பாட்டி கதை (சிறுகதை - பாகம் 2)

சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி.......

மஞ்சள் நிற மாலை வெயிலில் கூட வெப்பத்தின் தடயங்கள் தோய்ந்திருக்கின்றன அந்தக் கிராமத்தில்... கரடுமுரடான பாதையில் கவனமாகக் காரை செலுத்துகிறார் ஓட்டுநர்... குளிரூட்டப்பட்ட பின்னிருக்கையில் ஜீவா!! அதே பாதை... ஆனால் இம்முறைப் பயணமோ தன் அணுதின வாழ்வை நோக்கி... அந்தக் காரிலும் சரி அவன் வீட்டிலும் சரி இன்னும் இடம் நிறையவே உள்ளது எனினும் பாட்டியின் நினைவுகளை மட்டும் முடிந்தவரை அந்தக் காரில் நிரப்பிக்கொண்டுப் பாட்டியை அந்த‌ச் சிறிய‌ வீட்டிலேயே விட்டுவிட்டுதான் சென்றுகொண்டிருக்கிறான்.... தன்னுடன் வந்துவிடுமாறு பாட்டியிடம் ஜீவா இறுதிவரை ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லை!! எப்படித் திடீரென்று என்னைத்தேடி வந்தான் என் பேரன்?? என்று இந்நேரம் பாட்டி நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் அந்த அழகிய கிராமத்துக் குடில் இன்று சந்தோஷத்தால் நிரம்பிப்போனது மட்டும் நிதர்சனம்.. இயல்பாகப் பனித்திருந்த கண்களைத் தன் கையால் துடைக்கையில் வலதுகையில் பருப்புருண்டைக் குழம்பு வாசம்!!!

சமையலறையில் பாட்டி சமைத்துக் கொண்டிருந்த‌ போது ஜீவா ஓர் அண்டாவைக் கவுத்திப்போட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பாட்டியின் ஒவ்வோர் அசைவையும் அதிசியத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... விடாது பல கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் பாட்டியும் பேரனும்!!! சட்டியில் குழம்பு கொதிக்கத் துவங்கிவிட்டது.... பாட்டியோ, வீட்டின் பின்புறம், கொள்ளைப்புற வாழைமரத்தில் இலைவெட்டிக்கொண்டிருந்தார்.... வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழம்பைச் சட்டியிலிருந்து இறக்கிவைத்து... ஒருமுறை ருசிபார்த்தபின்புதான் சந்தோஷமாய்ப் பரிமாறினார் தன் கைமணத்தை!!!.... மீண்டும் தனது கையை முகர்ந்து பார்க்கிறான் ஜீவா... பாட்டி வாசம்!!! .....செல்போன் அழைக்கிறது.... மறுமுனையில் அஞ்சலி!! "சொல்லுங்க....சொல்லுங்க.... என்ன ஆச்சு?? பாட்டி ஹேப்பியா??" ஜீவாவுக்கு இணையான ஆர்வமிகுதியில் அஞ்சலி துவங்க மீதமுள்ள பயணம் இனிமையாய் நகர்ந்தது....

"இனிமேலும் என் பாட்டியைத் த‌னிமையில் த‌விக்க‌விட‌ மாட்டேன்" என்று சூளுரைத்துக் கிள‌ம்பிய‌வ‌ன் பாட்டியைத் த‌ன்னுட‌ன் வந்துவிடுமாறு சொல்ல‌க்கூட‌ இல்லை என்ப‌து புதிராக இருந்தது அஞ்ச‌லிக்கு!! ஜீவாவோ, "ராஜா மாதிரி இருக்க வேண்டிய என் பேர‌ன் இப்படி நகர வாழ்வில் சிக்கித் தவிக்கிறானே!!" என்று தனக்காகப் பாட்டி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை எப்ப‌டிப் புரியவைப்பேன் நான்??? என்று ம‌ன‌துக்குள் குழ‌ம்பிக் கொண்டிருந்தான்!!!!

த‌ன்னையும் த‌ன் வ‌ள‌ர்ச்சியையும் க‌ண்டுப் பெருமித‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும்தான் க‌ட‌ந்த‌ சில ஆண்டுகளாகவே பார்த்திருக்கிறான் ஜீவா....ஆனால் த‌ன்மீது பேர‌ன்பு கொண்ட தன் பாட்டியோ தன் வாழ்வை நினைத்துத் தனக்காகப் பரிதாபப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அதிர்ந்து போய்விட்டான் ஜீவா!!! அஞ்சலியும் மௌனமாகிப் போனாள்!!! 'சிட்டியிலேயே ரொம்ப‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் சொந்த‌வீடு, இவ்வ‌ள‌வு சின்ன‌ வ‌ய‌சிலேயே வாங்கியிருப்பதுதான் ப‌ரிதாப‌நிலையா???' என்று இப்போது கேட்கும் அஞ்ச‌லியைப் போலத்தான் ஜீவாவும் எண்ணினான்.... ஆனால் பாட்டி,

"ஒரே க‌ட்ட‌ட‌த்துக்குள்ள மூச்சப் பிடிச்சுக்கிட்டு நாப்ப‌த்துயேழு வீட்டக் கட்டிவெச்சிருக்கான் ....வாசக்க‌த‌வ‌க்கூட‌ திற‌ந்து வெச்சுக்க‌ முடிய‌ல‌... ஆசையா ஓர் ஆட்டுக்குட்டி வ‌ள‌ர்க்க வழியிருக்குமா??"

என்று கேட்டால் பாவம் என்னதான் பதில் சொல்லுவான் ஜீவா!!! பூமியைத் தொழுது நிலத்தை உழுது வாழும் ம‌ண்வாச‌னை ம‌னித‌ர்க‌ளுக்கு சொந்த‌ பூமியில் வேய்ந்த குடிசை பெருமித‌மாக‌வும், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆட‌ம்ப‌ர‌வீடுக‌ள் அந்த‌ர‌த்தில் அம்மாஞ்சிகள் வாங்கிப்போடும் அசையா சொத்தாக‌வும்தான் தெரிகிறது போலும்!! அடுக்குமாடிக‌ளின் இன்றிய‌மையா தேவையான‌ லிஃப்டுக‌ளை ம‌னித‌ர்களின் வெளிஉல‌க‌த்தொட‌ர்பைத் துண்டிக்கும் வில்லனாக‌ விம‌ர்சிக்கிறார் பாட்டி!! (பாட்டிக்கு லிஃப்டை இயக்க‌த்தெரியாது.... ப‌தினோருமாடிக்கு ப‌டிக்க‌ட்டில் போவ‌தும் முடியாத‌ காரிய‌ம்.. அந்த‌ ஆற்றாமைதான்!!)

இதையெல்லாம் கூட‌ப் பொறுத்துக் கொண்டான் ஜீவா... மிக‌ப்பெரிய சாக்லேட் க‌ம்பெனியின் ரீஜின‌ல் ஹெட் என்ற தன்னுடைய அல‌ங்கார‌ப் பத‌வியைப் பாட்டி, த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!! அதோடு விடாமல் பாட்டி, ப‌க்க‌த்து வீட்டு அல‌மேலுவின் ம‌க‌ன் அந்த‌ கிராம‌த்தில் ப‌டித்த‌வ‌ன்தான் என்றாலும் ஒரு பெரிய்ய்ய்ய‌ மோட்டார் க‌ம்பெனியில் வேலைபார்ப்ப‌தாக‌ப் பெருமையாய்க் கூறினார்!! "என் பேர‌ன் பாவ‌ம்ப்பா உன்னைவிட‌ அதிக‌மாப் ப‌டிச்சிட்டு ஏதோவொரு மிட்டாய் க‌ம்பெனியில‌ வேலை பாத்துட்டு இருக்கான்... உன்ன‌ப்போல‌ ந‌ல்ல‌ பெரிய‌ க‌ம்பெனில‌ உத்தியோக‌ம் எதுவும் கிடைச்சா அவ‌னுக்கும் சொல்லுப்பா!!" என்று அவ‌னிட‌ம் பாட்டி சொல்லி வைத்திருந்ததை நல்லவேளை ஜீவா அறிந்திருக்கவில்லை!!... ஜீவாவின் க‌ம்பெனியில் அவ‌னுக்குக் கார் எல்லாம் கொடுத்திருக்கிறார்களே... அட.. அந்த‌ப் பைய‌னையும்தான் ஒரு பெரிய‌ வ‌ண்டியில் வைத்து சக மெக்கானிக்குகளுடன் வேலைக்கு தின‌மும் அழைத்துப் போகிறார்களே!!!

எக்க‌ச்ச‌க்க‌மாய் Damage ஆகிப்போயிருக்கும் தன் ஜீவாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌வா?... என்ன‌ சொல்லவோ? என்று மௌன‌மாகவே இருந்தாள் அஞ்சலி, இன்னொருபுற‌ம் அவனது பேச்சைவைத்து இந்த‌க் கணம் அவ‌ன் முக‌த்தைக் கணித்துப் பார்க்கையில் அவளுக்குக் கொஞ்ச‌ம் சிரிப்பும் வ‌ந்த‌து...!! இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... தாத்தாவுடைய‌ ப‌டைபுலன்க‌ளுட‌ன் தான் வாழ்ந்த‌ பெரிய‌ வீட்டைப் புற‌க்க‌ணித்துவிட்டு, க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் இது த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......

இர‌வுநேர‌த் த‌னிமை ஜீவாவுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து.... தின‌மும் இர‌வில் த‌ன் த‌னி அறையில் ம‌ன‌துக்குப் பிடித்த‌மான‌ ச‌ங்கீத‌த்தைத் த‌ன‌க்கு ம‌ட்டும் கேட்கும் ர‌க‌சிய‌ ஒலிய‌ள‌வில் கேட்டுக்கொண்டே தன் ம‌ன‌துட‌ன் கொஞ்சதூரம் "வாக்கிங்" போய்தான் தூக்க‌த்தைப் பிடிப்பான்... இன்று போகும் பாதையின் தூர‌ம் அதிக‌மாக‌ப் புல‌ப்ப‌டுகிற‌து!!
"பாட்டி வீடு" என்று தனக்கொரு இடம் பூமியில் இன்னும் எத்தனை நாள் இருக்கும்?? இன்று நாள்முழுதும் கேட்ட‌ அந்த‌க் கணிந்த‌ குர‌ல் இன்னும் எவ்வ‌ள‌வு நாள் ஒலிக்கும்...???.... இன்று உற‌ங்கிவிடுவ‌து அவ்வ‌ள‌வு எளித‌ல்ல‌ என்று புரிந்த‌து!!

பாட்டிவீட்டுச் சுவ‌ரில் க‌ம்பீர‌மாய் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் புகைப்ப‌ட‌ம் ம‌னதைக் காரணமின்றி வ‌ட்ட‌ம‌டித்துக் கொண்டேயிருந்தது... தான் புகைப்ப‌ட‌த்தில் ம‌ட்டுமே க‌ண்டிருக்கும் தன் தாத்தா, மிக‌க் க‌ம்பீர‌மாக‌த் த‌ன்னுடைய‌ பெருமித‌ அடையாள‌மான, அவருடைய‌ கார் அருகில் வைத்து எடுத்துக்கொண்ட‌ ப‌ட‌ம் அது!!
அந்த‌க் கிராம‌த்து ம‌ண‌ல்வெளியில் முத‌ன்முத‌லில் கார் ட‌யரின் அச்சுப்ப‌தித்த‌ பெருமைக்குரிய‌வ‌ர் அவ‌ர்!! அந்த‌ப் பெருமையை இன்றும் பாட்டி ச‌ந்தோஷ‌மாய்ச் சும‌ந்துவ‌ருகிறார் த‌ன் ஊருக்குள்!! இன்றைய உலகில் சாதார‌ண‌மாகிப் போய்விட்டாலும்... டிராஃபிக், பார்க்கிங்.. என‌ ஆயிர‌ம் இன்ன‌ல்க‌ள் இருந்தாலும்... "கார்"... தேவையும் ஆசையும் ஒருங்கே ஈடேறும் ஓர் அழ‌கிய‌ முத‌லீடு!! "தாத்தாவின் அந்த‌க் கார் இப்போது எங்கே??" கேள்விக்கு ஜீவாவிடம் போதுமான தகவல் இல்லை!... தாத்தா முக‌த்தின் பெருமித‌ப் புன்னகையோடு இன்றுவரைப் பாட்டியை அக‌ம‌கிழ‌ச்செய்கிற‌துபுகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ அந்தப் ப‌ழைய‌ மெட்ட‌லிக் ர‌த‌ம்!! கம்பெனி காரில் சென்றதைவிட சொந்த‌மாய் வாங்கிய‌ காரில் சென்று பாட்டி வீட்டுவாச‌லில் இற‌ங்கியிருந்தால் தன் பேர‌னின் செழிப்பை நிச்சிய‌ம் உண‌ர்ந்து உள‌ம் ம‌கிழ்ந்துபோயிருப்பார் பாட்டி என்று உறுதியாக‌த் தெரிந்த‌து ம‌ன‌துக்கு!!! இந்தத் திடீர் சிந்த‌னை மின்ன‌லில் ஜீவாவின் உள்ளுண‌ர்வுக‌ள் பிர‌காச‌ம‌டைந்த‌ன‌!!! ச‌ந்தையின் ச‌மீப‌த்தைய‌ ஆட‌ம்ப‌ரக் கார்களைக்கூட‌ சொந்த‌மாக்கிக் கொள்ளுமள‌வு வாங்கும் திற‌னுள்ள‌ ஜீவா பாட்டி ம‌ற்றும் கார் க‌ன‌வுக‌ளுட‌ன் தூங்கிப்போனான்!!

வேக‌மாய் விடிந்துவிட்ட‌து பொழுது..... முதுகைத் த‌ட்டிக்கொடுத்து ஆமோதித்தார் ராஜ‌கோபால‌ன் தன் ம‌க‌னின் கார் வாங்கும் திட்டத்தை!! வங்கிக‌ள் எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் லோன் த‌ர‌க்காத்திருப்ப‌தால் (க‌தைக்க‌ள‌த்தில் recission-ன் தாக்க‌ம் இல்லை!!)திரும‌ணச் செல‌வுக‌ளில் கார் குறுக்கிட‌ப் போவ‌தில்லை!! அடுத்தக்க‌ண‌மே ஃபோன் கால் ப‌ற‌ந்த‌து அஞ்ச‌லிக்கு.... அம்முனையும் ஆன‌ந்த‌ம‌ழை!!
"என்ன‌ கார் வாங்க‌லாம்??" என்ற‌ மில்லிய‌ன் டால‌ர் கேள்வியை அஞ்ச‌லியின் இஷ்ட‌த்துக்கு விட்டுவிட்டான் ஜீவா... ஆனால் த‌ன‌க்கு luxury கார் ப‌ற்றியெல்லாம் ஞான‌ம் அதிகம் கிடையாது என்று சொல்லிக் க‌ழன்றுகொண்ட‌ அஞ்ச‌லி த‌ன‌க்குப் பிடித்த‌ மெட்டாலிக் க‌ரும்ப‌ச்சை நிற‌ம் அமைந்தால் ம‌கிழ்ச்சி என்று ம‌ட்டும் கோரிக்கை வைத்தாள்!!!

"பாட்டிகிட்ட‌ சொல்லியாச்சா....??" ஆர்வமாய்க் கேட்ட அஞ்சலியிடம்...
"நேர்ல‌ போறேன்.. என் பாட்டியோட‌ப் ப‌ல்விழுந்த‌ சிரிப்பு பார்க்க‌..!!" சொல்லிக் கிள‌ம்பினான் ஜீவா!!!

முன்கூட்டி சொல்லாம‌ல்தான் இம்முறையும் பாட்டியின் முன்னால் போய் நின்றான் ஜீவா!!! மீண்டும் பேரனைக் கண்ட அதிர்ச்சி வில‌காத‌ பாட்டியை அப்ப‌டியே தாத்தாவின் ஃபோட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்று... "உன் பேர‌னும் கார் வாங்க‌ப் போறான் பாட்டி!!!" என்று போட்டுடைத்தான்.....

என்னவொரு த‌ருண‌மது!! "ஏழைப்பேர‌ன்" லாட்ட‌ரி அடித்தது போல் திடீரென பாட்டியின் ம‌ன‌தில் உச்ச‌த்துக்குப்போய் வெற்றிக்கொடி நாட்டினான்!!! இந்த‌ ம‌கிழ்ச்சிப் பேர‌லைக‌ளை அந்த‌ இத‌யத்தால் தாங்கமுடியுமா?? என்று ச‌ந்தேகமே வ‌ந்துவிட்ட‌து ஜீவாவுக்கு.... ஆன‌ந்த‌மாய்த் தாத்தா ஃபோட்டோ ப‌க்க‌ம் திரும்பி கைகூப்பி ஏதோ முணுமுணுத்துப் பேர‌னின் நெற்றியில் ப‌க்தியுட‌ன் தில‌க‌மிட்டார் பாட்டி... குழந்தையாய் சிரிக்கும் சந்தோஷப் பாட்டியிடம், தேர்வு செய்வ‌த‌ற்காக‌ வைத்திருக்கும் மிக‌வும் விலையுய‌ர்ந்த‌ லேட்ட‌ஸ்ட் ஆட‌ம்ப‌ர‌ ம‌கிழ்வுந்துக‌ளின் ப‌ட‌ங்க‌ளைத் தாங்கிய‌ மோட்டார் இத‌ழ்களைக் காட்ட‌ ஜீவா வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்..... அப்போது பாட்டி ச‌ற்று சீரிய‌ஸாக‌ ஜீவாவின் அருகில் வ‌ந்து....

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!" என்று சொல்ல‌ ஒரு நொடி திகைத்து நின்ற‌ ஜீவாவுக்கு கார் மீது லாரி மோதிய‌துபோல் இருந்த‌து!!

அப்ப‌டியே நின்றுவிட்ட‌ ஜீவாவிட‌ம் பாட்டி, இப்போது வ‌ந்திருக்கும் ப‌ல‌ கார்க‌ளைத் தான் பார்த்திருப்ப‌தாக‌வும் அந்த‌க் கால‌க் கார்க‌ளின் வ‌லுவான‌ உறுதி எதிலும் இல்லையென்றும்... காசுபோட்டுக் காரை வாங்கிக் காலை ம‌டக்கிக் குனிந்து அம‌ர்வ‌து அசௌக‌ரிய‌ம் என்றும் அடுக்கிக்கொண்டே போனார்!!! க‌வ‌ன‌மாக‌ ந‌ல்ல‌ அம்பாசிட‌ர் காராக‌ப் பார்த்துவாங்குமாறு பேரனுக்கு சீரிய‌ஸாக‌ அறிவுரை சொன்ன‌ பாட்டி ஜீவா சொல்ல‌ வ‌ந்த‌ எதையும் ஏற்ப‌தாக‌ இல்லை!!

வெள்ளையாக‌ விழுந்து விழுந்து ஃபோனில் சிரிக்கிறாள் அஞ்ச‌லி!!! ஜீவா ஃபோனைக் காதில் வைத்திகொண்டு அப்பாவியாய் பாட்டி சொன்ன‌தையெல்லாம் சொல்ல‌ச் சொல்ல‌ சிரித்து ர‌சித்த‌ அஞ்ச‌லி , "இப்போ என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?? அம்பாசிட‌ர் கார் லேட்ட‌ஸ்ட் மாட‌ல் புக் ப‌ண்ணிடுவோமா!!" என‌க் குறும்பாய்க் கேட்க‌ ஜீவாவும் த‌ன் பாட்டியின் உல‌க‌ம‌றியா குழந்தைத்த‌ன‌த்தை நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.....!!

"பாட்டிக்காக‌த்தான் கார் வாங்குற கான்செப்டே ம‌ன‌சுல‌ வ‌ந்திச்சு அதுல இப்பவும் எந்த‌ மாற்ற‌மும் இல்ல‌... பாட்டியோட விருப்பப் படி வாங்கினால்தான் அதுல அர்த்தமே இருக்கு.... அந்த அப்பாவி மனுஷியோட மனச இன்னும் கொஞ்சம் ஆழமா படிக்க‌ ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவ்ளோதான்!!!"... என்றும் பாட்டியைத் த‌ன் தொழில்சார்ந்த‌ பேச்சுத்திற‌னால், தான் வாங்க‌ எண்ணியிருக்கும் காரையே வாங்க‌ச் சொல்ல‌வைக்க தன்னால் மிக‌ எளிதில் முடியும் ... ஆனால் தான் அவ்வாறு செய்ய‌ப் போவ‌தில்லையென்று உறுதியாக‌ இருந்த‌ ஜீவாவிட‌ம் அஞ்ச‌லி.. "இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!" என்று க‌லாய்க்க‌ ஆரோக்ய‌மான‌ இந்த‌ ச‌வாலை ஜீவா ஏற்றுக்கொண்டான்!!!

பிரபு. எம்
தொட‌ரும்.....

(மூன்றாவ‌து பாக‌த்தில் முடிவ‌டையும்!)

பாட்டி க‌தை (சிறுக‌தை - பாக‌ம் 1)

அழகான அதிகாலை....அருகில் உள்ள‌ கிராமத்தில் சேவல் ஒன்று கூவுகிற‌து.... ஒரு சின்ன‌ பீப்பாய் நீர் பாய்ந்து வ‌ந்து ம‌ண்ணை நனைக்க .....ம‌ழைபெய்தால் கிளம்பும் ம‌ண்வாச‌னை ப‌ர‌வுகிறது... சாண‌த்தோடு க‌ரைத்த‌ நீரால் அந்த‌ ம‌ண்ணை மெழுகுகிறார் வாச‌ல்தெளிக்கும் அந்த‌ப் பாட்டிய‌ம்மா!!! தோல்சுருங்கி மென்மையான‌ ந‌ர‌ம்புக‌ள் கையெங்கிலும் வெளியே தெரிகின்றன... த‌சைக‌ளெல்லாம் முறுக்கின்றித் தொங்கிப் போயிருந்தாலும் வாளிக்குள் இருக்கும் நீரை வலுவாக அடித்துத் தெளிக்கின்ற‌ன‌ அந்தக் கைக‌ள்.... சில‌ நொடிக‌ளில் புழுதிம‌ண்ணின்றி ப‌க்காவாக‌ செட்டாகியிருக்கிற‌து வீட்டுவாச‌ல்.... வேண்டியோர் ப‌ல‌ரின் காலடி படுவதற்காகப் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக ஏங்கிக் காத்திருக்கும் அந்த வீட்டு வாசல்!! சில மணித்துளிகள்தான், பாட்டி இப்போது சமையலறையில்... அடுப்புப் பற்றவைத்ததுதான் தாமதம் அந்த அனுபவக் கைகளின் சமையல் ஜாலத்தில் இதோ சட்டியில் குபு குபு வென குமிழ்கள் வெடிக்கின்றன கொதிக்கும் புதுக் குழம்பில்!!! சரியாக எண்ணெய் சட்டியில் கடுகுகள் பட்டாசு வெடிக்கும் நேரத்தில்.... வாசலில் ஒரு மழலைப் புல்லாங்குழல்!!

"பாட்டிம்ம்மா...." அழைக்கிறாள் ஸ்கூல்யுனிபார்ம் போட்ட அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிதேவதை கையில் ஒரு காலி டிஃப‌ன்பாக்ஸுட‌ன்!! "ஏய்ய்ய்... பூட்ஸு காலோட‌ உள்ள‌ வ‌ராதேனு பாட்டி எத்தனை த‌ட‌வ‌ சொல்லியிருக்கேன்...." செல்ல‌மாக‌ அத‌ட்டிக்கொண்டே, வேக‌மாக‌ப் பாட்டி நடந்து வ‌ந்தாலும் ந‌டையில் த‌ள‌ர்ச்சி தெரிய‌த்தான் செய்கிற‌து!!! அந்த‌க் குழ‌ந்தை நாக்கை நீட்டி வ‌ழ‌க்க‌ம்போல் சிரித்துக்கொண்டே உட‌லை ஒருவித‌மாக‌க் கோணிக்கொண்டு நிற்கிற‌து... "அப்பா இன்னிக்கு இக்கிலி செஞ்சாங்க‌...!!" டிஃப‌ன் பாக்ஸில் ம‌ண‌க்க‌ ம‌ண‌க்க‌ பாட்டி வைத்த சாம்பார் ஊற்ற‌ப் ப‌டுகிற‌து!!! பாட்டி த‌லையைப் பின்னிவிட, டாட்டா காட்டிவிட்டு ஓடுகிற‌து குழ‌ந்தை..... அவ‌ள் அம்மாவுக்கு அர‌புநாடு ஒன்றில் நர்ஸ் வேலை!! சொந்த‌ப் பாட்டியில்லை பேத்திக்கு ஜ‌டை பின்னிவிட‌!!!

சில‌மைல் தொலைவில் சேவ‌லுக்குப் ப‌திலாக‌ ஸ்கூல்பஸ்களின் ஹார்ன்கள் கொக்கரிக்கும் ந‌க‌ர‌த்து அதிகாலை.... நூறுவ‌ய‌து ல‌ட்சிய‌த்துட‌ன் வேகமாய் ந‌டைப்ப‌யிற்சி செய்யும் குல்லாபோட்ட தாத்தாக்க‌ளுக்கு இடையே கொஞ்சம் இளமையாய் உண‌ர்கிறார் நிமிர்ந்து நடக்கும் ராஜ‌கோபால‌ன்...ட்ராக் சூட், கேன்வாஸ் புதிது... வாக்கிங் ரூல்ஸ் க‌ற்றுக் கொள்ள இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும்!! "நேர‌மாகிவிட்ட‌தோ... ??? "அட!! நேரமானால்தான் என்ன‌!!!" அச‌ட்டுத் த‌ன‌மாக‌த் தெரிந்த‌து ம‌ன‌தின் இத்தனை வருடத்து வ‌ழ‌க்க‌மான‌ காலை நேரப் ப‌த‌ற்ற‌ம்... இன்னும் மனது முழுதாக‌ப் ப‌ழ‌க‌வில்லை இந்த‌ப் புது ரிட்டைய‌ர்மென்ட் வாழ்க்கைக்கு!!! சீரான‌ நடை வீடு நோக்கி..... இன்னும் சிறிது நேர‌த்தில் வெயிலும் தூசியும் ப‌ர‌ப‌ர‌ப்புமாக‌ இந்த அழ‌கை ஊர் இழ‌ந்துவிடும்.... அந்த‌ப் ப‌ர‌ப‌ர‌ப்பில் அவ‌ருக்கு வேலையேதுமில்லை.. குளிரூட்ட‌ப்ப‌ட்ட தன் சொந்த அறையில் நேற்று வாங்கிய, சின்ன‌ வ‌ய‌தில் ர‌சித்துப் பார்த்த, ஹிட்ச்காக்கின் ப‌ழைய‌ ப‌ட‌ டி.வி.டி ஒன்று பார்ப்பதற்குத் தயாராக‌ உள்ள‌து!!

ஒரு வ‌ருட‌மாகியும் கூட‌ இப்போது வ‌சிக்கும் வீடு இன்னும் புதிதாக‌த் தெரிகிற‌து.... ந‌க‌ர‌த்தின் மிக‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் ஒரே ம‌க‌ன் ஜீவா வாங்கிய‌ வீடு...! திரு.ராஜகோபாலன்.... க‌றாரான‌ அதிகாரி.... க‌ண்டிப்பான‌ அப்பா... திட்ட‌மிடுதலும் அதைச் சிறிதும் பிச‌காம‌ல் செய‌ல்ப‌டுத்தி முடித்தலும்தான் அவர் வாழ்க்கைக் க‌தையின் ஒன்லைன்!! ஜீவா பிற‌ந்த‌போதே அவ‌ன‌து முதல் இருப‌து ஆண்டுகளை அவர் திட்ட‌மிட்டுவிட்டார்... இடையே ப‌ள்ளிக்கால‌த்தில் அவ‌னுக்கு வ‌ந்த‌ ம‌ஞ்ச‌ள் காமாலையைத் தவிர மற்ற‌ அனைத்துமே அந்தத் திட்டத்தின்ப‌டிதான் ந‌ட‌ந்தது!

ஜீவா...எம்.பி.ஏ...சாக்லெட்டுகள், பிஸ்கெட்க‌ள் ம‌ற்றும் ஹெல்த்டிரிங்க்ஸ் தயாரிக்கும் பெரிய‌தொரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தின் ரீஜின‌ல் ஹெட்!! அலுவ‌ல‌க‌ ம‌ற்றும் சொந்த‌த் தேவைக‌ளுக்கென‌ விலையுய‌ர்ந்த‌ கார் ஒன்றை ஓட்டுந‌ருட‌ன் வ‌ழ‌ங்கியிருந்தது ஜீவா ப‌ணிபுரியும் நிறுவ‌ன‌ம்...இன்னும் ஒரு மாதத்தில் ஜீவாவுக்குத் திரும‌ண‌ம்... அப்பாதான் பெண் பார்த்தார், ஜீவாவின் ப‌ரிபூர‌ண‌ ச‌ம்ம‌த‌த்துட‌ன்!!

இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன்புதான் ஜீவா அஞ்ச‌லியிட‌ம் முத‌ன்முறையாக‌ போனில் பேசினான்.....

"பேசிட்டியா??.." வழக்கமான போலீஸ் தோரணையில் போனில் அதட்டினார் ராஜகோபாலன்.

"அப்பா...ஆஃபீஸ்ல இருக்கேன்.... அப்புறம் பேசுறேனே... ஏன் இப்படி ஆளாளுக்கு மிரட்டுறீங்க??!!!"

"இப்படித்தான் நேத்தும் சொன்ன... ...எட்டுமணிக்குப் போயிட்டு அஞ்சு மணிக்கு வரவனுக்குதான் ஆஃபீஸ் எல்லாம்... மணி ஏழரையாச்சு... உடனே கால் பண்ணு... Dont make me call again... அந்தப் பொண்ணுக்கு செமஸ்டர் நடக்குதாம்... படிக்காம உனக்காகக் காத்துக்கிட்டிருப்பா..."
..
....
......
........

சில நிமிடங்களில் சற்று தூரத்தில் செல்போனில் மணியடிக்கிறது....

"ஹலோ..... ஹலோ.... நான் அஞ்சலி பேசுறேன்....ஹலோ....."

"ஹம்..ஹலோ... ஹாய் அஞ்சலி.... நான் ஜீவா... சொல்லியிருப்பாங்கனு நினைக்கிறேன்.. நான் பேசுவேன்னு..."

மிக மெல்லிய புன்னகை உதட்டைக் கீறிக் குரலோடு கலந்தொலிக்கிறது..."ஓ! ஹலோ...ஹ்ம்ம்ம்ம்...சொன்னாங்க... ஆனா நேத்தே பேசுவீங்கனு சொன்னாங்களே....!!"

" ம்ம்...ஆமா... நானும் கால் ப‌ண்ணேனே...!!!"

"இல்லையே..!!!"

"நேத்து இதே டைம்ல‌ ரெண்டு ரிங் ம‌ட்டும் வ‌ந்து ஒரு கால் க‌ட் ஆகியிருக்குமே!!"
இருமுனையிலும் கொஞ்ச‌மே கொஞ்ச‌ம் சிரிப்பு....
.................
........................
மீண்டும் ஜீவாவின் அப்பா அழைக்க‌... என்கேஜ்ட் டோன் கேட்டது...சிரித்துக்கொண்டே தொலைபேசியை அணைத்தார்!!!

வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வ‌ந்துவிட்ட‌ ராஜ‌கோபால‌ன் இனிமேல் தன் ம‌க‌னின் முடிவுக‌ளின்ப‌டிதான் வாழ்க்கை என்று மனதிற்குள் முடிவெடுத்திருந்தார் சந்தோஷ‌மாக‌!!

இஷ்ட‌ப்ப‌ட்டு உழைப்ப‌தால் க‌ஷ்ட‌ம் தெரிவ‌தில்லை ஜீவாவுக்கு... தின‌ம்தினம் ஜீவா லேப்டாப்பை மூடுவ‌த‌ற்குள் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தின் தொலைதூர‌ ஊழிய‌ர்கூட‌ டிராஃபிக் ம‌ற்றும் சிக்ன‌ல்க‌ளைக் க‌ட‌ந்து வீடுபோய் சேர்ந்துவிடுவார்!! இப்போதெல்லாம் தின‌மும் வேலைமுடியும் நேர‌ம் உத‌ட்டோர‌ம் கொஞ்சம் இனிக்கிற‌து... அஞ்ச‌லியுட‌ன் பேசுவ‌து பிடித்திருக்கிற‌து ஜீவாவுக்கு!! ஓர் இனிமையான‌ அனுபவமாய் அறியாம‌லேயே அறிந்துகொள்கின்ற‌ன‌ர் ஒருவ‌ரையொருவ‌ர் அழ‌காக‌!!

"இந்தியாவுக்கு விளையாடுற‌ எல்லாரையும்தான் எனக்கு ரொம்ப‌ப் பிடிக்கும்... கிரிக்கெட் ஒரு டீம் வொர்க் இல்லையா!!!"

"எல்லாருமேதான் ந‌ல்லா ந‌டிக்கிறாங்க‌.... ஒவ்வொரு ப‌ட‌த்திலும் ஒவ்வொருத்த‌ரைப் பிடிக்கும்... பிடிச்சவங்கன்னா யாரைச் சொல்லுறது!!"

இதுதான் அஞ்ச‌லி!!! இருப்பினும் ஜீவா அறிந்திருந்தான் ச‌ச்சினும், க‌ம‌லஹாச‌னும் அவ‌ளுக்குக் கொஞ்ச‌ம் ஸ்பெஷ‌ல் என்று!! அஞ்சலியின் விருப்பங்களை அறிந்துகொள்ளும் சுவார‌ஸ்யமான சவால் எந்தவொரு கம்ப்யூட்டர் கேமும் கொடுத்திராத இன்பத்தைக் கொடுத்தது ஜீவாவுக்கு!! ம‌ணிர‌த்ன‌ம், ஏ ஆர் ர‌குமான், ர‌ச‌குல்லா, த‌யிர்சாத‌ம், மாதுள‌ம்ப‌ழ‌ம், ஸ்பைட‌ர்மேன், கொடைக்கான‌ல், எஸ்.பி.பி....இன்னும் இன்னும்....இன்னும்..!!!! எல்லாரையும் ம்ற்றும் எல்லாவ‌ற்றையும் ஏற்றுக்கொண்டு ரசிக்கத் தெரிந்த‌ அஞ்ச‌லிக்கே தெரியாது இவையெல்லாம் அவ‌ளுக்குப் பிடித்த‌வையென்று... ஆனால் ஜீவாவுக்குத் தெரிந்த‌து!!! அஞ்ச‌லியே த‌ன‌க்கு ரொம்ப‌ ரொம்ப‌ ரொம்ப‌ப் பிடிக்குமென்று ஒத்துக்கொண்ட‌து இர‌ண்டே விஷ‌ய‌ங்களைத்தான் ஒன்று ப‌ச்சை நிற‌ம் இன்னொன்று அவ‌ளுடைய பிரியமான பாட்டி!!!

அஞ்ச‌லியின் த‌ந்தைக்கு உயிர‌ளித்த‌ அவ‌ள் பாட்டியால் அவ‌ள் க‌ல்லூரி சேர்ந்த‌ வயதுவரைதான் உட‌ன்வ‌ர‌முடிந்த‌து... அந்த‌ இத‌ய‌ம் இறுதியாகத் துடித்த‌து அஞ்ச‌லியின் அர‌வ‌ணைப்பில்தான்... "உன‌க்கு ஒன்னும் ஆகாது பாட்டி... நீ என்கூட‌த்தான் இருக்க‌ப்போற‌.." என்று தன் பாட்டியை அணைத்துக்கொண்டு அஞ்ச‌லி சொல்லிக்கொண்டிருக்கும் போதே அந்த‌ இத‌ய‌த்தின் துடிப்பு தானாக‌ அட‌ங்கிப்போன‌தை அந்த‌ அணைப்பிலேயே நேர‌டியாக‌ உண‌ர்ந்தாள் அஞ்ச‌லி.... அவ‌ள் குழ‌ந்தையாக‌ இருந்த‌போது வலது கையில் சோறுபிடிக்கவும், இருகால் ஊன்றித் தரையில் நடக்கவும் கற்றுக் கொடுத்து, பின்பு தானே ஒரு குழந்தையாகிப்போய் டிவி ரிமோட்டில் சேன‌ல் மாற்றவும், மைக்ரோவேவில் சோறு சமைக்கவும் தன் பேத்தியிடம் கற்றுக்கொண்ட‌ செல்ல‌ப் பாட்டி!!! பாட்டியின் நினைவுக‌ள் ப‌சுமையாக‌வே தொட‌ர்ந்தன‌ அஞ்ச‌லியின் ப‌ய‌ண‌த்தில்.... அஞ்சலியின் 'பாட்டிகதைகள்' பொதுவாகப் பாட்டியில்லாதவர்களை ஏங்கவைக்கும் ஆனால் அவை ஜீவாவை வேறுவிதமாகப் பாதித்தன‌!!!

கிராம‌த்துவீட்டில் அதே ப‌க்க‌த்துவீட்டுக் குட்டிப்பாப்பாவுக்கு இர‌வு உண‌வு ஊட்டிக்கொண்டிருந்தார் பாட்டிய‌ம்மா.... பீம‌ன்தான் அந்த‌ப்பாப்பாவுக்குப் பிடித்தமான‌ ஹீரோ!!! பாப்பாக்க‌ளை ஓரிட‌த்தில் உட்கார‌வைத்துக் கதைசொல்லி உருண்டை உருண்டையாக சோறுதிணிப்ப‌து காலம்காலமாய் பாட்டிக‌ளுக்கும‌ட்டுமே கைவ‌ரும் லாவ‌க‌ம்!! பாட்டியின் க‌தைக‌ளில் துரியோதன சகோதரர்களை ம‌ட்டுமன்றி ப‌லப்பல‌ வில்ல‌ன்க‌ளையும் தின‌மும் த‌ன் க‌தாயுத‌த்தால் புர‌ட்டியெடுத்துவ‌ந்தான் பீம‌ன் அந்த‌க் குழ‌ந்தைக்காக‌!!! திடீரென‌ப் பாட்டிக்குத் தொண்டையில் ஏதோ உத‌றல்... பேச‌ முடிய‌வில்லை.... ஒருவித‌மாக‌த் தோட‌ர்ந்து புறையேறிக் கொண்டேயிருந்த‌து... க‌தை சொல்ல‌க் க‌ஷ்ட‌ப்ப‌ட்டப் பாட்டிக்கு த‌ண்ணீர் குடித்தும் அட‌ங்க‌வில்லை... மீண்டும் மீண்டும் விம்மியிழுத்துக் கொண்டேயிருந்தது நெஞ்சு... ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர்களை யெல்லாம் அழைத்து வ‌ந்துவிட்டாள் குட்டிப்பாப்பா...ஆளுக்கொரு வைத்திய‌ம் சொல்லியும் அட‌ங்க‌வேயில்லை... இர‌வு ரொம்ப‌ நேர‌ம்வ‌ரைக்கும் தொட‌ர்ந்த‌து தொண்டைக் குமுற‌ல்!!

பின்னே... இத்த‌னை நாள் இல்லாமல் கிட்டத்தட்ட‌ ம‌ற‌ந்தேபோய்விட்ட பேரன் த‌ன் பாட்டியைத் திடீரென்று நினைத்து நினைத்து தூக்க‌மின்றித் த‌விக்கையில் தொண்டை விக்காதா பாட்டிக்கு!! அஞ்ச‌லியின் பேச்சைக் கேட்ட‌திலிருந்தே தன் பாட்டியின் நினைவுகள் தொடர்ந்து வட்டமிட்டு வலிகொடுத்தது ஜீவாவுக்கு..."என்ன‌ பாவ‌ம் செய்தாள் என் பாட்டி இப்படி தனிமைத் தண்டனையில் துவழ‌??" என்று ம‌ன‌ம் கேட்கும் கேள்விக‌ளுக்கு விடைய‌ற்றுத் த‌விக்க‌த் துவ‌ங்கினான் ஜீவா!!

ஒன்ப‌தாம் வ‌குப்புப் ப‌டித்த‌போது வ‌ந்த‌ கொடுமையான‌ ம‌ஞ்ச‌ட் காமாலையால் க‌டும் அவ‌தியுற்ற‌ ஜீவாவை நாட்டுவைத்திய‌த்துக்காக‌ கிராம‌த்துக்கு அழைத்துச்சென்று காப்பாற்றிய‌து அவன் பாட்டிதான்... உட‌ல் நோவு வாட்டியெடுத்த‌போது ம‌டியில்போட்டுத் த‌லைவ‌ருடிக்கொடுத்த‌ பாட்டியின் பாச‌ம் இப்போது ஜீவாவின் த‌லைய‌ணையை ந‌னைக்கிற‌து க‌ண்ணீர்த்துளியாய்... குண‌மாகிப் ப‌த்து நாள் பாட்டியின் ஊட்ட‌த்தால் தேறியதும்... அந்த‌ப் ப‌த்து நாளும் பூர்வீக‌ நில‌புல‌ன்க‌ளில் சின்ன‌ மைன‌ராக‌ வ‌ல‌ம் வ‌ந்ததும்... குள‌த்தில் நேர‌ம்தெரியாம‌ல் குளித்துக் கிட‌ந்த‌வ‌னுக்காக‌க் க‌ரையிலேயே காத்துக் கிட‌ந்துப் பாட்டித் தலை துவ‌ட்டிவிட்டதும்...பாட்டியின் கைப்பக்குவத்தில் தேன்குழ‌ல் முருக்கு, அதிர‌ச‌ம், கேச‌ரி,ரொம்ப‌ப் பிடித்த‌ பால்ப‌னியாரம் ருசித்தது...!!! ப‌த்துநாளும் ப‌ல‌வித‌மாய்க‌ க‌ழிந்தன‌....

"பாட்டிய‌ விட்டுட்டு ம‌றுப‌டி போக‌ப்போறியா??"

"இதோ இப்ப‌வே ஜ‌ன‌வ‌ரி முடிஞ்சிருச்சு... பிப்ர‌வ‌ரி, மார்ச்..அவ்ளோதான்... ஏப்ர‌ல் மாச‌ம் லீவு.. நான் திரும்ப‌ வ‌ந்திடுவேன்!!!"

க‌ன்ன‌மிர‌ண்டிலும் முத்த‌ம் கொடுத்து நெற்றியில் முத்த‌ம் வாங்கித் தெரு முடியும்வ‌ரை திரும்பிப்பார்த்து கை காட்டிக்கொண்டே சென்றான்.... த‌ன் அம்மாவிட‌ம் அதிக‌ம் பேசிக்கொள்ளாத‌ ராஜ‌கோபால‌ன் சிரித்துக்கொண்டே எதுவும் பேசாம‌ல் ம‌க‌னை அழைத்துக்கொண்டு போனார்....ஏப்ர‌ல் வ‌ந்தது.... ப‌த்தாம் வ‌குப்புப் பாட‌ங்க‌ளை லீவிலேயே துவ‌க்க‌ ஏற்பாடுக‌ளை செய்திருந்தார் அப்பா!! பாட்டியை ம‌ற‌ந்து ப‌டிப்பில் தீவிர‌மானான் ஜீவா...முடிவில் ம‌திப்பெண்க‌ளோடு மெட‌ல்களும் குவிந்த‌ன‌...

"ப‌ப்ளிக் எக்ஸாம் டென்ஷ‌ன் எல்லாம் முடிஞ்சிபோச்சு பாட்டி.... அடுத்த‌ ரெண்டு மாச‌ம் நான் உங்க‌ கூட‌வேதான் இருப்பேன்!!!" ....

ஆனால் அந்த‌ இர‌ண்டுமாதங்களுக்கும் "ஸ்விம்மிங், க‌ராத்தே, ப்ரென்ச் க்ளாஸ், கிள‌ப் கிரிக்கெட்.. என்று குறுகிய‌ கால‌ க‌டமைக‌ளை அடுக்கிவைத்திருந்தார் ராஜ‌கோபால‌ன்... சார்ல‌ஸ் டிக்கின்ஸ், அக‌தா கிறிஸ்டி ப‌டிக்க‌ணும்... உல‌க‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌த்துக்கிற‌ வ‌ய‌தில் அந்த‌க் கிராம‌த்துக்குப் போவதாவது... விடாது சிவ‌ப்புக்கொடி ப‌ற‌க்க‌விட்டார்!!

ப்ள‌ஸ் ஒன் முடிந்து ப்ள‌ஸ் டூ கூட‌ முடிந்துபோன‌து.... "பாட்டீ நான் ப்ள‌ஸ் டூ பாஸாகிட்டேன்.." என்று "ப‌தினாறு வ‌ய‌தினிலே" ஸ்டைலில் ஆண்"ம‌யிலா"க‌ வ‌ய‌ல்வ‌ர‌ப்பில் அகவுகிற‌ ஜீவாவின் கனவுக்கு எம‌னாக‌ வ‌ந்த‌து எண்ட்ரென்ஸ் எக்ஸாம்.....சரி காலேஜ் போன‌ப்புறமாவது... ஸாரி நோ சான்ஸ்.. அவ‌ன் ப‌டித்த‌து அல‌காபாத்தில் உள்ள‌ ஆர்.ஈ.சி யில்!! பெங்க‌ளூரில் சாஃட்வேரில் இரண்டுவ‌ருட‌ம் வேலை...அத‌ன்பின் மீண்டும் எம்.பி.ஏ... அதுவும் மும்பையில்....

இரண்டொருமுறை கட்டாயப்படுத்திப் பாட்டியை நகரத்திலிருக்கும் தன்வீட்டுக்கு அழைத்துவந்து தங்கவைத்தார் ராஜகோபாலன்... ஒரே வாரத்தில் அவர் வேலைக்குப் போயிருந்த நேரத்தில் ஏனோதெரியவில்லை பாட்டி சொல்லிக்கொள்ளாமல் பழையபடி கிராமத்துக்கு சென்றுவிட்டார்...!!

பாட்டிக்கு ஞான‌ப்ப‌ழ‌ம் வேண்டுமென்றால் தாத்தாவை ஒருமுறை சுற்றி வ‌ந்து வாங்கிக் கொண்டுவிடலாம்!!! அந்த‌க் கால‌த்திலேயே கார் வைத்திருந்த‌வ‌ர் ஜீவாவின் தாத்தா!! வீடு, வ‌ய‌ல் ம‌ற்றும் தோப்பெல்லாம் வைத்திருந்தும் அந்த‌க் கால‌த்தில் கார் வைத்திருந்த‌துதான் இந்த‌க்காலத்திலும் அவரது பெருமித‌ அடையாள‌மாக‌ இருந்துவ‌ருகிற‌து... குறிப்பாக‌ப் பாட்டியின் ம‌ன‌தில்!!..... த‌ன்னைவிட‌ப் ப‌ல‌வ‌ய‌து மூத்த‌வ‌ரான‌ த‌ன் க‌ண‌வ‌ருக்கு இறுதிவ‌ரை ஒரு குழ‌ந்தையாக‌த்தானிருந்தார் பாட்டிய‌ம்மா!! சொந்த‌ நில‌த்தைக் குல‌தெய்வ‌க் கோயிலுக்குக் கொடுத்துவிட்ட‌ திருப்தியுட‌ன் திடீரென்று தாத்தா மாண்டுபோவார் என்று யாருமே நினைத்திருக்க‌வில்லை.... சிறுவ‌ய‌திலிருந்தே த‌ன‌க்குத்தானே கோடுபோட்டு வாழ‌ப் ப‌ழ‌கிக்கொண்ட‌, அவ‌ர்க‌ளின் ஒரேம‌க‌ன் ராஜ‌கோபால‌ன், தன் த‌ந்தை ம‌ரணிக்கும்போதே ப‌ட்ட‌ண‌த்தில் அர‌சாங்க‌வேலையில் சேர்ந்திருந்தார்.... த‌ன‌க்கு உல‌க‌மாயிருந்த‌ க‌ண‌வ‌ன் திடீரென‌ ம‌றைந்துபோக‌ உயிராய் வ‌ள‌ர்த்த‌ ம‌க‌னிட‌ம் த‌ஞ்ச‌ம‌டைவார் என‌ அனைவ‌ரும் நினைத்திருக்க‌, த‌ங்க‌ள் பெரிய‌ வீட்டை அந்த ஊர்ப் ப‌ள்ளிக்கூட‌த்துக்குக் கொடுத்துவிட்டு ஆர‌ம்ப‌கால‌த்தில் த‌ன் க‌ண‌வ‌ன் க‌ட்டிய‌ சின்ன‌வீட்டில் த‌னியாக‌ப் பாட்டிய‌ம்மா வாழ‌த்துவ‌ங்கியது ஏனென்பது இன்றுவ‌ரை யாரும் அவிழ்க்க‌விய‌லாத‌‌ ஒரு ம‌ர்ம‌ முடிச்சு!! பேரன் ஜீவாவுக்கு ம‌ஞ்ச‌ள்காமாலை தாக்கியிருந்த‌போது பாட்டி போராடிக் காப்பாற்றிய‌ இதேவீட்டில்தான் இன்று அந்த‌ப் ப‌க்க‌த்துவீட்டுக் குழ‌ந்தைக்கு சோறூட்டிவிடுகிறார்!! ந‌டு இர‌வில் தொண்டை விக்க‌ல் அட‌ங்கிப்போக, தின‌ம் தின‌ம் வாச‌ல்தெளித்து சுத்த‌ம் செய்த‌ முறைவாசலில் சொந்தப் பேரனின் பாதம் ப‌ட‌ப்போவ‌தை ய‌றியாம‌லேயே தூங்கிவிட்டார் பாட்டிய‌ம்மா!!!

வ‌ழ‌க்க‌ம்போல் அன்றும் வாச‌ல்தெளித்து மிக‌ச்சுத்த‌மாக‌ மொழுக‌ப்ப‌ட்டிருந்த‌து அந்த‌வீட்டின் முக‌ப்பு... கார் க‌தவு திற‌ந்து.. அரிசிமாவில் வ‌ரைந்த‌ எட்டு புள்ளிக் கோல‌த்தில் பட்டுவிடாத‌வாறு எச்ச‌ரிக்கையாய்த் த‌ரையில்தன் கால்ப‌தித்தான் ஜீவா.... வாச‌ல்க‌தைவை மூடும் வ‌ழ‌க்க‌ம்தான் அந்த‌க் கிராம‌த்துக்கே கிடையாதே!! காரிலிருந்து இற‌ங்கி ஒன்றுமே பேசாம‌ல் வீட்டுக்கு உள்ள்ள்ளே... வாச‌லிலிருந்து நேரே தூர‌மாய் அம‌ர்ந்து அரிசி புடைத்துக் கொண்டிருந்த, இன்னும் கொஞ்ச‌ம் முதுமைய‌டைந்துவிட்ட த‌ன் பாட்டியைத் த‌லையை ஒருபுற‌ம் ச‌ரித்த‌வ‌னாய்ப் பார்த்த‌வாறே நின்றிருந்தான் ஜீவா!!!! தூர‌த்தில் நிற்கும், நிழ‌லாய்த் தெரியும் அந்த‌ ம‌ங்க‌லான‌ உருவ‌ம் பாட்டியின் ம‌ன‌தில் மெதுவாகச் சின்ன‌ச் சின்ன‌ ம‌த்தாப்பூக்க‌ளைக் கொளுத்திப் போடத் துவங்கியது... முக‌ச்சுருக்க‌ங்க‌ள் கேள்விக்குறிக‌ளாய் மேலும் சுருங்கி... கையிலிருந்த‌தை அப்ப‌டியே போட்டு விட்டுத் திடீரென‌த் த‌ட‌புட‌லாய் எழுகிறார் பாட்டிய‌ம்மா!!! ஜீவாவின் இமைக்காத‌ பார்வைக்குப் பாட்டியின் சிறு அசைவுகூட‌த் த‌ப்ப‌வில்லை... வேக‌ம்காட்டும் பொருட்டு இருகைக‌ளையும் த‌ரையில் ஊன்றிப் ப‌ல‌ம் திர‌ட்டி எழுந்து அந்த‌ வ‌ய‌திற்கு அதிவேக‌மாய் த‌ன்னை நோக்கி நெருங்கிவ‌ரும் பாட்டி.... உருவ‌ம் தெளிவாக‌த் தெரிந்திடும் தூர‌ம் நெருங்கிய‌தும் கைக‌ளிர‌ண்டையும் உத‌ற‌த் துவ‌ங்கினார் ப‌த‌ற்ற‌மாய்!! வேக‌ந‌டை ஓட்ட‌மாகி உத‌றிய‌ கைக‌ள் நேரே ஜீவாவின் க‌ன்ன‌ங்க‌ளில் ப‌திந்த‌த‌ன‌!! இய‌ல்பாக‌வே க‌ல‌ங்கியிருந்த‌ க‌ண்க‌ளால் காட்சியை முழுதாக‌ ந‌ம்ப‌ இய‌லாத‌து தெளிவாக‌வே தெரிந்த‌து....!!! "சொல்லிட்டுப் போன‌ மாதிரியே ஏப்ர‌ல் மாசம் வந்துட்டேனா!!" ஜீவா சிரிக்க‌.... " கண்ணீர்மல்க‌ த‌ன் பேர‌னை உச்சிமுக‌ர்ந்தார் பாட்டி பல‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து......!!

--தொடரும்.....


(கொஞ்ச‌ம் நீண்ட‌க‌தை... இர‌ண்டாவ‌து பகுதியை விரைவில் எழுதிப் ப‌திவிடுகிறேன்...
அசௌக‌ரிய‌த்துக்கு ம‌ன்னிக்க‌வும்!! Hope you'll like this story!!)


பிர‌பு. எம்

ஸ்ல‌ம்டாக் மில்லிய‌ன‌ர்


இந்திய ஆங்கிலம் பேசும் இந்தத் திரைப்படம்தான் சென்ற வருடத்தின் சிறந்த ஹாலிவுட் படம்!! 1927 லிருந்து வழங்கப்படும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுப் பட்டியலில் இறுதியில் 2008ல் ஏ ஆர் ரஹ்மான் என்ற பெயரும் நிலைத்து இடம்பிடித்து விட்டது.... ஓர் அற்புத வரலாறு நாம் வாழும் நாளில் அரங்கேறிய ஒரு திருப்தி.... "எல்லாப் புகழும் ரஹ்மானுக்கே!!"

"கவுன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சி இரண்டாம் பாகம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமிதாப் பச்சனை விகடன் பேட்டி கண்டது நினைவிருக்கிறது.... அதில் ஒரு கேள்வி அமிதாப்பிடம் கேட்கப்பட்டது... "இந்நிகழ்ச்சியில் கேள்விகளைத் தேர்ந்தெடுப்பவர் "யூனிவர்சிடி சேலஞ்ச்" போன்ற நிகழ்ச்சிகளைக் கொடுத்து அசத்திய சித்தார்த்தபாசு, இருப்பினும் தீயணைப்பு வண்டி என்ன நிறம்?? போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டு அதற்குப் பச்சை, மஞ்சள் என்று சாய்ஸும் கொடுக்கப் படுகிறதே??"

அதற்கு அமிதாப்பின் பதில்: "க்ரோர்பதி நிகழ்ச்சி ஒரு க்விஸ் ஷோ இல்லை..கேம் ஷோ!! எல்லாத் தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படி கேள்விகள் இதில் இருக்கும். இருக்க வேண்டும்! ஏதோ அறிவாளிகளுக்கான நிகழ்ச்சியென்று தோன்றிவிட்டால், அதன் சுவாரஸ்யமே போய்விடும். ஓரளவு பொதுவிஷயங்களில் ஆர்வமிருந்தாலே போதும் ஹாட்சீட்டில் அமரலாம், அப்படி அமர்பவர்களுக்குக் கொஞ்சம் "மசாலா" இருந்தால் க்ரோர்பதியும் ஆகலாம்.. அதுதான் ஃபார்முலா!!"

ஸ்லம்டாக் பார்த்து முடித்த கணமே மனதில் தோன்றியது அமிதாப்பின் இந்த பதில்தான்! சேரியில் பிறந்த ஜமால் போன்ற ஓர் இளைஞன் இத்தகைய ஒரு மெகா ஷோவில் அறிவுஜீவிகள் யாவரும் நெருங்கவியலாத கடைசி கட்டம் வரை வந்து வெற்றியும் பெற்றதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியுடன் படத்தைத் துவக்கி முடிவில் D) It's Written என்று முடிக்கும்போது ஒரு நிறைவை உணரமுடிகிறது அதற்கே ஒரு ஸ்பெஷல் விருது தரலாம்.....

மில்லியனராவதற்குப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிந்திருக்க வேண்டும்... அந்தப் பதினான்கு கேள்விகளுக்குப் பதில் தெரிவதற்கு?? பதினான்காயிரம் புத்தகங்கள் படித்திருந்தாலும் சரிதான் அல்லது விதிவசத்தாலோ எதனாலோ கேட்கப்படுகிற அந்த அசல் பதினான்கு கேள்விகளுக்கும் பதில்தெரிந்திருந்தாலும் சரிதானே!! வாழ்க்கைத் தன் மீது கிறுக்கிப் போட்டப் பாடங்களைத் தவிர வேறெதையுமே படித்திராத ஓர் இளம் காதலனுக்கு அந்த வாழ்க்கையே தந்த பரிசு, மில்லிய‌ன் டால‌ர் ம‌திப்புள்ள‌ சில‌ ப‌தில்க‌ளை அவ‌ன் ம‌ன‌தில் போகிற‌ போக்கில் வ‌லியுட‌ன் ப‌ச்சைக் குத்திவைத்த‌து!!
எல்லா குழ‌ந்தைக‌ளுக்குமே பிடித்த‌து த‌ண்ணீரில் முங்கி விளையாடுவ‌து... க‌ள்ள‌மின்றி க‌ப‌ட‌மின்றித் த‌ண்ணீரில் முங்கி விளையாடிக்கொண்டிருகும் வேளையில் சிறுவ‌ர்கள் ச‌லீமும் ஜ‌மாலும் நிச்சய‌மாக‌ உண‌ர்ந்திருக்க‌ மாட்டார்க‌ள் இன்னும் சில‌ நிமிட‌ங்க‌ளில் அர்த்த‌மில்லாத‌ கேவ‌ல‌மான‌ ஒரு ம‌த‌ச்ச‌ண்டையில் த‌ங்க‌ள் தாய் பலியாக‌ப்போகிறாள் என்று.... பார்வையாள‌ர்க‌ளாகிய‌ நாமும்தான்!! உயிர்க்கொல்ல‌ வ‌ல்ல‌ கொடூர‌ ஆயுத‌ங்க‌ளைத் தாங்கிய‌ தாடிவைத்த‌ த‌டிய‌ர்க‌ள் பெருங்குரலெடுத்து ர‌த்த‌வெறியோடு ம‌க்க‌ளை நோக்கி ஓடிவ‌ந்தால் இந்தியாவில் 'க‌ல‌வ‌ர‌ம்' என்பார்க‌ள், என்ப‌தை முற்றிலும் அய‌ல்நாட்டு இய‌க்குன‌ர் டேனியேல் கூட‌ அறிந்துகொண்டுள்ளார்!! அவ‌ர் வாயிலாக‌ இன்று உலக‌மே அறிந்துகொண்டிருக்கும் ஆளுக்கொருவித‌மாக‌! அந்த‌ இள‌ம்தாயின் முக‌த்திலேயே அறைகிற‌து வ‌லிய‌தொரு உருட்டுக்க‌ட்டை அவ‌ளின் உயிரை அங்கேயே வாங்கிக்கொண்டு... அவ‌ள் பிஞ்சு ம‌க‌ன்க‌ளின் பூவிழிக‌ளின் வாச‌லிலேயே சுருண்டு விழுந்து உயிர்துற‌க்கிறாள் அந்த‌ப் பெண்.... தொட‌ரும் அந்த‌க் க‌ல‌வ‌ர‌த்தின் அத‌க‌ள‌த்தில் நிதான‌மிழ‌க்கும் ஒரு சாமானிய‌னின் க‌ண்க‌ளாக‌வே மாறி சுழ‌ன்ற‌டித்து ஒளிப்ப‌திவு செய்திருக்கும் ஆஸ்க‌ர் வென்ற‌ கேமரா நிலைகுத்தி நிற்ப‌து த‌ன‌து வ‌ல‌துகையில் வில்லொன்றை வைத்துக்கொண்டு திறுதிறு வென்று விழித்துக்கொண்டிருக்கும் ஒரு குட்டி "இராம‌ன்" மீது!! (இராம‌வேஷ‌ம் போட்டு அந்த‌ சிறுவ‌ன் உங்க‌ள் தெருக்க‌ளில் என்ன‌ செய்து கொண்டிருக்கிறான்?? என்று கேட்டார் த‌மிழ் தெரிந்த‌ வெளிநாட்ட‌வ‌ர் ஒருவ‌ர்... அவ‌ன் 'யாச‌க‌ம்' செய்கிறான் என்று சொல்லிவிட்டுப் படத்தைத் தொடர்ந்தேன் அவ‌ருக்கு அந்த‌ வார்த்தைக்கு நிச்சிய‌ம் அர்த்தம் தெரியாது என்று ம‌ன‌துக்குள் உறுதிப் ப‌டுத்திக்கொண்டு!!) அதுவே மில்லிய‌ன‌ர் விளையாட்டில் ஜமாலுக்கு ஒரு கேள்வியின் ப‌திலாகிற‌து..!! இவ்வாறு அநாதையாகிப் போகிற‌ ஜ‌மாலைத் த‌த்தெடுப்ப‌து வ‌ழ‌க்க‌ம்போல‌க் குப்பைத்தொட்டிக‌ள்தான்.... குப்பைத்தொட்டியின் பராம‌றிப்பில் வ‌ள‌ர்கிற‌ சிறுவ‌ர் சிறுமிக‌ளைக் க‌ண்டெடுத்துப் பிச்சைக்கார‌ர்க‌ளாக‌ ந‌வீன‌ப்ப‌டுத்துகிறான் (!) ஒரு கிராத‌க‌ன். ந‌ன்றாக‌ப் பாட‌த்தெரிந்த‌ ஒரு சிறுவ‌னின் கண்க‌ளில்.... அந்த‌க் காட்சியின் கொடூர‌த்தை விவ‌ரிக்க‌ ம‌ன‌மில்லை... குருட‌னாக்க‌ப்ப‌டும் அந்த‌க் குழ‌ந்தைபாடும் பாட‌ல் அங்கிருந்து த‌ப்பித்து செல்லும் ஜ‌மாலுக்கு இன்னொரு மில்லிய‌ன‌ர் கேள்விக்கு ப‌திலாகிற‌து!! குருட்டுப் பிச்சைக்கார‌னாக‌ upgrade செய்ய‌ப்ப‌ட்ட அதே சிறுவ‌ன் பின்னாளில் ஓர் அமெரிக்க‌ டால‌ரை முக‌ர்ந்து பார்த்து அதிலிருக்கும் பெஞ்ச‌மின் ஃப்ராங்க்ளினை ஜ‌மாலுக்கு அறிமுக‌ம் செய்து வைக்கிறான் அடுத்த‌ கேள்விக்கு அவன் சரியான‌ ப‌தில்சொல்ல‌!!

ப‌ல‌ ல‌ட்ச‌ம் ம‌திப்புள்ள‌ கேள்விக‌ளுக்கான‌ பொக்கிஷ‌ ப‌தில்க‌ளை எழுதிவைத்துவிட்டால் அழிந்துவிடுமோ என்று.... ஒவ்வொன்றையும் வ‌லிக்க‌ வ‌லிக்க‌ இள‌ம் நெஞ்சில் நெருப்பால் ப‌திக்கிற‌து ஜமாலின் வாழ்க்கை!! ஒவ்வொரு கேள்வியின்போதும் அது தொட‌ர்பான‌ அழுத்த‌மான‌ நிக‌ழ்வுக‌ள் காட்சிகளாய் விரிய, தொய்வின்றி ந‌க‌ர்ந்துகொண்டே செல்கிற‌து ப‌ட‌ம்..... வ‌லுவான‌ க‌ற்பனையை ஆதார‌மாக‌க் கொண்டு அழுத்தம் திருத்த‌மான‌ திரைக்கதையால் படத்தை அத‌ன் வ‌லியோடும் வேக‌த்தோடும் ப‌ட‌ம்பிடித்துத் த‌ந்திருக்கிறார்க‌ள்... க‌டைசி கேள்விக்குப் ப‌தில் தெரிவ‌த‌ற்கு முன்பே வெற்றியாள‌னாகி விடுகிறான் ஜமால்... ஏனெனில் அவ‌ன‌து இல‌க்கு அந்த‌ப் ப‌ண‌மில்லை... காத‌ல்! த‌ன் காத‌லி ல‌த்திக்கா நிச்சிய‌ம் அந்த‌ நிக‌ழ்ச்சியைக் காண்பாள் என்ப‌தால்தானே அவ‌ன் அந்த‌ நிக‌ழ்ச்சியில் க‌லந்துகொள்ள‌வே த‌ன்னை நிர்ப‌ந்தித்துக் கொள்கிறான்...!! இவ்வாறு க‌தையில் க‌டைசிவரை சிலிர்க்க‌ வைக்கும் சுவார‌ஸ்ய‌ங்க‌ள் உண்டென்றால் திரைக்கதையில் அவ்வ‌ப்போது உண‌ர்வுக‌ளில் தீ ப‌ற்றவைக்கும் ர‌சாய‌ண‌ங்க‌ளும் ஏராள‌ம்!! இல்லாம‌லா ஆஸ்கார் வ‌ரை வென்றிருக்கும்!!

அமிதாப் ப‌ச்ச‌ன் மீதுள்ள‌ அள‌வில்லாத‌ அபிமான‌ம் குட்டிப்பைய‌ன் ஜ‌மாலை ம‌ல‌க்குழியில் குதித்து மேனிமுழுவ‌தும் ம‌ல‌ம்பூசி ஓட‌வைப்ப‌து எல்லாம் ரொம்ப‌வே மிகையான‌ க‌ற்ப‌னை... சிறுவ‌ன் ஒருவ‌ன் குருட‌னாக்க‌ப் ப‌டுவ‌து குரூர‌மான‌ ஒரு ப‌திவு... மேலும் இன்னும் இர‌ண்டே கேள்விக‌ளுக்குப் ப‌தில் சொல்லிடும் வேளையில் மில்லிய‌ன‌ராக‌ப் போகும் "ஸ்ல‌ம்டாக்" ஜ‌மாலைப் போட்டி ந‌ட‌த்தும் அணில்க‌பூரின் ச‌ந்தேக‌த்தின் அடிப்ப‌டையில் போலீஸ் கைது செய்வ‌துகூட‌ப் ப‌ரவாயில்லை... ஆனால் அங்கு அவ‌னுக்குக் கொடுக்க‌ப்ப‌டும் தேர்ட் (3rd) டிகிரி ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப‌ ஓவ‌ராக‌த் தோன்றிய‌து... ஒரு கேம் ஷோவில் க‌ள்ள‌ ஆட்ட‌மே ஆடினாலும் கூட‌ போட்டி முடியும் முன்ன‌மே போலீஸ் த‌லையிட்டு உண்மையைக் கொண்டுவர ஜமாலை இரவுமுழுதும் அடித்துத் துன்புறுத்துவார்களாம்.... ஒருவேளை அமெரிக்காவில் இப்ப‌டியெல்லாம் அப‌த்த‌ங்க‌ள் சாத்திய‌ம் போல‌!!

தன் இசையால் இரண்டு ஆஸ்கார்கள் வென்று ந‌ம்மை ம‌கிழ்ச்சிக் க‌ட‌லில் ஆழ்த்தியிருக்கும் ந‌ம் இசைப்புய‌ல்தான் இந்த‌ப் ப‌ட‌த்துக்குப் பின்னாலிருந்து முழுக்க இசை வழங்கியிருக்கிறார் என்று எளிதில் கிரகித்துவிட இயலாத அளவுக்குப் பிலிம்சுருளின் இருபுற‌மும் ஒட்டியிருக்கும் ஒலியாக, காட்சிக‌ள் சொல்லும் கதையை இசையால் ஒருபுற‌ம் அதன் உணர்வோடு மொழிபெய‌ர்த்திருக்கிறார் ரஹ்மான் த‌ன் அடையாள‌த்தை முற்றிலும் மறைத்துக்கொண்டு!! ஆனால் "ஜெய் ஹோ!" பாட‌லுக்கு இத்த‌னை அங்கீகார‌த்தை ச‌ர்வ‌தேச‌ சினிமா உல‌க‌ம் கொடுத்திருக்கிற‌து என்றால் ந‌ம்ம‌ ப‌ட‌ங்க‌ளுக்கு ர‌ஹ்மான் கொடுத்திருக்கும் ஏராள‌மான‌ அபூர்வ‌ராக‌ங்க‌ளுக்கு ஹாலிவுட் என்னென்ன‌ த‌ந்திருக்க‌ வேண்டியிருக்கும்!!

க‌டைசியாக‌..... இந்த‌ப்ப‌ட‌ம் இந்திய‌ர்க‌ள் இருவ‌ருக்கு ஆஸ்கார் வாங்கிக்கொடுத்திருந்தாலும்... இந்தியாவை ச‌ர்வ‌தேச‌ அர‌ங்கில் கொஞ்ச‌ம் அசிங்க‌ப் ப‌டுத்திவிட்ட‌தாக‌ ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ர் கொதிக்கிறார்க‌ள்... உண்மைதான்... சேரிக‌ளின் ந‌டுவே குப்பை மேடுக‌ளிலும் விபச்சார‌ விடுதிக‌ளிலும்தான் கேம‌ரா இந்தியா எனும் அடையாள‌த்தை பெரும்பாலும் ப‌திவாக்கியிருக்கிற‌து.... "ஸ்ல‌ம்டாக்" என்ற‌ சொல்லுக்கு மும்பையின் உண்மையான‌ ஸ்ல‌ம்களிலிருந்து எதிர்ப்புக் குர‌ல் வ‌ந்த‌தும் இய‌ல்புதான்...

நான் நினைத்த‌து என்ன‌வென்றால்.... சேரியில் வாழ்ப‌வ‌ர்க‌ள் ச‌த்திய‌மாக‌ நாய்க‌ள் அல்ல‌.... இந்த‌ மிக‌ப்பெரிய‌ வ‌ள‌ர்ந்த தேசத்தில் இன்றும் சேரிக‌ள் இருக்க‌க் கார‌ண‌மான‌வ‌ர்க‌ளே நாய்க‌ளினும் கேவ‌ல‌மான‌வ‌ர்க‌ள்.... ஆனால் அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் நம்நாட்டில் மில்லிய‌ன‌ர்க‌ளாச்சே!!!


பிர‌பு. எம்

கால்ஷீட் - சிறுக‌தை



"கருப்பு.....

......வெள்ளை


கருப்பு........

......மீண்டும் வெள்ளை...


லைட்ஸ் ஆன்.......

........லைட்ஸ் ஆஃப்


லைட்ஸ் ஆன்.......

.......லைட்ஸ் ஆஃப்"


கண்களை ஒரு சீரான இடைவெளியில் அகலத் திறந்து திறந்து மூடுவதால் நம்மாழ்வாருக்கு இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வரும் உணர்வைத் தந்தது!


"ஏன் மருத்துவமனைகள் எல்லாமே மொத்தமாகவே வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன???" என்று மனதில் கேள்வி தோன்றுகிறது.. அதற்கு பதில் தேடாமல்நம்மாழ்வார் மீண்டும் மல்லாந்து படுத்தவாறு விட்டச் சுவரின் வெள்ளையோடு தன் 'கண்மூடி' விளையாட்டைத் தொடர்கிறார்...இதுபோன்று சுவாரஸ்யமில்லாத பொழுதுகளை அவர்தனது கடந்தகாலங்களில் அனுமதித்ததேயில்லை. ஆனால் இன்று..... இத்தகைய பொழுதுகளையும் தன்னால் கடக்க முடிவதைக் காணும்போது, இலக்கு ஒன்றை அடையும் பொருட்டுத் தனக்கு இதுவும் சாத்தியமே என்று புரிந்துகொள்கிறார்... மீண்டும் அதே கண் சிமிட்டல்.... "ஏன் மாமா கண்ணை இப்படி அலட்டிக்கிறீங்க? கண் கூசுதா?? ஜன்னலை அடைச்சிடலாமா??" இன்ஞ்சினியரான தங்கைப் பையன் சுந்தர் கேட்க, அலுங்காமல் கழுத்தைமட்டும் அவன்புறம் அசைத்து மெலிதாகச் சிரித்துக் கண்ணடிக்கிறார்... "பேச முடியலையா மாமா??".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த‌போதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு!! எல்லாம் காதலுக்காக!! தான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான நடிப்பின்மீது கொண்ட வெறித்தனமான காதலுக்காக....!!


தொடர்ந்து ஒரேயிடத்தில் பார்வைப் பதித்துப் படுத்திருக்கும் தன் மாமாவிடம் அன்றைய செய்தித்தாளில் அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஒன்றை மெதுவாகக் காட்டினான் சுந்தர்... "மருத்துவமனையில் தேறிவருகிறார் நடிகர் நம்மாழ்வார்" என்று கூறியது அந்தப் பெட்டிச் செய்தி.... நம்மாழ்வார் முகத்தில் திடீர் பிரகாசம்... பிரபலமான நடிகருடன் நம்மாழ்வார் இணைந்து நடிக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம், நம்மாழ்வார் உடல் நலம் தேறிவருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறது அந்தச் செய்தி.. நம்மாழ்வாரை வைத்து மிக அண்மையில் மிகப்பெரியதொரு வெற்றிப்படம் கொடுத்த இளம் இயக்குனர் சுரேஷின் அடுத்தப்படம் அது... தனது முந்தைய படத்தைப் போன்றே இந்தப் படத்திலும் நம்மாழ்வாரின் பாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்றும் அவருக்காகக் கதையை வேண்டுமானாலும் மாற்றுவோமே தவிர வேறுயாரையும் ந‌டிக்க‌வைக்கும் எண்ண‌மில்லை என்று இய‌க்குன‌ர் சுரேஷ் திட்ட‌வ‌ட்ட‌மாக‌க் கூறியிருப்பதாகவும், மேலும் இது மிக‌ப்பிர‌ப‌லமான‌ தயாரிப்பாள‌ரான‌ ர‌ம‌ண‌ராஜனின் படம் என்றும் செய்தியில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து...செய்தியைப்பார்த்த‌வுட‌ன் ஏதேதோ ர‌சாய‌ண‌ மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மாழ்வாரிட‌ம்... சுந்த‌ரைப்பார்த்து பெருமித‌மாக‌ப் புன்ன‌கைக்கிறார்....

இந்த முறை மனதின் ஒருநிலையைத் தொடர முடியவில்லை அவரால்!!

"கருப்பு..வெள்ளை...லைட்ஸ் ஆன்...சுரேஷ்....அந்த சந்திப்பு...லைட்ஸ் ஆஃப்....ரமணராஜன்.....அந்த அறிவிப்பு...கருப்பு..வெள்ளை..."

மனம் இடையில் வேறொரு அலைவரிசையில் பயணித்தது....,சில பழைய உரையாடல்கள் மறுஒலிபரப்பாக எதிரொலித்தது அவருக்கு மட்டும்!!!

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார்!!!!..."

கருப்பு....வெள்ளை.... கருப்பு....வெள்ளை....

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

லைட்ஸ் ஆன்....லைட்ஸ் ஆஃப்......"

எழ‌ வேண்டும் என்று தோன்றியிருக்கும் போலும்....ம‌னித‌ர் இப்போதுதான் உண‌ர்கிறார் த‌ன்னுடைய‌ கால்க‌ள் முற்றிலுமாக‌ செய‌லிழ‌ந்து போயிருப்ப‌தை......சில நிமிடப் போராட்ட‌ம் ப‌லன‌ளிக்க‌வில்லை... அவ‌ரால் த‌ன் உட‌லை அசைக்க‌ இய‌ல‌வில்லை.....அதுவரை அவர் உணராத வேதனை அவரை ஆட்கொண்டு உடல் முழுதும் பரவுகிறது..... எழுந்து மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் தனது மனக்கணக்கு எங்கே பொய்த்துவிடுமோ?? என்று சதி செய்யும் தன் உடல்நிலையை நினைத்தவாறு சுந்தரை நோக்கி மீண்டும் த‌லை ச‌ரித்து சிரித்த‌முக‌மாய்ப் பார்க்கிறார்... அந்த அழுத்தமான பார்வையில் பல அர்த்தங்கள்.... இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் இறங்கிப் போகிறது....அதே புன்னகையோடு சுந்தரையே பார்த்தவண்ணமாய் இருக்கிறார் இமைக்காமல்......

சுந்த‌ர் பிற‌ந்த‌ போதே ந‌ம்மாழ்வார் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ந‌டிகர்தான். அவரைக் கையாள்வது மிகக் கடினம் என்று அவர் குடும்பத்திலேயே ஓர் உணர்வு இருந்தது. க‌தாநாய‌கனாக‌ சில‌ப‌ட‌ங்க‌ளிலும், வில்லனாக‌வும், குண‌ச்சித்திர‌ ந‌டிகராக‌வும் ப‌ல்வேறு ப‌ட‌ங்க‌ளிலும் நடித்துத் த‌ன‌து தனித்துவ‌மான‌ ந‌டிப்பாற்ற‌லால் எப்பொழுதுமே உச்ச‌த்திலிருந்தார். "சாதாரண‌ வாழ்க்கை வாழும் சராசரி ம‌னித‌ன் மிக‌க் கொடுத்துவைத்த‌வன், ஏனென்றால் அவ‌ன் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள‌ப்ப‌டுகிறான்!" என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஒரு பக்குவப்பட்ட மனிதனாய்.....

"சாதிக்கவே பிறந்தேன்" என்று தன்னை இள‌மையிலிருந்தே ஆழ‌மாக‌ ந‌ம்பி வாழ்ந்து வந்த‌ ந‌ம்மாழ்வார், தனது சாதனைக் க‌ள‌மான‌ நடிப்பைத்தவிர‌ வேறு எதிலுமே பொறுப்பாக‌ இருந்த‌தில்லை! அறுவைசிகிச்சை முடிந்திருந்த தன் த‌ந்தையை ஒருநாள் பார்த்துக் கொள்ள‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பிவைத்த‌போது, நடிக்க‌ வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளைஞனான நம்மாழ்வார், சாதிக்கக் காத்திருக்கும் த‌ன‌து நேர‌த்தைத் த‌ன் குடும்பத்தின‌ர் பாழ்ப‌டுத்துவதாகப் பயங்கரமாய்க் கொந்த‌ளித்ததையும் ச‌ரி, பிறகு பெரிய‌ ந‌டிக‌னாகித் தான் க‌ட்டிய‌ மிக‌ப்பெரிய‌ வீட்டில் ஆசையாய்த் த‌ன்னைப் பிர‌ம்மாண்ட‌மாய்ப் ப‌ட‌ம்பிடித்து வீட்டின் முக‌ப்பில் மாட்டிய‌ ப‌ட‌த்தில், மாட்டிய‌ அன்றே சிறுவ‌னான‌ த‌ங்கைப்பைய‌ன் சுந்த‌ர் மீசை வ‌ரைந்திட, அனைவ‌ரும் மிர‌ண்டுபோய்க் காத்திருந்த‌ போது வ‌ந்து பார்த்துவிட்டு "என‌க்கு மீசைவெச்சா ந‌ல்லாதானிருக்கும்போல‌...." என்றும‌ட்டும் கூறிவிட்டு அல‌ட்டிக் கொள்ளாம‌ல் சென்றது மட்டுமன்றி அந்தப் படத்தை இறுதிவரை மாற்றாமல் இருந்ததையும் ச‌ரி... உண்மையில் யாராலும் அவ‌ரைப் புரிந்துகொள்ள‌வே முடிய‌வில்லைதான்...!!

சுந்த‌ர் அறைக்கு வெளியே கொஞ்சம் பதற்றத்தோடு ம‌ருத்துவ‌ர்க‌ளோடு ஏதோ சீரிய‌ஸாக‌ப் பேசிக்கொண்டு இருக்கிறான்..... இர‌ண்டு ந‌ர்சுக‌ள் அறையைவிட்டு வெளியே வந்தபின்.....சுந்த‌ர் ந‌ம்மாழ்வாரின் மிக‌ அருகே சென்று அம‌ர்ந்து அவ‌ர் முக‌த்தைப் பார்க்க......ந‌ம்மாழ்வாரின் க‌ண்கள், சிரித்த முகமாய் இப்போதும் த‌ன் ம‌ரும‌க‌னின் க‌ண்க‌ளை ஆழ‌மாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌......மௌன‌த்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்க‌ள் போல‌...

அன்று காலையில் ஒரு ப‌தினோரு ம‌ணிய‌ள‌வில் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜனின் அலுவ‌ல‌க‌த்திற்கு இய‌க்குன‌ர் சுரேஷ் வ‌ந்திருந்தார்..... அவ‌ர்க‌ள‌து கூட்டுமுய‌ற்சியில் உருவாகிக் கொணடிருக்கும் திரைப்ப‌ட‌ம் கிட்ட‌த்த‌ட்ட எண்ப‌து ச‌த‌வீத‌ம் முடிந்துவிட்ட‌ நேர‌த்தில், உண்மையிலேயே இப்போது ந‌ம்மாழ்வாருக்காக‌த்தான் ப‌ட‌ப்பிடிப்பு வேலைக‌ள் காத்திருக்கின்றன..... இத‌ர‌க் காட்சிக‌ளெல்லாம் ப‌ட‌மாகிவிட்ட‌ வேளையில் தயாரிப்பாள‌ரிட‌ம், ரிலீஸ் மற்றும் அடுத்த‌ ப‌ட‌ப்பிடிப்பு ஷெட்யூல் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்..... "அவரோடத் த‌ங்க‌ச்சிப் பைய‌ன்தான் ஹாஸ்பிட்ட‌ல்ல‌ அவ‌ரைப் பாத்துக்கிறாரு... எதுவும் தெளிவா சொல்ல‌மாட்டறாரு... டாக்ட‌ரை இன்னும் பார்க்க‌ முடிய‌லைனு சொல்றாங்க‌..எப்டினாலும் ச‌ரி ந‌ம்மாழ் சார் சொல்லிட்டுப் போனபடி இன்னும் ரெண்டு நாள்ல‌ வ‌ந்துடுவார்னு ந‌ம்புறோம் சார்..." என்று சுரேஷ் சொல்ல‌... கருத்தாய்க் கேட்டுக்கொண்டிருக்கும் ரமணராஜன், "ஒண்ணும் பிர‌ச்னையில்ல‌... எவ்வ‌ள‌வு நாள் ஆனாலும் ச‌ரி.. அவ‌ர் முழுசா குண‌மாகிட்டு வ‌ர‌ட்டும்..." அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன் உத‌வியாள‌ரிட‌ம் "அவ‌ர் என்ன‌தான் ம‌றுத்தாலும் எப்படியாவது ஹாஸ்பிட்ட‌ல் செல‌வு முழுசும் ந‌ம்ம‌ளே செட்டில் ப‌ண்ணுற‌ மாதிரி ஏற்பாடு செஞ்சிடுங்க‌.." என்று உத்த‌ர‌விடுகிறார்.... சுரேஷ் எவ்வித‌ உண‌ர்வையும் முக‌த்தில் காட்டாத‌ப‌டி ர‌ம‌ண‌ராஜ‌னையே பார்த்துக்கொண்டிருந்தார்..... ப‌ல‌வ‌ருட‌ ப‌ரிச்சிய‌மும் ந‌ட்பும் கொண்ட‌வ‌ரான‌ ந‌ம்மாழ்வாரைப் ப‌ற்றி ஏனோ சிலநாட்களாக அடிக்க‌டி நினைவ‌லைக‌ளில் சிக்கிக் கொள்கிறார் ர‌ம‌ண‌ராஜ‌ன்....

தொழிலில் என்றுமே ஒரு சிர‌த்தையான‌ காத‌ல் உண்டு ந‌ம்மாழ்வாருக்கு... சிறிய‌ ந‌டிக‌ராய் சில‌கால‌ம் ம‌ட்டுமே இருந்தார், அந்த‌க்கால‌ம்தொட்டு ஒருநாள்கூட‌ப் ப‌ட‌ப்பிடிப்பு அவ‌ரால் தட‌ங்க‌ல் ப‌ட்ட‌தே இல்லை...சினிமாமீது தான் கொண்டிருக்கும் அதிதீவிர‌ ஈடுபாட்டை அனைவ‌ரிட‌மும் எதிர்ப்பார்ப்பார்... மீறுகையில் கடும்கோப‌ம் கொள்வார்! உண‌ர்ச்சிம‌ய‌மான‌ ம‌னித‌ர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி ந‌டிப்பார்..... க‌ளைப்பினால் தன் ந‌டிப்பின் த‌ர‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவித‌மான‌ ம‌னஅழுத்தம் அவ‌ர‌து ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்தை ரொம்ப‌வே பாதித்து வ‌ந்த‌து... அதிலிருந்து விடுப‌ட‌ எப்போதுமே அவ‌ர‌து விர‌ல்க‌ளுக்கிடையே சிக‌ரெட் ஒன்று அவ‌ரைப் போல‌வே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும்! ந‌ள்ளிர‌வு முழுதும் தூக்க‌மில்லாத‌தால் அதிக‌மாக‌வே குடிப்பார்.....

நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்.....ஒரு தீபாவ‌ளி தின‌ம்..... ந‌ம்மாழ்வாரின் நான்கு ப‌ட‌ங்க‌ள் அன்று ரிலீஸ்! இர‌ண்டில் வில்ல‌னாக‌வும், ஒன்றில் மிக‌வும் சாந்த‌மான‌ ம‌னித‌ராக‌வும் இன்னொன்றில் நாயகனின் பெரிய‌ ப‌ண‌க்காரத் தந்தையாகவும் ந‌டித்திருந்தார்... பாராட்டுக‌ள் வ‌ந்து குவிந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌, இந்நிலையில் அவ‌ர் கடந்த‌ வ‌ருட‌ம் ந‌டித்திருந்த‌ ஒரு ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்காக‌த் தேசிய‌ விருதுக்கு அவ‌ர் பெய‌ர் இறுதிச்சுற்றில் ப‌ரிசீலிக்க‌ப்ப‌டுவ‌தாகவும் செய்தி வெளியாகிய‌து... அதே நேர‌த்தில், மிகப்பெரிய‌ ந‌டிக‌ர் ஒருவ‌ரின் கால்ஷீட்டைப் பெற்றிருந்த‌ ந‌ம்ப‌ர் ஒன் தயாரிப்பாளரான‌ ர‌ம‌ண‌ராஜ‌ன் த‌ன்னுடைய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ வேண்டிக்கேட்டார்... முத‌லில் இய‌க்குன‌ர் வ‌ந்து க‌தை சொன்ன‌போது ந‌ம்மாழ்வார் த‌விர்க்க‌ எண்ணிய‌ க‌தை அது.... இருப்பினும் ர‌ம‌ண‌ராஜ‌னுக்காக‌ ச‌ம்ம‌தித்தார் சில நிப‌ந்த‌னைக‌ளோடு....

"தேசிய‌விருது அறிவிப்பு: ந‌ம்மாழ்வார் சிற‌ந்த‌ ந‌டிக‌ர்!!" என்று அறிவித்த‌து ஒரு மாலை நாளித‌ழ்..... திடீரென்று வாழ்த்தும‌ழை பெய்ய‌த்தொட‌ங்கிய‌து ந‌ம்மாழ்வாரின் தொலைபேசியில்..... இன்னும் அதிகார‌ப்பூர்வ‌மாகத் தான் தெரிவிக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தால் கொஞ்ச‌ம் சுதாரிப்புண‌ர்வுட‌ன்தான் அனைத்து வாழ்த்துக்க‌ளையும் பெற்றுக்கொண்டிருந்தார் ந‌ம்மாழ்வார்... அடுத்த‌ நாள் காலையில் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பில் மாபெரும் நாய‌க‌னான‌ ஒரு வ‌டநாட்டு ந‌டிக‌ர் சிற‌ந்த‌ ந‌டிக‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார்....ப‌ல‌ ச‌ல‌ச‌ல‌ப்புக‌ள் எழுந்த‌ன‌... அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ளும் கூற‌ப்ப‌ட்ட‌ன‌...

ந‌ம்மாழ்வார் அதிகாலையில் அழைக்க‌ப்ப‌ட்டார்.... அன்றைக்கு ஷூட்டிங் கேன்ச‌ல் என்று புரொட‌க்ஷ‌ன் மேனேஜ‌ர் கூறினார்..தெளிவான‌ கார‌ணமேதும் இல்லை.... பின்பு மெதுவாக, அந்தப் ப‌ட‌த்தின் க‌தாநாய‌க‌ன் திரைக்க‌தையில் ந‌ம்மாழ்வாருக்கு அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்கிய‌த்துவ‌த்தினால் க‌டும் அதிருப்தி அடைந்துள்ள‌தாக‌வும் அத‌ன் விளைவாக‌ திரைக்க‌தையில் மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌வும், கார‌ண‌ங்க‌ள் க‌சிந்த‌ன‌......இதெல்லாம் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டுப் போயிருந்தாலும் இம்முறை இந்த சம்பவங்கள் அர‌ங்கேறிய‌ வேளையும் வித‌மும் ந‌ம்மாழ்வாரை ரொம்ப‌வே காய‌ப்ப‌டுத்திய‌து.....

தன்னைச் சுற்றி இப்ப‌டி மாறி மாறி ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் வேளையில் ப‌ட‌ப்பிடிப்புத் த‌டைப‌ட்டிருப்ப‌தால் அவ‌ரின்மீது ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ தனிமை திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து...... இந்த‌ சூழ்நிலையில் ர‌ம‌ண‌ராஜ‌னை ச‌ந்தித்தார் ந‌ம்மாழ்வார்... இருத‌ர‌ப்பிலும் வெவ்வேறு விதமான அழுத்த‌ங்க‌ள் ஒரே பட‌த்தினால்.... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ப் பேச்சுவார்த்தையில் வார்த்தைக‌ள் த‌டித்துப் போய்விட‌...... நீண்ட நேரம் சத்தமாக வாக்குவாதம் நடந்தது.....ஒரு நிர்பந்தமான க‌ட்ட‌த்தில்.... நீண்ட‌ மௌன‌த்துக்குப்பின்.... ந‌ம்மாழ்வார்......

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

என்று சொல்லிவிட்டு அமைதியாக‌ வெளியேறினார்... ப‌ல‌ரும் அதிர்ச்சியில் பார்த்திருக்க‌... அவ‌ர் காரில் ஏறிச்செல்லும்வ‌ரை ப‌த‌ற்ற‌மாக‌ முறைத்திருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன். காரில் வீடு செல்லும் வ‌ழியில்.....தன் தொழில்வாழ்வில் ஏதோவொரு புய‌ல் வீசப்போவ‌தை உண‌ர்ந்திருந்தாலும்... ப‌ல‌ மைல்க‌ற்க‌ளைக் க‌ட‌ந்துவிட்ட‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌வா... அதனால் அதிக‌ம் அச‌ர‌வில்லை... மேற்கொண்டு இவ்விஷ‌ய‌த்தில் ம‌வுன‌ம் காப்ப‌து என்று முடிவெடுத்திருந்தார்...

"ந‌ம்மாழ்வார் ப‌ட‌த்திலிருந்து அதிர‌டி நீக்க‌ம்" என பரபரப்பாக செய்தி வெளியானது..... ச‌ற்றும் எதிர்பாராதவித‌மாக‌ த‌யாரிப்பாள‌ர் த‌ர‌ப்பிலிருந்து பிர‌ப‌ல‌ ப‌த்திரிக்கையொன்றில் விள‌க்கமும் வெளியாகியிருந்த‌து!! நம்மாழ்வரை வீழ்த்த ர‌ம‌ண‌ராஜ‌ன் எடுத்திருந்த‌ அஸ்திர‌ம் வித்தியாச‌மான‌து... "எந்த‌ நேர‌த்திலும் உயிரிழ‌ந்துவிடும் நிலையிலிருக்கும் ந‌டிக‌ரை வைத்துப் ப‌ட‌ம் எடுப்ப‌து த‌ன‌க்கு சாத்திய‌மில்லை!!" என்று கூறியிருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன்... "சிற‌ந்த‌ ந‌டிக‌ரான‌ ந‌ம்மாழ்வார் த‌ன‌து உட‌ல்ந‌‌ல‌னைப் ப‌ற்றிக் க‌ருத்தில் கொள்ள‌வில்லை, சொந்த‌ வாழ்க்கையில் க‌வ‌ன‌மின்றி ம‌ன‌ அழுத்த‌த்திற்கு ஆளான‌மையினால் போதைக்கு அடிமையாகி இப்போது க‌வ‌லைக்கிட‌மான‌ நிலையிலிருக்கிறார்... எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் அவரை வைத்துப் ப‌ல‌கோடி ரூபாய் முத‌லீடு செய்யும் தயாரிப்பாள‌ர்க‌ள் இப்ப‌டி ரிஸ்க் எடுக்க‌ முடியாது... வ‌ளர்ந்துவ‌ரும் ந‌டிக‌ர்க‌ள் ந‌ம்மாழ்வாரின் க‌தையில் பாட‌ம் க‌ற்றுக் கொள்ள வேண்டும், நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மொத்தமாகத் திரியைக் கொளுத்திப்போட்டிருந்தார்.....

சுந்த‌ரின் அலைபேசிக்குத் த‌ன் வீட்டிலிருந்த‌ப‌டி அழைப்புக்கொடுத்தார் இய‌க்குன‌ர் சுரேஷ் முத‌ல்முறை ம‌ணி முழுதாக‌ அடித்தும் ப‌தில் இல்லை அடுத்த‌முறை ஸ்விட்ச் ஆஃப் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌த் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து!!... ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் த‌னிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த‌ ஓய்வும் தேவையாக‌த்தானிருந்த‌து... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது....."ந‌ம்மாழ் சார்..!!" ......ம‌ற‌க்க‌ முடியாத‌ அந்த‌ முத‌ல் சந்திப்பு...!!

ர‌ம‌ண‌ராஜ‌னின் அறிக்கை வெளிவ‌ந்த‌துதான் தாம‌த‌ம்... ந‌ம்மாழ்வாரின் உட‌ல்நிலையைப் பற்றி தின‌ம்தின‌ம் வ‌த‌ந்திக‌ள்!! ந‌டித்திருந்த‌ இர‌ண்டுப‌ட‌ங்க‌ள் ப‌டுதோல்விய‌டைந்த‌ன‌.....காட்சிக‌ள் முற்றிலுமாக‌ மாறிப்போய்..... ந‌டிப்பில் ஊறித்திளைத்த‌ க‌லைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில‌ ஊறுகாய்ப் பாத்திர‌ங்க‌ளுக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்ட‌ர் இருளிலும் க‌ழிக்க‌த் துவ‌ங்கினார்..... இர‌ண்டுவ‌ருட‌ங்க‌ள் உருண்டோடிப் போயின‌.... அதீதமான மன அழுத்ததால் இய‌ல்பான‌ முதுமையுடன் உட‌ல் ந‌ல‌ம் இன்னும் கெட்டுப்போயிருந்த‌து, எனினும் உயிருட‌ன்தானிருந்தார்!! அப்போது ந‌ம்மாழ்வாரைத் தேடி சுரேஷ் என்று ஓர் இள‌ம் இய‌க்குன‌ர் வ‌ந்திருந்தார் த‌ன் முத‌ல்ப‌ட‌த்திற்குக் க‌தையைத் தூக்கிக் கொண்டு!!!

"வேண்டாம்ப்பா...ஒருவேளை ப‌டம் பாதி போய்கிட்டிருக்கும்போது நான் செத்துப்போயிட்டா உங்களுக்கெல்லாம் ரொம்ப‌ ந‌ஷ்ட‌மாகிடும்... நீ வேற‌ ஏதாவ‌து ஆரோக்ய‌மான‌ ஆளை வெச்சு இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்துக்கோ!!" கொஞ்ச‌மும் ஆர்வ‌மின்றி சொன்னார் ந‌ம்மாழ்....

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார் !!!!..." என்றுவ‌ந்த‌து ப‌தில்!!!
க‌தையைக் கேட்ப‌தைத்த‌விர‌ வேறுவ‌ழியில்லை ந‌ம்மாழுக்கு!!

கதையைக்கேட்ட‌ மாத்திர‌த்தில் நீண்ட‌ நாட்களாக ஓய்ந்து கிடந்த‌ ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌றக்க ஆரம்பித்தன‌ ந‌டிக‌ருக்குள்!! ப‌ட‌ம் ஆர‌ம்பித்த‌து..... த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ க‌தையாக‌ உண‌ர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்ப‌ட்டுத் த‌ன் வாழ்நாளில் முத‌ன்முறையாக‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுத் தன் ச‌க்திக‌ளையெல்லாம் சேக‌ரித்துக்கொண்டுத் திரும்பி வ‌ந்து ந‌டித்துக் கொடுத்தார்...... ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற்ற‌து!!!! மீண்டும் உச்ச‌த்தில் ந‌ம்மாழ்.... சுரேஷ் பெரும் பெய‌ர்பெற்றுப்போனார்.... அத‌ற்கு உட‌ன‌டி அங்கீகார‌ம், சுரேஷின் அடுத்த‌ ப‌ட‌த்திற்குத் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜ‌ன்!!! முக்கிய‌ப் பாத்திரத்தில் ந‌ம்மாழ்வார்.....! துவ‌க்க‌விழாவில் ம‌ரியாதையாக‌ இருவ‌ரும் ஒருவ‌ருக் கொருவ‌ர் வ‌ண‌க்க‌ம் வைத்துக்கொண்டார்க‌ள்..... ப‌ர‌ஸ்ப‌ர‌ம் வாழ்த்திப் பேசிக்கொண்டார்க‌ள் மேடையில்!!!! பாதிப்ப‌ட‌ம் முடிந்துவிட்ட‌ வேளையில் மீண்டும் உட‌ல்ந‌ல‌ம் குன்றிய‌மையால் அதே ம‌ருத்துவ‌ம‌னையில் மீண்டும் இப்போது ந‌ம்மாழ்வார்..... அவ‌ரது த‌ங்கைப் பைய‌ன் சுந்த‌ர்தான் அவ‌ரை அருகிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறார்.... நேற்றிர‌வு ம‌ருத்துவ‌ர்க‌ள் சுந்த‌ரிட‌ம் சொன்ன‌தை சுந்த‌ர் யாரிட‌மும் ப‌கிர்ந்துகொள்ளவேயில்லை....

ம‌ருத்துவ‌ம‌னையில்.... இன்னும் அதே பார்வை....ஆழ‌மாக‌ இருவ‌ரின் க‌ண்க‌ளும் வெறித்துப் பார்த்த‌வ‌ண்ண‌மிருந்த‌ன‌.... போதும் என்று எண்ணி ஒருமுறை க‌ண்க‌ல‌ங்கிவிட்டு அந்த‌ உண‌ர்ச்சிமிகு க‌ண்க‌ளை ஒரேய‌டியாக‌த் த‌ன‌து கைக‌ளால் மூடினான் சுந்த‌ர் த‌ன் மாமாவின் த‌லையை ம‌டியில் தாங்கிக்கொண்டு....சிரித்த‌முக‌மாக‌வே விடைபெற்றிருந்தார் ந‌ம்மாழ்வார் மொத்த‌மாக‌.....

பேர‌திர்ச்சிய‌டைந்த‌து திரையுல‌க‌ம்... மிக‌வும் ம‌ரியாதையாக‌ ஒருபுற‌ம் எந்த‌வொரு த‌னிமனித‌னும் பெருமைப் பட்டுக்கொள்ளும‌ள‌வு இறுதிச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கையில்... சுரேஷ் இயக்கிய‌ ந‌ம்மாழ்வாரின் முந்தைய‌ ப‌ட‌த்தின் தயாரிப்பாள‌ர் தொட‌ர்புகொள்ள‌ப்ப‌ட்டார்.... அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த‌ ஒரு குறிப்பிட்ட‌ ஒரு காட்சி அவ‌ரிடமிருந்து வாங்க‌ப்ப‌ட்ட‌து.... சிறிது நாட்க‌ளில் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் ந‌ம்மாழ்வாரின் க‌டைசிப‌ட‌ம் திரைக்குவ‌ந்தது..... ப‌ட‌த்தினிடையே திடீரென்று ந‌ம்மாழ்வாரின் க‌தாபாத்திர‌ம் ம‌ர‌ண‌மெய்துவ‌தாக‌க் க‌தை மாற்ற‌ப்ப‌ட்டிருந்தது.. ஒரு க‌ட்டிலில் அசைவேயின்றி இற‌ந்த‌ ச‌ட‌ல‌மாக‌ உயிருட‌னிருந்த‌போது அற்புத‌மாய் ந‌டித்திருந்தார் ந‌ம்மாழ்வார் அந்த‌ மிக‌ நீள‌மான‌ டேக்கில்.......

அந்த‌ப் ப‌ட‌மும் மாபெரும் வெற்றிபெற்ற‌து.... பாராட்டும‌ழையில் ந‌னைந்திருந்த சுரேஷ் த‌ன் ப‌டுக்கையில் கண்கள் மூடித் தூக்கமின்றி ப‌டுத்திருந்தார்... தூக்க‌ம் வ‌ர‌ம‌றுத்த‌து....ஒரு பிண‌மாக‌ ந‌ம்மாழ்வார் நடித்திருந்த‌ அந்த‌ நெடிய‌ காட்சி அவ‌ரை ரொம்ப‌வே தொந்த‌ர‌வு செய்து கொண்டேயிருந்த‌து...

"சுரேஷ், ஹாஸ்பிட‌ல்ல‌ என் உட‌ம்புல‌ மிச்ச‌மிருந்த‌ பேச்சு மூச்சு எல்லாத்தையும் த‌க்க‌வெச்சுக் கொண்டுவ‌ந்திருக்கேன், இன்னைக்கு அந்த‌ எமொஷ‌ன‌ல் சீனை எடுக்க‌ப்போறோமில்லையா நான் ரெடிப்பா...." ஒரு குழ‌ந்தையின் ஆர்வ‌த்துட‌ன் சிரித்துக்கொண்டே சொன்னார் ந‌ம்மாழ்வார்....

"இல்ல‌ சார் இன்னைக்கு அந்த‌ சீன் எடுக்க‌ முடியாது.... கொஞ்ச‌ம் சிக்க‌ல்...."

"என்ன‌ப்பா... ஏற்கென‌வே ஷெட்யூல் ப‌டிதானே போய்க்கிட்டிருக்கு... இன்னைக்கே எடுத்துட‌லாமே.." கெஞ்ச‌லாக‌வே கேட்டார்......

ஏதேதோ கார‌ண‌ங்க‌ளை அடுக்கினார் சுரேஷ்.... அன்று அந்த‌க் காட்சி எடுக்க‌ப்ப‌ட‌வில்லை...அவ‌ர் ஆழ்ந்து உற‌ங்குவ‌துபோல் சில‌ பேட்ச்- அப் காட்சிக‌ள் நீண்டநேரமாக எடுக்கப்பட்டன..... உண‌ர்ச்சிபொங்க‌ ந‌டிக்கும் ஆர்வ‌த்தில் தெம்புகூட்டி வ‌ந்திருந்த‌மையால் இப்ப‌டி அசைவின்றித் தூங்கும் காட்சியில் ந‌டிக்க‌ மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டார்.....மிக‌ மிக‌ நீண்ட‌ காட்சியாக‌ அது ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌து.....

க‌ட்டில் ஒன்றில் சாய்ந்தவாறு அவ‌ர் தூங்குவ‌தைச் சுற்றி சுற்றிப் ப்ட‌மெடுத்துக் கொண்டிருந்த‌ கேமிராமேன்..." சார் அசைவே இல்லாம‌ சார்... அப்டியே... ஜ‌ஸ்ட் ஒரு ஃபியூ செக‌ன்ட்ஸ்.....அசையாம..அசையாம..... சார்...யெஸ்..யெஸ்" என்று சொல்லிக் கோண்டே ப‌ட‌மெடுக்க‌.......

"யோவ்! தூங்க‌த்தான‌யா செய்யுறேன் என்ன‌மோ பிண‌மா ந‌டிக்கிற‌மாதிரி சொல்லிக்கிட்டே இருக்க‌....?? அசையாம‌....அசையாம‌னு....சீக்கிர‌ம் எடுங்க‌ய்யா..!!"
ந‌ம்மாழ்வார் குர‌ல் க‌ர‌க‌ர‌க்க‌....... திடுக்கிட்டு எழுந்தார் சுரேஷ். அத‌ற்குப்பின் தூக்க‌ம் வ‌ரவேயில்லை அவ‌ருக்கு அன்றிர‌வு முழுதும்.......

-பிர‌பு.

சுப்ரமணியபுரம்- விமர்சனம்


" நம்ப மாவட்டத் தலைவர செஞ்சது நீங்கதான??

""ம்ம்ம்...."

" பணத்துக்கா?"

" காசு பணமெல்லாம் இல்ல..."

"பின்ன ஏதும் பெரிய மோட்டிவா?..."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... பழக்கத்துக்காகப் போட்டோம்ணே..."

"ஹும்.... நம்ப ஊருக்காரெங்கெதான்யா பழக்கத்துக்காகல்லாம் கொல பண்ணுவாய்ங்கெ!!"

பலத்த கைத்தட்டல் அர‌ங்கினுள்.... அநேக‌மாக‌ இந்த‌க் காட்சிக்கு ம‌துரைப் ப‌குதிக‌ளில்தான் கைத்த‌ட்ட‌ல் அதிர்ந்திருக்கும் என‌ நினைக்கிறேன்... கோலிவுட்டில் இது மீண்டும் "ம‌துரைக் கால‌ம்"!!

பார‌திராஜாவின் பாதிப்பால் சினிமாவுக்குக் க‌தைக‌ளைத் தூக்கிக்கொண்டுவ‌ந்த‌ ப‌ல‌ இய‌க்குன‌ர்க‌ளின் ப‌டைப்புக‌ள் எல்லாவ‌ற்றிலுமே ம‌ண‌ந்தது ம‌துரைத் த‌மிழ்தான்.. க‌தையின் க‌ள‌ம் ம‌துரையாக‌ இல்லாதபோதுகூட‌ க‌தைமாந்த‌ர்க‌ள் பெரும்பான்மையாக‌ப் பேசுவ‌து என்ன‌வோ ம‌துரை வ‌ட்டார‌ வ‌ழ‌க்காகத்தான் இருக்கும்... சினிமாத்த‌ன‌ங்க‌ள் ய‌தார்த்த‌த்துக்கு மெல்ல‌ மெல்ல‌ வ‌ழிவிட‌ ஆர‌ம்பித்த‌வுடனேயே க‌ள‌த்திற்கேற்ற‌ த‌மிழ்தான் பேச‌ப்படவேண்டுமென்பது க‌ட்டாய‌மாகிப்போய்விட்ட‌து... "பருத்திவீர‌"னைத் தொட‌ர்ந்து மீண்டும் முழுக்க‌ முழுக்க‌ ம‌துரைத்த‌மிழை அந்த‌ மண்வாசனையோடு ம‌ண‌க்க‌ வ‌ழ‌ங்கியிருக்கிற‌து "சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" (ர‌த்த‌வாச‌னைக்கும் குறைவில்லை)

ல‌ட்சிய‌மில்லாத இளமையின் ஆபத்தை உணர்த்தும் படம். முனைப்பில்லாத யவனத்தை கோபமும் திமிருமாய்ப் பாத்திர‌ப்ப‌டுத்தியிருக்கும் வித‌ம் மிகவும் ருசிக‌ர‌ம். ஒரேயொரு ட‌வுனை வைத்துக்கொண்டு சுற்றிமுற்றி உள்ள அத்தனை கிராமங்களின் தேவைகளையும் நிறைவு செய்துவந்த எண்பதுகளின் மதுரையில் ஒரு சிறு பகுதிதான் களம், திமிரும் இளமையை சொர்ப்ப வருமானத்துக்கு அடகுவைக்க மனமின்றிப் பிழைப்புக்கு என்ன செய்வது என்ற யோசனைகூட இல்லாமல், யாருக்கும் அடங்காமல் திரியும் சண்டியர்கள் பரமனும் அழகரும்தான் கதை நாயகர்கள்... "Man hours" "Maximum utility of resources" என்று ஏகத்துக்கும் பீட்ட‌ர்விடும் நமக்கு syllabusசிலேயே இல்லாத மனிதர்கள்!!

க‌தை எண்ப‌துக‌ளில் ந‌க‌ர்கிற‌து என்று வ‌லியுறுத்த‌ப் பிர‌ய‌த்த‌ன‌ங்க‌ள் அதிக‌ம் தேவைப்ப‌ட‌வேயில்லை இய‌க்குன‌ருக்கு!! அவ்வ‌ள‌வு க‌ச்சித‌மான‌ அர‌ங்க‌மைப்புகள். க‌லை இய‌க்குன‌ர் ரெம்போன் அல‌ட்டிக்கொள்ளாம‌ல் அசத்தியிருக்கிறார்... க‌தாபாத்திர‌ங்க‌ள் ம‌ட்டுமின்றி துணை ந‌டிக‌ர்களைக் கூட‌ உடைக‌ள் உட்ப‌ட‌ அனைத்திலும் க‌தையின் கால‌ம், க‌ருப்பொருள் கெட்டுவிடாம‌ல் இய‌க்கியிருப்ப‌து இய‌க்குன‌ரின் துல்லிய‌த்தைக் காட்டுகிற‌து. இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌த் துணிச்ச‌லான இய‌க்குன‌ர் என்று ச‌சிக்குமாருக்கு இப்போதே விருது கொடுத்துவிட‌லாம்... ப‌ட‌த்தின் தயாரிப்பாளரும் அவ‌ரே என்கிற‌ ஒரு சான்று போதாதா??!!

க‌தை, திரைக்க‌தை இர‌ண்டுமே ம‌ர‌புக‌ளை உடைத்திருக்கும் இன்னுமொரு ம‌க‌த்தான முய‌ற்சிதான். சுப்ர‌ம‌ணிய‌புரம் ஏரியா....கால‌ம் க‌டிவாள‌மிடாத இரண்டு முர‌ட்டுக்குதிரைகள்... அதற்குக் கொஞ்ச‌ம் தீனிபோட்டுப் பதிலுக்கு பலிபோட‌ முயற்சிக்கும் ந‌ரிக்கூட்ட‌ம்... அதற்குப் பின்னனியாக‌ அர‌சிய‌ல்! தேசிய அரசியலெல்லாம் இல்லை இது "வட்டார அரசியல்"!!!இடையே நான்கு க‌ண்க‌ள் ம‌ட்டும் ப‌ங்கேற்கும் ஒரு typical ம‌துரைக்காத‌ல்!! இப்படி மிக‌ மிக compactடாகக் க‌ட்ட‌ங்களை வரைந்துகொண்டு அதில் அழ‌காக‌க் காய்க‌ளை அடுக்கியிருக்கிறார்கள் முத‌ல்பாதியில். இடைவேளை நெருங்கும் ச‌மய‌த்தில்தான் தொட‌ங்குகிறது, அடுத்த நகர்வை யூகிக்க‌ முடியாத, அத‌க‌ள‌ ஆடுபுலியாட்ட‌ம்!! ஆடு எது? புலி எது? என்று யாருக்கும் இனம் புரியாத‌ அர‌சிய‌லாட்ட‌ம்!! 'முக்கிய‌ ச‌ம்ப‌வத்'திற்குப் பின் மாறி மாறி முட்டிக்கொள்ளும் வ‌ழ‌க்க‌மான‌ க‌தைதான் என்றாலும் முட்ட‌லுக்கு ந‌டுவே மூச்சுத்திண‌ரும் ஓர் ஊமைக்காதலை உலவவிட்டுப் பின் அதை வைத்தே அதிர‌வைக்கும் ஓர் அறுவைசிகிச்சையை எதிர்பாராத‌ நேர‌த்தில் அர‌ங்கேற்றிப் புருவ‌ங்க‌ளை உய‌ர்த்த‌ வைத்திருக்கிறார் இய‌க்குனர், மிரட்சியாக‌! சொல்ல வந்ததைக் கச்சிதமாக சொன்னால் வெற்றி நிச்சியம் என்று நிரூபித்திருக்கும் துணிச்சலான முயற்சி, இருப்பினும் ந‌ல்ல‌ ப‌ட‌ம் பார்த்த‌ உண‌ர்வு மேலோங்கினாலும் அந்தவொரு நிறைவு கிடைக்க‌வில்லை... ச‌சிக்குமாராக‌ இட‌ம்பிடிக்க "சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" மிகச் ச‌ரியான‌ ஓர் அடையாள‌ம் ஆனால் ஒரு பாலாவாக‌, அமீராக நிலைபெற‌ அடுத்த‌ப‌ட‌ம் அவ‌சிய‌ம்!!

ந‌டிப்பில் அனைத்துப் பாத்திர‌ங்க‌ளுமே ய‌தார்த்த‌மான‌ உட‌ல்மொழியை அனாய‌ச‌மாக‌ வெளிப்ப‌டுத்தி அச‌த்தியிருக்கிறார்க‌ள், அனைவ‌ருமே ம‌துரைக்கார‌ர்க‌ளாக‌ இருக்கும்போது ஜெய் ம‌ட்டும் அச‌லூர்க்கார‌ராக‌த் தெரிகிறார்... பாவ‌ம் ம‌துரைத்த‌மிழ் முழுதாக‌ப் பிடிப‌ட‌வில்லை அவ‌ருக்கு, இருப்பினும் ப‌ட‌த்திற்காக‌ க‌டுமையாக‌ உழைத்திருக்கிறார் "சென்னை- 28" பைய‌ன்!! தாவ‌ணி போட்ட‌ தீபாவ‌ளியாக அறிமுகம் ஸ்வாதி... ச‌சிகுமாருக்குக் கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள்!!! சிலையாக‌ இருக்கிறார், சிரிப்பாலேயே கொல்கிறார்!!...அடுத்த‌ ப‌ட‌ம் எப்போ ஸ்வாதி??!! வில்லன் குடும்பத்தில் ச‌முத்திர‌க்க‌னி...அவரை விடுங்கள்,அவரே இய‌க்குன‌ர் பின்பு ந‌டிக்க‌ மாட்டாரா?.. அவருடைய‌ அண்ண‌னாக‌ வ‌ரும் முன்னாள் க‌வுன்சில‌ர் "எங்க‌ப்பா புடிச்சாய்ங்கெ??" அதிராத‌ அர‌சிய‌ல்வாதியாக‌ மிர‌ட்டியிருக்கிறார் ம‌னித‌ர்... மாவ‌ட்ட‌த் த‌லைவ‌ர் பதவி கொடுக்காம‌ல் கட்சியில் க‌லாய்த்த‌பின் வெற்றிபெற்ற‌ப் புதுத் த‌லைவ‌ர் வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தும் காட்சியில் காரிலிருந்து மாலையோடு இற‌ங்கி மெதுவாக‌ ந‌ட‌ந்து உள்ளே செல்லும் மிக‌ நீள‌மான‌ டேக் கில் சிக்கலான நேரத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென அர‌சிய‌ல்வாதிக‌ளுக்குப் பாட‌ம் சொல்லிக் கொடுக்கிறார்!! செம்ம‌ ந‌டிப்பு..!! பரவை முனியம்மா, 'காதல்' கரட்டாண்டி, 'அஞ்சாதே' குருவி வரிசையில் ஊண‌முற்ற‌வ‌ரான‌ "டும்கா"வும் அருமையான‌ ஓர் அறிமுக‌ம் இவ‌ர்க‌ளுக்கெல்லாம் cameraப‌ய‌மே இருக்காதா!! க‌ஞ்சா க‌ருப்பு முத‌ன்முறையாக‌ அழுத்த‌மாக‌ ந‌டித்திருக்கிறார்... ச‌வுண்ட் ச‌ர்வீஸ் சித்த‌ன், கோயில் விழாக்குழு த‌லைவ‌ர் மீசைக்கார‌ர் என‌ அனைவ‌ரும் ம‌ண்வாச‌னையைக் கிள‌ப்பும் ர‌க‌ம்!!

இன்னும் ஒரு ப‌த்து இருப‌து வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து "சுப்ர‌ம‌ணிய‌புர‌ம்" ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் ப‌ட‌த்துக்கு இசைய‌மைப்பாள‌ர் ராஜாவா? ர‌ஹ்மானா? என்று நிச்சியம் கேட்க‌மாட்டார்க‌ள்... இந்த‌ப் ப‌ட‌த்திற்கு இசைய‌மைத்த‌து யார்? என்றுதான் கேட்பார்க‌ள்... அவ்வ‌ள‌வு த‌னித்துவ‌மான ஜேம்ஸ்வ‌சந்த‌னின் இசை ப‌ட‌த்திற்கு அதீத‌ ப‌ல‌ம்... ப‌ல‌ காட்சிக‌ளில் பின்னணிக்கு இசையைவிட‌ மௌன‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்கும் நேர்த்தி முத‌ல் திரைப்ப‌ட‌த்திலேயே அவ‌ருக்குக் கைகூடிவ‌ந்திருப்ப‌து இசைத்துறையில் அவ‌ர‌து அனுப‌வ‌ம் அதிக‌ம் என்று உண‌ர்த்துகிற‌து... "க‌ண்க‌ளிர‌ண்டால்..." பாடல் மட்டுமின்றி அனைத்துப் பாடல்களுமே இனிமையான, கதையோடிணைந்தப் பதிவுகள்.. மிக‌வும் ஈர்த்த‌ இன்னும் இரு விஷ‌ய‌ங்க‌ள் க‌திரின் சுழ‌ன்று அடிக்கும் ஒளிப்ப‌திவும், ச‌ண்டைப்ப‌யிற்சியும்... ஒரு வீதிச்ச‌ண்டையை அத‌ன் கோப‌த்தோடு ப‌ட‌மாக்கி மிர‌ட்டியிருக்கிறார்க‌ள்...சோடா பாட்டில்க‌ளைத் துண்டில் க‌ட்டி அடிக்கும்போது வித்தியாச‌மான‌ ச‌த்த‌ம் கொடுக்க‌ டிஜிட்ட‌ல் மிக்ஸிங்கிலும் மென‌க்கிட்டிருக்கிறார்க‌ள்...

ஒரு திரைப்ப‌ட‌மாக‌ இத்த‌னை பாஸிடிவ்க‌ள் இருக்கின்ற‌போதும் வ‌ன்முறை மிக‌வும் அதிக‌ம் என்ப‌து மறுக்க‌ முடியாத‌ குறை... பெண்க‌ள், குழ‌ந்தைக‌ளுக்குப் படத்தில் இய‌க்குன‌ர் எதுவுமே வைக்க‌வில்லை.. வைக்க‌வும் முடியாதுதான் இந்த‌க் க‌தையில்!!"உன் பலத்தை நீ அறிந்து உனக்கு நீ பயன்படுத்தத் தவறிவிட்டால் பலருக்குப் பயன்பட்டுப் போவாய்.." என்று பயமுறுத்தும் அடிநாதம் உரக்கவே ஒலித்திருக்கிறது படத்தில்...!!சுத்த‌மான‌ திரைக்க‌தைப் பிரிய‌ர்க‌ள் த‌வ‌ற‌விட‌ முடியாத‌ ப‌ட‌ம்.... அடுத்த‌ ப‌ட‌த்தில் ச‌சிக்குமார் சிக்ஸ‌ர் அடித்தே ஆக‌வேண்டும், எதிர்பார்ப்புக‌ள் எகிறிப்போயிருக்கின்ற‌ன‌... இதே ஸ்டைல் க‌தை மீண்டும் கை கொடுக்காது என்று நினைக்கிறேன்!
பிர‌பு. எம்

தசாவதாரம் -விமர்சனம்



வெறும்முகத்தசை அசைவுகளாலேயே பலநூறு அவதாரங்கள் கண்டுவிட்ட கமல்ஹாசன், பிளாஸ்டிக் முக(மூடி)ங்களால் எடுத்திருக்கும் மேலும் பத்து அவதாரங்கள்தான் இந்த "காஸ்ட்லி காவியம்"! திரையில் பத்துக் கமல்களையும் மற்றும் சிலரை(!)யும் ஆட்டுவிக்கும் திரைக்கதை அவதாரம் தரித்திருப்பவரும் உலக நாயகனே!


ஏதோவொரு கடற்கரையில் நடந்த அல்லது நடக்கவிருந்த ஒரு பூகம்பத்தையும், அதே இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சிறு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பையும் முடிச்சு போடும் "கேயஸ் தியரி"யை முன்மொழிந்து கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். பிரம்மிக்க வைப்பதுதான் 'பிரம்மாண்டம்' என்று சொன்னால், மிரட்டும் நடுக்கடலிலிருந்து வான்வழியாகச் சென்னையைக் காட்டிப் பறந்துவந்து சேப்பாக்கம் மைதானத்தில் மையம் கொள்வதிலும், தொடர்ந்துவரும் 12ம் நூற்றாண்டுக் காட்சியமைப்பிலும் பிரம்மாண்டத்தின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், "அதற்குள் முடிந்துவிட்டதே..!" என்று மனம் பதைக்கும் வேறொரு திரைப்படம்!! "கல்லை மட்டும்" பாடலோடு கடலில் மாண்டு போகும் முதலவதாரமான முரட்டு வைணவ இளம் சம்சாரி ரங்கராஜன் நம்பிதான் படம் முடிந்தும் நினைவுகளை ஆக்கிரமிக்கிறார்.


"கதை" என்று வலிய களம் எல்லாம் கிடையாது. "திரைக்கதை" எனும் நூல்தான் படம்! முதல்காட்சியில் 12ம் நூற்றாண்டு சைவ-வைணவ மோதலில் பறக்கவிட்டுப் பின் அடுத்தகாட்சிக்கு அமெரிக்காவில் நூல்பிடித்திருக்கிறார் கமல். பிடித்ததை இருகப் பற்றிக்கொண்டு எங்கெங்கோ பயணித்தாலும், இறுதியில் முதலில் தவறவிட்ட முதல் முனையைத் தொட்டு முடித்திருப்பது திரைக்கதையின் சாமர்த்தியம்!


"பேரழிவு" எனும் வார்த்தை அடிக்கடி வாக்கியமாவதில் கமல் மிகவும் ஆதங்கப்பட்டிருப்பது தெரிகிறது. பேரழிவை அரங்கேற்றும் வல்லமை இன்று இயற்கைக்கு அதாவது கடவுளுக்கு மட்டும் கிடையாது, மனிதனாலும் பூமிப்பந்தைக் குலுக்கிப் பார்க்க முடியும்! பேரழிவை விளைவிக்கும் லேட்டஸ்ட் ஆயுதம் (Bio-weapon)... அதைத் தவறான கைகளுக்குத் தாரைவார்க்கிறார்கள் சில மனித வைரஸ்கள். அதைத் தடுக்க நினைக்கும் அமெரிக்கவாழ் தமிழ் விஞ்ஞானி, அவரை விர‌ட்டும் ச‌க‌ல‌க‌லா வில்ல‌ன், க‌ண்டுபிடிக்க‌ முனையும் சி.பி.ஐ அதிகாரி, ஆயுத்தை ஆதரிக்கும் அமெரிக்க அதிபர் ம‌ற்றும் க‌தை ந‌க‌ர்த்தும் இத‌ர‌ மாந்த‌ர்க‌ள் என‌ அனைவ‌ரும் க‌ம‌ல்தான்!! அந்த‌ வைர‌ஸ் த‌ன் அழிவு அத்தியாய‌ங்க‌ளை அர‌ங்கேற்றும் நேர‌த்தில் இன்னொமோர் பேர‌ழிவு இய‌ற்கையால் அர‌ங்கேற‌ அழிவே அழிவை அழிவால் அழிக்கிற‌து!! இர‌ண்டுக்குமே ம‌னித‌ப்பூச்சிக‌ள் ப‌லியாகின்ற‌ன‌! இவ்வ‌ழிவுக‌ளுக்கு மூல‌ம் தேடித்தான் "கேய‌ஸ் திய‌ரி"யின் ப‌டி 12ம் நூற்றாண்டுவ‌ரைப் ப‌ய‌ணிக்க வேண்டியிருக்கிற‌து! ப‌யோ-வார்,ம‌ண‌ல் திருட்டு, என‌ இய‌ற்கையைச் சீண்டி அழிவுக்குக் கோடுபோடும் கார‌ண‌ங்க‌ளைக் க‌தையில் புத்திசாலித்த‌ன‌மான‌ காட்சிய‌மைப்பினால் அங்க‌ங்கே அடிக்கோடிட்டுக் காட்டிவிட்டு வேக‌மாக‌ ந‌க‌ர்த்தியிருக்கிறார்க‌ள்.


முத‌ல்பாதி டெக்னிக்க‌லாக‌ மிர‌ட்டினாலும், க‌ம‌ல்க‌ள் திடீர் திடீரென்று தோன்றி பிர‌ம்மிக்க‌வைத்தாலும், ஒரு திரைக்க‌தையாக‌க் கொஞ்ச‌ம் க‌டிக்கிற‌து. குறிப்பாக‌ ம‌ல்லிகா ஷெராவ‌த் காட்சிக‌ள். 1970க‌ளின் சில‌ப‌ல‌ ம‌சாலாப‌ட‌ங்க‌ளில் வ‌ரும் முக‌த்தில் பெரிய‌ ம‌ச்ச‌ம்வைத்த‌ கோட் சூட் வில்ல‌ன்க‌ள் 'சில்க்'ஸ்மிதாவை ஆயுத‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்துவார்க‌ளே, அதையே அமெரிக்காவில் செய்திருக்கிறார்க‌ள் (என்ன‌ கொடுமை ஸார் இது!!)ஆனால் சிலுக்கைப் போல் க‌டைசி காட்சியில் குறுக்கே விழுந்து சாகாம‌ல் முத‌ல் ஒரும‌ணி நேர‌த்திலேயே ம‌ல்லிகா செத்துப் ப‌ட‌த்தைப் பிழைக்க‌ச் செய்கிறார்!! இர‌ண்டாம்பாதியில் தூள் கிள‌ப்பிவிடுகிறார்க‌ள்!


க‌ம‌ல்ஹாச‌ன் ந‌டிப்பில் ஒரு "டிராக‌ன்". அத்த‌னைப் புலன்க‌ளையும் ஒரே நேர‌த்தில் இய‌க்கி ந‌டிக்கும் ஆற்ற‌ல் பெற்ற‌வ‌ர், உண்மைதான். இருப்பினும் பாவ‌னைக‌ளால் முக‌த்தைப் பிசைந்துக் க‌ண்க‌ளால் க‌தை சொல்வ‌துதான் "க‌ம‌ல் ந‌டிப்பு"! ஏனோ இந்த‌ப் ப‌ட‌த்தில் பிளாஸ்டிக்கால் 10 பெரிய‌ குல்லா செய்து முக‌த்தை மூடிக்கொண்டு ந‌டித்திருக்கிறார்! "க‌ம‌ல்" என்கிற‌ அடையாள‌த்தை முற்றிலும் ம‌றைத்து வியப்பூட்டுகிற‌து ஒப்ப‌னை. ஆனால் பாவ‌ம் அந்த‌ முக‌மூடிக்குள் மாட்டிக்கொண்ட முக‌மும் க‌ண்க‌ளும் மூச்சுமுட்ட‌ ந‌டித்திருக்கும், அதையும் சேர்த்து மேக்-அப் ம‌றைத்திருப்பது ஏமாற்ற‌மே! இருப்பினும் 10 அவ‌தார‌ங்க‌ளும் ரொம்ப‌வே புதிய‌வை, இதுவரையிலான‌ த‌ன் சாத‌னைக‌ளுக்கு ம‌குட‌மாக‌ இதைப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ளாம‌ல் ஒவ்வொரு அவதாரத்துக்கும் உட‌ல் நோக‌ உழைத்திருக்கிறார் உல‌க‌ நாய‌க‌ன்! சில‌ காட்சிக‌ளில் க‌தை ந‌க‌ர்த்தும் பாத்திர‌ங்க‌ள் திரையில் அவ‌ர‌வ‌ர் பாதையில் ந‌கர "அந்த‌ப் பாத்திர‌ங்க‌ள் யாவரும் ஒரே க‌ம‌ல்தானே!" என்ற‌ நினைப்பு வ‌ந்து சிலிர்க்க‌ச் செய்கிற‌து! மூன்று க‌ம‌ல்க‌ள் மோதிக்கொள்ளும் க்ளைமாக்ஸ் ச‌ண்டைக்காட்சி ஓர் சாக‌ச‌மான‌ உதார‌ண‌ம்... சாத்திய‌மே இல்லாத‌ ஒன்றை சாத்திய‌ப்ப‌டுத்தியிருக்கிறார் க‌ம‌ல்... உண்மைதான்!!


10 க‌ம‌ல்க‌ளையும் முத‌ல் ப‌த்து இட‌ங்க‌ளைப் பிடிக்க‌ விட்டுவிடாம‌ல் த‌ங்க‌ள் இட‌ங்க‌ளை உரிமையுட‌ன் ப‌றித்திருக்கிறார்க‌ள் அஸினும், "ப‌ட்டாபி" பாஸ்க‌ரும்!"Hair thread life escape" மற்றும் "Yes" துரை", என்று சொல்வ‌த‌ற்குக் காற்றில் "S" என்று வ‌ரைந்து காட்டுவ‌தும் அபார‌ காமெடிக‌ள்... M.S Bhaskar Rockzzz...


"க‌ல்லை ம‌ட்டும்" பாடலுக்காக‌ ம‌ட்டும் வேண்டுமானால் ஹிமேஷை ம‌ன்னிக்க‌ முய‌ற்சிக்க‌லாம்! தேவிஸ்ரீ பிர‌சாத்தின் பின்னணி இசை ந‌ன்றாக‌ இருந்தாலும் ப‌ட‌த்தின் த‌ர‌த்திற்குப் பொருத்த‌மாக்க‌ இன்னும் மென‌க்கிட்டிருக்க‌லாம். ப‌ட‌த்துக்கு ச‌ர்வ‌தேச‌த் த‌ர‌ம் கொடுத்திருக்கிற‌து ர‌விவ‌ர்ம‌னின் ஒளி ஓவிய‌ம்! குறிப்பாக‌ 12ம் நூற்றாண்டுக் காட்சிக‌ள். சைவ‌ம‌ன்ன‌ன் யானைமீது க‌ம்பீர‌மாக‌ வீற்றிருக்க‌... க‌ம‌ல் அத‌ற்கும் உய‌ர‌த்தில் த‌சையால் தொங்க‌... கூட்ட‌ம் த‌ரையில் அலைமோத‌... அத்த‌னையையும் அந்த‌க் கால‌த்திற்கேற்ற‌ லைட்டிங்கில், அவ‌ர‌வ‌ர் ப‌ர‌ப்பில் ப‌ட‌ம்பிடித்து ந‌ம்மை உறைய‌ வைத்திருக்கிறார்! இந்த‌ப் ப‌ட‌த்திற்கு எப்ப‌டித்தான் இத்த‌னைக் க‌ச்சித‌மாக‌ அஷ்மித்குமார் ப‌ட‌க்கோர்வை செய்தாரோ?? 'இய‌க்குந‌ராக‌' ம‌ட்டும் வேலை செய்திருக்கிறார் கே.எஸ். ர‌விக்குமார் சிற‌ப்பாக‌!


"த‌த்துவார்த்தமான‌ திரைக்க‌தையாள‌ர்" என்று த‌னி இட‌ம் நிச்சிய‌ம் த‌மிழ் சினிமாவில் க‌ம‌லுக்கு உண்டு, ஆனால் "கமல் சினிமா"வில், "ராஜ‌பார்வை", "மூன்றாம் பிறை", "அன்பே சிவ‌ம்" லிஸ்டில் "த‌சாவ‌தார‌த்"திற்கு இட‌மில்லை. இது அவ‌ரின் க‌ம‌ர்ஷிய‌ல் கில்லிக‌ளில் இட‌ம்பிடிக்கும்!

(இருநூறு ரூபாய் கொடுத்து இர‌ண்டாம் நாள் பார்த்தேன், வ‌ருத்த‌மில்லை... தியேட்ட‌ரில் ம‌ட்டுமே பார்க்க‌ வேண்டிய‌ ப‌ட‌ம்!!!)


-பிர‌பு. எம்






தரிசனம் - சிறுகதை

தரிசனம்
மாலை 5:30 மணியிருக்கும், அது ஒரு பரபரப்பான மாலைவேளையாகத்தானிருந்தது சிபிக்கு. சிபி படிக்க வேண்டுமென்பதற்காக அவன் அப்பா தன் வீட்டு மாடியில் கட்டித்தந்த பத்துக்குப் பத்து அளவிலான அறையில் கதிரவனின் மாலைக் களைப்பினால் கருமை மெல்லப் படர்ந்து வருகிறது. ஒரு மரமேசை அதற்கு ஒரு நாற்காலி, படுத்துறங்குவதற்கென்று மெல்லிய மெத்தையிடப்பட்ட ஒரு கட்டில், இவைதான் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தன. மேசையில் புத்தகங்கள் இறைஞ்சிக்கிடக்கின்றன. சிபி கட்டிலில் சம்மனம் போட்டு உட்கார்ந்திருக்கிறான். கட்டிலிலும் சில புத்தகங்களும், வினாத்தாள்கள், 'கணக்குப் போட்டுப் பார்க்கிறேன்' என்று கிறுக்கப்பட்ட வெள்ளைத்தாள்கள் சிலவும் சிதறிக்கிடக்கின்றன. அவன் மடியில் ஓர் எழுதும் பலகை, அதில் திறந்த மேனிக்கு ஒரு வினாவங்கிப் புத்தகம். அதற்கு வேகமாக விடையெழுதும் முகமாக கணக்குகளுக்கு விடைகளை ஒரு வெள்ளைத்தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கிறான் சிபி. நாளைய தினம் +2 பொதுத் தேர்வு கணிதப் பரிட்சை.

ஒரு 10 மார்க் கணக்கிற்கு விடையெழுத முனைகிறான் சிபி. ஏனோ கணக்குப் பாதியில் தடுமாறுகிறது... பதற்றம்..."கடிகாரத்தின் நொடிமுள் இன்று மட்டும் ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறது?"... "அதற்குள் இருட்டிவிட்டதே?"என்று மனம் பதை பதைக்கிறது. அந்தக் கணக்கிற்கு விடை தெரியவில்லை. " நன்றாகப் படித்த கணக்கு தானே, ரிவிஷனில் கூட நான் எழுதினேனே, அப்படியானால் படித்தவை அனைத்தையும் நான் மறந்த விட்டேனா?" என்றெல்லாம் அவன் மனம் அவனைப் போட்டு வாங்கியது. சரட்டென்று அந்தக் கணக்கை அடித்துவிட்டு ஒரு புதுக்காகிதத்தில் மீண்டும் எழுதத்துங்கினான். அதே இடத்தில் கணக்கு மீண்டும் பிரேக் அடித்தது. செய்வதறியாது திகைத்த சிபியின் கண்கள் தனக்கு நேரெதிரில் உள்ள சுவற்றை நிலைகுத்திப் பார்த்தன. அந்த மஞ்சள் சுவற்றில் சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்த நிலையில் ஒரு வடிவமற்றுச் சிதறி இருந்தன. அந்த சுண்ணாம்புச் சிதறல்களுக்கிடையே சிபியின் கண்களுக்கு ஒரு பிம்பம் தோன்றியது. மெல்ல அது உருப்பெற்றது. அது ஒரு முகம், அது சிரிக்கின்றது. அது சிபியின் அபிமான நடிகருடைய முகம். அந்தச் சுண்ணாம்புச் சிதறலகளுக்கிடையே அந்த முகம் அத்தனை தத்ரூபமாகக் குடிகொண்டிருந்தது. அடிக்க‌டி அதே சுவ‌ற்றுக் கீற‌ல்க‌ளிலும், மொஸைக் த‌ரை டிஸைன்க‌ளிலும், ப‌ல‌முறை அவ‌ன் 'த‌லைவ‌ர்' அவ‌னுக்கு இதே போல் விசித்திர‌ த‌ரிச‌ன‌ங்க‌ள் கொடுத்திருக்கிறார். அவை அவ‌னுக்கு அதுவ‌ரை ஓர் அதிசிய‌ அனுப‌வ‌மாக‌வே இருந்துவ‌ந்துள்ள‌து. ஆனால் இன்று.. திடீரென்று "ச்ச்சீய்" என்று கூறித் த‌லையை சிலுப்பிக் கொண்டுத் தன் நிலைகுத்திய‌ பார்வையைக் க‌லைத்தான். சில‌ நொடிக‌ள் அவ‌ன் ம‌ற‌ந்திருந்த‌ ப‌த‌ற்ற‌ம் அவ‌னை ஆட்கொண்ட‌து. இப்போது அறை மேலும் க‌ருத்திருந்த‌து. எழுந்தான்... க‌ச‌ங்கிய‌ அழுக்கு லுங்கியிலிருந்து பேண்ட், ச‌ர்ட்டுக்கு மாறினான். க‌ணித‌ப் புத்த‌க‌த்தையும் சில‌ நோட்டுக்களையும், கையிலேந்திக் கொண்டுத் த‌ன் அறைக் க‌த‌வைப் பூட்ட‌ ம‌ற‌ந்த‌வ‌னாய் வேக‌மாக‌ப் ப‌டியிற‌ங்கினான். கீழே வீட்டில் சிபிக்குக் கொஞ்ச‌மும் தொல்லைத‌ரா வ‌ண்ண‌மாய் மிக‌வும் குறைக்க‌ப்பட்ட‌ ஒலியில் அம்மா டிவியில் சீரிய‌ல் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் ம‌டியில் ஒரு நிமிட‌ம் ப‌டுக்க‌லாம் என‌ ம‌ன‌ம் ஏங்கிய‌து. ஆனால், அத‌ற்கு நேர‌மில்லை. வீட்டு வ‌ராந்தாவில் வானொலியில் த‌ன‌க்குப் பிடித்த‌மான‌ பாட‌லை பாட‌விட்டும் அதனோடு சேர்ந்து உற்சாகமாக முணுமுணுத்துக் கொண்டும் ப‌ள்ளி ஆசிரிய‌ரான‌ அப்பா பேப்ப‌ர் திருத்திக் கொண்டிருந்தார். சிபி சைக்கிளைத் திற‌க்கும் ஒலிகேட்டு நிமிர்ந்த‌ அப்பா, "என்ன‌ 'சிபிசார்' எங்கே கிள‌ம்பிட்டார்??" என்று கேட்டார், பாசம் கனிந்த முகத்துடன். அப்பா குஷியாக‌ இருந்தால் சிபியை 'சார்' போட்டு அழைப்ப‌து வ‌ழ‌க்க‌ம். அதுவரை வில்ல‌னாக‌த் தெரிந்த‌ த‌ந்தையின் முக‌ம் அன்று அன்பொளி வீசிப் பிர‌காச‌மாய் ஜொலித்த‌து. "ப‌டிச்சு முடிச்சிட்டியாடா க‌ண்ணா?" என்று எதிர்பார்ப்புட‌ன் தொட‌ர்ந்த‌ த‌ந்தையிட‌ம் "ப‌டிச்சிட்டேன்பா, ஒரு க‌ண‌க்கு ச‌ந்தேக‌மாயிருக்கு அதான் ச‌ந்திரா அக்காகிட்டே போய்க் கேட்க‌ப்ப போறேன்". என்று விடைபெற்றுக் கிள‌ம்பினான் சிபி.

ச‌ந்திரா அக்கா எம்.எஸ்.சி க‌ணித‌ம் தேறிய‌வ‌ள். அர‌சாங்க‌ வேலைக்காக‌க் காத்துக்கொண்டு உள்ளூரில் ஒரு த‌னியார்ப் ப‌ள்ளியில் க‌ண‌க்கு டீச்ச‌ராக‌ வேலை பார்த்து வ‌ருப‌வ‌ள். காண்போர் அனைவ‌ராலும் ஓர் அறிவுஜீவியாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுப‌வ‌ள். சிபியைப் பொறுத்தவ‌ரை.. ச‌ந்திரா அக்கா ஒரு ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம். க‌ண்சிமிட்டும் நேர‌த்தில் க‌ண‌க்குப் போட்டுக் காட்டும் ஒரு ம‌ந்திர‌வாதி. அவ‌ளிட‌ம் தொட‌ர்ந்து ப‌யின்றிருந்தால் இந்த‌ நிலைத் த‌ன‌க்கு வ‌ந்திருக்காது என‌ சிபி ந‌ன்கு அறிவான். மேலும் தன்னுடைய‌ இந்நிலையில் ச‌ந்திரா அக்காவால் என்ன செய்துவிட‌ முடியும்? ப‌ரிட்சைக்கு இன்னும் முழுதாக‌ அரைநாள் கூட‌ இல‌லையே? என்றும் தன்னைத்தான் நொந்த‌வ‌னாய் சைக்கிளை வேக‌மாக‌ அழுத்தினான். மெயின்ரோடு வ‌ந்த‌து. அந்த ரோட்டைக் க‌ட‌ந்த‌தும் வ‌ரும் நேர்சந்தில் ச‌ற்று வேக‌மாக‌ சைக்கிளில் ப‌ய‌ணித்தால் ஐந்தாவ‌து நிமிட‌த்தில் ஒரு காய்க‌றி மார்க்கெட் வ‌ரும்.அம்மாலை நேர‌த்து மார்க்கெட்டின் ஜ‌ன‌சந்த‌டியில் சைக்கிளை மூன்றாவ‌து சந்தில் செலுத்தினால் ச‌ந்திரா அக்கா வீடு வ‌ரும். ச‌ற்று தூர‌ந்தான் ஆனால் அதையெல்லாம் சிபி பொருட்ப‌டுத்த‌வே இல்லை.

அவ‌ன் மெயின் ரோட்டைக் க‌ட‌க்க‌ எத்த‌னித்துக் கொண்டிருக்கிறான். அந்த ரோட்டின் இருபுற‌மும் ஏதொவொரு க‌ளேப‌ர‌ம். யாரோவொரு பிர‌ப‌ல‌ம் அந்த ரோட்டு வ‌ழியே செல்ல‌ப் போகிறார் என்று புரிந்த‌து.. அது யார்? என்று எண்ணிய‌ப‌டி தலையைத் திருப்புகிறான், சுவ‌ரெங்கும் அவ‌ன் அபிமான‌ ந‌டிக‌ரை வ‌ர‌வேற்றுப் போஸ்ட‌ர்க‌ள் ஒட்ட‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌. சிபியின் க‌ண்ணில் ஒரு சிறு மின்ன‌ல் "ஹை த‌லைவ‌ர் வ‌றாரா?" என்று ஒரு திகைப்பு. மெயின் ரோடு முழுவ‌தும் கூடும் கூட்ட‌த்தைக் க‌லைத்துக் கொண்டு பாதையை ஒழுங்கு செய்கிற‌து சிபிக்கு மிக‌வும் ப‌ரிச்ச‌ய‌மான‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ப் ப‌ட்டாள‌ம்.
புத்த‌க‌ப் புழுவாக‌ வீட்டிலேயே முட‌ங்கிக் கிட‌ந்த‌ சிபிக்கு அந்த‌ ந‌டிக‌ர் என்றால் ஒரு த‌னி ஈர்ப்பு. அதுவும் சொந்த‌க்கார‌ர்க‌ளும் ந‌ண்ப‌ர்க‌ளும் த‌ன்னை அந்த‌ ந‌டிக‌னின் சாய‌லில் இருப்ப‌தாக‌ப் புக‌ழ்வ‌தைக் கேட்டால் பூரித்துப் போவான். அந்த‌ பூரிப்பு தான் அவ‌னைத் திசை மாற்றிய‌து. பாதிநாள் த‌ன் த‌னிய‌றையின் ர‌ச‌ம் தேய்ந்த‌ க‌ண்ணாடியின் முன்னேயே செல‌வ‌ழித்தான். " நீ ந‌ம்ம‌ த‌லைமாறியே இருக்கேடா!!" என்று புக‌ழ்ந்து புக‌ழ்ந்தே ரசிக‌ர் ம‌ன்ற‌ விழாவில் அந்த‌ ந‌டிக‌ரைப் போல‌வே வேட‌ம‌ணிந்து மேடையேற்றின‌ர் சிபியை... க‌ன‌விலேயே கால‌ம் க‌ரைந்த‌து. தேர்வு நாளும் வ‌ந்த‌து. அந்த‌ ந‌டிக‌ர் மேல் சிபிக்கு இன்றும் ஓர் இன‌ம் புரியாத‌ மோக‌ம் இருக்க‌த்தான் செய்த‌து.

அழுத்திப்பிடித்திருக்கிறான் சைக்கிள் பிரேக்கை. சில‌நொடி தாம‌தித்தால் ம‌ன‌ம் விரும்பும் நாய‌க‌னை முத‌ன்முறை நேரில் த‌ரிசிக்க‌லாம். ஆனால் ம‌ன‌மோ தொட‌ர்ந்து சைக்கிளை செலுத்துமாறு அழுத்துகிற‌து. எனினும் சிபி மீண்டுமொருமுறை ம‌றுப‌ரிசீல‌னை செய்கிறான். அதோ தூர‌த்தில் திற‌ந்த‌ ஜீப்பில் த‌லைக்குமேல் கைகாட்டிய‌ வ‌ண்ண‌ம் அந்த‌ உருவ‌ம் ம‌ங்க‌லாய்த் தெரிகிற‌து. ச‌ற்று நேர‌த்துக்கு முன்பு சுவ‌ற்றில் சுண்ணாம்புக் காரைக‌ளுக்கு இடையே தோன்றிய‌ அதே முக‌ம்! "பார்த்துவிட்டுத்தான் போவோமே" என்று முடிவுட‌ன் இருந்த‌ சிபியின் ம‌ன‌ம் அந்த‌க் க‌டைசி க‌ட்ட‌த்தில், " ந‌ம‌க்கு இந்நிலை வ‌ர‌க்கார‌ண‌மே இந்த‌ மோக‌ம்தான், இத‌னை இக்க‌டைசி த‌ருண‌ம் வ‌ரை நீடிக்க‌ச் செய்தால் சிறிதும் நியாய‌ம் ஆகாது. இந்தத் தியாக‌த்தையாவ‌து நீ செய்தே ஆக‌ வேண்டும்" என்று எச்ச‌ரித்த‌து. மேலும், இம்முறை ஒருதடவை வீட்டில் நம்பிக்கையுடன் காத்திருக்கும் தந்தை, தாயின் பாச முகங்கள் ஒருமுறை மனதில் வந்து போக, தன் மனதின் இந்த‌க் க‌டைசிநேர‌ எச்ச‌ரிக்கைக்கு அடிப‌ணிந்த‌வ‌னாய்த் த‌ன் பார்வைக்கு எட்டும் தூர‌த்தில் இருக்கும் த‌ன் ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ நாய‌க‌னைக் காணாம‌ல் க‌ண்ணுக்குக் க‌டிவாள‌ம் இட்டு நேரே த‌ன் பாதையைத் தொட‌ர்ந்தான்!

சைக்கிளில் இப்போது ஒரு புதுவேக‌ம், ம‌ன‌தில் ஒரு புதுத்தெம்பு, எங்கிருந்தோ துளிர்விடும் ஒரு புது ந‌ம்பிக்கை... புத்துண‌ர்வுட‌ன் ச‌ந்திரா அக்கா வீட்டு வாச‌லில் சைக்கிளை நிறுத்திவிட்டு உத்வேக‌த்துட‌ன் கத‌வைத் த‌ட்ட‌ப்போன‌வ‌னை திண்டுக்க‌ல் பூட்டுதான் வ‌ர‌வேற்ற‌து. ம‌னதில் நிலைகொள்ளாத‌ ஒரு மிர‌ட்சியுட‌ன் ப‌க்க‌த்து வீட்டுப் பாட்டியிட‌ம், "அக்கா எங்கே??" என்று விசாரிக்க‌, "இங்கே மெயின்ரோட்டுக்கு யாரோ சினிமா ஸ்டாரு வ‌ந்திருக்கேனாம்ல‌ அவுக‌ள‌ப் பார்க்க‌த்தான் இவ‌ளுக‌ எல்லாம் போயிருக்காளுக‌!" என்று அச‌ராம‌ல் கூறி முடித்தாள் பாட்டி, வெற்றிலை குத‌ப்பிய‌ வாயால். ஏதேதோ எண்ண‌ங்க‌ள் மிரட்சியாய் ம‌ன‌தில் வ‌ந்து முட்ட‌ ஏமாந்து போன‌வ‌னாய் சைக்கிளை நோக்கித் திரும்பினான் சிபி!

- பிர‌பு