூத்ஃபுல் விகடன்"!!


இன்னொருமுறை யூத்ஃபுல் விகடனில் என் சிறுகதை ("சாபங்கள் பலிப்பதில்லை") வெளிவந்துள்ளது....
விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்!! :)


விக‌னில் ப‌டிக்க‌: CLICK HERE

நன்றி நன்றி நன்றி!! :-)

சாபங்கள் பலிப்பதில்லை : சிறுகதை


"இந்த நாடும் நாட்டுமக்களும் நாசமாய்ப் போகட்டும்" - பி.எஸ்.வீரப்பா (ஒரு திரைப்படத்தில்!)

மழைக்கால மத்தியாணம்...எப்பவும் புழுதிவாரி இறைக்கும் வாகனங்கள் "ஸீசனல் ஆஃபராக" சகதியை வாரிஇறைத்துச் சென்றுகொண்டிருந்தன.....அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், கருமமே கண்ணாய், கிடைக்கிற‌ "சைடு கேப்" பில் எல்லாம் புகுந்து மும்முரமாகத் தங்கள் தலைவனுக்கு ஏதோ விழா எடுப்பதாக‌ ஸ்பீக்கர்கள், தோரணங்கள்,ட்யூப் லைட்டுகள் மற்றும் ஃப்ளக்ஸ் போர்டுகள் நட்டுவைக்கும் கலாச்சாரப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் செயல்வீரர்கள்....

ரோட்டின்மேல் இருக்கும் ராசய்யா_____ன் (ஏதாவது ஒரு ஜாதி பேரை வைத்து கோடிட்ட இடத்தை நிரப்பிக் கொள்க) வீட்டு வாசல் கதவு முழுதுமாய்த் திறந்திருக்கிறது... வீட்டுக்குள் ஆள்நடமாட்டம் இருந்தவண்ணம் உள்ளது.... முன் அறையில் கொஞ்சம் பழசாகிவிட்ட‌ ஒரு மர சோபாவில் சற்று கண்ணயர்ந்தவனாய்த் தலைக்குக் கைவைத்து தூங்கிக் கொண்டிருக்கிறான் தருமராஜன்... உள் அறையில் உடைந்துபோய் அமர்ந்திருக்கிறார் சீதம்மாள்... அருகே சில பெண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.....

"யாரு....தருமனா இப்புடி சாய்ஞ்சு கிடக்குறான்... தேனி மாதிரி சுத்திட்டு இருப்பியேய்யா என் ராசாஆஆஆ...இப்புடி உடம்பு சோந்து கண்ணசந்து கிடக்குதியே.... உங்கப்பன் உன்ன‌ விட்டுட்டுப் போய்ட்டானேஏஏஏஏஏஏ......." என்று சவுண்டை ஸ்டார்ட்செய்து கை ரெண்டையும் விரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறார் அந்தக் கிழவி, "அடியே சீத.. எஞ் சீத...உன்னய தனியா விட்டுட்டு போக எப்புடிடீ மனசு வந்துச்சு அந்தப் பயலுக்கு??.... பாவிமக கண்ணுல கத்திய போட்டுப் படுக்க வெச்சுட்டாண்டீ அந்த பாழா போற டாக்டரு... பாவிமவன்.... மூஞ்சிபாக்க குடுத்துவெக்கலியே இந்த பாழாப்போற கண்ணுக்கு...." ஐயோ ஐயோ ஐயோ!! என்று நடுநடுவே மூக்கைச் சிந்திக்கொண்டு நெஞ்சில் அடித்து அழத்தொடங்கினாள் "கிழவி" என்று அழைக்கப்படும் தருமனின் பாட்டி... ராசய்யா_____க்கு பெரியம்மா முறைவேண்டும்.... கண் ஆபரேஷன் செய்து படுத்துக் கிடந்தமையால் ராசய்யா____ன் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரால் முடியாமல் போய்விட்டது (ஓ! அதைக் கிழவியே சொல்லிடுச்சோ!!) "கிழவி"யின் அலறலிலும் தருமனின் அயர்வு அகலவில்லை.... உடலும் மனதும் உளைந்துபோக அவனையுமறியாமல் தூங்கிக் கிடக்கிறான்.....

வீட்டிற்கு வெளியே.... செயல்வீரர்கள் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கும் விழா துவங்குகிற வண்ணமாய், இரண்டடி இடைவெளியில் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் எல்லாம் உயிர்பெற்றுப் பிளிரத் துவங்கின.... தெரித்துக் கண்விழித்தான் தருமன்.... சீதாம்மாளிடம் இருந்த கிழவி விழித்துவிட்ட தருமனை நோக்கி அழுதவண்ணம் எழுந்துவர... துக்கம் தீர்ந்தவனாய்க் கிழவியின் துஷ்டியைக் ஏற்று அமரவைத்தான் தருமன்.... இழவில் பங்கேற்று, சம்பிரதாயப்படி சொல்லாமல் சென்றுவிட்டு, இப்போது "கிழவி"யை அழைத்துக்கொண்டு வெள்ளையுஞ் சொள்ளையுமாய் வந்திருந்தார்கள் மாமன் மச்சான்கள்....

"சரி... நடந்தது நடந்துபோச்சு...."என்று ஒருவர் ஆரம்பித்தாக‌ வேண்டுமே....!!

தருமனின் தோள்மேல் கைவைத்து ஒருவர் பேச்சை ஆரம்பிக்க "இனி ஆகவேண்டியத பாக்கணும் இல்லையா..." என்று அடுத்தவர் தொடர்ந்தார்.... குடியிருக்கும் பங்காளிகள் ஆட்கொண்டு உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கும் ராசய்யா____க்கு சொந்தமான‌ பிரச்னைக்குரிய சில வீடுகளின் பத்திரங்கள் கிடைத்ததா?? என்று அக்கறையாகக் கேட்டு விசாரித்தார்கள்....

"ஒருவாரமா வீடு முழுசும் அலசியாச்சு...
எங்க வெச்சுட்டுப் போனாருன்னே தெரியல...."

"சொந்தக்காரப் பயபுள்ளகளா போயிட்டானுங்க.. இல்லைன்னா... போய் அவனுகள‌..." என்று ஒரு மச்சான் செண்டிமென்டலாக‌ சீற.....

"என்னய்யா சொந்தம்?? செத்த வூட்டுக்குக் கூட வராத பயலுகள போய் சொந்தம் கிந்தம்னு சொல்லிக்கிட்டு.." என இன்னொரு மச்சான் டென்ஷனானார்...

ஓர் ஆக்ஷன் சீக்வன்ஸ் மெல்ல உருவெடுக்கத் துவங்க "அமைதியா இருங்கப்பா.... ஆகுறதப் பேசுங்க.... " என்று 'கட்' கொடுத்தார் பெரியப்பா ஒருவர்...அவரே தொடர்ந்து "குருஜி கிட்ட கேக்குறதுதானே... பத்திரம், சாவியெல்லாம் எங்க வெச்சுருப்பாருன்னு.... மை வெச்சு கண்டுபிடிச்சுச் சொல்லிடுவாறே...." என்று ஓர் அறிவுப் பூர்வமான ஐடியாவை எடுத்து விட்டார்....

"குருஜி வீட்டுக்கு வந்து பாத்துட்டு, ஐயாவோட ஃபோட்டோ முன்னாடி உக்காந்து நம்பிக்கையா கேளுங்க... யார் கனவுலயாவது வந்து பத்திரம் இருக்குற எடத்த சொல்லுவாறு"ன்னு சொல்லிட்டுப் போய்ட்டாரு...." என்றான் இளைய மகன் வேலுராஜன்

" யய்யா... அப்பா கனவுல வந்தாராய்யாஆஆ..." என்று கிழவி கூவினாள்....

"தூங்குற முன்னாலயே இந்தப் பாட்டுச் சத்தத்துல முழிச்சிட்டேனே ஆத்தா...." என்று தருமன் கண்கலங்கினான்.....!!!

அப்போதும் கடும்சத்தமாய் வெளியே விழாக்கோலம் அலறிக்கொண்டுதான் இருந்தது.... "நாசமாப் போறவனுக......" என்று ஆரம்பித்து விழா அமைப்பினரையும்... விழா நாயகர்களையும் ஒட்டுமொத்தமாய் சபித்துத் தள்ளினாள் கிழவி.....

ரெண்டு நொடி அமைதியாய் ஏதோ நினைத்த தருமன்... வெகுண்டெழுந்தான்....

"ஒருபயலும் வேணாம்... நானே போறேன்.... எண்ணி ரெண்டே நாளு... அதுக்குள்ள பத்திரத்தக் கிரயம் பண்ணுறோம்.... அதுக்குள்ள அந்த வீட்டுல இருக்குறவனெல்லாம் தலதெறிக்க ஓட விடுறேன்.... யாருகிட்ட சொல்லி, எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எனக்குந் தெரியும்...." என்று தருமன் வெடித்துக் கிளம்பினான்....

அவன் கிளம்பும் முன்னமே.... உள் அறையிலிருந்து ஈனஸ்ருதியில் ஓர் ஒலி வந்தது... "வேணாம் தருமா... வேணாம் ராசா....பழியெல்லாம் உங்கப்பாவோட போவ‌ட்டும்... வீட்டுல இருக்குறவுகள‌ அடிச்சு விரட்டித் தெருவுல நிக்கவெச்சு அவங்க வாயில வுழ வேணாம்யா....யாரு வாயிலும் வுழ வேணாம்யா... இனிமேலும் வேணாம்யா ஏச்சும் பேச்சும்..." திடீரென்று அழத்துவங்கினார் தருமனின் தாய் சீதம்மா....

வெடித்துக் கிளம்பிய‌ தருமனின் காதில்வந்து விழுந்தது தாயின் விம்மல்.....

வேறுசில தொழில்களும் செய்திருந்தாலும் சாதாரண ராசய்யாவாக இருந்தவர் ஊர் போற்றும் ராசய்யா_____ஆக மாறியது என்னவோ வட்டிக் கொடுத்து பிழைக்க ஆரம்பித்த பின்புதான்... நிலத்தின்பேரில் கொடுக்கப்பட்ட சில வட்டிக் கடன்கள் அசலைப் பணமாய் அன்றி நிலமாகவே திருப்பிப் பெற்றுத்தந்தன‌.... வராக் கடன்களை வசூலிக்க அவர் மேற்கொண்ட சில காரியங்கள் கல்லடிபடாத ராசய்யாவுக்கு சொல்லடிகள் வாங்கிக்கொடுத்தன... கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்க சுனாமிபோல் வந்து சூழ்ந்த‌ சுற்றமும் நட்பும், உச்சவரம்பை மீறிய சொத்துகளுக்கு பினாமிகளாய் மாறின‌.... வளர்பிறையெல்லாம் முடிந்து கோர்ட்டு கேஸ் என்று தேய்பிறை துவங்க "பாவம்....ந‌ல்லா வாழ்ந்த குடும்பம்" என்று ராசய்யாவின் இறந்தவீட்டில் வந்தவர்கள் சிலர் 'உச்' கொட்டும் அளவுக்கு ராசய்ய தலைவிழும் முன்னே செழித்துக் கொழித்த காலமெல்லாம் இறந்தகாலாமாகிப் போனது...... பத்திரங்களைக் கைப்பற்றி பிரச்னைக்குரிய வீடுகளையெல்லாம் விற்றே தீர வேண்டிய பொருளாதார நிர்பந்தத்தில் இப்போது மூத்தவன் தருமன்....

பலபேர் வாயில் விழுந்து சாபங்களைக் கட்டிக் கொண்டதன் பலன்தான் இப்படி ஊர்போற்ற வாழ்ந்த வீடு தூண் விழுந்து கிடப்பதாகப் பலரும் காதுபடவே பேசினார்கள் இறந்த வீட்டில்.... சீதாம்மாளின் நம்பிக்கையும் இதுதான்.... நல்ல பணம், கெட்ட பணம், பாவப்பட்ட பணம் என்றெல்லாம் பணத்தில் வகையுண்டு என்று இன்றும் ஸ்திரமாக நம்பும் பழி பாவத்துக்கு அஞ்சும் குடும்பத்தலைவி சீதாம்மாள்....

சீதாம்மாளின் அழுகை மற்றும் மூணாம் கிளாஸ், நாலாம் கிளாஸில் எப்போதோ வாத்தியார்கள் சொல்லக் கேள்விப் பட்டிருந்த‌ நியாயம், தர்மம் போன்றவை சார்ந்த உணர்வுகள் எல்லாம் சின்ன வேகத்தடை போட்டாலும் பொங்கிவந்த வேகமும் கோபமும் குறையுமுன்னமே சீற்றத்தோடு கிளம்பினான் தருமன்..... செல்ஃபோனில் யாரையோ அழைத்து காட்டமான சில காரியங்களை செய்துமுடிக்கும் வியூகங்களோடு உத்தரவுகளைப் பிறப்பித்தான்.... சீதம்மாளுடன் சேர்ந்து "வேணாம் ராசா...." என்று கோரஸ் போட்ட அவன் வீட்டுப் பெண்களின் ஓலம் வண்டியைக் கிளப்பிச் செல்லும்வரை அவன் காதில் விழந்துகொண்டுதான் இருந்தது.....

தூக்கம் விழித்த குழந்தைபோல விசும்பிக்கொண்டிருந்தது வானம்..... முந்தைய நாள் பெய்த மழையால் தேங்கிக்கிடந்த தண்ணீரும் சுற்றிச் சூழுந்துள்ள சகதிக்கும் நடுவே விடாது ஹார்ன் அடித்து.... கிடைக்கும் சந்தடியில் நுழைந்து செல்ல‌ வாகனங்கள் போராடிக்கொண்டிருந்த‌ சூழல், அதே சாலையில் வண்டிக்குள் சூடாய் அமர்ந்திருக்கும் தருமனுக்கு இன்னும் கொஞ்சம் வெறியேற்றுவதாய் இருந்தது.... வழிநெடுக ஸ்பீக்கர்கள் அலறவிடப் பட்டிருக்கின்றன‌... மழைமேகம் சூழ்ந்து வானம் கொஞ்சம் கறுத்துவிட்டதாம், ஸோ மதியம் மூணு மணிக்கே ரோட்டின் ஓரங்களில் நட்டுவைத்திருக்கும் ட்யூப் லைட்டுகளை ஒளிர வைத்துவிட்டார்கள்..... மழைபெய்யும் நேரம் ஓபன் லைனில் கரண்ட் எடுத்து லைட்டு களை எறிய வைத்திருந்தார்கள்..... ஷாக் அடித்து செத்தால் அவர்கள் தலைவனுக்கா நஷ்டம் என்று வழிநெடுக மக்கள் கூட்டம் மண்டையிலடித்துக் கொண்டு சென்றது...... அதே தலைவர் தன் காதில் செல்ஃபோனை வைத்துக்கொண்டு "ஙே" என்று பல்லைக்காட்டி சிரித்தவாறு போஸ் கொடுத்திருந்த ஒரு பிரம்மாண்ட க்ளோஸ் அப் ஷாட் ஃபோட்டோவை கிட்டத்தட்ட இருபதடி உயரத்தில் ஃப்ளக்ஸ் போர்டாகக் கட்டிக்கொண்டிருந்ததில் பேருந்து ஒன்று செல்ல முடியாமல் நிற்க.... ரோட்டில் டிராஃபிக் ஜாம்....

டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட தருமனின் மனதில் வெவ்வேறு விதமான சிந்தனைகளும் நினைவுகளும் அலையடித்த வண்ணமிருந்தன ... உடனிருந்த மச்சான்கள் இறுக்கமாய் அமர்ந்திருக்க.... தருமனின் காதில் இன்னும் "வேணாம் தருமா..." என்று சாபத்துக்கு அஞ்சிய‌ சீதம்மாளின் அழுகுரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் தந்தை வாங்கிக்கட்டிக் கொண்ட சாபங்களும் அடுத்தடுத்து காட்சிமாறிய வாழ்க்கையும்கூட மனதில் வேகமாய் ஓடியது......அதேநேரம் அந்த வீட்டில் குடியிருப்பவர்களை இன்றே அடித்துத் துரத்தும் வெறியும் குறைவின்றி எக்காளமிட்டது....

விழா நாயகர் தலைவருக்கு ஒருபுறம் சிங்கிள் போஸ்... மறுபுறம் அவர் ஃபேமிலி ஃபோட்டோ...இன்னொருபுறம் ஒரு சிங்கத்தின் உடலில் அதன் தலைக்குப் பதிலாக தலைவரின் தலையை மார்ஃபிங் செய்து ஒன்று என்று ஃப்ளக்ஸ்களாக அடுக்கி வைத்திருந்தார்கள் உயிரினும் மேலான தொண்டர்கள்... வைப்பரை இயக்குமளவு இப்பொழுது மழை பெய்தது.... இந்த அரசியல் அலப்பறைகளால் இடர்பட்டுக் கிடக்கும் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டு நனையத் துவங்கிய மக்கள் எல்லாரும் கடுப்பில் நெழியத்துவங்கினார்கள்....

வெறுப்பின் உச்சத்தில் வேக ஆரம்பித்த தருமன் காரின் ஜன்னலைக் கீழே இறக்கினான்.... காதைப் பிளக்கும் ஸ்பீக்கர் சத்தத்தையும் தாண்டித் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது பொதுஜனம்... டிராஃபிக் போலீஸ் படாதபாடுபட்டு அந்த பஸ்ஸை ஒருவழியாக நகர்த்த... டிராஃபிக் ஜாம் மெல்லக் கலையத் துவங்கியது..... இங்கு கலவரமே நடந்து ஓய்ந்தாலும் கொஞ்சமும் கவலை இல்லாமல் ரோட்டு ஓரங்களில் தலைவரின் மனைவியின் ஆளுயரப் போஸ்டர் ஒன்றில் கோந்து தடவி அவர் படத்தைச் சுவரில் நிறக வைத்து ஆறுபேர் சேர்ந்து தேய் தேய் என்று தேய்த்து ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள்..... கூட்டம் கலைந்து, போவோர் வருவோர் எல்லாருமே தலைவர் "ஙே" என்று சிரிக்கும் அந்த பிரம்மாண்ட கட்‍‍‍=அவுட்டைப் பார்த்து மண்ணை வாறி தூற்றாத குறையாய் சபித்துச் சென்றனர்.....

வண்டி நகர ஆரம்பித்தவுடனே ஜன்னலை மூடிய தருமன் மெலிதாக சிரித்தான்... "ஏன்டா...இவனுகள‌ ஊரே சபிக்குது...ஆனா எவனுக்கு என்ன ஆகியிருக்கு?? யாரோ ரெண்டு பேர் சாபத்துல நான் அழியப்போறேன்னு பயப்படுறாளே என் ஆத்தா!!!.." என்று சொல்லி "வேகமா விடுறா வண்டிய..." என்று ஓங்கி முழங்கினான் தருமன்.... சீதம்மாளின் அழுகுரல் இப்பொழுது அவன் காதில் ஒலிக்கவில்லை.....

சாபங்கள் பலிப்பதில்லை???!!!! :-)


The Shawshank Redemption (1994)


The Shawshank Redemption

படம் வெளிவந்த ஆண்டு: 1994
இயக்கம்: Frank Darabont
க‌தை: Stephen King
ந‌டிப்பு: Tim Robbins, Morgan Freeman

இதோ இந்த நொடி, பூமி தன்னைத்தான் சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டிருக்கிறது.... இன்றும் இரவும் பகலும் ஏற்பட்டதால் இதை நான் நம்புகிறேன்.... ஜன்னலுக்கு வெளியே இருக்கும் பெயர் தெரியாத பெரிய மரம் ஒன்று இன்றும் ஓர் அங்குலமாவது வளர்ந்திருக்கும்... பாத்ரூமில் வாழும் சிலந்தி இன்றும் தன் எச்சிலால் தனது கூட்டின் கட்டுமானத்தில் மேலும் ஒரு வரிசைப் பின்னியிருக்கும்.... சுற்றுவது தன் தொழில் என்று பூமிக்கும், வளர்வது தன் தொழில் என்று மரத்துக்கும், உறைவிடம் அமைப்பது தன் தொழில் என்று சிலந்திக்கும் தெளிவாகத் தெரியும்... சுற்றி என்ன நடந்தாலும்... எத்தனைத் தடங்கல்கள் வந்தாலும் தன் தொழிலை அவை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை.... தங்கள் இலக்குகளை மறந்திடப் போவதில்லை....!! சுற்றிய பாதையையே மீண்டும் மீண்டும் பைத்தியக்காரத்தனமாகச் சுற்றிவரும் பூமிப் பந்தின் உருளைப் பயணத்துக்கு என்ன இலக்கு இருக்கப் போகிறது....?? நிச்சியம் ஒரு பிரம்மாண்ட இலக்கு இருக்கக்கூடும்.... அது சுற்றுகின்ற பூமிக்குத்தான் தெரியும்..... இலக்கு ஒன்று இன்றி எந்தவொரு பயணமோ அல்லது அசைவோ கூட சாத்தியமல்ல....!! இலக்கை அடைந்து வெற்றிகொண்டபின் செயல்களுக்குக் காரணங்கள் கிடைக்கலாம் பார்வையாளனுக்கு!!

"இலக்கு" எனும் முக்கியத்துவம் வாய்ந்த‌ வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை அறுதியிடும் இந்தப் படம் ஒரு வெற்றிப்படம் அல்ல.... தியேட்டரில் அரங்கு நிறைந்து ஓடாத இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் அரங்கிலிருந்த அனைவரும் எழுந்துநின்று ஆர்ப்பரித்திருக்க வாய்ப்பில்லை.... ஆனால் படம் பார்த்த அனைவருக்குமே அந்த உச்சக்காட்சியில் உடலில் இருக்கும் ஒவ்வொரு மயிரும் எழுந்துநின்று புல்லரித்துதான் அடங்கியிருக்கும்!!

ஷாஷாங்க் சிறைச்சாலையில் சுமார் இருபத்தியிரண்டு ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஸ்மக்ளர், "ரெட்" என்று படத்தில் அழைக்கப்படும் மார்கன் ஃப்ரீமேனுக்கு "பரோலில்" வெளிவர அனுமதி தொடர்ந்து மறுக்கப் படுகிறது.... அதே வேளையில் (கள்ளக்)காத‌ல‌னுட‌ன் உல்லாச‌மாக‌ இருக்கும் ம‌னைவியையும் அவள் காதலனையும் போதையில் சுட்டுக்கொன்ற‌தாக‌ கௌர‌வ‌மான‌ "பேங்க‌ர்" (Banker) டிம் ராபின்ஸ் அதே சிறைச்சாலையில் இர‌ண்டு ஆயுள்த‌ண்ட‌னைக‌ளைத் தொட‌ர்ச்சியாக‌ அனுப‌விக்க‌ ச‌ட்ட‌த்தால் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டு குற்ற‌வாளிக‌ளுட‌ன் ஷாஷாங்க் சிறைச்சாலைக்குள் அடியெடுத்து வைக்கிறார்.....

இந்த‌ ஆர‌ம்ப‌க்காட்சிக‌ளிலேயே....ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்த‌ல‌ங்களான "சிறைச்சாலைகள்" எல்லாம் யாரோ குற்ற‌வாளிக‌ளுக்கு ம‌ட்டும்தான், என்று "ந‌ல்ல‌வ‌ர்"க‌ளாக‌ ஒதுங்கிக்கொள்ளும் நமக்கு, நம்மைப் போலவே ஒரு சாதாரணமான, கவுரவமான மனிதன்(டிம் ராபின்ஸ்) உணர்ச்சிவேகத்தில் செய்துவிட்ட குற்றத்துக்காக‌ அந்த‌ சாத்தான்க‌ளின் தேச‌த்துக்குள் வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ குடிம‌க‌னாய் ஒரு கைதி வேடம் தரிக்கும்போது, அந்தக் காட்சிக‌ளின் ரிய‌லிசம்.... சிறை ம‌ற்றும் வாழ்வின் அடிப்ப‌டை ச‌ட்ட‌ங்க‌ளை எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் ஒருமுறை நினைத்துப் பார்க்க‌ வைக்கிறது நம்மையும் ஒரு குற்றவாளியாய், அந்த வலியுடன்..!

மனிதக் கனவுகள் எல்லாம் நீர்த்துப்போகும் ஜெயில் ஒன்றில் சுமார் முப்ப‌தாண்டுகால‌ த‌ண்ட‌னை அளிக்க‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ன் தன் வாழ்வின் எதிர்காலத்தைக் க‌ன‌வு காண்கிறான்...!!! அதுவும்... மெக்ஸிகோவின் எழில்வாய்ந்த‌ ப‌சிஃபிக் பெருங்க‌ட‌லோர‌ம் சென்று செழிப்பாய் இயற்கையோடு இணைந்து ம‌னித‌ர்க‌ள் அண்டாத ஓர் அழ‌கு வாழ்வு வாழ்வ‌து, என்று ஒரு கலர் கனவு....!!

"இல‌க்கு" மற்றும் "க‌ன‌வு" .... அடிக்க‌டி ஒன்றாக‌ ந‌ம்ப‌ப்ப‌டும் இந்த‌ இருவேறு வார்த்தைக‌ளின் அர்த்தரீதியிலான வித்தியாச‌ங்க‌ளை நான் விரும்பிப் படித்த‌ ஒரு ம‌ன‌வ‌ள‌ நூலில் பின்வருமாறு ப‌டித்திருக்கிறேன்.....


"இல‌க்கு" என்பது...... ச‌ரியான‌ திட்ட‌மிடுதல், அறிவாற்றல், மற்றும் உழைப்பின் ப‌ல‌னாய் ஒருவ‌ன் நியாய‌மாய்த் தன் வாழ்நாளில் அடைய‌க்கூடியதாய்க் கிரகிக்கும் தூர‌ம்..

"க‌ன‌வு"... தொடுவான‌ங்க‌ளையும் தாண்ட‌க்கூடிய‌... லாஜிக் தேவைப்ப‌டாத‌... காரிய‌மாற்றிக் காட்ட‌ வேண்டாத‌ சௌக‌ரிய‌ம்...!!! கனவுலகிலேயே வெற்றிகளையும் களிப்புகளையும் ஏன் சாதனைகளைக் கூட‌ அனுபவிப்பதும் சாத்தியம்!!

இங்கு இந்த சிறைக்கைதி தன் "கடலோற‌ ச‌ந்தோஷ வாழ்வு" என்னும் க‌னவையே ஓர் இல‌க்காக, அதாவ‌து நியாய‌மாக‌த் த‌ன் திட்ட‌மிட‌லாலும், அறிவாலும், கடின‌ உழைப்பாலும் அடைந்துவிட‌க் கூடிய‌ ல‌ட்சிய‌மாக‌க் கொண்டு யாரும் க‌ன‌விலும் நினைத்துப்பார்க்க‌த் துணியாத‌தை... விடாம‌ல் முய‌ன்று நிஜ‌த்தில் சாதித்துக்காட்டும் அதிசிய‌ம்தான் ப‌ட‌ம்!!!

சிறைவாழ்வின் ஆர‌ம்ப‌ இன்ன‌ல்க‌ள்.... ஜெயில் சிநேக‌ம்.... ஜெயிலுக்குள் இருந்துகொண்டே வெளிஉல‌கத் தொட‌ர்பால் உள்ளே "வியாபார‌ம்" ந‌ட‌த்தும் சுவார‌ஸ்ய‌ம்..... ஜெயில‌ர், வார்டன்க‌ளின் காட்டுவாசி ம‌னோபாவ‌ம்..... என்று உருளும் ப‌ட‌த்தில்....

சிறைக்குள்ளேயே, கைதிகள் கேட்கும் "அதிசியப் பொருள்"களை சிறைச்சுவர்களையும் தாண்டிய தன் செல்வாக்கின் (!) மூலம் வாங்கிக் கொடுத்து அமோக‌மாக‌ வியாபார‌ம் ந‌ட‌த்திவ‌ரும் மார்க‌ன்ஃபரீமேனிட‌ம் "Rock Hammer" என்ற‌ழைக்க‌ப்ப‌டும் ஊசிபோன்ற கூரான‌ ஒரு சின்ன‌ உளி வேண்டுமென‌ உள்ளே வந்து சில நாட்களிலேயே கேட்டுவாங்குவார் டிம் ராபின்ஸ்..... க‌ற்க‌ளில் சின்ன‌ச் சின்ன‌ உருவ‌ங்க‌ள் செதுக்குவது தன் ஹாபி என்று சொல்லி....!! அடுத்த சில காட்சிகளில் சிறு சிறு கல்பொம்மைகள் அவ‌ர் செல்லின் ஜ‌ன்ன‌ல் க‌ம்பியிடுக்குகளில் அடுக்கப்பட்டிருக்கும்!!!!

ஒருக‌ட்ட‌த்தில், த‌ன் வ‌ருடாந்திர‌ வ‌ருமான‌ வ‌ரியைத் தாக்க‌ல் செய்ய‌க் குழ‌ம்பும் ஜெயில‌ருக்குத் த‌ன் அபார‌மான‌ Banking திற‌மையால் அந்த‌ வ‌ருட‌த்துக்கு "Tax Free" ப‌ண்ணித்த‌ருகிறார் டிம் ராபின்ஸ்.... அந்த‌ப் புக‌ழ் ஜெயிலெங்கும் ப‌ர‌வ‌.... ஜெயிலின் நூல‌க‌த்தில் லைப்ர‌ரிய‌ன் வேலை த‌ர‌ப்ப‌ட்டு அங்கேயிருந்த‌வாறு போலீஸ்கார‌ர்க‌ளுக்கு வ‌ருமான‌ வ‌ரி ஆலோச‌கராக‌க் கிள‌ப்புகிறார் டிம்.... தனி அறையும், ஜெயிலில் தன் அறைச்சுவரில் மார்லின் ம‌ன்றோ புகைப்ப‌ட‌ம் ஒட்டிக்கொள்ளும் ச‌லுகையும் இல‌வ‌ச‌ இணைப்பாகக் கிடைக்கிற‌து!!

கொம்பு முளைத்த‌ சாத்தானாய் ஜெயிலின் வார்ட‌ன்.... கைதிக‌ளின் உழைப்பைத் த‌ன் சொந்த‌ லாப‌த்துக்கான‌ ஒரு க‌ட்டுமான‌ வேலைக்குப் ப‌ய‌ன்ப‌டுத்தி அந்த‌ப் ப‌ண‌த்தை "வெள்ளைப் ப‌ண‌மாக‌" வெளியே சேர்க்க (Money Laundering) அடிமை டிம் ராபின்ஸின் மாஸ்டர் ப்ளானை உப‌யோகிக்க முன்வ‌ருகிறான்.... டிம் ராபின்ஸின் திட்ட‌ப்ப‌டி Randall Stephens எனும் இல்லாத ஒரு ம‌னிதன் பேரில் வெளுப்பான‌ ப‌ண‌ம் சேமிக்க‌ப் ப‌டுகிற‌து.....

டிம் ராபின்ஸின் தொட‌ர் முய‌ற்சியால் ஒரு க‌ட்ட‌த்தில் நாட்டின் சிறந்த‌ ஜெயில் நூல‌க‌மாக‌ டிம் ராபின்ஸால் ப‌ழுது பார்க்க‌ப்ப‌ட்ட‌ அந்த‌ நூல‌க‌ம் தேர்வாகிற‌து!!

கிட்ட‌த்த‌ட்ட‌ இருப‌து வ‌ருட‌ங்க‌ள் ஓடிப்போகிற‌து.....இப்போது டிம்மின் அறையில் ம‌ர்லினுக்குப் ப‌தில் அப்போதைய லேட்டஸ்ட் கவர்ச்சிக்கன்னி ரேச்சுல் வெல்க் கின் க‌வ‌ர்ச்சிப்ப‌ட‌ம் ஒட்டப்ப‌ட்டுள்ள‌து!!! அடிக்க‌டி ந‌ண்ப‌ன் மார்க‌ன் ஃப்ரீமேனிட‌ம் த‌ன்னுடைய‌ ப‌சிபிக் க‌ட‌லோர‌க் க‌ன‌வு வாழ்க்கையை ர‌சித்துக் கதைக்கிறார் டிம் ராபின்ஸ்..... Money Laundering வெற்றிக‌ர‌மாய்த் தொடர்ந்துகொண்டிருக்கத்.... திடீர் திருப்ப‌மாக‌... இன்னொரு கைதி ஒருவன் மூல‌ம் உண்மையில் த‌ன் ம‌னைவியை சுட்டுக்கொன்ற‌து டிம் இல்லை என்று போதையில் தான் கொன்ற‌தாக‌ ந‌ம்பும் டிம்முக்கு ஆதார‌ப் பூர்வ‌மாக‌த் தெரியவருகிறது...!!

வார்ட‌னிட‌ம் கெஞ்சுகிறார் தன் விடுத‌லைக்காக‌.... ஆனால் த‌வ‌றான வழியில், இர‌ட்டை ஆயுள் கைதி டிம்மின் உட‌ந்தையுட‌ன் பெரும்ப‌ண‌ம் பார்த்திருக்கும் வார்டனோ அவ்வ‌ள‌வு சுல‌ப‌மாக‌ மாட்டிக்கொள்ள‌ விரும்பாம‌ல் டிம்மை ஓர் இருட்ட‌றையில் அடைத்து மேலும் த‌ன‌க்கு ப‌ண‌ம் ஈட்ட‌ உத‌வுமாறு துன்புருத்துகிறான்... அதும‌ட்டுமின்றி.. டிம்முக்கு ஆத‌ர‌வாக‌ சாட்சி சொல்ல‌ முன்வ‌ந்த‌ அந்த‌ இள‌ம்கைதியை வார்ட‌ன் மற்றும் ஜெயில‌ர் இணைந்து கொன்றும் விடுகிறார்க‌ள்....

முடிந்துபோன‌ அத்தியாய‌மாய் மீண்டும் வார்டனுக்கு ஆதரவாய்த் த‌ன் க‌ருப்புப் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்ட‌ச் ச‌ம்ம‌திக்கும் டிம் ராபின்ஸ் திடீரென்று ஒருநாள் காலையில் அந்த‌ச் சிறையில் இருந்து காணாம‌ல் போகிறார்!!!

அவ‌ரின் அறையில் இர‌வு அடைக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் எப்ப‌டி மாய‌மாக‌ ம‌றைந்திருக்க‌க் கூடும்??? என்று பூட்டப்பட்ட அந்த செல்லுக்குள் நின்று வார்ட‌ன் குழம்பி...டிம்மின் அறையில் க‌வ‌ர்ச்சியாய் போஸ் கொடுக்கும் ரேச்சுல் வெஸ்க்கின் ப‌ட‌த்தில் ஒரு க‌ல்லை ஓங்கி எறிய, அந்தக் காகித‌ப் பட‌த்தின் பின்னே சுவ‌ர் இன்றி படத்தில் ஓட்டை விழுகிற‌து.... ப‌ட‌த்தை விலக்கிப்பார்த்தால் சுமார் முப்ப‌து மீட்டர் தூர‌த்துக்கு சுவ‌ர் குடைய‌ப் ப‌ட்டிருக்கிற‌து!!! க‌ற்க‌ளில் சிற்ப‌ம் செதுக்க‌ப் ப‌ய‌ன்ப‌டும் "உளி" கொண்டு குடைந்த‌ சுர‌ங்கப்பாதை அது!!

ஒரு குண்டூசியைவிடக் கொஞ்சமே வ‌லிமையான‌ கூர் ஆயுத‌ம் அந்த‌க் க‌ல்லுளி.. அதைவைத்து இத்த‌னை நீள‌மான‌ ஒரு சுர‌ங்க‌த்தை உருவாக்க‌க் குறைந்தது முந்நூறு ஆண்டுக‌ள் ஆகும் என்று கூறுவார் ப‌ட‌த்தின் "Story Narrotor"!!! ஆனால் டிம் ராபின்ஸ், வந்த நாள்தொட்டு, இர‌வெல்லாம் தூங்காம‌ல்..... சுமார் இருப‌து ஆண்டுகாலம் விடாம‌ல் தோண்டி அந்த சுர‌ங்க‌ப்பாதை அமைத்திருப்பார்......

அந்த‌ சுர‌ங்க‌த்தில் ஊர்ந்து ஊர்ந்தே கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு கிரிக்கெட் பிட்ச்சின் தூர‌த்திலான..... கைதிக‌ளின் ம‌ல‌ம் ம‌ற்றும் சிறுநீர் வெளியேறும் செப்டிக் டேங்க்கில் மூச்சு விட‌முடியாத‌ கொடூர‌ துர்நாற்ற‌த்தினிடையே த‌வ‌ழ்ந்து த‌வ‌ழ்ந்து வெளிஉல‌கை அடைவார் டிம்!!!

ஒரு ம‌ழையில் த‌ன்னைக் க‌ழுவிக்கொண்டு ஜெயில் வார்ட‌னின் ஊழ‌லுக்கு ஏதுவாய்த் தான் உருவாக்கி வைத்திருக்கும் நிழ‌ல் ம‌னித‌ன் Randall Stephensஆக‌ அவ‌தார‌ம் த‌ரித்து அவ‌ன்பேரில் போட‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ல‌ மில்லிய‌ன் டால‌ர்க‌ளைத் த‌ன‌தாக்கிக் கொண்டு மெக்ஸிகோ நாட்டின் ப‌சிஃபிக் கோஸ்ட்டை நோக்கிக் காரில் சென்றுகொண்டிருப்பார் டிம் ராபின்ஸ்........

ஊழல் வெளியாகிவிட அவமானத்தில் துப்பாக்கிக் குண்டுகளுக்குத் தன்னையே இரையாக்கிக் கொள்கிறான் வார்டன்!!!

சிறு உளியின் கூர்முனையால் சுவ‌ற்றைச் சுர‌ண்டி மெல்ல‌ மெல்லத் தான் க‌ண்ட‌ க‌ன‌வுக‌ளையே சாத்திய‌மாக்கிவிட்ட‌ ஜெயில் ந‌ண்ப‌ன் டிம் ராபின்ஸிட‌மிருந்து ஒரு ம‌ட‌ல் வ‌ருகிற‌து மார்க‌ன் ஃப்ரீமேனுக்கு!!! த‌ன் க‌ன‌வுப் பிர‌தேச‌த்தை ந‌ண்ப‌ன் அடைந்துவிட்டான் என்று அறிந்துகொள்ளும் ஃப்ரீமேனுக்கு நாற்ப‌து ஆண்டுகால‌ம் சிறைக்குப் பிற‌கு தொட‌ர்ந்து ம‌றுக்க‌ப்ப‌டும் "ப‌ரோல்" கிடைக்க‌ மெக்ஸிகோவுக்குப் ப‌ய‌ண‌மாகிறார் ஜெயில் சிநேக‌ம் தேடி.....

ப‌சிஃபிக் க‌ட‌ற்க‌ரையில் இரு ந‌ண்ப‌ர்க‌ளும் க‌ட்டித் த‌ழுவிக்கொள்ள‌ ம‌யிர்க்கூச்சரிய‌ முடிகிற‌து The Shawshank Redemption!!!

இன்று ப்ளாக்ஸ்பாட்டில் எழுத்துப் ப‌யிலும் என்போன்ற‌வ‌ர்க‌ள் ம‌ன‌தில் இன்னும் ப‌த்து அல்ல‌து இருப‌து முப்ப‌து ஆண்டுகளுக்கு மனதுக்குள் "மெகா கனவுகள்" வைத்திருக்கலாம்.... "கனவை" அதன் வாய்ப்புகளுடனும் சாத்தியங்களுடனும் தெளிவு ப‌டுத்திக்கொண்டால் இல‌க்கும் க‌ன‌வும் ச‌ங்க‌மிக்கும் வாழ்விய‌ல் அதிசிய‌ம் சாத்தியமாகும் என்று சாட்சி ப‌க‌ரும் பட‌ம் இது!!

ஏற்கெனவே எழுதியிருப்பது போல் வெறும் மேல்தோலின் மயிர்க்கால்களுடன் சாகசம் புரியும் வெகுஜனப் படங்களைவிட, இதைப்போல் அம் மயிர்க்கால்களினூடே உள்ளிறங்கி செல்களில் செய்தி பதித்திடும் படங்கள்தான் என்னை மேலும் மேலும் கவர்கிறது.... அந்த வகையில் மறக்க முடியாத திரைப்படம் எனக்கு!!



இது "க‌ந்த‌சாமி" திரைவிம‌ர்ச‌ன‌ம் அல்ல‌!


இது "க‌ந்த‌சாமி" திரைவிம‌ர்ச‌ன‌ம் அல்ல‌!!

"கந்தசாமி" ... நொந்தசாமி... கந்தல் சாமி.... எனப் பதிவுலகம் துவங்கிப் பத்திரிக்கை உலகம் வரை டார் டாராகக் கிழிக்கப்பட்டுவரும் இந்தப் படத்தை வந்த அன்றே பார்த்தாகிவிட்டது!

இந்தமாதத்திலிருந்து கொஞ்சம் ஜரூராக எழுதிவருவதால்... "கந்தசாமி: விமர்சனம்" என்று ஓர் இடுகை இன்று இரவு எழுதுவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் என்ற‌ உற்சாகத்தோடு நண்பர்களுடன் கிளம்பிப்போனேன்.... படம்பார்த்து வந்தவுடன் கணிணியைத் திறந்து ஒரு விமர்சனத்தையும் தடதடவென கொட்டித் தீர்த்துவிட்டேன்..... மூன்று மணிநேரத்துக்கும் மேலாகப், படத்தின் வில்லன்களை விட அதிகமாக அடிவாங்கிய கோபத்தில், பதிலடிகளை வெடித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்..... அப்போது ஏதோவொன்று மனதுக்குள் தோன்ற அந்த இடுகையைப் பதியாமலேயே விட்டுவிட்டேன்....

வேறென்ன..... "இன்னா செய்தாரை ஒறுத்தல்..." திருக்குறள்தான் மனதுக்குள் தோன்றியது!!!...... "நன்னயம் செய்து விடல்" என்று பாஸிடிவ்வாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கலாமே (விகடனைப் போல!) என்று கூடத் தோன்றியது ஆனால் ஒரு பாவமும் அறியாத என் நண்பர்களுக்கு இன்னா செய்தலையும் நான் விரும்பவில்லை...... அவர்களாகவே ஆசைப்பட்டு ஆளுக்கொரு தியேட்டரில் அகப்பட்டு யான்பெற்ற "இன்பத்தை"த் தானும் பெற்று ஐ.எஸ்.டி கால்போட்டு எனக்கு அர்ச்சனைகள் செய்தபின்தான் இதையும் எழுதுகிறேன்.....!! எப்படியோ எந்தப் பாவத்திலும் எனக்குப் பங்கில்லை!!!

இனிமேல் "விமர்சனம்" எழுதப்போவதில்லை என்று நினைத்திருக்கிறேன்.... எதற்கு விமர்சனம்....?? சினிமா பார்க்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம்.... எனது "காரணங்களை"த் தெளிவுபடுத்திக் கொள்ள உதவியமைக்குக் "கந்தசாமி"க்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்!! இத்தனைக்கும் நான் எந்த மரத்திலும் எதுவும் எழுதிவைக்கவில்லை.... தானாக வந்து வேண்டிய வினைதீர்த்தார் கந்தஸ்வாமி!!

நிச்சிய‌ம் ப‌ட‌ங்க‌ளில் ந‌ல்ல‌ப‌ட‌ம் கெட்ட‌பட‌ம் என்று எதுவும் இல்லை.... என‌க்குச் சின்ன‌ வ‌ய‌து க‌ன‌வு ஒரு திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ராவ‌து என்ப‌து!! அந்த ஆர்வத்தில் "திரைக்க‌தை" என்னும் ம‌ந்திர‌த்தைத், திரையுலக வாசம் கொஞ்சமுமின்றிப் புத்த‌க‌ங்க‌ளாலும், சினிமாக்க‌ளாலும் ப‌யில‌த் தொட‌ர்ந்து முய‌ற்சித்து வ‌ருகிறேன்.. அட‌ ரெண்டு ஸ்க்ரிப்ட் கூட‌ வைத்திருக்கிறேன்!!

1) INT Day / xxxxxx

Fade in

xxxx xxxxx xxxxx

என்றெல்லாம் பக்கா Proffessional ஆக "முவீ மேஜிக்" சாஃப்ட்வேர் வைத்தெல்லம் நாங்க‌ திரைக்கதை எழுதியிருக்கோம்ல‌!!!

இப்ப‌டியெல்லாம் ப‌ம்ப் அடித்தாலும்.... பீட்டர் விட்டாலும்.... திரையுல‌க‌த்துக்கு வெளியே இருந்துகொண்டு திரைப்ப‌ட‌ம் ப‌யிலமுயற்சிப்பது, அஞ்ச‌ல்வ‌ழியில் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ம‌மான‌ காமெடிதான்... தெரிந்திருந்தும் ஏனோ நான் இன்றுவரையிலும் கோட‌ம்பாக்க‌த்துக்கு ஒரு கேஷுவ‌ல் விசிட் கூட‌ அடித்த‌தில்லை.... ஆனாலும் இன்றுவரை யார்கேட்டாலும் த‌வ‌றாம‌ல் சொல்லும் ப‌ஞ்ச் ட‌ய‌லாக்....

"நாங்க‌ளும் வ‌ருவோம்ல...!!" என்ப‌துதான்!!
ஹி ஹி ஹி.... கிடக்கட்டும்... அது த‌னிக‌தை.....

ஸோ ப‌ர்ச‌ன‌லாக‌ நான் "க‌ந்த‌சாமி" பார்த்த‌தால் குறையொன்றுமில்லை!! அதைத் திட்டி விம‌ர்ச‌ன‌ம் எழுதும் நேர‌த்தில் வேறு ஒரு ந‌ல்ல‌ப‌ட‌ம் பார்க்க‌லாம்.... அல்ல‌து ஒரு சிறுக‌தை எழுதுவது எனக்கு நலம்... என்று தோன்றிய‌து..... ஒருவேளை என் க‌ன‌வு நினைவாகித் திரைஉல‌க‌த்தின் "டைர‌க்ட‌ர்" சேரில் அமர நேர்ந்தால்.... மூன்றும‌ணி நேர‌ம் இந்த‌த் தியேட்ட‌ர் இருக்கையில் நெழிந்த‌ த‌ருண‌ங்க‌ளை நினைவில் வைத்து சில‌ த‌வ‌றுக‌ளைக் கூட‌க் க‌ளைய‌லாம் பாருங்க‌ள்!! (எப்ப‌டியெல்லாம் யோசிக்க‌ வைக்கிறாய்ங்க‌!!)

மொத்த‌மாக‌ப் ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் தாக்க‌ங்க‌ள் ஆக்கிர‌மித்தாலும் "கந்தசாமி"யில் சில‌ ப‌ளிச் விஷயங்களும் இருந்தன என்பதையும் குறிப்பிடுவ‌துதான் நேர்மை...

Well..... சினிமா ஆசையைப் ப‌திவுல‌கில் ப‌கிர்ந்துகொள்ள‌ விழைந்தேன்.... அதற்கொரு வாய்ப்பாக‌ அமைந்துவிட்ட‌ க‌ந்த‌.. க‌ந்த‌... க‌ந்த‌...கந்த... க‌ந்த‌சாமீக்கு மீண்டும் ந‌ன்றி!! குறையொன்றுமில்லை க‌ந்தா!!!


பொக்கிஷம்: விமர்சனம்


சோம்பலான ஒரு காலைப் பொழுதில்... வீட்டில் தனியாக... காதல் கன்ஃபார்ம் ஆகிவிட்டதால் கொஞ்சம் கசக்கும் காதலியின் ஸ்வீட் நத்திங் எஸ்.எம்.எஸ்களுக்கு இடையே மறைந்துபோன தந்தை தன் கைப்படப் பதித்துவைத்திருக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான காதல் கதை பொதிந்துவைத்த பொக்கிஷமாக மகனின் கண்ணில் பட்டால்..... எத்தனைப் பக்கங்களில் புனைந்து தள்ளியிருந்தாலும், சைக்கிள் வேக ஸ்க்ரீன்ப்ளே என்றாலும் பொருட்படுத்தாது ஒரேமூச்சில் படித்துவிடத்தானே தோன்றும்... அதே துளிர்க்கும் ஆர்வத்தையும் பங்களிப்பையும் நம்மிடமும் எதிர்பார்த்துச் சேரன் (ரொம்பவே ஆழமாக) புதைத்து வைத்திருக்கும் "பொக்கிஷம்" தான் படம்!

"இன்னுமொரு புதுமையான‌ காதல் கதை" என்று ஃப்ளாஷ் கார்டு போட்டுதான் இப்போதெல்லாம் காதல் கதையே எடுக்கிறார்கள்.... இங்கு சேரனோ "இதோ ஒரு பழமையான காதல் கதை" என்று நம்பிக்கையாகக் களம் கண்டிருக்கிறார்!

எடுத்துக் கையாளப்பட்டிருப்பது ஓர் அழகான கதைதான் என்பதில் நிச்சியம் ஐயமில்லை... அஞ்சல் கடிதங்களால் பரிமாறிக்கொள்ளப்படும் காலம்சென்றதொரு கண்ணியமான காதல் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த்துபோல் ஃப்ரெஷாகப் பதிவுகொள்ளப் பட்டிருக்கிறது டிஜிட்டல் செல்லுலாய்டில்!! மொத்தப்படத்தையும் கண்ணுக்கு வலிக்காத வண்ணங்கள் தெளித்துத் திருத்தமாய் வடித்த ஒரு கிரீட்டிங் கார்டு போலப் பார்த்துப் பார்த்துப் புனைந்திருக்கிறார் சேரன்....

நீண்டவெளியான‌ கதைக்களத்தில்.... இரண்டே இரண்டு காதலர்களை அருகருகே அமரவைத்துப் படமாய் எடுத்திருந்தால் வசனப் பொட்டலங்களை குவித்து வைத்திருப்பார்கள் இண்டர்வல் வரை.... ஆனால் இங்கு காதலன் கோல்கத்தாவில்... காதலி நாகூரில்....எனவே வசனப் பொட்டலங்களுக்குப் பதிலாகப் பருமனான கடிதப் பொட்டலங்களாக‌ நிரப்பிவைத்திருக்கிறார்கள. கடைசி சொட்டு இங்க் இருக்கும்வரை எழுதப்பட்ட அத்தனை காதல்கடிதங்களும் வரிவிடாமல் வாசிக்கப்பட்டிருக்கின்றன படம் முழுதும்!! விளைவு நாகூரிலிருந்து கோல்கத்தாவிற்கு ஸ்கூட்டரில் போகும் எஃபெக்ட் நமக்கு....

நீள நீளமாய் நட்பு பாராட்டும் கடிதக் கவிதைகளைவிட ஆரம்பத்தில் சேரன், பத்மப்ரியா அறிமுகம் கொள்ளும் மருத்துவமனைக் காட்சிகளும் அந்தக் குட்டிக் குட்டிப் பேச்சுகளால் பரிச்சியம் வளர்ப்பதுமான விஷுவல் கவிதைகள் ரொம்பவே பாந்தம்....
கடிதப் போக்குவரத்து தொடங்குமட்டும் சேரன் தெரிகிறார்... அங்கங்கே பன்னீர் தெளித்து சிலிர்க்கவும் வைக்கிறார்... ஆனால் கடிதம்மூலம் சீனப் பெருஞ்சுவராய்க் காதல் வளர்க்க ஆரம்பித்தவுடனேயே நடிகர் சேரன்தான் வந்துபோகிறார் படமோ நீளமான வார்த்தைக் கவிதைகளால் மட்டுமே நகர்கிறது அங்குலம் அங்குலமாக‌.... அந்தக் காட்சிகளில்தான் ஏதோ ஒருவித வறட்சி ஆட்கொள்கிறது.....

அழகான காதல்கதை ஒன்றை "ஆட்டோகிராஃப்" சேரன் சொல்லும்போது அங்கே வெள்ளித்திரை சுவாரஸ்யங்கள் ஏதுமின்றி வெறும் காட்சிகளால் படம் நகரும்போது ரீல் சுற்றும் தியேட்டர் ஆபரேட்டரின் கை வலியை உணரமுடிகிறது! திடீரென்று விழித்துக் கொண்டவராய்... நதீராவிடம் பேசும்வரை வேறு யாருடனும் பேசமாட்டேன் என்ற மூன்று நாள் மவுன விரதம் அநியாயமாய்க் காலேஜ் ஃபோனை எடுக்கும் அட்டெண்டரிடம் முறிந்து போவது டிப்பிக்கல் சேரன் டச்... ஆனால் அவ்வளவுதான் ஒரு டச் வைத்துவிட்டு மீண்டும் கடிதம் எழுதப் போய்விடுகிறார்!

ஆறு அங்குலத்துக்கு நீண்ட ரொட்டிக்கு (Soft Bread) இரண்டே ஸ்பூன் ஜாம் தடவிக் கொடுத்திருக்கிறார்... இடையிடையே சில ஸீன்கள் தித்தித்தாலும் மொத்தமாக வெறும் ரொட்டியை சவைக்கும் உணர்வே மிஞ்சுகிறது!

கடிதப் போக்குவரத்து திடீரென நிற்பதும்... தவித்துப் போகும் சேரன் பத்மப்ரியாவைத் தேடி அலைவதும்... வாழ்நாள் முழுக்க சேரன் தேடியும் கிடைக்காத தூரத்துக்குத் தன் மகளைக் குடும்பத்தோடு கடத்திவிடும் நதிராவின் தந்தையின் சூழ்ச்சியும் வலியோடு கதையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகின்றன... ஆனால் அதுவும் ஆமை நகர்வுதான்!

இறந்துவிட்ட சேரனின் ஒரே மகன் ஆர்யன் ராஜேஷ், முகவரி இல்லாமல் உரைக்குள் மாட்டிக்கொண்ட சேரனின் கடைசி கடிதங்களைப் பொக்கிஷமாகப் பத்மப்ரியாவைத் தேடிக் கண்டுபிடித்து கை சேர்க்கும் காட்சிகள்.... கடுகடுக்கக் காத்திருந்தபின் வந்து கால்நனைக்கும் கடலலைகள்! சில்லிட வைக்கும் உணர்வுப் புதையலுக்காய் ரொம்பவே காத்திருக்க வேண்டியிருக்கிறது.... ஒட்டுமொத்த வாழ்க்கையே ஏமாற்றமாய் மிகவும் உருக்கமாய் எதிரொலிக்கிறது பாட்டியாகிவிட்ட பத்மப்ரியாவின் ஈனஸ்ருதி அழுகை அந்த உச்சக்காட்சியில்....

நடிப்பில் சேரன் அதே அதே அதே சேரன்தான்.... ஆனால் பத்மப்ரியா.... முகத்தை மூடிக்கொண்டு கண்களாலேயே க(வி)தை சொல்லியிருக்கிறார்.... அன்புள்ள‌ படவா... அன்புள்ள திருடா.. அன்புள்ள மன்னா... என்று பாடலில் கொஞ்சும் அழகுமுகம் சமூகத்தின் அர்த்தமற்ற‌ சில வறட்டுப் பிடிவாதங்களினால் இறுதியில் தோல்சுருங்கிக் கசங்கிப் போன ஒரு கனவாய்ப் போய்விடுவ‌தின் வலியை லைஃப்டைம் பெர்ஃபார்மன்ஸாகப் பதிவுசெய்திருக்கிறார் என்றே செல்லலாம்... வைரபாலனின் கலையும், ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் திகட்டாத அலங்காரத்தினால் கச்சிதமாக அழகுபடுத்திக் கொடுத்திருக்கின்றன பொக்கிஷத்தை! நீ.....ளமான படத்துக்குக் காட்சிகளை முடிந்தவரை சுருக்கமாய்க் கத்தரிபோட்டிருக்கும் எடிட்டரின் ரூமில்தான் இந்தக் கடிதக்கோர்வை திரைப்படமாக உருப்பெற்றிருக்கிறது.... இளையராஜாவாய்ப் பின்னணி இசையில் பேசியிருக்க வேண்டியப் பல இடங்களில் இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளியின் "இசை" ஊமையாகிப் போயிருப்பது பெரும் ஏமாற்றம்... பாடல்கள் நன்றாக இருப்பது ஆச்சர்யமான ஆறுதல்..

மாறுபட்ட நேர்மையான சமூகக் கருத்துக்களால் கவர்ந்த "பாரதி கண்ணம்மா" , "பொற்காலம்", வரிசையிலான ஆரம்பகாலப் படங்களே சேரனின் நிஜமான‌ பொக்கிஷங்கள்... இது வெறும் நிழல்தான்...

ஒரே ஒரு சச்சின்..எத்தனை வினோத் காம்ப்ளிகள்?? -- 2



சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி....

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஒரு வலிமை வாய்ந்த அணியாகத்தான் களம்கண்டது இந்தியா. கென்யாவுடனான முதல்போட்டியில் 127 ரன்கள் குவித்துக் கலக்கினார் சச்சின்.. கடுமையான பயிற்சி, இலக்குகளின் மீதான சிதறாத கவனம் என சச்சின் அந்தக் காலகட்டத்தில் தனது விஸ்வரூபத்தைத் துவக்கிவிட்டிருந்தார்.... காம்ப்ளியோ ஒரு காதில் கடுக்கன், ஒட்ட வெட்டிய தலைமுடி,ஃப்ரெஞ்ச் தாடி, அவரின் டிரேட் மார்க்காகிப் போயிருந்த தங்க நகைகள் என வித்தியாசமான உருவம் தரித்துப் போயிருந்தார்....

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழ்நிலையில் ஆட்டம் மெல்ல வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக நகரும் சூழ்நிலை... சித்து, அசார், சச்சின் அடுத்தடுத்து அவுட்டாகிவிட மனோஜ் பிரபாகர் ஒரு முனையில் மறுமுனையில் காம்ப்ளி.... க்வாலியரில் நடந்த மேட்சில் பிரபாகரைக் கூட நம்பும் மக்கள் காம்ப்ளியை நம்பவில்லை அந்தளவு விளையாட்டில் கவனமின்றி அதிருப்தி சம்பாதித்து வைத்திருந்தார்... ஒரு கட்டத்தில் பிரபாகரும் அவுட்டாகிவிட... மோங்கியாவும், காம்ப்ளியும் நிற்கிறார்கள் கர்ட்லி அம்புரோஸ் பந்துவீச வர ரசிகர்கள் நகம் கடித்துக் கொண்டிருந்தனர்.... காம்ப்ளியை நோக்கி அம்புரோஸ் வீசிய பவுண்சரை லெக் திசையில் ஹூக் செய்து சிக்ஸராக்கினார் காம்ப்ளி.... புத்துணர்வுடன் ஆடி (33ரன்கள்*) வெற்றியும் தேடித்தந்தார்!! காம்ப்ளியின் கம் பேக் (come back) என மகிழ்ந்தது இந்தியா!!

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டி ச‌ச்சின், காம்ப்ளியின் சொந்த‌ ம‌ண்ணாம் வான்க‌டே மைதான‌த்தில்... இந்தியா தோல்விய‌டைந்த‌ இந்த‌ப் போட்டியில் ச‌ச்சின் க‌டுமையாக‌ப் போராடி 90ர‌ன்க‌ள் குவித்தார் காம்ப்ளியோ ட‌க்-அவுட் ஆகிவிட்டு அல‌ட்சிய‌மாக‌ப் பெவிலிய‌ன் திரும்பினார்.... க‌டும் அவுட் ஆஃப் ஃபார்மினால் அதிக‌ப்ப‌டியான‌ விம‌ர்ச‌ன‌த்துக்குத் தின‌ம் ஆளாகிவ‌ந்த‌ காம்ப்ளி தான் ஒரு சாதார‌ண‌மான‌ குடும்ப‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர் என்ப‌தையெல்லாம் ம‌ற‌ந்துவிட்டு ஏதோ ஒரு ஹாபி போல‌க் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த‌து தேர்வுக் குழுவின‌ரைக் கூட‌ எரிச்ச‌லுக்குள்ளாக்கிய‌து... ஜிம்பாப்வேக்கு எதிரான‌ ஆட்ட‌த்தில் அதிர்ச்சியாக சச்சின் 3 ரன்களுக்கு போல்டாகிவிடத் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை 106ரன்கள் அடித்து மீட்டார் ஆட்ட நாயகன் காம்ப்ளி....

அதன்பின் காலிறுதியில் அதிரடியாகப் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி சென்ற இந்திய அணி தன் வ‌ர‌லாற்றின் க‌ருப்புதின‌மாக‌, இல‌ங்கைக் கெதிராக‌ ஈட‌ன் கார்ட‌ன் மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌ ஆட்ட‌த்தைப் ப‌திவுசெய்த‌து.... இந்தியா வெறும் 120 ர‌ன்க‌ளுக்கு 8 விக்கெட்டுக‌ள் இழ‌ந்த‌ நிலையில் க‌டுப்ப‌டைந்த‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌க‌ளையில் ஈடுப‌ட‌, காம்ப்ளி க‌ண்ணீர் சிந்தி அழுத‌வாறே மைதான‌த்தைவிட்டு வெளியேறினார்.... இந்தியா தோல்விய‌டைந்த‌து.... ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் அர‌ங்கில் இத்த‌னை பெரிய‌ அவ‌மான‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌தைத் தொட‌ர்ந்து க‌டுமையான‌ சில‌ முடிவுக‌ளைத் தேர்வுக்குழு எடுக்கத் த‌யாரான‌து.... "குட் ஸ்டூட‌ண்ட்" ஆக‌ எல்லார் ந‌ன்ம‌திப்புக‌ளையும் பெற்றிருந்த‌ "ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம்" ச‌ச்சின் அணியின் கேப்ட‌ன் ஆனார்... அனைத்துத் த‌ர‌ப்பின‌ரின் கோப‌ம் ம‌ட்டும் அவ‌ந‌ம்பிக்கைக்கு ஆளாகிப் போயிருந்த‌ காம்ப்ளி அணியிலிருந்தே நீக்க‌ப்ப‌ட்டார்...

அந்த‌ சூழ்நிலையில் கூட‌ விழித்துக்கொண்டு உத்வேக‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டிருந்தால் அணிக்குள் மீண்டு வ‌ந்திருக்க‌லாம் ஆனால் அவ‌ரோ ஃபோர் ஸ்க்ய‌ர், செவ‌ன் அப் என‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் த‌ன்னை பிஸியாக்கிக் கொண்டார்... அல‌ட்சிய‌த்தின் மொத்த‌ உருவாகிப் போன‌ காம்ப்ளிக்குக் க‌டைசிவ‌ரைக் கைகொடுத்த‌து உண்மை ந‌ண்ப‌னாக‌ இருந்த‌ ச‌ச்சின்தான். காம்ப்ளிக்காக‌த் தொட‌ர்ந்து போராடி மீண்டும் அணியில் இட‌ம் வாங்கிக் கொடுத்தார்... ப‌ல‌னில்லை... பின்னொரு க‌ட்ட‌த்தில் காம்ப்ளி ப‌ழைய‌ சேட்டைக‌ளைக் குறைத்துக் கொண்டு பொறுப்பான‌ ஆட்ட‌க்கார‌ராக‌ ச‌ச்சின் கொடுத்த‌ தைரிய‌த்தில் அணியில் இண்டிபெண்ட‌ன்ஸ் க‌ப், ச‌ஹாரா க‌ப், பாகிஸ்தான் ப‌ய‌ண‌ம் என‌ வ‌ந்துகொண்டிருந்த‌ போது... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ ஓர் ஆட்ட‌த்தில் ப‌ந்தைத் த‌டுக்கையில் கால் எலும்பு முறிவுக்கு ஆளானார்.... அத்துட‌ன் முடிந்துபோன‌து அவ‌ர‌து கிரிக்கெட் வாழ்க்கை.... க‌ங்குலி, டிராவிட், ராபின் சிங் என‌ இவ‌ர் இட‌த்துக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் தொழிலில் மிகுந்த‌ சிர‌த்தையாக‌த் த‌ங்க‌ள் இட‌த்தைத் த‌க்க‌வைத்துக் கொள்ள‌க் காம்ப்ளியோ த‌ன் ஒழுங்கீன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் அற்புத‌மான‌ திற‌மையையும், க‌டின‌ உழைப்பையும், ர‌சிக‌ர்க‌ளின் எதிர்பார்ப்புக‌ளையும், நண்பன் ச‌ச்சின் க‌டைசிவ‌ரை கொடுத்த‌ ஊக்க‌த்தையும் எல்லாவ‌ற்ற‌வையும் ஒருங்கே கோட்டைவிட்டு இன்று கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் துவ‌ங்கி அந்த‌ விழாவிலேயே த‌ன் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவ‌தாக‌ எவ்வித‌ப் ப‌ர‌ப‌ர‌ப்புமின்றி அறிவித்திருக்கிறார்!!

ஒரு தோற்றுப்போன‌ ஒருவ‌னைப் ப‌ற்றி, ஒரு சாதார‌ண‌ப் பெட்டிச் செய்தியை எத‌ற்கு இவ்வ‌ள‌வு விரிவாக‌ எழுத‌வேண்டும் என்று நிச்சிய‌ம் தோன்றலாம்... அத‌ற்கான‌ கார‌ண‌ம்.... ந‌ம்மிடையே ஓரிரு ச‌ச்சின்க‌ளைத் தான் காண‌முடியும் ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ ந‌ம் எல்லோருக்குள்ளுமே எண்ண‌ற்ற‌ வினோத் காம்ப்ளிக‌ள் இருக்கிறார்க‌ள்.... வாழ்வில், இல‌க்கில் க‌வ‌ன‌மின்றி, சின்ன‌ச் சின்ன‌க் க‌ளிப்புக‌ளில் க‌வ‌ன‌மிழ‌ந்து ந‌ம்முன் நாமே வைத்து நட‌க்க‌த் துவ‌ங்கிய‌ இல‌க்கு நோக்கிய‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் பிச‌கும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்க‌ வேண்டிய‌ விளையாட்டு வீர‌ர் ந‌ம‌து வினோத் காம்ப்ளி.... காம்ப்ளியின் க‌தையிலிருந்து பாட‌ம் க‌ற்றுப் ப‌ல‌ ச‌ச்சின்க‌ள் ப‌ல்வேறு துறைக‌ளிலும் உருவாக‌ வேண்டும்.... சுக‌வாசம் ப‌ழ‌கிவிட்டால் வாழ்வில் வ‌ன‌வாச‌ம் வ‌ந்தே தீரும் என்று எங்கெருந்தோ ம‌வுன‌ சாட்சியாகியிருக்கிறார் காம்ப்ளி....

அவ‌ரின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ வாழ்த்துவோம்!

பிர‌பு எம்