கால்ஷீட் : சிறுகதை

ஏற்கெனவே எழுதி யூத்ஃபுல் விகடனில் வெளிவந்த‌ கதை... இங்கு சில மாற்றங்களுடன்......


கால்ஷீட் 




"கருப்பு.....

......வெள்ளை


கருப்பு........

......மீண்டும் வெள்ளை...


லைட்ஸ் ஆன்.......

........லைட்ஸ் ஆஃப்


லைட்ஸ் ஆன்.......

.......லைட்ஸ் ஆஃப்"


கண்களை ஒரு சீரான இடைவெளியில் அகலத் திறந்து திறந்து மூடுவதால் நம்மாழ்வாருக்கு இருட்டும் வெளிச்சமும் மாறி மாறி வரும் உணர்வைத் தந்தது!


"ஏன் மருத்துவமனைகள் எல்லாமே மொத்தமாகவே வெள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன???"

என்று மனதில் கேள்வி தோன்றுகிறது.. அதற்கு பதில் தேடாமல்நம்மாழ்வார் மீண்டும் மல்லாந்து படுத்தவாறு விட்டச் சுவரின் வெள்ளையோடு தன் 'கண்மூடி' விளையாட்டைத் தொடர்கிறார்......

இதுபோன்று சுவாரஸ்யமில்லாத பொழுதுகளை அவர்தனது கடந்தகாலங்களில் அனுமதித்ததேயில்லை. ஆனால் இன்று..... இத்தகைய பொழுதுகளையும் தன்னால் கடக்க முடிவதைக் காணும்போது, இலக்கு ஒன்றை அடையும் பொருட்டுத் தனக்கு இதுவும் சாத்தியமே என்று புரிந்துகொள்கிறார்... மீண்டும் அதே கண் சிமிட்டல்....

"ஏன் மாமா கண்ணை இப்படி அலட்டிக்கிறீங்க? கண் கூசுதா?? ஜன்னலை அடைச்சிடலாமா??"

இன்ஞ்சினியரான தங்கைப் பையன் சுந்தர் கேட்க, அலுங்காமல் கழுத்தைமட்டும் அவன்புறம் அசைத்து மெலிதாகச் சிரித்துக் கண்ணடிக்கிறார்... "பேச முடியலையா மாமா??".. அதற்கும் சிரிப்புதான் பதில்... உண்மையில் அவர் தன் குரலை சேமித்துக் கொண்டிருக்கிறார்.. கடந்தமுறை வாழ்வில் முதன்முறையாக இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த‌போதும் இப்படித்தான் வைராக்கியமாகத் தன் உடலில் மிச்சமிருந்த சக்திகளையெல்லாம் சேமித்துக்கொண்டுத் திரும்பினார்... இம்முறையும் அதையே செய்யப்போவதுதான் தனது சவால் என்பது நம்மாழ்வாரின் கணக்கு!! எல்லாம் காதலுக்காக!! தான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான நடிப்பின்மீது கொண்ட வெறித்தனமான காதலுக்காக....!!


தொடர்ந்து ஒரேயிடத்தில் பார்வைப் பதித்துப் படுத்திருக்கும் தன் மாமாவிடம் அன்றைய செய்தித்தாளில் அவரைப் பற்றி வெளிவந்துள்ள செய்தி ஒன்றை மெதுவாகக் காட்டினான் சுந்தர்...

 "மருத்துவமனையில் தேறிவருகிறார் நடிகர் நம்மாழ்வார்" என்று கூறியது அந்தப் பெட்டிச் செய்தி....

நம்மாழ்வார் முகத்தில் திடீர் பிரகாசம்... பிரபலமான நடிகருடன் நம்மாழ்வார் இணைந்து நடிக்கும், அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு திரைப்படம், நம்மாழ்வார் உடல் நலம் தேறிவருவதற்காகக் காத்திருப்பதாகக் கூறுகிறது அந்தச் செய்தி.. நம்மாழ்வாரை வைத்து மிக அண்மையில் மிகப்பெரியதொரு வெற்றிப்படம் கொடுத்த இளம் இயக்குனர் சுரேஷின் அடுத்தப்படம் அது... தனது முந்தைய படத்தைப் போன்றே இந்தப் படத்திலும் நம்மாழ்வாரின் பாத்திரத்தை அவரால் மட்டுமே செய்யமுடியும் என்றும் அவருக்காகக் கதையை வேண்டுமானாலும் மாற்றுவோமே தவிர வேறுயாரையும் ந‌டிக்க‌வைக்கும் எண்ண‌மில்லை என்று இய‌க்குன‌ர் சுரேஷ் திட்ட‌வ‌ட்ட‌மாக‌க் கூறியிருப்பதாகவும், மேலும் இது மிக‌ப்பிர‌ப‌லமான‌ தயாரிப்பாள‌ரான‌ ர‌ம‌ண‌ராஜனின் படம் என்றும் செய்தியில் குறிப்பிட‌ப்ப‌ட்டிருந்த‌து...செய்தியைப்பார்த்த‌வுட‌ன் ஏதேதோ ர‌சாய‌ண‌ மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மாழ்வாரிட‌ம்... சுந்த‌ரைப்பார்த்து பெருமித‌மாக‌ப் புன்ன‌கைக்கிறார்....

இந்த முறை மனதின் ஒருநிலையைத் தொடர முடியவில்லை அவரால்!!

"கருப்பு..வெள்ளை...லைட்ஸ் ஆன்...சுரேஷ்....அந்த சந்திப்பு...லைட்ஸ் ஆஃப்....ரமணராஜன்.....அந்த அறிவிப்பு...கருப்பு..வெள்ளை..."

மனம் இடையில் வேறொரு அலைவரிசையில் பயணித்தது....,சில பழைய உரையாடல்கள் மறுஒலிபரப்பாக எதிரொலித்தது அவருக்கு மட்டும்!!!

"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார்!!!!..."

கருப்பு....வெள்ளை.... கருப்பு....வெள்ளை....

"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

லைட்ஸ் ஆன்....லைட்ஸ் ஆஃப்......"

எழ‌ வேண்டும் என்று தோன்றியிருக்கும் போலும்....ம‌னித‌ர் இப்போதுதான் உண‌ர்கிறார் த‌ன்னுடைய‌ கால்க‌ள் முற்றிலுமாக‌ செய‌லிழ‌ந்து போயிருப்ப‌தை......சில நிமிடப் போராட்ட‌ம் ப‌லன‌ளிக்க‌வில்லை... அவ‌ரால் த‌ன் உட‌லை அசைக்க‌ இய‌ல‌வில்லை.....அதுவரை அவர் உணராத வேதனை அவரை ஆட்கொண்டு உடல் முழுதும் பரவுகிறது..... எழுந்து மீண்டும் தொழிலுக்குத் திரும்பும் தனது மனக்கணக்கு எங்கே பொய்த்துவிடுமோ?? என்று சதி செய்யும் தன் உடல்நிலையை நினைத்தவாறு சுந்தரை நோக்கி மீண்டும் த‌லை ச‌ரித்து சிரித்த‌முக‌மாய்ப் பார்க்கிறார்... அந்த அழுத்தமான பார்வையில் பல அர்த்தங்கள்.... இதயத்துடிப்பு இன்னும் கொஞ்சம் இறங்கிப் போகிறது....அதே புன்னகையோடு சுந்தரையே பார்த்தவண்ணமாய் இருக்கிறார் இமைக்காமல்......

சுந்த‌ர் பிற‌ந்த‌ போதே ந‌ம்மாழ்வார் ப‌ர‌ப‌ர‌ப்பான‌ ந‌டிகர்தான். அவரைக் கையாள்வது மிகக் கடினம் என்று அவர் குடும்பத்திலேயே ஓர் உணர்வு இருந்தது. க‌தாநாய‌கனாக‌ சில‌ப‌ட‌ங்க‌ளிலும், வில்லனாக‌வும், குண‌ச்சித்திர‌ ந‌டிகராக‌வும் ப‌ல்வேறு ப‌ட‌ங்க‌ளிலும் நடித்துத் த‌ன‌து தனித்துவ‌மான‌ ந‌டிப்பாற்ற‌லால் எப்பொழுதுமே உச்ச‌த்திலிருந்தார்.

 "சாதாரண‌ வாழ்க்கை வாழும் சராசரி ம‌னித‌ன் மிக‌க் கொடுத்துவைத்த‌வன், ஏனென்றால் அவ‌ன் அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ள‌ப்பட்டுவிடுகிறான்!"

 என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் ஒரு பக்குவப்பட்ட மனிதனாய்........

"சாதிக்கவே பிறந்தேன்" என்று தன்னை இள‌மையிலிருந்தே ஆழ‌மாக‌ ந‌ம்பி வாழ்ந்து வந்த‌ ந‌ம்மாழ்வார், தனது சாதனைக் க‌ள‌மான‌ நடிப்பைத்தவிர‌ வேறு எதிலுமே பொறுப்பாக‌ இருந்த‌தில்லை! அறுவைசிகிச்சை முடிந்திருந்த தன் த‌ந்தையை ஒருநாள் பார்த்துக் கொள்ள‌ ம‌ருத்துவ‌ம‌னைக்கு அனுப்பிவைத்த‌போது, நடிக்க‌ வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த இளைஞனான நம்மாழ்வார், சாதிக்கக் காத்திருக்கும் த‌ன‌து நேர‌த்தைத் த‌ன் குடும்பத்தின‌ர் பாழ்ப‌டுத்துவதாகப் பயங்கரமாய்க் கொந்த‌ளித்ததையும் ச‌ரி, பிறகு பெரிய‌ ந‌டிக‌னாகித் தான் க‌ட்டிய‌ மிக‌ப்பெரிய‌ வீட்டில் ஆசையாய்த் த‌ன்னைப் பிர‌ம்மாண்ட‌மாய்ப் ப‌ட‌ம்பிடித்து வீட்டின் முக‌ப்பில் மாட்டிய‌ ப‌ட‌த்தில், மாட்டிய‌ அன்றே சிறுவ‌னான‌ த‌ங்கைப்பைய‌ன் சுந்த‌ர் மீசை வ‌ரைந்திட, அனைவ‌ரும் மிர‌ண்டுபோய்க் காத்திருந்த‌ போது வ‌ந்து பார்த்துவிட்டு "என‌க்கு மீசைவெச்சா ந‌ல்லாதானிருக்கும்போல‌...." என்றும‌ட்டும் கூறிவிட்டு அல‌ட்டிக் கொள்ளாம‌ல் சென்றது மட்டுமன்றி அந்தப் படத்தை இறுதிவரை மாற்றாமல் இருந்ததையும் ச‌ரி... உண்மையில் யாராலும் அவ‌ரைப் புரிந்துகொள்ள‌வே முடிய‌வில்லைதான்...!!

சுந்த‌ர் அறைக்கு வெளியே கொஞ்சம் பதற்றத்தோடு ம‌ருத்துவ‌ர்க‌ளோடு ஏதோ சீரிய‌ஸாக‌ப் பேசிக்கொண்டு இருக்கிறான்..... இர‌ண்டு ந‌ர்சுக‌ள் அறையைவிட்டு வெளியே வந்தபின்.....சுந்த‌ர் ந‌ம்மாழ்வாரின் மிக‌ அருகே சென்று அம‌ர்ந்து அவ‌ர் முக‌த்தைப் பார்க்க......ந‌ம்மாழ்வாரின் க‌ண்கள், சிரித்த முகமாய் இப்போதும் த‌ன் ம‌ரும‌க‌னின் க‌ண்க‌ளை ஆழ‌மாக‌ப் பார்த்துக்கொண்டிருக்கின்ற‌ன‌......மௌன‌த்தில் ஏதோ பேசிக்கொள்கிறார்க‌ள் போல‌...

அன்று காலையில் ஒரு ப‌தினோரு ம‌ணிய‌ள‌வில் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜனின் அலுவ‌ல‌க‌த்திற்கு இய‌க்குன‌ர் சுரேஷ் வ‌ந்திருந்தார்..... அவ‌ர்க‌ள‌து கூட்டுமுய‌ற்சியில் உருவாகிக் கொணடிருக்கும் திரைப்ப‌ட‌ம் கிட்ட‌த்த‌ட்ட எண்ப‌து ச‌த‌வீத‌ம் முடிந்துவிட்ட‌ நேர‌த்தில், உண்மையிலேயே இப்போது ந‌ம்மாழ்வாருக்காக‌த்தான் ப‌ட‌ப்பிடிப்பு வேலைக‌ள் காத்திருக்கின்றன..... இத‌ர‌க் காட்சிக‌ளெல்லாம் ப‌ட‌மாகிவிட்ட‌ வேளையில் தயாரிப்பாள‌ரிட‌ம், ரிலீஸ் மற்றும் அடுத்த‌ ப‌ட‌ப்பிடிப்பு ஷெட்யூல் ப‌ற்றி விள‌க்கிக் கொண்டிருந்தார் சுரேஷ்....

. "அவரோடத் த‌ங்க‌ச்சிப் பைய‌ன்தான் ஹாஸ்பிட்ட‌ல்ல‌ அவ‌ரைப் பாத்துக்கிறாரு... எதுவும் தெளிவா சொல்ல‌மாட்டறாரு... டாக்ட‌ரை இன்னும் பார்க்க‌ முடிய‌லைனு சொல்றாங்க‌..எப்டினாலும் ச‌ரி ந‌ம்மாழ் சார் சொல்லிட்டுப் போனபடி இன்னும் ரெண்டு நாள்ல‌ வ‌ந்துடுவார்னு ந‌ம்புறோம் சார்..."

என்று சுரேஷ் சொல்ல‌... கருத்தாய்க் கேட்டுக்கொண்டிருக்கும் ரமணராஜன், "ஒண்ணும் பிர‌ச்னையில்ல‌... எவ்வ‌ள‌வு நாள் ஆனாலும் ச‌ரி.. அவ‌ர் முழுசா குண‌மாகிட்டு வ‌ர‌ட்டும்..." அழுத்தமாய் சொல்லிவிட்டுத் தன் உத‌வியாள‌ரிடம்,
 "அவ‌ர் என்ன‌தான் ம‌றுத்தாலும் எப்படியாவது ஹாஸ்பிட்ட‌ல் செல‌வு முழுசும் ந‌ம்ம‌ளே செட்டில் ப‌ண்ணுற‌ மாதிரி ஏற்பாடு செஞ்சிடுங்க‌.." என்று உத்த‌ர‌விடுகிறார்....

சுரேஷ் எவ்வித‌ உண‌ர்வையும் முக‌த்தில் காட்டாத‌ப‌டி ர‌ம‌ண‌ராஜ‌னையே பார்த்துக்கொண்டிருந்தார்..... ப‌ல‌வ‌ருட‌ ப‌ரிச்சிய‌மும் ந‌ட்பும் கொண்ட‌வ‌ரான‌ ந‌ம்மாழ்வாரைப் ப‌ற்றி ஏனோ சிலநாட்களாக அடிக்க‌டி நினைவ‌லைக‌ளில் சிக்கிக் கொள்கிறார் ர‌ம‌ண‌ராஜ‌ன்....

தொழிலில் என்றுமே ஒரு சிர‌த்தையான‌ காத‌ல் உண்டு ந‌ம்மாழ்வாருக்கு... சிறிய‌ ந‌டிக‌ராய் சில‌கால‌ம் ம‌ட்டுமே இருந்தார், அந்த‌க்கால‌ம்தொட்டு ஒருநாள்கூட‌ப் ப‌ட‌ப்பிடிப்பு அவ‌ரால் தட‌ங்க‌ல் ப‌ட்ட‌தே இல்லை...சினிமாமீது தான் கொண்டிருக்கும் அதிதீவிர‌ ஈடுபாட்டை அனைவ‌ரிட‌மும் எதிர்ப்பார்ப்பார்... மீறுகையில் கடும்கோப‌ம் கொள்வார்! உண‌ர்ச்சிம‌ய‌மான‌ ம‌னித‌ர்.....திருமண வாழ்வில் தோல்வி..... ஓய்வின்றி ந‌டிப்பார்..... க‌ளைப்பினால் தன் ந‌டிப்பின் த‌ர‌ம் பாதிக்க‌ப்ப‌ட்டுவிடுமோ என்று எப்போதுமே ஒருவித‌மான‌ ம‌னஅழுத்தம் அவ‌ர‌து ந‌ர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்தை ரொம்ப‌வே பாதித்து வ‌ந்த‌து... அதிலிருந்து விடுப‌ட‌ எப்போதுமே அவ‌ர‌து விர‌ல்க‌ளுக்கிடையே சிக‌ரெட் ஒன்று அவ‌ரைப் போல‌வே ஓய்வின்றி புகைந்து கொண்டிருக்கும்! ந‌ள்ளிர‌வு முழுதும் தூக்க‌மில்லாத‌தால் அதிக‌மாக‌வே குடிப்பார்.....

நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்.....ஒரு தீபாவ‌ளி தின‌ம்..... ந‌ம்மாழ்வாரின் நான்கு ப‌ட‌ங்க‌ள் அன்று ரிலீஸ்! இர‌ண்டில் வில்ல‌னாக‌வும், ஒன்றில் மிக‌வும் சாந்த‌மான‌ ம‌னித‌ராக‌வும் இன்னொன்றில் நாயகனின் பெரிய‌ ப‌ண‌க்காரத் தந்தையாகவும் ந‌டித்திருந்தார்... பாராட்டுக‌ள் வ‌ந்து குவிந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌, இந்நிலையில் அவ‌ர் கடந்த‌ வ‌ருட‌ம் ந‌டித்திருந்த‌ ஒரு ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்காக‌த் தேசிய‌ விருதுக்கு அவ‌ர் பெய‌ர் இறுதிச்சுற்றில் ப‌ரிசீலிக்க‌ப்ப‌டுவ‌தாகவும் செய்தி வெளியாகிய‌து... அதே நேர‌த்தில், மிகப்பெரிய‌ ந‌டிக‌ர் ஒருவ‌ரின் கால்ஷீட்டைப் பெற்றிருந்த‌ ந‌ம்ப‌ர் ஒன் தயாரிப்பாளரான‌ ர‌ம‌ண‌ராஜ‌ன் த‌ன்னுடைய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ வேண்டிக்கேட்டார்... முத‌லில் இய‌க்குன‌ர் வ‌ந்து க‌தை சொன்ன‌போது ந‌ம்மாழ்வார் த‌விர்க்க‌ எண்ணிய‌ க‌தை அது.... இருப்பினும் ர‌ம‌ண‌ராஜ‌னுக்காக‌ ச‌ம்ம‌தித்தார் சில நிப‌ந்த‌னைக‌ளோடு....


"தேசிய‌விருது அறிவிப்பு: ந‌ம்மாழ்வார் சிற‌ந்த‌ ந‌டிக‌ர்!!" என்று அறிவித்த‌து ஒரு மாலை நாளித‌ழ்..... திடீரென்று வாழ்த்தும‌ழை பெய்ய‌த்தொட‌ங்கிய‌து ந‌ம்மாழ்வாரின் தொலைபேசியில்..... இன்னும் அதிகார‌ப்பூர்வ‌மாகத் தான் தெரிவிக்க‌ப்ப‌ட‌வில்லை என்ப‌தால் கொஞ்ச‌ம் சுதாரிப்புண‌ர்வுட‌ன்தான் அனைத்து வாழ்த்துக்க‌ளையும் பெற்றுக்கொண்டிருந்தார் ந‌ம்மாழ்வார்... அடுத்த‌ நாள் காலையில் அதிகார‌ப்பூர்வ‌ அறிவிப்பில் மாபெரும் நாய‌க‌னான‌ ஒரு வ‌டநாட்டு ந‌டிக‌ர் சிற‌ந்த‌ ந‌டிக‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டார்....ப‌ல‌ ச‌ல‌ச‌ல‌ப்புக‌ள் எழுந்த‌ன‌... அர‌சிய‌ல் கார‌ண‌ங்க‌ளும் கூற‌ப்ப‌ட்ட‌ன‌...

ந‌ம்மாழ்வார் அதிகாலையில் அழைக்க‌ப்ப‌ட்டார்.... அன்றைக்கு ஷூட்டிங் கேன்ச‌ல் என்று புரொட‌க்ஷ‌ன் மேனேஜ‌ர் கூறினார்..தெளிவான‌ கார‌ணமேதும் இல்லை.... பின்பு மெதுவாக, அந்தப் ப‌ட‌த்தின் க‌தாநாய‌க‌ன் திரைக்க‌தையில் ந‌ம்மாழ்வாருக்கு அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ முக்கிய‌த்துவ‌த்தினால் க‌டும் அதிருப்தி அடைந்துள்ள‌தாக‌வும் அத‌ன் விளைவாக‌ திரைக்க‌தையில் மாற்ற‌ங்க‌ள் ந‌ட‌ந்து வ‌ருவ‌தாக‌வும், கார‌ண‌ங்க‌ள் க‌சிந்த‌ன‌......இதெல்லாம் ப‌ழ‌க்க‌ப்ப‌ட்டுப் போயிருந்தாலும் இம்முறை இந்த சம்பவங்கள் அர‌ங்கேறிய‌ வேளையும் வித‌மும் ந‌ம்மாழ்வாரை ரொம்ப‌வே காய‌ப்ப‌டுத்திய‌து.....

தன்னைச் சுற்றி இப்ப‌டி மாறி மாறி ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் வேளையில் ப‌ட‌ப்பிடிப்புத் த‌டைப‌ட்டிருப்ப‌தால் அவ‌ரின்மீது ஒரு ப‌ர‌ப‌ர‌ப்பான‌ தனிமை திணிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து...... இந்த‌ சூழ்நிலையில் ர‌ம‌ண‌ராஜ‌னை ச‌ந்தித்தார் ந‌ம்மாழ்வார்... இருத‌ர‌ப்பிலும் வெவ்வேறு விதமான அழுத்த‌ங்க‌ள் ஒரே பட‌த்தினால்.... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ப் பேச்சுவார்த்தையில் வார்த்தைக‌ள் த‌டித்துப் போய்விட‌...... நீண்ட நேரம் சத்தமாக வாக்குவாதம் நடந்தது.....ஒரு நிர்பந்தமான க‌ட்ட‌த்தில்.... நீண்ட‌ மௌன‌த்துக்குப்பின்.... ந‌ம்மாழ்வார்......


"ம்ம்ம்ம்ம்ம்...அப்படின்னு சொன்னா நான் உங்கப் படத்துல இருந்து விலகிக்கிறேன்...... என்னை விட்டுடுங்க...."

என்று சொல்லிவிட்டு அமைதியாக‌ வெளியேறினார்... ப‌ல‌ரும் அதிர்ச்சியில் பார்த்திருக்க‌... அவ‌ர் காரில் ஏறிச்செல்லும்வ‌ரை ப‌த‌ற்ற‌மாக‌ முறைத்திருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன். காரில் வீடு செல்லும் வ‌ழியில்.....தன் தொழில்வாழ்வில் ஏதோவொரு புய‌ல் வீசப்போவ‌தை உண‌ர்ந்திருந்தாலும்... ப‌ல‌ மைல்க‌ற்க‌ளைக் க‌ட‌ந்துவிட்ட‌ ப‌ய‌ண‌ம‌ல்ல‌வா... அதனால் அதிக‌ம் அச‌ர‌வில்லை... மேற்கொண்டு இவ்விஷ‌ய‌த்தில் ம‌வுன‌ம் காப்ப‌து என்று முடிவெடுத்திருந்தார்...


"ந‌ம்மாழ்வார் ப‌ட‌த்திலிருந்து அதிர‌டி நீக்க‌ம்" என பரபரப்பாக செய்தி வெளியானது..... ச‌ற்றும் எதிர்பாராதவித‌மாக‌ த‌யாரிப்பாள‌ர் த‌ர‌ப்பிலிருந்து பிர‌ப‌ல‌ ப‌த்திரிக்கையொன்றில் விள‌க்கமும் வெளியாகியிருந்த‌து!! நம்மாழ்வரை வீழ்த்த ர‌ம‌ண‌ராஜ‌ன் எடுத்திருந்த‌ அஸ்திர‌ம் வித்தியாச‌மான‌து...

 "எந்த‌ நேர‌த்திலும் உயிரிழ‌ந்துவிடும் நிலையிலிருக்கும் ந‌டிக‌ரை வைத்துப் ப‌ட‌ம் எடுப்ப‌து த‌ன‌க்கு சாத்திய‌மில்லை!!"
என்று கூறியிருந்தார் ர‌ம‌ண‌ராஜ‌ன்...

 "சிற‌ந்த‌ ந‌டிக‌ரான‌ ந‌ம்மாழ்வார் த‌ன‌து உட‌ல்ந‌‌ல‌னைப் ப‌ற்றிக் க‌ருத்தில் கொள்ள‌வில்லை, சொந்த‌ வாழ்க்கையில் க‌வ‌ன‌மின்றி ம‌ன‌ அழுத்த‌த்திற்கு ஆளான‌மையினால் போதைக்கு அடிமையாகி இப்போது க‌வ‌லைக்கிட‌மான‌ நிலையிலிருக்கிறார்... எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடும் நிலையிலிருக்கும் அவரை வைத்துப் ப‌ல‌கோடி ரூபாய் முத‌லீடு செய்யும் தயாரிப்பாள‌ர்க‌ள் இப்ப‌டி ரிஸ்க் எடுக்க‌ முடியாது... வ‌ளர்ந்துவ‌ரும் ந‌டிக‌ர்க‌ள் ந‌ம்மாழ்வாரின் க‌தையில் பாட‌ம் க‌ற்றுக் கொள்ள வேண்டும், நடிகர்கள் தயாரிப்பாளர்களின் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மொத்தமாகவே திரியைக் கொளுத்திப்போட்டிருந்தார்.....

சுந்த‌ரின் அலைபேசிக்குத் த‌ன் வீட்டிலிருந்த‌ப‌டி அழைப்புக்கொடுத்தார் இய‌க்குன‌ர் சுரேஷ் முத‌ல்முறை ம‌ணி முழுதாக‌ அடித்தும் ப‌தில் இல்லை அடுத்த‌முறை ஸ்விட்ச் ஆஃப் செய்ய‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌த் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து!!... ப‌ட‌ப்பிடிப்பு நிறுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தால் த‌னிமை இம்முறை சுரேஷுக்கு..... இந்த‌ ஓய்வும் தேவையாக‌த்தானிருந்த‌து... .சுரேஷின் மனம் சில நினைவுகளை வட்டமிடத் துவங்கியது....."ந‌ம்மாழ் சார்..!!" ......ம‌ற‌க்க‌ முடியாத‌ அந்த‌ முத‌ல் சந்திப்பு...!!

ர‌ம‌ண‌ராஜ‌னின் அறிக்கை வெளிவ‌ந்த‌துதான் தாம‌த‌ம்... ந‌ம்மாழ்வாரின் உட‌ல்நிலையைப் பற்றி தின‌ம்தின‌ம் வ‌த‌ந்திக‌ள்!! ந‌டித்திருந்த‌ இர‌ண்டுப‌ட‌ங்க‌ள் ப‌டுதோல்விய‌டைந்த‌ன‌.....காட்சிக‌ள் முற்றிலுமாக‌ மாறிப்போய்..... ந‌டிப்பில் ஊறித்திளைத்த‌ க‌லைஞன் கொஞ்சம் இளைத்துப் போனமையால் சில‌ ஊறுகாய்ப் பாத்திர‌ங்க‌ளுக்கு அழைக்க‌ப்ப‌ட்டார்..... மொத்தமாகவே நடிப்பை நிராகரித்துத் தன் பொழுதுகளை ஏசி குளிரிலும், தியேட்ட‌ர் இருளிலும் க‌ழிக்க‌த் துவ‌ங்கினார்..... இர‌ண்டுவ‌ருட‌ங்க‌ள் உருண்டோடிப் போயின‌.... அதீதமான மன அழுத்ததால் இய‌ல்பான‌ முதுமையுடன் உட‌ல் ந‌ல‌ம் இன்னும் கெட்டுப்போயிருந்த‌து, எனினும் உயிருட‌ன்தானிருந்தார்!! அப்போது ந‌ம்மாழ்வாரைத் தேடி சுரேஷ் என்று ஓர் இள‌ம் இய‌க்குன‌ர் வ‌ந்திருந்தார் த‌ன் முத‌ல்ப‌ட‌த்திற்குக் க‌தையைத் தூக்கிக் கொண்டு!!!


"வேண்டாம்ப்பா...ஒருவேளை ப‌டம் பாதி போய்கிட்டிருக்கும்போது நான் செத்துப்போயிட்டா உங்களுக்கெல்லாம் ரொம்ப‌ ந‌ஷ்ட‌மாகிடும்... நீ வேற‌ ஏதாவ‌து ஆரோக்ய‌மான‌ ஆளை வெச்சு இந்த‌ப் ப‌ட‌த்தை எடுத்துக்கோ!!" கொஞ்ச‌மும் ஆர்வ‌மின்றி சொன்னார் ந‌ம்மாழ்....


"அப்படி எதுவும் நடந்துட்டா இந்தக் கதையைக் கிழிச்சுபோட்டுட்டு வேற கதை தேடுறதைத் தவிர எனக்கும் வேற வழியில்லை சார் !!!!..." என்றுவ‌ந்த‌து ப‌தில்!!!
க‌தையைக் கேட்ப‌தைத்த‌விர‌ வேறுவ‌ழியில்லை ந‌ம்மாழுக்கு!!

கதையைக்கேட்ட‌ மாத்திர‌த்தில் நீண்ட‌ நாட்களாக ஓய்ந்து கிடந்த‌ ப‌ட்டாம்பூச்சிக‌ள் ப‌றக்க ஆரம்பித்தன‌ ந‌டிக‌ருக்குள்!! ப‌ட‌ம் ஆர‌ம்பித்த‌து..... த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ க‌தையாக‌ உண‌ர்ந்தார்.... இடையே உண்மையிலேயே நோய்வாய்ப்ப‌ட்டுத் த‌ன் வாழ்நாளில் முத‌ன்முறையாக‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுத் தன் ச‌க்திக‌ளையெல்லாம் சேக‌ரித்துக்கொண்டுத் திரும்பி வ‌ந்து ந‌டித்துக் கொடுத்தார்...... ப‌ட‌ம் மாபெரும் வெற்றி பெற்ற‌து!!!! மீண்டும் உச்ச‌த்தில் ந‌ம்மாழ்.... சுரேஷ் பெரும் பெய‌ர்பெற்றுப்போனார்.... அத‌ற்கு உட‌ன‌டி அங்கீகார‌ம், சுரேஷின் அடுத்த‌ ப‌ட‌த்திற்குத் த‌யாரிப்பாள‌ர் ர‌ம‌ண‌ராஜ‌ன்!!! முக்கிய‌ப் பாத்திரத்தில் ந‌ம்மாழ்வார்.....! துவ‌க்க‌விழாவில் ம‌ரியாதையாக‌ இருவ‌ரும் ஒருவ‌ருக் கொருவ‌ர் வ‌ண‌க்க‌ம் வைத்துக்கொண்டார்க‌ள்..... ப‌ர‌ஸ்ப‌ர‌ம் வாழ்த்திப் பேசிக்கொண்டார்க‌ள் மேடையில்!!!! பாதிப்ப‌ட‌ம் முடிந்துவிட்ட‌ வேளையில் மீண்டும் உட‌ல்ந‌ல‌ம் குன்றிய‌மையால் அதே ம‌ருத்துவ‌ம‌னையில் மீண்டும் இப்போது ந‌ம்மாழ்வார்..... அவ‌ரது த‌ங்கைப் பைய‌ன் சுந்த‌ர்தான் அவ‌ரை அருகிலிருந்து க‌வ‌னித்துக் கொள்கிறார்.... நேற்றிர‌வு ம‌ருத்துவ‌ர்க‌ள் சுந்த‌ரிட‌ம் சொன்ன‌தை சுந்த‌ர் யாரிட‌மும் ப‌கிர்ந்துகொள்ளவேயில்லை....

ம‌ருத்துவ‌ம‌னையில்.... இன்னும் அதே பார்வை....ஆழ‌மாக‌ இருவ‌ரின் க‌ண்க‌ளும் வெறித்துப் பார்த்த‌வ‌ண்ண‌மிருந்த‌ன‌.... போதும் என்று எண்ணி ஒருமுறை க‌ண்க‌ல‌ங்கிவிட்டு அந்த‌ உண‌ர்ச்சிமிகு க‌ண்க‌ளை ஒரேய‌டியாக‌த் த‌ன‌து கைக‌ளால் மூடினான் சுந்த‌ர் த‌ன் மாமாவின் த‌லையை ம‌டியில் தாங்கிக்கொண்டு....சிரித்த‌முக‌மாக‌வே விடைபெற்றிருந்தார் ந‌ம்மாழ்வார் மொத்த‌மாக‌.....

பேர‌திர்ச்சிய‌டைந்த‌து திரையுல‌க‌ம்... மிக‌வும் ம‌ரியாதையாக‌ ஒருபுற‌ம் எந்த‌வொரு த‌னிமனித‌னும் பெருமைப் பட்டுக்கொள்ளும‌ள‌வு இறுதிச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்து கொண்டிருக்கையில்... சுரேஷ் இயக்கிய‌ ந‌ம்மாழ்வாரின் முந்தைய‌ ப‌ட‌த்தின் தயாரிப்பாள‌ர் தொட‌ர்புகொள்ள‌ப்ப‌ட்டார்.... அந்தப் படத்திற்காக எடுக்கப்பட்டிருந்த‌ ஒரு குறிப்பிட்ட‌ ஒரு காட்சி அவ‌ரிடமிருந்து வாங்க‌ப்ப‌ட்ட‌து.... சிறிது நாட்க‌ளில் சில‌ மாற்ற‌ங்க‌ளுட‌ன் ந‌ம்மாழ்வாரின் க‌டைசிப‌ட‌ம் திரைக்குவ‌ந்தது..... ப‌ட‌த்தினிடையே திடீரென்று ந‌ம்மாழ்வாரின் க‌தாபாத்திர‌ம் ம‌ர‌ண‌மெய்துவ‌தாக‌க் க‌தை மாற்ற‌ப்ப‌ட்டிருந்தது.. ஒரு க‌ட்டிலில் அசைவேயின்றி இற‌ந்த‌ ச‌ட‌ல‌மாக‌ உயிருட‌னிருந்த‌போது அற்புத‌மாய் ந‌டித்திருந்தார் ந‌ம்மாழ்வார் அந்த‌ மிக‌ நீள‌மான‌ டேக்கில்.......

அந்த‌ப் ப‌ட‌மும் மாபெரும் வெற்றிபெற்ற‌து.... பாராட்டும‌ழையில் ந‌னைந்திருந்த சுரேஷ் த‌ன் ப‌டுக்கையில் கண்கள் மூடித் தூக்கமின்றி ப‌டுத்திருந்தார்... தூக்க‌ம் வ‌ர‌ம‌றுத்த‌து....ஒரு பிண‌மாக‌ ந‌ம்மாழ்வார் நடித்திருந்த‌ அந்த‌ நெடிய‌ காட்சி அவ‌ரை ரொம்ப‌வே தொந்த‌ர‌வு செய்து கொண்டேயிருந்த‌து.......


"சுரேஷ், ஹாஸ்பிட‌ல்ல‌ என் உட‌ம்புல‌ மிச்ச‌மிருந்த‌ பேச்சு மூச்சு எல்லாத்தையும் த‌க்க‌வெச்சுக் கொண்டுவ‌ந்திருக்கேன், இன்னைக்கு அந்த‌ எமொஷ‌ன‌ல் சீனை எடுக்க‌ப்போறோமில்லையா நான் ரெடிப்பா...." ஒரு குழ‌ந்தையின் ஆர்வ‌த்துட‌ன் சிரித்துக்கொண்டே சொன்னார் ந‌ம்மாழ்வார்....

"இல்ல‌ சார் இன்னைக்கு அந்த‌ சீன் எடுக்க‌ முடியாது.... கொஞ்ச‌ம் சிக்க‌ல்...."

"என்ன‌ப்பா... ஏற்கென‌வே ஷெட்யூல் ப‌டிதானே போய்க்கிட்டிருக்கு... இன்னைக்கே எடுத்துட‌லாமே.." கெஞ்ச‌லாக‌வே கேட்டார்......

ஏதேதோ கார‌ண‌ங்க‌ளை அடுக்கினார் சுரேஷ்.... அன்று அந்த‌க் காட்சி எடுக்க‌ப்ப‌ட‌வில்லை...அவ‌ர் ஆழ்ந்து உற‌ங்குவ‌துபோல் சில‌ பேட்ச்- அப் காட்சிக‌ள் நீண்டநேரமாக எடுக்கப்பட்டன..... உண‌ர்ச்சிபொங்க‌ ந‌டிக்கும் ஆர்வ‌த்தில் தெம்புகூட்டி வ‌ந்திருந்த‌மையால் இப்ப‌டி அசைவின்றித் தூங்கும் காட்சியில் ந‌டிக்க‌ மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டார்.....மிக‌ மிக‌ நீண்ட‌ காட்சியாக‌ அது ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்ட‌து.....

க‌ட்டில் ஒன்றில் சாய்ந்தவாறு அவ‌ர் தூங்குவ‌தைச் சுற்றி சுற்றிப் ப்ட‌மெடுத்துக் கொண்டிருந்த‌ கேமிராமேன்..." சார் அசைவே இல்லாம‌ சார்... அப்டியே... ஜ‌ஸ்ட் ஒரு ஃபியூ செக‌ன்ட்ஸ்.....அசையாம..அசையாம..... சார்...யெஸ்..யெஸ்" என்று சொல்லிக் கோண்டே ப‌ட‌மெடுக்க‌.......

"யோவ்! தூங்க‌த்தான‌யா செய்யுறேன் என்ன‌மோ பிண‌மா ந‌டிக்கிற‌மாதிரி சொல்லிக்கிட்டே இருக்க‌....?? அசையாம‌....அசையாம‌னு....சீக்கிர‌ம் எடுங்க‌ய்யா..!!"

ந‌ம்மாழ்வார் குர‌ல் க‌ர‌க‌ர‌க்க‌....... திடுக்கிட்டு எழுந்தார் சுரேஷ். அத‌ற்குப்பின் தூக்க‌ம் வ‌ரவேயில்லை அவ‌ருக்கு அன்றிர‌வு முழுதும்.......



டுட் டூ டு..... டுட் டூ டு........

டென்ஷனான கிரிக்கெட் தருணங்களிலும் சளைக்காமல் விளம்பரங்களை ஒளிபரப்புவது எரிச்சல்...

அதுவும் இதுமாதிரி மொக்கைகளைப் பார்க்கையில் தலைக்கு ஏறுகிறது.....

அதான்  ச்சும்மாக்காச்சு.... லூலுலாயிக்கு ஒரு கார்ட்டூன் வரைந்தேன்..... சீரியஸா எல்லாம் பார்க்காதீங்க..... சும்மா சிரிச்சுட்டு விட்டுடுங்க.... :)


கருத்துரையில் எத்தனைக் குட்டுகள் என் தலையில் விழப்போகுதோ.... ஆண்டவா காப்பாத்து!!!


33%

செய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, கடைசிபக்க விளையாட்டுச் செய்திகளைத் தாண்டி நாட்டுநடப்புப் பக்கங்களையும் கவனிக்க ஆரம்பித்திருந்த பள்ளி நாட்களிலேயே புரிந்திருந்தது 33 ஒரு பெண்பால் எண் என்று!!

எப்பவும் 50 தானே கேட்பாங்க இதென்ன பாஸ்மார்க்கைவிட ரெண்டு கம்மியா 33 க்கு சண்ட போடுறாங்களே? என்ற ஒரு சந்தேகத்துக்கும், "இடஒதுக்கீடு" என்ற‌ அரசியல் சார்ந்த சொல்லுக்கும் எனக்கு அர்த்தம் புரிந்தது நான் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த ஓர் உள்ளாட்சித் தேர்தலின்போதுதான்....

காரணம் : அப்போது எங்கள் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது!!

அதே எலக்ஷனில் மதுரையில் இன்னொரு பெண்கள் வார்டில் அமோக வெற்றி பெற்றவர்தான், நேர்மை மற்றும் தைரியம் என்னும் கூடாத காம்பினேஷனில் சில காரியங்கள் செய்ய முற்பட்டதால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் லீலாவதி...

இப்போது 33 சதவீதம் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய நாளில் நாடளுமன்றப் பெண் உறுப்பினர்களெல்லாம் கட்சிபேதம் மறந்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.....

" ஆண்கள் அதிகாரத்தில் அதிகளவு இருப்பதைத் தகர்க்க அந்நியநாடுகளின் சதி இது" 

என்று நேற்று முத்துதிர்த்து இருக்கிறார் இந்த மசோதாவை எப்படியாவது (பெண்ணியத்துக்கு எதிரானவர்கள் எனும் முத்திரை வாங்கிடாமல்)தடுத்துவிடத் துடிதுடிக்கும் மூவரில் ஒருவரான‌ முலாயம்சிங் யாதவ்.... இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை.... :-)

இது பெயரளவில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டுவிட்டு இதன் அடிப்படையில் பெண்களுக்கு அதிகளவில் தொகுதிகளை இடஒதுக்கீடு செய்வதினால் அரசியலில், ஏன் பெண்கள் சமூகத்துக்குமே கூட, பெரிதாய் என்ன மாற்றம் விதைக்கப் படப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...

இட ஒதுக்கீட்டினால் நம்முடைய‌ மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்!!



உலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....

நட்புடன்,

பிடித்த பத்துப் பெண்கள் - தொடர்பதிவு

தொடர்பதிவு.... ஒரு சுவாரஸ்யமான கான்செப்ட்.... "தொடர்பதிவு" என எழுதியிருக்கும் இடுகைகளை விரும்பிப் படிப்பது வழக்கம்.....

"ரசனை" எனும் ஒரு புள்ளியில்தானே இதயங்களே இணைகின்றன!!

அதிலும் "பிடித்தவை" ஒத்துப்போவதைவிட "பிடிக்காதவை" ஒத்துப்போவதில் இருக்கிற சுகம் இருக்கிறதே.. ஹாஹாஹா... அது மனித இயல்பு!! ;)

தொடர்பதிவில் பங்குபெறுவது இதுவே முதன்முறை... இன்றுகாலை தேனக்காவின் பதிவை வழக்கமான ஆர்வத்துடன் படித்துவிட்டுப் பின்னூட்டம் எழுத ஸ்க்ரோல் செய்த போது இனிய ஆச்சர்யமாக என் பெயர் இருந்தது ரிலே ரேசில் :)

இதோ இந்த இடுகையின் இணைப்போடு அவருக்குப் பின்னூட்டம் தரலாம் என்று இங்கு வந்துவிட்டேன்!!



பிடித்த பத்துப் பெண்கள்:




குறிப்பு:

நான் வரிசைப்படி எல்லாம் எழுதவில்லை.... மனதில் தோன்ற தோன்ற ஒருவாறாகத் தொகுத்து எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான்... என்னடா ஸ்டெஃபி கிராஃபுக்குப் பிறகு அன்னை தெரஸாவை எழுதியிருக்கிறானே என்று கோபித்துக்கொள்ளவேண்டாம்


நிர்மலா டீச்சர்: 

இவுங்க என்னுடைய இரண்டாம் வகுப்பு ஆசிரியை!! நான் அவர்களிடம் படித்தபோது அவருக்கு வயது இருபதுகளின் தொடக்கத்தில்தான் இருந்திருக்கும்.... ஓர் இருபது வயது இளம்பெண், ஆறேழு வயது சிறுவர்களுக்கு வகுப்பாசிரியையாக இருந்து நாளும் கட்டிமேய்ப்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை நான் இருபதுகளில் நுழைந்தபின்தான் வணக்கத்துடன் உணர்ந்தேன்..... அதுவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் போல ப்ரைமரி ஸ்கூல்களிலேயே ஒவ்வொரு பாடத்துக்கும் ஓர் ஆசிரியை என்று கிடையாது... காலை முதல் மாலை வரை ஒரே ஆசிரியர்தான் எல்லா பாடவேளைகளுக்கும்....!!
 இறக்கைகள் இல்லாத ஒரு தேவதையாகத்தான் அவரை நினைவுகூற முடிகிறது என்னால்.... கண்களில் அன்பைத் தேக்கிவைத்திருக்கும் நிர்மலா டீச்சரின் முகம் இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது.... ஒரு குறுகிய கட்டத்துக்குள் அவரின் பங்களிப்பை என்னால் இங்கு எழுதிவிடமுடியாது.... அதிர்ந்துகூட பேசாத மென்மையான குணம்கொண்டவர் என்னுடைய டீச்சர், இருப்பினும் கையில் ஒரு ஸ்கேலை வைத்துக்கொண்டு ஸ்ட்ரிக்டாக மிரட்டுவார்....அதையெல்லாம் அப்போது நினைவில் தேக்கிவைத்துக்கொண்டு இப்போது நினைத்துப் பார்க்கிறேன்...... இப்போ எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை..... என் அன்பு ஆசிரியைக்கு என்றுமே என் டாப் 10ல் நீங்காத இடமுண்டு :)

ஸ்டெஃபி கிராஃப்:

நான் ஸ்டெஃபியின் ரசிகன்... 1987 விம்பிள்டன் ஃபைனல்ஸ் நடந்துகொண்டிருந்தது.... எனக்கு மூன்றுவயது.... அக்ரெஸிவாக எதிர்த்து ஆடும் "டென்னிஸ் ரவுடி" மார்ட்டினா நவரத்திலோவாவைப் பிடிக்கவில்லை எனக்கு.... "அவ ஆம்பள மாதிரி இருக்கா..." என்று மனது சொன்னது....!! மறுபுறம் ஒரு சின்னப் பெண்ணாக, மென்மையாக துள்ளித்துள்ளி ஆடிச் சோர்ந்து தோற்றுப் போன ஸ்டெஃபி தோல்வி தாங்காது அழுதாள்.... அம்மா மடியில் தலைவைத்து டென்னிஸ் பார்த்துக் கொண்டிருந்த நானும் 'ஓ' வென்று அழுதுவிட்டேன்!!! :))))
அடுத்த ஆண்டிலிருந்து ஸ்டெஃபியின் ரசிகர்களுக்கு பொற்காலமாய் இருந்தது.... வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாறு படைத்தார் என் பாசத்துக்குரிய ஜெரிமனி அக்கா!! ஹாஹாஹா.....
மற்ற வீராங்கனைகளைவிட ஸ்டெஃபியிடம் என்னைக் கவர்ந்தது ஸ்டெஃபியின் மாறாத பெண்மைதான்!!! எதிர்முனையில் உடல் இறுகி, ஆஜானபாகுவாய் மிரட்டும் முரட்டுப் பெண்கள், மெல்லினங்களின் இடத்திலெல்லாம் வல்லினங்களால் நிரம்பிய‌ எழுத்துப்பிழைகளாய் எழுந்து நிற்க.... மெல்லினக் கவிதையாய், குதிரைவால் காற்றில் குதிக்க நளிணமாக விளையாடி வெற்றிபெறும் ஸ்டெஃபி கிராஃபை இன்னும் மறக்கவில்லை :)

இந்திராகாந்தி:

நான் பிறந்து மூன்றே மாதத்தில் கொன்றுவிட்டார்கள் இந்த இரும்புப் பெண்ணை....
இவரைப் பார்த்தறியவில்லை, கேட்டும் படித்தும்தான் அறிந்திருக்கிறேன்....
நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத தன்மையும்தான் "ஆண்மை" என்றுசொன்னால்.... இதுவரை இந்தியாவை ஆண்ட ஒரே "ஆண்" இந்திரா காந்தி அவர்கள் என்றுதான் சொல்வேன்....!!
"விளைவுகளை எண்ணி பயப்படாததுதான் சுத்தமான வீரம்" என்பதையும் இவர்களைப் படித்துதான் கற்றுக்கொண்டேன்.... அரசியல் அபிமானம் கடந்துதான் வியக்கிறேன் இந்த அயர்ன் லேடியை :)

அன்னை தெரஸா:

என்னது அன்னையின் பெயரில்லாமல் பிடித்த பெண்களின் பட்டியலா??
பெண்மையின் தனிச்சிறப்பு தாய்மை.. அந்த தாய்மையே பெண்மையை முற்றிலுமாய் ஆட்கொண்ட அதிசிய படைப்பு இந்த அன்னை!! என்னவென்று சொல்வது இந்தக் கிழவியை!! வாழ்த்தவா??? வணங்கக்கூடத் தகுதி வேண்டும்... வேண்டுமானால் வழிபடலாம் இந்த தெய்வத்தை...

"மனதில் உறுதி வேண்டும்" நந்தினி(!) :

இவள் ஒரு கற்பனைப் பெண்!! "மனதில் உறுதிவேண்டும்" படத்தில் சுகாசினியின் பாத்திரத்தைத் தான் சொல்கிறேன்!!
செவிலிகள் வணக்கத்துக்குரியவர்கள்... இந்தப் பாத்திரப் படைப்பு என்னைச் சின்ன வயதிலேயே பாதித்தது.....
ஒரு தொழிலின் மேன்மை முதன்முதலில் எனக்குப் பிடிபட்டது இந்தப் படத்தின் க்ளைமேக்ஸில் நந்தினி பேசும் வசனத்தில்தான்.... குடும்ப பாரத்தைப் போராடித் தாங்கும் பெண்கள், தினசரி போராட்டங்களில் ஈடுகொடுத்து முன்னேறும் பெண்கள், எத்தனையோ இன்னல்களுக்கு இடையிலும் தொழில் வாழ்வில் இன்முகம் காட்டும் பெண்கள் என அன்றாட வாழ்வில் காணும் எண்ணற்ற "கிரேட்" பெண்களின் ஒட்டுமொத்தப் பிரதிநிதியாய் எனக்கு நந்தினியை ரொம்பப் பிடிக்கும்!!

டாக்டர் ஷாலிணி:

மதுரைப் பதிவர்கள் ஏற்பாடுசெய்த "குழந்தைகள் மனநலம்: கருத்தரங்க"த்தில் கலந்துகொண்டதிலிருந்தே டாக்டர் ஷாலிணியின் மீது அளவற்றதொரு மரியாதை ஏற்பட்டது... ரொம்ப நல்லா பேசினாங்க‌... அதுபற்றிதான் ஏற்கெனவே எழுதிவிட்டேனே!! அதன்பின் "பெண்ணின் மறுபக்கம்" உள்ளிட்ட இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்கத் துவங்கினேன்....
'பெண்ணியப்' போர்வைகளால் தன்னைப் பொதிந்து கொள்ளாமல், "மனிதப் பெண்"ணின் போராட்டங்களை இயற்கை மற்றும் பரிணாமக் கூறுகளால் அணுகி ரொம்பவே யதார்த்தமாகத் தோழமையுடன் எடுத்துச் சொல்லும் பாங்கிற்கு சல்யூட்!

(அய்யோ இன்னும் நாலு இருக்கா!! வெரி ஸாரி எனக்கு சுருக்கமா எழுத்து வரல!!)

கிரண்பேடி:

இவரைப் பற்றி நான் சொல்லத் தனியாக எதுவும் இல்லை... நீங்கள் படித்தறிந்து வியந்து போற்றிய அதே கட்டுரைகளைப் படித்து என்னுடைய டாப் டென்னிலும் நீங்காத இடம் கொடுத்து வைத்திருப்பவன்தான் நானும்!!
வாழ்வற்ற கல்லறைத் தடமான, அதுவும் ஆசியாவிலேயே பெரிய சிறைச்சாலையான திகார் ஜெயிலின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவியேற்று ஆறே மாதத்தில் அந்த அவலபூமியை ஒரு பயிலரங்கம்போல் மாற்றிக் காட்டி, அதற்காகவே பிரத்யேகமாய் ராமன் மகஸேஸே விருதுவாங்கினார் கிரண்பேடி... ஓர் அதிரடி வீரமங்கை என்றபோதிலும் மங்காத தாயுள்ளம் இருந்ததால்தான் இந்த சாதனை சாத்தியமானது... ஓர் ஆண் அதிகாரிக்கு இது அவ்வளவு எளிதில் தோன்றாது என்பது என் தாழ்மையான கருத்து.....

மேதா பட்கர்:

இந்த அம்மா பற்றி என் நண்பன் கார்த்திகேயன் சொல்லி அறிந்தேன்...
அதன்பின் இவரைப் பற்றிப் படித்து வியந்தேன்.... ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் மகள்.. சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் சுதந்திரமாக..... நர்மதா நதி என்று கூகுளில் தேடினால் முதல் லிங்கில் இருந்தே மெதா பட்கரின் பெயர் கூறும்!! அந்த ஆற்றுப் படுகை மக்களுக்கு சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு தந்து, இன்னும்கூட போராடிவரும் மேதாபட்கர் தன்னலமற்ற ஒரு அறிவார்ந்த போராளி....

பி.சுசீலா

பெண்குரல் இனிமையானது என்பது தெரியும்... எவ்வளவு இனிமையானது என்று கேட்டால் பி.சுசிலாவின் குரலைத்தான் சொல்வேன்!! குழலோசையினும் மெல்லிதானது இந்தக் குயிலோசை!!
இவரின் குரலையும் தாண்டி, இந்தத் தலைமுறையின் இசை நிகழ்ச்சிகளிலும், பாராட்டு விழாக்களிலும் ஒரு தாய் போல இவர் காட்டும் ஏற்புடன் கூடிய‌ Gesture நெகிழவைக்கும்!!..... எனக்கு இவங்களை ரொம்பப் பிடிக்கும்... சின்ன வயசுல இவங்க பாட்டைப் பாடிதான் எங்க அம்மா என்னைத் தூங்கவைப்பாங்க.......

மேடம் க்யூரி:

"ரேடியம் கண்டுபிடித்தவர் மேடம் க்யூரி" என்பதைத் தவிர எனக்கு அவரைப் பற்றி வேறெதுவுமே ஆழமாகத் தெரியாது....
இயற்பியல், வேதியல் என ஒன்றுக்கு மேற்பட்ட அறிவியல்களில் நோபல் பரிசு பெற்ற ஒரே ஒருவர் இதுவரை உலகில் இவர்தான்...!!
இவர் வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்த்தேன் எனது டாப் டென்னில் வந்துவிட்டார்!!
கணவனும் மனைவியும் ஓர் ஆய்வுக்கூடத்தைப் பகிர்ந்துகொண்டு, ஒரே இலக்கை நோக்கித் திட்டமிட்டு உழைத்து... பாதியில் கணவன் ஒரு விபத்தில் திடீரென‌ மறைய, மனைவி தொடர்ந்து முயன்று ஆய்வில் வென்று உயரிய விருதாம் நோபல் பரிசு வெல்கிறாள்.... என்ன ஒரு ஒன்லைன் இவரின் வாழ்க்கைக் கதைக்கு... மேற்கொண்டு விரிவாக எனக்கு எதுவும் தெரியாது இவரைப் பற்றி..... இருப்பினும் அகமும் புறமுமாகிவிட்ட அந்த‌ ஆய்வுக்கூடத்தில் ஒரு மேசையில் கண்ணத்தில் கைவைத்து சோகமாய் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணாக என் மனதில் எப்படியோ பதிந்துவிட்ட மேரி க்யூரியை எனக்குப் பிடிக்கும் :)


நான் தொடர அழைப்பது....

ஜெர்ரி மாமா
ஸ்ரீ
கார்த்திகைப் பாண்டியன்
சின்ன அம்மிணி அக்கா
வெற்றி
கண்ணா
காவ்யா

இவர்களை ஏற்கெனவே யாரும் அழைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை!!




தேன் அக்காவுக்கு நன்றிகளுடன்,

கதவுகளை உடைப்பவர்கள் கண்களையா மூடிக்கொள்ளப் போகிறார்கள்??



இதுபோன்ற விஷயங்களையெல்லாம் எழுதுவதா?? படிப்பது கூட தேவையற்ற காலவிரயம்தான்.....
எங்கே விடுகிறார்கள்.... "உடனடியாக சன் நியூஸ் பார்க்கவும்" என்று குறுஞ்செய்தி வந்தது...
இதற்கு முன்பு எனக்கு இப்படிக் குறுஞ்செய்தி வந்தது கலைஞர் கைதுண்ட போதும், செப்டம்பர் 11 ட்வின் டவர் இடிபட்டபோதும் தான்.... ஏதோ நடக்கிறதோ என்று டிவியை ஆன் செய்தேன்..... அந்த‌ கண்றாவிதான் அரங்கேறிக் கொண்டிருந்தது....

குறுஞ்செய்தி அனுப்பியவனுக்கு வேறு யாரோ சன் நியூஸ் பார்க்குமாறு செய்தி அனுப்ப, என்னவென்றே பாக்காமல் நண்பர்கள் அனைவருக்கும் ஃபார்வோடு செய்திருக்கிறான் இந்த சமூக சேவகன்... அவனைச் சொல்வதா அல்லது நாளொன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் இலவசமாகத் தரும் அலைபேசி சேவையைச் சொல்வதா??

ஓர் அந்தரங்க வீடியோ பதிவெடுக்கப் பட்டுள்ளது.. அது எதற்கு பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பப் பட வேண்டும்... காவல்துறையின் விலாசங்கள் மக்களுக்குத் தெரிவதில்லையா??( காவிகளுக்கு இருக்கும் நம்பகத்தன்மை கூட‌ காக்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் அவலங்களின் ஆரம்பமோ??) அந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது... இன்னுமோர் ஆன்மிக வியாபாரியின் முகத்திரை கிழிந்துபோனது...... ஆராதித்த ஏமாளிக் கூட்டமே இன்று அவன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கியுள்ளது.... சரி... அவன் மேல் இதுவரை ஒரு வழக்கு பதிவாகி உள்ளதா? யார் வழக்கு பதிவு செய்வது? எந்த குற்றத்தின் அடிப்படையில்?? ஆக இரண்டு நாட்களாக, ஏதேதோ நடந்துகொண்டிருக்கிறது மீடியாவில், சட்டம் என்றும் நீதித்துறை என்றும் காவல்துறை என்றும் இருக்கிறவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?? மீடியாவுக்கும் மக்களுக்கும் இடையே சட்டத்திற்கு இடம் என்றுதான் ஏதேனும் இருக்கிறதா??

அவன், அவனது துறவற நெறிகளை மீறியிருக்கிறான்....சரி.. கூடவே மாட்டிக்கொண்டுள்ள அவனைவிடப் பிரபலமான அவள்???? அவன் அடுத்த சிலகாலம் கழித்து சில வெள்ளைத்தோல் பக்தசிகாமணிகளுடன் அமெரிக்காவில் ஆசிரமம் ஆரம்பிப்பான்..... மீண்டும் இவள்????

"கதவைத் திற காற்று வரட்டும்" என்று ஆன்மிகத் தொடர் எழுதவிட்டு அவனை ஆராதித்த குமுதம் ஆளுக்கு முந்தி "சாமியாரின் முகத்திரை கிழிக்கும் எக்ஸ்க்ளூஸிவ் வீடியோ" என்று இமெயில் அனுப்புகிறது... இத்தனை நாள் அவன் எழுத்தைப் பதிவுசெய்து அவனுக்குப் பெரும் அந்தஸ்து கொடுத்ததற்கு அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?? யார் கொடுப்பது??

இந்த வெட்கங்கெட்ட சம்பவங்கள் நமக்குப் புதிதல்லவே அல்ல.... ஆனால் சமீபகாலமாகவே மீடியாவின் அத்துமீறல்கள் அடக்குமுறையின்றித் தொடர்ந்துகொண்டே இருக்குமானால் தணிக்கைக் குழு, நீதித்துறை இவையெல்லாம் எதற்கு இருக்கவேண்டும்?? இழுத்து மூடிவிடலாமே..... எதை ஒளிபரப்புவது.. எதை விடுப்பது என்று எந்த வரையரையுமே கிடையாதா நம் நாட்டில்??... புரியவில்லை...நாளைக்கு ஒரு கொலையையும் கற்பழிப்பையும்கூட வீடியோ கொடுத்தால் ஒளிபரப்புவார்களா??

இந்த ஒரு ஸ்காண்டல் எத்தனை முக்கியச் செய்திகளை கவனங்களிலிருந்து இருட்டடிப்பு செய்திருக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துப் பார்க்கவும்....

வீரப்பன் செத்துப்போனதோடு  " நக்கீரன்" தன் நெற்றிக்கண்களைக் கதவுகளின் சாவித்துவாரங்களில்தான் விடாது பொருத்திவைத்திருக்கிறான் கல்லா கட்டுவதற்காக....

ஜுவி, ரிப்போர்ட்டர்களைத் தொட்டு நாளாகிவிட்டது, விகட குமுதங்களின் மீதும் மரியாதை போய்விட்டது...   வேறெந்தவொரு வெகுஜன‌ பத்திரிக்கையையும் தொடவே  விருப்பமற்றுப் போய்...  மேலும் சினிமா.. டிவி எல்லாம் வெறுத்துப்போய்.... அடப்பாவிகளா... கடைசியில் நம்மள துறவி (உண்மையான துறவின்னு தான் அர்த்தம்... மாத்திப் புரிஞ்சிக்கப் போறீங்க‌!!) யாக்கிடுவானுங்க போலயே....

எங்கே செல்லும் இந்தப் பாதை.......


எனக்கு சமூகத்தில் விடை தெரியாத கேள்விகளைதான் இங்கே கேட்டிருக்கிறேன்.... வேறெங்கு கேட்பது நான், என் வலைப்பூவை விட்டால்??  இருப்பினும்  சுத்தம் சுகாதாரம் கருதி..... இதை நானே அழித்துவிடுவேன் விரைவில்.....

சச்சினும் ரஹ்மானும்....!!






ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் முதலாவது  இரட்டை சதத்தைப் பார்த்து ரசித்தீர்களா!! :)

ஆஸ்காரையும் தாண்டி ரஹ்மான் கிராமியையும் வென்றதுவந்தது போல இருந்ததா!!!

நமது வாழ்வின் நாயகர்கள் அவர்கள் வாழ்வில் ஜெயிக்கும்போது ஏதோ நாமே ஜெயித்ததைப் போல் உணர்கிறோமே....  துள்ளிக் குதித்து ஆர்ப்பரிக்கிறோமே....இந்த உணர்வுக்கு.... ஒரு ரசிகனின் இந்த‌ மானசீக உறவிற்குப் பெயர்தான் என்ன!!

இன்றைக்கு சச்சின் ஹெல்மெட்டைக் கழற்றி இருகைகளையும் உயர்த்தி வானத்தைப் பார்த்த தருணத்தில் அவர் வீட்டில் என்னென்ன கொண்டாட்டங்கள் நடந்திருக்கும் என்பதை என் வீட்டிலேயே நான் பார்த்துக்கொண்டேன்!! :)

நூற்றைம்பதைக் கடந்தபின்னர் கொஞ்ச நேரத்திலேயே  முதுகை வளைத்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.... அவரின் முதுகுவலிதான் உலகப் பிரசித்தி பெற்றதாயிற்றே!! தசைப்பிடித்த இடத்தில் தன் க்ளவுஸ் அணிந்த கரங்களை மடக்கி எப்போதும்போல் அவர் குத்திக்கொள்ள..... ஆடியன்ஸ் தொடங்கி...நம்ம வீட்டு அம்மாவரைக்கும் "ஐயோ" வெனப் பதறுகிறார்கள் அவரது வலிக்காக!!! இதெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் "எனக்கு ஐ.ஜி ய நல்லாத் தெரியும்.. பட் அவருக்கென்னை தெரியவே தெரியாது!!" என்கிற விவேக்கின் காமெடியைப்போல்இல்லையா???!! :)

"இந்த இரட்டை சதத்தை, எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு மனதால் உடனிருந்த இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" 

என இன்றைய‌ ஆட்டம் முடிந்ததும் சொன்னாரே சச்சின் அதுதான் இதற்கெல்லாம் பதில்!!!

சாதனைகளை யெல்லாம் மீறிய சாதனையாய் இரட்டை சதமடித்துவிட்டு இன்று அமைதியாய் பரிசுகளையும் பாராட்டுகளையும் அள்ளிச்சென்ற‌ சச்சினும் சரி..... ஆஸ்காரையும், கிராமியையும் அலேக்காக அள்ளிக்கொண்டு அலட்டிக் கொள்ளாமல் அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து வந்து அடுத்த படத்துக்கு ட்யூன் போட்ட‌ ரஹ்மானும் சரி... அவர்கள் வாழ்வில் அவர்கள் உழைத்தார்கள்.... அவர்களே வென்றார்கள்...."அவ்வளவுதான்" என உடனே அடுத்தக் கட்டத்துக்கு ஆயத்தமாகி விடுகிறார்கள்!!!.... ஆனால் அந்த ஒவ்வொரு வெற்றியையும் அவர்களைவிட அதிகமாய் நாம் கொண்டாடி மகிழ்கின்றோமே....  நமது கனவுகளை நாம் அவர்கள் கண்களில் காண்பதாலா!! அல்லது அவர்களின் கனவுகளை நமது கண்களில் பொருத்திக்கொண்டு தூங்கச் செல்வதாலா!!

சத்தியமாக இது ஒரு நெகடிவ் பதிவல்ல ..... சச்சினும் ரஹ்மானும் என் வாழ்வின் ஆதர்ஷ நாயகர்கள்.... இருவரின் மெல்லிய குரல்கள்..... இணக்கமான உடல்மொழி..... வெற்றிகளைத் தொடர்ந்து எதிர்கொண்டும் மாறாத மேன்மை.....சர்ச்சைகளுக்கு சாதனைகளால் பதில் தரும் வீரம்.....வாழ்க்கையில் சிறிதும் அகலாத சீரியஸ்னஸ்..... சிறிதும் பிசகாத வார்த்தைகள்......தொழிலில் விட்டுக்கொடுக்காத சிம்ம‌த்தனம்..... அந்த கம்பீரம்..... தன்னம்பிக்கை..... இன்னும்கூட சொல்லிக்கொண்டே போவேன்...... ஏழு எட்டு வயதில் இவர்களைப் பார்த்து உயர்ந்த புருவங்கள்... இன்றும் உடலின் ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து நிற்கிறது இவர்களின் சிலிர்க்க வைக்கும் சாதனைகளுக்கு!!!

சச்சினையும் ரஹ்மானையும் அவர்களிடமிருக்கும் ஏதோவொன்று இருவரையும் எப்போதும் ஒன்றாகவே பார்த்து வியக்க வைக்கிறது என்னை!!!

எவ்வளவு உண்டாலும் இன்னும் இன்னும் இன்னும் வேண்டுமென்று.... அடங்காது பசித்துக் கிடக்கும் இந்த சிங்கங்களின் ரசிகன் என்பதையே பெருமிதமாக உணர்கிற அதே சமயம்...." வாழ்வில் எப்போதும் பசித்திரு!!" எனப் பெருங்குரலெடுத்து அதிரும் இவர்களின் கம்பீர கர்ஜனையையும் மனதுக்குள் ஆழ ஒலிப்பதிவு செய்துகொள்வோமாக!!

இந்தவொரு சாதனை உண்மையில் மகத்தானது... 36 வயதில் முழுதும் தானே ஓடி எடுத்த முத்தான ரன்கள் இவை...
சச்சினின் இருபது வருட கிரிக்கெட் வாழ்க்கை ஓர் இரட்டை சதத்தால் மீண்டும் புதிதாய்த் தொடங்குகிறது என்றுதான் சொல்ல வேண்டும்..... ரசிகர்கள் அனைவருக்கும் தன் சாதனையை அர்ப்பணித்த தலைவன் இருக்கிறான் இன்றும் அப்படியே!!! :)




ரஹ்மானின் பாடலால் சச்சினை வாழ்த்துவோம் "ஜெய் ஹோ!!!!"



அன்புடன்,

என்னது.....?? கிஸ் தி டம்மியா!!!




சமீபத்தில் என் தாய்வழி உறவினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பேசி மகிழ்ந்த ஒரு நன்னாளில் நாங்கள் எல்லாரும் சிரித்து மகிழ்ந்த ஒரு விஷயத்தைப் பதிவுலகில் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்..... :)

 தமிழர்கள் திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதால் தமிழ் படும் பாட்டைப் பற்றியது இந்த இடுகை...!!

என் அம்மாவுக்கு உடன்பிறந்த மூன்று தங்கைகளில் (என் அன்பு சித்திகள்) ஒரு சித்தி, எனக்கு இரண்டு வயது இருக்கும்போதே திருமணமாகி நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்துவிட்டார், என்னை ஏரோப்ளேன் பார்த்து ஏங்கவைத்துவிட்டு!! ..... அது ஆகிவிட்டது இருபத்துமூன்று வருடங்கள்.... :) சமீபத்தில் சித்தி தன் குடும்பத்துடன் தாய்வீடு வர ஏகக்குஷியில் எக்கச்சக்க அரட்டைக் கச்சேரிகள் அடித்து மகிழ்நதோம்..... 

சரி...விஷயத்துக்கு வருகிறேன்....

என் சித்தி பிள்ளைகளில் மூத்தவளுக்கு மட்டுமே தமிழ் சிறப்பாகத் தெரியும்..... மற்ற மூவருக்கும் கொன்ச்சம் கொன்ச்சம் தான் டாமில் டெரியும்!! :(

தமிழ் தெரிந்த என் தங்கை, சித்திக்கு சமையலறையில் உதவும்போது இருவரும் "தமிழ்"க் கதைப்பது வழக்கமாம்.... அன்றைக்கு ஒருநாள் ஏதோவொரு சாண்ட்விட்ச்சை செய்துகொண்டே, " இளைய நிலா பொழிகிறதே.." பாடல் பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்....கவிஞர் வைரமுத்துவின் எவர்கிரீன் வரிகளல்லவா அவை.... என் சித்தியும் வைரமுத்துவின் ரசிகையாதலால் அவர் ரசித்த வைர வரிகளையெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்திருக்கிறார்.... "டாமில் கொன்ச்சமாகத் தெரிந்த" இரண்டாமவள் கவிதைகளின் அர்த்தம் புரியாமல் அங்கு இந்த‌ இரண்டு தமிழ் ரொட்டிகளின் நடுவே சிக்கி சாண்ட்விட்சாகி நைய்ந்திருக்கிறாள் நெடுநேரமாக‌!! இவர்களோ அவள் கஷ்டம் புரியாமல் கவியரங்கம் நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்கள்.... 

போதாதற்கு ...... "வைரமுத்துவின் கவிதைகளை உனக்கு ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை அவர் சிறந்த கவிஞர்..." என்கிற ரீதியில் மூத்தவள் தன் தங்கையை வெறுப்பேற்றியிருக்கிறாள்.... 

அதற்கு அவளோ வெறுப்பில்.... " உங்க வைரமுத்து சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் அவர் பெயரைப் பாருங்கள்... தி மோஸ்ட் ஃபன்னியஸ்ட் நேம் ஆன் எர்த்.... ஹி ஹி ஹி...." (The most funniest name on earth)என்று சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறாள்...!!!

"அவரு பேருக்கென்ன....அழகுபெத்த பேரு.... வைரம் + முத்து.... இதுல என்ன ஃபன் இருக்கு????" 

ரொம்பவெல்லாம் யோசித்து பன் ஆகவேண்டாம்.... இதற்கு என் "டாமில்" தங்கை கொடுத்த விளக்கம்....

"அவரு பேரு என்ன‌ .... "வயிரமுத்து"... வயிரை எதுக்கு முத்தணும்??... வொய் டூ கிஸ் தி  டம்மி??!! ஹி ஹி.... ஃபன்னி நேம்!!"

ஆகவே நல்லா கேட்டுக்குங்க வலைத்தமிழ் மக்களே...... வைரமுத்துவின் "டாமில்" அர்த்தம் கிஸ் தி டம்மி யாம்!!! :))) 

வைரமுத்துவின் கவிதையை ரசிக்கும் நேரத்தில் இந்த செந்தமிழ்த் தேன்மொழியாளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திருக்கலாம் என் சித்தி :)))))

பிள்ளைங்களுக்குத் தமிழ் சொல்லிக்குடுங்கப்பா!!!

அன்புடன்,

இது விவசாய நாடல்லவா....!!



இந்தக் காணொளி, சில மாதங்களுக்குமுன் நமது அரசு பேருந்து ஒன்றில் பயணாமாகையில் மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே கண்ணில் பட்ட ஒரு காட்சி! (மொபைலை நிற்க வைத்தாற்போல் படம்பிடித்து உங்கள் கழுத்தை சாய்த்துப் பார்க்கவைத்துத் துன்புறுத்திய மோசமான கேமராமேன் அடியேன்தான்!)

சண்டைபோட்டு இடம்பிடித்த பேருந்து ஜன்னலோரம்  நான் கண்ட காட்சியின் பின்னணியை விவரித்து விடுகிறேன்...

புஷ்பேக்... செமி ஸ்லீப்பர்.. வால்வோ டீலக்ஸ் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத நம்மூரு சாதாரண‌ அரசுபேருந்து ஒன்றில் (வத்தலகுண்டு டூ  மதுரை) வந்துகொண்டிருந்தேன்...  இந்தவருடம் வடகிழக்குப் பருவமழை பொய்க்காது தினமும் மாரி பொழிந்துவந்ததே அந்த மழைக்காலத்தின் ஒரு மதிய நேரமது..... வாடிப்பட்டியைத் தொட்டு முடியும் ஹைவே ஒன்று இருக்கிறதல்லவா.... அதில் ஏறுமுன் எதிர்கொள்ளும் ஒரு ரயில்வே லெவல் க்ராஸில் எங்கள் வண்டி காத்திருக்க..... பைபாஸில் இருந்து ஊருக்குப் பிரியும் சாலையில் காற்றுள்ள திசையில் நெல் தூற்றிக்கொண்டிருந்தார்கள் விவசாயிகள்...

வீடியோவில் தெரியும் அந்த அக்கா... அவரருகே இருக்கும் அந்த காவிநிற பக்கெட்டில் நெற்களை இட்டுவைத்து, அழகாகக் காற்றடிக்கும் திசைக்கேற்ப‌ லாவகமாய்ப் பிடித்தவாறு நெற்பயிரை சிதற்றிக் கொண்டிருந்தார்... உமியெல்லாம் காற்றில் பறக்கும் விதமாக‌...!!
.
காற்றின் திசைமறித்து எங்கள் பேருந்து நின்றமையால்... அந்தம்மா விசிறிவிடும் உமித்துகள்களெல்லாம் ஜன்னல் வழியே எங்கள்மேல் விழத்துவங்கியது..... வேகவேகமாக ஜன்னல்களை மூடிக்கொண்டோம்.....

"யம்மா... யம்மா.... நாங்க போனப்புறம் புடைங்க... பஸ்ஸுக்குள்ள நுழையுதுல்ல.."

எனக் குரல் கிளம்பியது..... சகோதரியோ பதில் சொல்லவெல்லாம் மெனக்கிடாமல், உமித்துகள்களைக் காற்றில் துமிப்பதை நிறுத்த முனையாமல்....அலட்டிக்கொள்ளாதவராய், பக்கெட்டிலிருந்து (காணொளியில் அவர் கையிலிருக்கும்) சொளவிற்குக் கைமாற்றிப் புடைக்கத் துவங்கினார்!!

அப்போதும் எங்கள் பஸ்ஸுக்குள் துகள்கள் பரவ... ஒரு கூட்டம் அந்தம்மாவை பேருந்து கடந்து செல்லும்வரை வேலையை நிறுத்திவைக்குமாறு குரல் உயர்த்தியது.... அதற்கு வண்டிக்குள்ளிருந்தே எழுந்த எதிர்ப்புக் குரல்களால்தான்  புரிந்துகொண்டேன் இந்தியா ஒரு விவசாய நாடு என்று!!

கிராமத்தை பாரதிராஜா சினிமாவில் பர்த்தறிந்த என்போன்றோருக்கு நாங்கள்தான் அவரது வேலைக்கு இடையூராக நின்றுகொண்டிருக்கிறோம் என்பது புரிந்திருக்கவில்லை,  பேருந்துக்குள் அமர்ந்திருக்கும் 'மண்ணின் மைந்தர்கள்' அந்தப் பெண்ணின் 'வொர்க் ப்ரஷரை' நேட்டிவிட்டியோடு எடுத்தியம்பும்வரை!!

காணொளியில் முடிந்தவரை உரையாடலைப் பதிவுசெய்ய முற்பட்டிருக்கிறேன்....!

" வண்டி போனப்புறம் புடைங்கம்மா யம்மா....."

" வீட்டுல போய்ப் புடைக்க வேண்டியதுதானே.." (யாரிந்த முதலமைச்சராகும் தகுதியுடைய அறிவாளி என்று தெரியவில்லை!!)

ப்ஸ்ஸிக்குள்ளிருந்தே கிளம்பிய பிரதிவாதத்தைப் பாருங்கள்...... :)

" யய்யா.. மழைக்கு முன்னாடி அவுக சோலிய முடிக்கணும்யா... களத்த விட்டுப்புட்டு வீட்டுக்குப் போயா தூத்துவாக??..... செத்த சன்னல மூடிக்குங்க ... ரயிலு போய்க்கிடட்டும்...."

" நாங்களும் வெவசாயம் செய்யுறவகதேன்.... செத்தப் பொறுத்துங்கப்பூ... யம்மா குறவுத் தூரம் தள்ளிப்போய் புடைக்கப் பாரும்மா.... நாங்களும் இன்னும் கொள்ளத் தொலவு போகணுமில்லே...."

ஆகா.... மண்மணம் கமழ ஓர் உண்மை காட்சியானது கண்முன்!!

பேக்ரவுண்டில் பழைய தூர்தர்ஷனின் "வயலும் வாழ்வும்" திருக்குறள் பாட்டு எம்.எஸ்.வி யின் குரலில் ஒலித்தது மனதுக்குள் எனக்கு!! (ஞாபகம் இருக்குதா??!!)

" சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
  உழந்தும் உழவே தலை"

பொருள்:  உலகம் பலதொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கிறது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும்
 ஏர்த்தொழிலே சிறந்த்து!!

அன்புடன்,

ஃபெவிகால் விளம்பரங்கள்...




பள்ளிக்கூட நாடகம் ஒன்றில் குட்டிமீசை ஒன்றை ஒட்டிக்கொண்டு வாள்வீசும் சிறுமி... அதே மீசையோடே படித்து... மீசைக்காரியாய் வாழ்க்கைப்பட்டு... அதே மீசையுடன் தலைசீவி..கிழவியாகி செத்துப்போய்... மீண்டும் அதே மருத்துவமனையில் அதே ஒட்டுமீசையுடன் பிறக்கும் (!)
 ஃபெவிகாலின் விளம்பரப் படத்தை ரசித்தீர்களா!! :))



இதுமட்டுமல்ல... ஃபெவிகாலின் விளம்பரங்கள் எல்லாமே சுவாரஸ்யமானவைதான்!!

கோழிமுட்டைகளை வரிசையாக உடைத்து உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருப்பார் ஒரு பெரியவர்... ஒரு முட்டை மட்டும் ஓங்கியடுத்தும் உடையாது சுத்தியால் அடித்தும் தப்பித்து ஓடும் முட்டை இடித்து குடத்தில் ஓட்டை விழுந்து நீர் ஒழுகும் (என்னா வில்லத்தனம்!!)..... அதிசியத்தில் அண்ணார்ந்து பார்த்தால் ஒரு ஃபெவிகால் டப்பாவின் மேல் தீணியைக்க் கொறித்துக் கொண்டிருக்கும் கோழி...!!



ஒரு வண்டியில் ஓர் ஊரே ஒட்டிக்கொண்டு பயணிக்கும் பின்னால் பார்த்தால் அது ஃபெவிகால் வண்டி!! இதெல்லாம் உச்சக்கட்ட சேட்டை!!



எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த ஃபெவிகால் விளம்பரப்படம் இந்த ராஜஸ்தானி படம்தான்!! ஒருமுறை ஏதோ மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று இது ஒளிபரப்பப்பட் நானும் என் நண்பர்களும் தரையில் உருண்டு சிரித்தோம்!! கடைசியில் 'ஒட்டிக்கொள்ளும்' சிறுவனின் உடல்மொழி.. ஹாஹாஹா...



கேத்ரினா கைஃப் தோன்றும் இதுவும் செம்ம சேட்டையான கற்பனை...



இன்னும் ஒன்று...



இன்னும்கூட எத்தனையோ விளம்பரப்படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள் இதே "ஸ்டிக்கி" தீமிற்காக!!
ஒரே ஒரு தீம் ஐ வைத்துக்கொண்டு எவ்வளவு சிரிக்க வைக்கிறாய்ங்க!! எல்லாமே ஆரோக்யமான கற்பனைகள்!!

ஃபெவிகால் பற்றி யோசித்தபோது... "ஒட்டு" உலகின் ஒரே ராஜா பிடிலைட் நிறுவனத்தின் ஃபெவிகால்தான்....
யாராவது கடையில் சென்று, " ஒரு பாக்கெட் 'அதெஸிவ்' கொடுங்க" என்று எங்காவது இந்தியாவில் கேட்டிருப்பார்களா?? நேரடியாக "ஃபெவிகால்" என்று ப்ராண்ட் நேமைத் தான் கேட்போம்!! அந்தளவுக்குப் பொருளின் பெயரை மறந்து ப்ராண்ட் நேமே, ப்ராடக்ட் நேமாகிப் போயிருக்கிறது!! (இதேபோல் இன்னொரு உதாரணம் "டால்டா" என்று அழைக்கப்படும் வணஸ்பதி!!)


ஒருவேளை.. இந்த சுதந்திரம்தான் ஃபெவிகாலின் விளம்பரங்களைத் தனித்துவமான‌ அழகான கற்பனைகளாக வழங்க வழிவிடுகிறதோ!!


ஏனெனில் நமது விளம்பரங்கள், போட்டி என்கிற பெயரில் அடுததடுத்த ப்ராண்ட்களுடன் தங்களை அப்பட்டமாக கம்பேர் செய்துகொண்டேதான், பாதிக்குமேல் தரமிழந்து போகின்றன!!

எனக்கு அல்சரைக்காட்டிலும் அதிகமாய் வயிற்றெரிச்சலைக் கொட்டுக்கொள்ளும் விளம்பரம் "ஃபேர் அன்டு லவ்லி" விளம்பரம்தான்!! அவர்களின் எல்லா விளம்பரங்களிலும் ஒரு சப்பை ஃபிகர் (மன்னிக்கவும்)  திறமைகளோடு கவனிப்பற்றுக் கிடப்பாள் அவளுடைய மானங்கெட்ட அப்பனோ அல்லது வீணாப்போன தோழியோ ஒரு "ஃபேர் அண்டு லவ்லி" ட்யூபைக் கையில் கொடுக்க, அடுத்த ஏழே நாட்களில் அவள் சூப்பர் ஃபிகராகிவிடுவாள் அவளை எல்லாரும் சைட் அடிக்க அவள் குடும்பமே பூரித்துப் போகும்!!

"சைண்ட் கோபைன்" (Saint-Gobain Glasses) கண்ணாடிகளின் விளம்பரங்களும் கைதட்டி விசிலடிக்கவைத்த‌ ரகங்கள்....

மேலும் பலப்பல அழகான கற்பனைகளால் மின்னும் குட்டிக் குட்டி விளம்பரப் படங்கள் யூ டியூப் எங்கிலும் கொட்டிக் கிடக்கின்றன... பார்த்து ரசிக்கலாம்.... :)

ஐம்பது வருட விற்பனை சாம்பியனாக இருப்பதாகத் தன் லேட்டஸ்ட் விளம்பரத்தில் பெருமையுடன் அறிவிக்கும் பிடிலைட்டின் "ஃபெவிகாலு"க்கு வாழ்த்துக்கள்!!!!


மகிழ்வுடன்,

இது சேவாக் ஸ்டைல் :-)



"ஆறடி உயரம்.... டயர்டே ஆக மாட்டான்.. பந்து எங்க குத்தும் எப்படி எகிறும் எதுவுமே தெரியாது.... 140 கிமீக்கு அஸால்டா பவுல் பண்ணுவான்.... பிட்சு வேற சரியல்ல... இந்த மேட்ச் ஜெயிச்சே ஆகணும்..... ரெண்டு நாளைக்கு பேட்டிங் பண்ணனும் ...தோத்துட்டா நம்பர் ஒன் ஸ்பாட் போயிடும்... கேர்ஃபுள்...கேர்ஃபுள்...."

இப்படி எச்சக்கச்சமாய் பில்டப்புகள் கொடுத்துக்கொண்டே போனாலும்  அலட்சியமாய்  இடைமறித்து "ஹலோ....சப்ப மேட்டர்..." என்று ஸ்டீய்னின் பந்தில் ஒரு பவுண்டரியை சுழற்றினால் அவர்தான் வீரேந்திர சேவாக்!!!

டெல்லி தந்த டேர்டெவில்.... கல்லியில் சிக்காத ஓப்பனிங் புயல்... (விகடன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன் அவ்ளோதான்!!)

சச்சினின் முதுகுவலி ஒட்டுமொத்த தேசத்துக்கே தலைவலியாக இருந்த சமயம்.... அதிரடி சச்சின் இல்லாமல் ஓபனிங் இறங்கிய கங்குலியைப் பார்க்கவே பாவமாய் இருந்தது...... திடீரென உடன் இறங்கிய சேவக், ஏதோ அதிரடி காட்சிகளில் சச்சினுக்கு "டூப்" போடுபவர் போல் கிட்டத்தட்ட அதே பாவனையில் அவரை விட அதிவேகமாக பவுலர்களைப் பிரித்து மேய்ந்து 60+ பந்துகளில் சதம் தொட்டுக் காட்டினார்!!

ஆரம்பத்தில் சச்சினின் ரெப்ளிகாவாகவே பார்க்கப்பட்ட சேவக் பின்னாளில் கிரிக்கெட் பேட்டை வைத்து பிட்சில் டென்னிஸ் எல்லாம் ஆடிக்காட்டினார்..... எம் ஆர் எஃப் பேட்டில் மட்டுமே வாங்கிப் பழக்கப்பட்ட மரண அடியை புதியதொரு ஹீரோ ஹோண்டா பேட் வழங்கி வறுத்தெடுக்கத் துவங்கியது....

" இந்தியாவின் கேப்டனாகும் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்..." என்று,  இந்திய அணியில் ஜொலிக்க ஆரம்பித்திருந்த காலத்திலேயே, முத்துதிர்த்து சர்ச்சையைக் கிளப்பியவர்... சமீபத்தில் தோணிக்குப் பதிலாக வங்கதேசத்தொடரில் ஒரு டெஸ்ட்டுக்குத் தலைமை தாங்கியபோது "வங்கதேசம் பலவீனமான அணி அவர்களால் இந்தியாவின் இருபது விக்கெட்டுகளை வீழ்த்தவியலாது எனவே தொடரை வெல்வது எளிது" என்று குட்டையைக் குழப்பினார்!!

பொதுவாக 99க்கும் 98க்கும் ஒரு ரன்தான் வித்தியாசம் ஆனால் 100க்கும் 99க்கும் ஒரு மைல்கல்லின் வித்தியாசம் உண்டு என்பது பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டின் நியதி!! நம்ம ஆளோ... 90க்குள் நுழைந்துவிட்டாலே எதிரணி மாற்றியமைக்கும் ஃபீல்டிங் வியூகங்களுக்கும், ஒவ்வொரு ரன்னுக்கும் ஆர்ப்பரிக்கும் ஆடியன்ஸ் அலறலுக்கும் எரிச்சல் பட்டு சனியன் பிடித்த சதத்தை சீக்கிரம் கடக்க்கிறேன் பார் என்று சிக்ஸருக்காக க்ரீஸைவிட்டு இறங்கி வரும் ஒரு தனி ரகமான ஆள்!!

எனக்கு சேவக்கைப் பிடிக்கும்.... முற்குறிப்பிட்ட அவரின் பேச்சுக்கள் "திமிர்" என்று வர்ணிக்கப்பட்ட போது கூட வங்கதேச அணி தற்போதைய  இந்திய அணியுடன் பார்க்கையில் ஒரு வலுவிழந்த அணி என்பது நிதர்சனம் தானே!!
கேப்டனாகும் ஆசையும் யாருக்குத்தான் இருக்காது!! அதை முன்கூட்டியே அறிவிப்பதில் "தவறு" என்று என்ன இருக்கிறது??

மேலும் பொதுவாக இப்படியெல்லாம் பேசுவது நம்மேல் நாமே சுமையைக் கூட்டிக்கொள்வது என்பதுதான் உண்மை!!
கேப்டனாகும் தருணத்திற்குக் காத்திருப்பதாக வந்த புதிதிலேயே பரபரப்பைக் கிளப்பிவிட்டு அடுத்த சீரீஸிலேயே அணியிலிருந்து நீக்கப் பட்டால் காலாகாலத்துக்கும் "டம்மி பீஸா"க நேரிடும் என்பதை அறிந்திருக்க மாட்டாரா?

 "வங்கதேசத்தால் இருபது விக்கெட்டுகளை  வீழ்த்த முடியாது" என்று வம்பிழுத்த அடுத்த நாளே இந்தியாவின் பத்து விக்கெட்டுகளை மளமள வென வீழ்த்திக் காட்டியது வங்கதேசம்..... அப்போதும் தன் முரட்டு பாவனையை மறைத்துக்கொள்ள முனையவில்லை சேவாக் .. அன்றைய ப்ரஸ்மீட்டிற்கு இணக்கமாக சச்சினை அனுப்பிவைத்தது அணி!! (சச்சின் அழகாக சமாளித்தது அவர் ஸ்டைல்!) அடுத்த இன்னிங்ஸில் சுதாரித்துக் கலக்கியது இந்தியா.. சேவக்கும் பேட்டிங்கில் கலக்கி கம்பீரமான கேப்டனாக நடந்து வந்தார் :)

பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டித் தப்பிப்பிழைப்பதைப் பரிந்துரைக்கும் இன்றைய அவசர உலகில் புலிவாலை விரும்பிப் பிடிக்கும் சேவக்குகளையும் உலகம் ரசிக்கத் தவறுவதில்லை...!! They're Entertainers!!

 I mean.....There's no harm to try doing a Sehwag in our lives, at times, when there's room.... ;)

ப்ரியமுடன்,

குழந்தைகள் மனநலம் : மதுரை கருத்தரங்கம்

அந்த அருமையான மாலை வேளையில் நம் பதிவுலக நண்பர்களுடன் நானும் இருந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!!

ஒருவேளை, அன்று இரவு நான் சென்னைக்குப் போக வேண்டியதைக் காரணமாகக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் சென்றிருக்கலாம்.... அதன்பின் கருத்தரங்கைப் பற்றிய நண்பர்களின் இடுகைகளில் படித்துவிட்டு வரமுடியாமல் போனதற்காக‌ தூர்தர்ஷன் போல "வருந்துகிறேன்" என்று ஸ்லைடு போட்டிருக்கலாம்... ஆனால் அப்படி நேர்ந்திருந்தால் எத்தனை அற்புதமான ஓர் அனுபவத்தை இழந்திருப்பேன் என்று கலந்துகொண்டபின்புதான் புரிந்துகொண்டேன்!! அப்படிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டே ஆகவேண்டும், எனவே ஏற்கெனவே கருத்தரங்கு தொடர்பான நண்பர்களின்  இடுகைகளைப் படித்துவிட்டேன் என்றாலும் இங்கு நானும் ஒரு பார்வையாளனாகப் பதிய விழைகிறேன்....

அமெரிக்கன் கல்லூரி செமினார் ஹால்... கல்லூரி வாழ்வின் பல ஃப்ளாஷ்பேக்குகளைக் கிளப்பியது..... முதன்முதலில் ஒரு சின்ன உரையாற்ற வாய்ப்பளித்த இடம் எனக்கு!!.... நான் அந்தக் கோயிலில்தானே படித்தேன்!! ஓகே நோ   ஃப்ளாஷ்பேக்ஸ்......

கருத்தரங்கைப் பொறுத்தவரை  நான் செய்த ஓர் உருப்படியான காரியம் ,"குழந்தைகள் மனநலம்"... சிறுவர் சிறுமிகளின் மீது தொடுக்கப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு விழிப்புணர்வு என்ற‌ தலைப்பை அறிந்ததுமே, என் அம்மாவை என்னுடன் அழைத்து சென்றதுதான்!! குழந்தைகளின் பரிட்சை மார்க்குகளைவிட அவர்களின் மனநலத்தில் அதிக அக்கறை கொண்டு முப்பது வருடம் குழந்தைகள் உலகில் ஆசிரியையாகப் பணியாற்றியர் அல்லவா... அதனால் தலைப்பைச் சொன்னவுடன் மிகுந்த ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டார்...மிகுதியான‌ மனநிறைவுடன் இருவரும் வீடு திரும்பினோம்!!

டாக்டர் ஷாலினி....

பொதுவாகஓர் இதய சிகிச்சை நிபுணரோ அல்லது  ஒரு மூளை நரம்பியல் நிபுணரோ வந்து மனித உடலைப் பற்றியும், உள்ளுறுப்புகளையும் பற்றி ஓர் உரையாற்றுகிறார் எனில் அதற்கான வரவேற்பும் சரி... தயாரிப்பும் சரி முற்றிலும் "ஒன்வே ட்ராஃபிக்" காகத்தான்  இருக்கும்.... ஏனெனில் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பற்றியெல்லாம் ஹார்ட் அட்டாக்கோ, நியூரோ ப்ராப்ளமோ வராமல் நாம் கூகுளில் கூடத் தேட‌மாட்டோம்...

ஆனால் "மனநலம்" பற்றி இன்றைய‌ காலகட்டத்தில் கருத்தரங்கம் வழங்குவது நிச்சியம் சவாலனது... ஏனெனில் ஒரு சிறுகதையில்கூட‌ "சைக்கலாஜிக்கல் டச்" வைக்கும் காலமிது....
டான்ஸ் ஷோவில்கூட "கெமிஸ்ட்ரி"க்குதானே  பத்து மார்க் கிடைக்குது!!!
 கனவுல காளமாடு முட்டுச்சுன்னு சொன்னால்,  என் நண்பன் , "மச்சான் இதுக்கு ஃப்ராய்டு என்ன விளக்கம் சொல்றாருன்னா..." என்று தாடையைச் சொறிய ஆரம்பிக்கிறான்......அந்த  அளவுக்கு "மனநலம்" சார்ந்த கருத்துகளும், புத்தகங்களும், சொற்பொழிவுகளும் மலிந்துகிடக்கின்றன...

சீரியல் ரேப்பிஸ்ட் ஒருத்தன் போலீஸிடம் சிக்கினால் நம்ம "ஜூவி", "ரிப்போர்ட்ட"ருக்கெல்லாம் ஏக குஷியாகி வக்கிரம் சொட்ட வர்ணித்துவிட்டு டாக்டர். நாராயணரெட்டியிடம் கருத்துகேட்டு அவற்றை "மனவியல் ரீதியாக‌"  அணுகும் (கொடுமடா சாமி!!) அன்றாடக் கூத்துகளுக்கு மத்தியில்.....

கல்வியாளர்கள் ,இலக்கிய ஆர்வலர்கள, பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் முன் ஒரு தேர்ந்த "உளவியல் மருத்துவராக" டாக்டர். ஷாலினி, அன்றாட வாழ்வின் உளவியல் நிதர்சனங்களுக்கு சாதாரண உடற்கூறு சார்ந்த காரணங்களில் தொடங்கி... ராமாயணம், மகாபாரதம் என்று இதிகாசம்வரைதொட்டு விளக்கி எங்களையெல்லாம் கட்டிப்போட்டு  மனித மனத்தின் படம் வரைந்து பாகம் குறித்த பாங்கிற்கு ரசிகர் மன்றமே வைக்கலாம்!!

"குட் டச், பேட் டச்" என்று பேசத் துவங்கியதுமே "எங்களைப் (மனநல மருத்துவர்கள்) பொறுத்தவரை எதுவுமே குட் என்றும் பேட் என்றும் கிடையாது என்ற டாக்டரின் துவக்கமே "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்று திருக்குறள் சொன்னது!!

குழந்தைகள் என்று துவங்கி... மனித ஆண் மற்றும் மனிதப் பெண் என்று பிரித்து ... அவர்களின் தொடு உணர்வு சார்ந்த சைக்காலிஜிகளையெல்லாம் வெள்ளிடை மலையாகத் தெளிவுபடுத்தி.... விலங்குகளிட‌மிருந்து பரிணாம வளர்ச்சியினால் பிரிந்து வந்த மனிதப் பெண்  தன் உடல், தோல், உரோமங்கள் முதலியவைகளில் இயற்கைக்கு மாறாகக் கண்டிருக்கும் பரிணாம மாற்றங்கள்.... அதனால் அவளுக்கு ஏற்படும் ஸ்பரிசம் உள்ளிட்ட  விளைவுகள்..... அதன்மீதான கலாசாரப் பார்வைகள் மற்றும் அறிவியல் உண்மைகள் என்று விரிந்துகொண்டே சென்ற கான்செப்டை உளவியல் கூறுகளாக உள்ளடக்கி அன்றாடம் அவர் சந்திக்கின்ற‌, சிகிச்சை அளிக்கிற‌ பொதுமக்களின், அனுபவங்களை மேற்கோள்காட்டி டாக்டர். ஷாலினி அவர்கள் விளக்கியது, நிச்சியம் அவரின் துறை சார்ந்த மற்ற நிபுணர்களுக்குமே கூட சாத்தியமாவது சந்தேகமே!! விஷயங்கள் தெரிந்தாலும் விளக்கிச் சொல்ல வேண்டுமே..... கேட்போர் அனைவருக்கும் விளங்க வைக்க வேண்டுமே!!!

Hats off to you ma'am!!

Dr.  ஷாலினி சொன்ன விஷயங்கள் அதே ஆழத்தோடு நம் சமுதாயத்திற்குப் போய்ச்சேர்வது... குறிப்பாக நம் பெண்கள் சமுதாயத்தைச் சென்றடைவது அவசியம்... மொத்தக் கருத்தரங்கமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது... நிச்சியம் அது இன்னும் பலரை சென்றடையும் என்று நம்புகிறேன் மேலும் தூரத்தைப் பொருட்படுத்தாது "ஒரு சக பதிவராகவே என்னிடம் கலந்துரையாடுங்கள்" என்று ரொம்பவே தோழமையாக முன்வந்து தன் அழகான, ஆழமான உரையை வழங்கிய டாக்டரே தன் எழுத்துக்களாலும், தொலைக்காட்சி மற்றும் வேறு மீடியாக்களின் வழியாகவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வைத் தொடர்ந்து வழங்குவார் என்று கண்டிப்பாக நம்பலாம்.... என்ன... நம் மக்கள் கிசுகிசுக்களைப் படிக்கும் ஆர்வத்தையும், ரெக்கார்ட் டான்ஸ் என்று ஒருகாலத்தில் அவமதிக்கப்பட்ட ஆட்டத்திற்கு இன்று மூன்று பேர் உட்கார்ந்து மார்க் போடும் நிகழ்ச்சிகளில் எல்லாம் காட்டும் ஈடுபாட்டை இதுபோன்ற ஆரோக்யமான எழுத்துகளைப் படிப்பதிலும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதிலும் காட்ட வேண்டும், யாருக்காகவும் அல்ல.... பேசுற பாஷை முழுசா பிடிபடாத.. தன்னோட உறுப்புகளுக்கு தனக்கே பெயர் தெரியாத உங்க‌ வீட்டு பிஞ்சுகளுக்காக...!!

குழந்தைகளுக்கு அவர்களின் உறுப்புகளின் பெயர்களை எப்போது சொல்லித்தர வேண்டுமோ அப்போதே உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்கும் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும்... விரசமான பெயர்களாக‌ அவற்றை அவர்கள் அறியாவண்ணம் உறுப்புகளுக்கு ஆங்கிலப் பெயரைச் செல்லிக் கொடுக்கலாம்...

குழந்தைகள் சில சமயங்களில் ப்ரைவேட் உறுப்புகள் மற்றும் ஆண் பெண் உடல் வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் குழந்தைத்தனமாக விளையாடும் சில வில்லங்கமான விளையாட்டுகளை விளையாட எத்தணிக்கும் சமயங்களில் வன்மையாகக் கண்டித்து அதன் ஆர்வத்தை மேலும் தூண்டாமல்..... குழந்தைகள் தனியாக விளையாடும்போது பெற்றோர்களும் இணைந்து விளையாடுவதுபோல் கண்காணிக்கலாம்....

இவையெல்லாம் டாக்டர் சொன்னபோது எளிமையாகத் தென்பட்டாலும், எண்ணிப் பார்க்கையில் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துபோய்க் கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சென்ஸிடிவான விஷயங்களாகக் கவனிக்கப் பட வேண்டியவைகளாகவே தோன்றியது....

பெண்களுக்கு டிஃபென்ஸ் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதற்கு அப்படியே உல்டாவாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்று அவளை நம் கலாச்சாரம் தயார் படுத்தும் எதிர்மறையையும் கம்பீரமாகத் தெளிவு படுத்தினார்.....

குழந்தைகளுக்கு எதிராகப்போய் ஏனிது போன்ற வக்கிரங்கள் சில ஆண்களால் ஏற்படுகிறது?? என்னும் கேள்வியை அனைவருமே கேட்க மறந்திட... அவராகவே அந்தக் கேள்வியை எழுப்பி அதன் பின்னால் அமிழ்ந்துள்ள சைக்காலஜியை விளக்கினார்.... ஆண்கள் பொதுவாகவே குழந்தை முகமுள்ள பெண்களால் கவரப்படுவது என்னும்  இயல்புதான் இந்த அநீதிகளுக்கு ஆரம்பப்புள்ளியாக‌ அமைந்துவிடுகிறது என்று சிம்பிளாக சொன்னார் ஒரு மருத்துவராக :)

எல்லாவற்றுக்கும் மேல் ஒரு திறமான Root cause Analysஸாக‌... இதுமாதிரியான குற்றங்களுக்குக் கூட அதைப் புரிபவர்களைவிட  இந்தக் குற்றங்களுக்குக் காரணமான பின்னணியாக அமைகிற சில விஷயங்களைப் பக்குவமாக அடிக்கோடிட்டுக் காட்டியது அற்புதம்....

அதாவது ஆரோக்யமான இல்லறம் அமைந்தாலே இதுபோன்ற மிருகத்தனங்கள் பெரும்பாலும் தலைதூக்குவதில்லை.... என்று குழந்தைகள் மனநலத்தைப் பாதுகாக்க ப்ராக்டிகலாக ஏராளமான யோசனைகளை வழங்கியதோடு,  இதனை சமுதாயத்திலுருந்தே களையெடுக்க அடல்ட்களின் மனநலத்தின் அத்தியாவசியத்தைக் சுட்டிக்காட்டி முடித்து நிகழ்ச்சிக்கு ஒரு முழுமையைக் கொடுத்து முடித்துவைத்தார்!!

மனதார சொல்கிறேன் ஒரு பிரஜையாக.... டாக்டர். ஷாலினியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் :)

இந்த நிகழ்ச்சி தொடர்பான இடுகையில் நண்பர் கார்த்திகை பாண்டியன் நாமும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உந்துதலில் சாத்தியமான நிகழ்வாக இதைக் குறிப்பிட்டிருந்தார்... நம் பதிவர்கள் சாதித்திருக்கும் ஓர் அரும்காரியமாக இது நடந்தேறியது என்று உரக்கவே கூறலாம் மார்தட்டி.....

வெறும் பார்வையாளனாக வந்து கலந்துகொண்டுவிட்டு முதல் ஆளாகக் கிளம்பிச் சென்றுவிட்டேன்.... கைக்கெட்டும் தூரத்தில் உன்னதமான ஒரு முயற்சி நடந்துகொண்டிருகுக்கும்போது அதில் பங்கெடுக்காது போனதற்காகத் தலைகுனிகிறேன்.... அடுத்தமுறை இதுபோன்ற முயற்சிகளில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என்று இப்போது முகமறிந்த நண்பர்களாகிவிட்ட மதுரை பதிவர்களிடம் சொல்லிக் கொள்கிறேன்...

பதிவர்களையெல்லாம் முகமுகமாய்ப் பார்த்துப் பேசியது ரொம்ப ரொம்ப சந்தோஷம் கொடுத்தது... எழுத்தால், தமிழால் இணைந்த நண்பர்கள்.... பள்ளி, கல்லூரி தோழர்களைப் போல் யதார்த்தமாகப் பழகுவதைக் கண்டு ரொம்பவே கண் வைத்துவிட்டேன்!! என்னையும் ஒரு பதிவராக இணைத்துக் கொண்டு ஒன்றாக ஃபோட்டோவுக்கு நின்றோமே.... உண்மையாக அகமகிழ்ந்தேன்... அந்த புகைப்படத்தில் நிச்சியம் சிரித்த முகமாகத்தான் இருந்திருப்பேன் அது ஃபோட்டோவுக்கு சிரித்த சிர்ப்பல்ல.... மனமகிழ்ந்து முகம் மலர்ந்த தருணம் அது....

அதிகமான சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன்,

தூரம்


நிலாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அன்று அலுவலகத்தில்.... ஆளாளுக்கு ஒரு கதை.. ஒன்றிரண்டுபேர் கவிதைகூட சொன்னார்கள்....

திடீரென ஒரு யதார்த்த கேள்வி வந்து விழுந்தது....  

"இவ்ளோ பேசுறோமே... நேற்றிரவு நிலவை நம்மில் எத்தனைப் பேர் பார்த்திருப்போம்.. கடைசியாக நிலவைப் பார்த்த நாளாவது நமக்கு நினைவிருக்குமா?" 

துபாயில் உடன் பணிபுரியும் சக சாஃப்ட்வேர் தமிழ் சகா ஒருவன் கேட்டபோது.... அங்கே முந்தைய நாள் பிறை நிலவைக் கண்டிருந்த ஒரே நபர் அவர்களின் மரியாதைக்குரிய சீனியர் பிரபாகர் மட்டும்தான்!!  

" ஊர்ல இருக்குற என் பொண்ணும் நானும் ஒண்ணா பார்க்க முடிஞ்ச‌ ஒரே நிஜப் பொருள் அதுதானே!!... தினமும் பார்ப்பேன்.. என் பொண்ணும் பார்ப்பா.... நான் ஊரைவிட்டு வரும்போதும் ஊர்ல இருந்து இங்க வரைக்கும் கூட வர்றதும் அதுதானே!! அதுனால தினம் பார்ப்பேன்... ரொம்ப ஓவரா இருக்கோ!!" ஒரு சிரிப்புடன் முடித்தார்....  

கலகலப்பான ஆள்தான் என்றாலும் இரவு நேரங்களில் ரூம்மேட்களிடம்கூட அதிகம் பேசுவதில்லை பிரபாகர்... 
பதினான்காவது மாடியில் இருக்கும் அவர் வீட்டு பால்கனியில் நின்று வானத்தையும், துபாயின் இரவு நேர ஜொலிப்பையும் வெறித்த வண்ணம் சில நிமிடங்கள் கழித்தபின்தான் உறங்கச் செல்வார் தினமும்....  

கேட்டால் அமைதியைக் காதால் கேட்க முடியாது கண்களால்தான் பார்க்க முடியும் என்று சொல்வார்! 

உண்மைதான்.... இரவு நேர கருப்பு வானத்திடம் ஓர் ஆட்கொள்ளும் அமைதி உண்டுதானே.... கண்களால் அந்த அமைதியைத் தொடர்ந்து உள்வாங்க உள்வாங்க பூலோக இரைச்சல்கள் கவனத்தைவிட்டே கரைந்துபோகும்!! அந்த அமைதி ஒரு பொய்தான்... வானத்துப் பேரிரைச்சலைக் கேட்கும் தொலைவில் நாமில்லை என்பதால்தான் இந்த நிசப்தம்....!!

ஆம் தூரம் அமைதி தரும்.... தூரத்தில் இருப்பதால் பிரபாகருக்கு அழகான அவர் குடும்பத்தில் இரைச்சல்கள் எதுவுமில்லை...

தொடரும்....

(பி.கு : சிறுகதை ஒன்றை எழுதத் துவங்கினேன் அது இப்படியெல்லாம் விரிந்து சென்றது... எழுதிய வரை இன்று பதித்துவிட்டுச செல்கிறேன்.. நாளைக்குத்தான் தெரியும் இக்கதையின் தலைஎழுத்து!! சிறுகதையாகப் போகிறதா அல்லது சைஸ் கூடுமா என்று!! Anyways ur comments please....)