2009 சில வெற்றிகளும் தோல்விகளும்...



"எல்லாப் புகழும் இறைவனுக்கே.." என ஆஸ்கர் இரவில் தமிழ் ஒலித்த 2009ஆம் ஆண்டு முடிய இன்னும் சில மணித்துளிகள்தான் உள்ளன!!  

"இப்போ தான் புதுவருஷம் பொறந்த மாதிரி இருக்கு.. அதுக்குள்ள அடுத்த வருஷம் வந்திருச்சு!!" எல்லாருமே ஒருமுறையேனும் கேட்டிருப்போம் இந்த வசனத்தை!! நம் வாழ்க்கைச் சுழல் பூமியின் சுழல் வேகத்தை விஞ்சி எங்கோ சென்றுவிட்டதன் விளைவு.. கடிகார நொடிமுள்ளும்... காலண்டர் தினங்களும் தடதடத்து ஓடும் பிரமை வருடந்தோறும் தொடர்கிறது!!

எல்லா பக்கமும் ஜனவரி முதல் இன்றுவரை நடந்த சம்பவங்கள் எல்லாம் விடாது அசைபோடப் பட்டுக்கொண்டிருக்கிறது!! ஒட்டுமொத்தமாகக் கடந்த 365 நாட்களில் பதிவுகொள்ளப் பட்ட வெற்றி, தோல்விகளின் மொத்தக் கணக்கை உலகம் சரிபார்த்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை... இதில் என் கவனத்தைக் கவர்ந்த சில வெற்றிகளையும் தோல்விகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.....  

அதற்குமுன் ஒரு விஷயம்....

இந்த வெற்றி, தோல்விகளுக்கு இடையே, இந்த வருடம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் முக்கியமான பாடம் ஒன்று உள்ளது.... "வென்றது என்று அறிவிக்கப் படுவதெல்லாம் வெற்றியல்ல... " என்பதுதான் அது... !! 

ஆம்... வெற்றிகளிலேயே பலவகைகள் உண்டு.. அதிலும் சுத்தமான சில வெற்றிகளும், பெருமைக்குரிய சில‌ தோல்விகளும் உலகில் உள்ளன என்பதை முன்பைவிட ரொம்பவே தெளிவாக உணர்ந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது இந்த வருடம்தான்!! 

இனி சில வெற்றிகளும் தோல்விகளும்...  

ஏ.ஆர் ரகுமான் ‍ - உன்னத வெற்றி :

"ரோஜா" காலங்களில் எஸ்.பி.பி ஒருமுறை ரஹ்மானிடம் "சாதிச்சுட்டப்பா.." என்கிற ரீதியில் பேசியபோது.. "இங்கே போட்டிகள் ரொம்பப் பெருசு... ஓர் ஐந்து வருடம் இந்தக் களத்தில் தாக்குப் பிடித்துவிடுவேன் என்று நினைக்கிறேன்" என்று பதில் சொன்னாராம்..... அதே ரஹ்மானிடம் "உயிரே" சமயம் அதே கேள்வியை எஸ்.பி அவர்கள் மீண்டும் நினைவூட்டியபோதும் ரஹ்மான், " இறைவன் எனக்கு இன்னும் கொஞ்சம் கிரேஸ் பீரியட் கொடுத்திருக்கிறார் போல!" என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார்!!  

ரகுமானின் கூற்று அவரது தன்னடக்கத்தைக் காட்டினாலும்.... அவர் சொல்லியிருப்பதில் ஓர் அழுத்தமான உண்மை உள்ளதை மறுக்க முடியாது! விடாத உழைப்பிற்கும், மங்காத திறமைக்கும் அவ்வப்போது கிடைக்கும் இளைப்பாறல்தான் "வெற்றிகள்" ஒரு வெற்றிக்கு செலவிட்ட உழைப்பு இன்னொரு வெற்றியைப் பெற்றுத்தராது!! அதைவிட அதிக உழைப்போடும் தேடலோடும் களத்தில் முன்பைவிட வேகமாக மீண்டும் முதலிலிருந்து துவங்கினாலே மீண்டும் வெற்றி கிட்டும்..... இதற்கு சரியான உதாரணம் ஏ ஆர் ரஹ்மான்!! 

முதல்படத்திலேயே தேசிய விருதுடன் ஆட்டத்தைத் துவக்கிய இசைப்புயல் அடுத்தடுத்து கண்டது வெவ்வேறு களங்கள்... முற்றிலும் வேறு இலக்குகள்... பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒவ்வொரு களத்தையும் சரியாகப் புரிந்துகொண்டுத் தன்னை அவற்றுக் கேற்றவாறு சிறிதும் பிசகாமல் மாற்றியமைத்துக் கொண்டு, உழைப்பிலும் தன் கவனத்திலும் சிறிதும் குறைவைக்காமல் அடுத்தடுத்த களங்களுக்கு வெற்றிநடையைத் தொடர்ந்த நம் ஏ ஆர் ரகுமான் நீண்ட நாட்களாக இந்திய சினிமா ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை ஒன்றுக்கு இரண்டாக அள்ளிக் கொண்டுவந்தார்!!.. அப்படி வந்தபோதும், தொடரும் தன் இசைவாழ்விலும் இன்னும் அதே ரகுமானாகத்தான் இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு!! வெற்றிகளாலும் தோல்விகளாலும் மாறாதவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கும் சரியான உதாரணம்: ஏ ஆர் ரஹ்மான்!! :) 

ரஹ்மானின் 2009ஆம் ஆண்டு வெற்றி குறுக்கு வழியின்றி முழுக்க முழுக்க உழைப்பால் பெற்ற உன்னதமான வெற்றி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது!!  

சன் பிக்சர்ஸ்!! - __________ வெற்றி  :

"கலாநிதி மாறன் வழங்கும்" என்று டைட்டிலுடன் இந்த வருடம் எட்டு படங்கள் வெள்ளித்திரையிலும் அதற்கு எட்டு லட்சம் டிரெய்லர்கள் சின்னத் திரையிலும் திரைகண்டன!! கூட்டிக் கழித்துப் பார்த்தால் அத்தனையுமே வெற்றிப் படங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை..!! அதாவது... ஒரு திரைப்படமானது எடுத்தவர்க்கும், எடுத்த படத்தை அப்படியே விலை கொடுத்து வாங்கியவர்க்கும் போட்ட காசைவிட ஏதாவது ஒரு வழியில் போட்டதைவிட அதிக லாபத்தைப் பெற்றுத் தந்தால் "வெற்றி" என்ற நியதி உண்மையென்றால் சன் பிக்சர்ஸின் படங்கள் எல்லாமே வெற்றிகள்தான்!! ஆனால் அதையும் தாண்டி "கனவு தொழிற்சாலை" , "கலைக்குடும்பம்" என்றெல்லாம் (ஒரு காலத்தில்) அழைக்கப் பட்டது நம் தமிழ் சினிமா... இப்போது சினிமா... ஜஸ்ட் பிசினஸ்!!  

இதுவும் வெற்றிதான் ஆனால் எப்படிப் பட்ட வெற்றியென்று நீங்களே கோடிட்ட இடத்தில் ஒரு வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள் (அந்த நேரமும் உங்கள் டி.வி "புலி உருமுது... புலி உருமுது.. " என்று மிரட்டிக் கொண்டிருக்கும்!!) 

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" - அழகிய வெற்றி :

(2009 தமிழ்ப்படங்களில் என்னுடைய ஹிட்லிஸ்ட்!!  

ரசித்துப் பார்த்தவை : " பசங்க", " யாவரும் நலம்" , "உன்னைப்போல் ஒருவன்" , " நாடோடிகள்" , "ஈரம்" மற்றும் சில..  

கொடுமைகள் : "கந்தசாமி", "வில்லு", "வேட்டைக்காரன்", "அயன்", "ஆதவன்", "படிக்காதவன்", "எஸ் எம் எஸ்" மற்றும் பல....)  

"பசங்க" மற்றும் "யாவரும் நலம்" என்னைப் பொறுத்தவரை கோடம்பாக்கம் கொடுத்த அழகிய வெற்றிகள்!! (உன்னைப்போல் ஒருவன் ரீமேக் என்பதால் விடுபடுகிறது!!)  

"பசங்க" : 
தயாரிப்பாளர் சசிகுமாரின் அற்புதமான தேர்வு!! சசிகுமார் அன்ட் கோ வின் அலட்டிக்கொள்ளாமல் அடித்த‌ இன்னுமொரு அழுத்தமான வெற்றி!! உலக சினிமாக்களின் பாதிப்பு, எதையும் சாத்தியமாக்கிக் காட்டும் தொழில்நுட்பம், விதிகளை மாற்றிக் கொண்டிருக்கும் புதிய மார்க்கெட்டிங் முறை என்று பல உக்திகளை நம்பிக்கொண்டு எங்கெங்கோ கதை தேடும் மற்ற மேக்கர்களுக்கு இடையே..... நமக்குள்ளும், நமக்குக் கொஞ்சம் தள்ளி அக்கம் பக்கத்திலும் புரளும் சாதாரண உணர்வுகளை மற்றும் சுற்றியுள்ள உலகு என்னதான் மாறினாலும் மாறாத ஒரே நிதர்சனமான சிறுவர் உலகை அப்படியே அச்சு அசலாகப் பிடித்துக் கொடுத்து பாண்டிராஜ் வெற்றிக் கோப்பையை லாவிக்கொண்டு சென்றது உண்மையிலேயே ரொம்ப அழகுதான்!!  

யாவரும் நலம்: "அயன்" போன்ற படங்களைப் பார்த்தபோது.... தமிழ்சினிமா டெக்னாலஜியின் வீச்சும், மார்க்கெட்டிங்கின் முக்கியத்துவமும் தெளிவாகத் தென்பட்டன.... அப்போது மனதில் பட்ட ஒருவிஷயம்..... 

"இப்போது நம்மிடம் இருப்பது புதுமையான, உலகத்தரம் வாய்ந்த கேமரா... அடுத்த தலைமுறை தொழில் நுட்ப சாதனங்கள், உலகத்தர நிபுணர்கள்... என எல்லாம் மாறிவிட்டது ஆனால் கதைகளை எழுத மட்டும் அதே அந்தப் பழைய பேனாவையும், கெட்டுப் போன இங்கையும் தான் தூக்கியெறிய மறந்துவிட்டோம்"  என்று தோன்றியது!  

ஆனால் முற்றிலும் புதிய கதையுடன் வந்து அடித்து ஜெயித்த விக்ரம்குமாரின் வெற்றியும் சந்தேகமில்லாமல் ஓர் அழகிய வெற்றிதான்!! நல்ல சினிமா எடுக்க‌ எத்தனை எத்தனையோ வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தாலும், "திரைக்கதை" என்னும் மந்திரம் மட்டுமே போதுமானது அல்லது அதுதான் பிரதானமானது என்று ஓங்கியடித்துக் கூறிய படம்.. படம் ஹாலிவுட்டுக்குப் போகுதாமே... சிம்ப்ளி சூப்பர்ப்!! :)  

விஜய் - தொடர் தோல்வி  :

2009ல் ரொம்பவும் ரிவிட்டு வைத்தது திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்குதான் என நினைக்கிறேன்  

"வாழ்வின் பொருள் என்ன.. நீ வந்த கதை என்ன.."  

ஏனோ எனக்கு இந்த பழைய பாடல் வரிதான் நினைவில் ஒலித்தது விஜய் தன் அரசியல் முயற்சிகளை இந்த ஆண்டு அறிவித்தபோது!! 
ரஜினி, கமல் உட்பட எல்லா நடிகர்களுக்குமே சில வெற்றிகள்தான் அவர்களை நிலை நிறுத்தியிருக்கும்... ஆனால் தொடர் தோல்விகளால் நிலை நிறுத்தப் பட்ட ஒரே "ஸ்டார்" ஹீரோ விஜய் என்றுதான் நினைக்கிறேன்!! " நாளைய தீர்ப்பு" துவங்கி "காலமெல்லாம் காத்திருப்பேன்" வரைக்கும் தொடர்ந்து எத்தனை தோல்விகளைத் தாங்கினார் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்!! எப்படியோ சினிமாவில் பெரிய இடத்தைப் பிடித்தாகி விட்ட நிலையில்.... ரொம்பவே அசால்டாக அரசியல் பக்கம் போய் அடிமேல் அடி வாங்கி இவ்வருடத்தை முடித்திருக்கிறார் விஜய்!! 

"ஒருதடவ முடிவு பண்ணிட்டா தன் பேச்சைத் தானே கேட்காத" போக்கிரியார், யார் பேச்சைக் கேட்டு "வில்லு", "வேட்டைக்காரன்" படங்களைத தேர்வு செய்தார் என்பதுதான் ஒரே கேள்வி.... அப்படி ஒருவர் இருந்தால் விஜய் அவரை, "தமிழ் நாட்டுல என்னை மரண அடி அடிச்ச மொத ஆள் நீங்கதாங்ணா.." என்று சொல்லி ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துக் கொள்ளலாம்..... விஜய்யைப் பொறுத்தவரை யாரு அடிச்சா பொறிகலங்கி பூமி அதிருரது கண்ணுல தெரியுமோ அதுதான் 2009!!  

தன் பொதுவாழ்வின் பெரிய தோல்விகளைத் தொடர்ச்சியாக‌ சந்தித்திருக்கிறார் விஜய்.... அவருக்கு 2010க்கு குட்லக்!! 

ராமதாஸ் - பலநாள் ஒத்திவைக்கப்பட்ட பெரிய தோல்வி

ஏனோ சிலர் தோற்கும்போது மனது சந்தோஷப் படுகிறது.... !! ஹி ஹி

ஒரு காலத்தில் ரஜினியுடன் வீண் மல்லுக்கட்டிய போது "ரஜினி ஒரு பலூன்.. "டொப்" அதன் காற்றைப் போக்கியாச்சு" என்று ஸ்டைலாக சொன்னவரின் நிலை "எப்புடி இருந்த நான் இப்புடி ஆகிட்டேன்" என்பதுதான்!! 

"சூரியன்" சுட்டு விட்டால் "அன்பு சகோதிரி" , "சகோதிரியுடன் சண்டையென்றால் மீண்டும் சூரியன்"என்றே இத்தனை வருடம் இருந்த தீராத தலைவலிக்கு, ஒருவேளை சூரியனும், இலையும் சேர்ந்து கைவிரித்தால் என்ன ஆகும்? என்று எப்படியோ 2009ல் கழகங்களுக்குத் தோன்றிவிட, கசப்பான மருந்து கொடுத்து தலைவலி அடக்கப் பட்டிருக்கிறது!! விளைவு...மாம்பழம் சீசனிலாமல் தவிக்கிறது.... 

ஜாதி அரசியல், மரங்களை வெட்டியது, கூட்டணி கேம் ஆடியது, மகனை அரசியலில் திணித்தது.. என அப்போதெல்லாம் தப்பித்து நீண்ட ஒத்திவைப்புக்குப் பின் மருத்துவருக்குக் கிட்டியிருக்கும் பெரிய தோல்வி இது....  

2010ல் மீண்டு வர வாய்ப்பு இல்லாமலும் இல்லை!! பார்ப்போம்!! அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.....  

அழகிரி - போட்டியில்லா வெற்றி

சினிமாவில் கலாநிதி மாறன் என்றால், இடைத்தேர்தல்களில் அழகிரி!!

2009 முழுதும் அவருக்கு தொட்டதெல்லாம் வெற்றிதான்..... ஆனால் அவர் லேசாகத் தொட்டவற்றையெல்லாம் பின்னாலேயே பணமும், பவரும் அழுத்தித் தொட்டிருப்பதை மறைக்கவியலாது, மறைக்க யாரும் முயலக்கூட இல்லை!! 

காசு கொடுத்தால் மட்டும் வோட்டு விழுந்திடுமா?? ஏன் மற்றவர்கள் காசு கொடுத்ததில்லையா?? என்றெல்லாம் பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன... பதில்... இவர் தேர்தலின்போது மட்டும் பாய்ந்துவிட்டு மற்ற நாட்களில் கொடநாடு போய்த் தூங்குவதில்லை... நல்லதோ கெட்டதோ 2009 முழுதும் விடாது எதிர்முகாம்களின் வேர்களில் வெந்நீரைப் பாய்ச்சிக் கொண்டேதான் இருந்தார்.... விளைவு.. கட்டதுரைகளெல்லாம் தாய்க்கழகம் திரும்பிவிட எதிர்த்தது எல்லாமே கைப்புள்ளகள் தான்!! 

கட்- அவுட் ஹீரோவுக்கு சொல்லிக் கொள்ளுமளவு பலமான வில்லன் யாரும் திரையில் வரவேயில்லை 2009ல்.... 2010ல் பார்ப்போம்... மதுரை தேர்தலில் இவருக்குத்தான் நான் வாக்களித்தேன் என்பது பின்குறிப்பு!!  

தோணி - ஆரோக்யமான வெற்றி

ப்ளேயர் ஆஃப் தி இயர் ICC விருதை 2008ஐத் தொடர்ந்து 2009லும் ஒருநாள் போட்டிகளுக்காகப் பெற்றிருக்கிறார் கேப்டன் கூல்!! கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக நம்பர் ஒன் அணியாக இந்தியா டெஸ்ட் அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது.. கிரிக்கெட் என்பது பதினோரு பேர் சேர்ந்து விளையாடும் குழு விளையாட்டு என்ற உண்மையையே இந்திய அணியும் சரி பிசிசிஐயும் சரி புரிந்து கொண்டது 2009ல் தான் என்று சொன்னாலும் தகும்!! இக்கட்டான சூழ்நிலைகளிலும் அழுத்தத்தை மொத்தமாகத் தானே தனியாக சுமந்து கொள்வதும், கேப்டன், விக்கெட் கீப்பிங் என்று பொறுப்புகள் இறுக்கினாலும் பேட்டிங்கில் இன்றும் வலிமை குறையாமல் பார்த்துக் கொள்வதும் தோணியின் ஆரோக்யமான வெற்றிக்கு அரிச்சுவடிகள்.... அப்படியே 2010லும் தொடர்ந்தால் நல்லா இருக்கும்!!  

இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன..... நேரமிருந்தால் 2009ன் இன்னும் சில வெற்றி தோல்விகளும் தொடரும்!!


புத்தாண்டு வாழத்துக்களுடன்,



4 comments:

sridhar sona said...

அன்புள்ள பிரபு அண்ணாக்கு,

நன்றிகள் பலவுடன் என் இனிய புத்தாண்டு வாழத்துக்கள். ஆம் பிரபு அண்ணா 2009 எனக்கும் மகிழ்ச்சியான சில வெற்றிகள் கிடைத்த வருடம், என் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்து என்னை எனக்கு அடயாளம் காட்டி எழுச்சி பெறச்செய்த உங்களுக்கு என்றென்றும் நன்றிகள் பல.
உங்களுடன் கலந்துரையாடிய பொழுதுள் பல, அவை அனைத்தும் என்றும் என் நெஞ்சில் பசுமையான பயனுள்ள நினைவுகளாக பதியபெற்றன. என் வாழ்க்கையின் அடுத்த கணத்தையும், அடுத்த களத்தையும் வழிகாட்டி உணர்த்திய தருணம் மார்ச் 2009. நான் பயணித்து வந்த நாடோடி வாழ்க்கையை ஒரு கணம் திறும்பி பார்த்தால் அதில் 2009க்கு மிக முக்கிய இடம் உண்டு.

நல்லாருப்போம், நல்லாருப்போம் எல்லாரும் நல்லாருப்போம்.........!

நட்புடன்,

ஸ்ரீதர்.


ooo0
( ) 0ooo
\ ( ( )
\_) ) /
(_/

"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு." ( குறள் எண் : 781 )

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு?
அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி
நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?

கார்த்திகைப் பாண்டியன் said...

அழகான தொகுப்பு.. உங்களுடைய narration ரொம்ப நல்லாயிருக்கு நண்பா.. ஏன் ரொம்பக் கொஞ்சமா எழுதறீங்க..? அடிக்கடி எழுதினா நாங்களும் சந்தொஷப்படுவோம்ல.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..:-)))))

பிரபு . எம் said...

ரொம்ப நன்றி நண்பா...
எனக்கும் அடிக்கடி எழுதணும்னு ஆசைதான்... முடியலையே!! :)
இந்த வருஷம் கண்டிப்பா முயற்சி பண்றேன்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பிரபு . எம் said...

நன்றி ஸ்ரீதர்...
இந்த வருடமும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்..

Post a Comment