இது "க‌ந்த‌சாமி" திரைவிம‌ர்ச‌ன‌ம் அல்ல‌!


இது "க‌ந்த‌சாமி" திரைவிம‌ர்ச‌ன‌ம் அல்ல‌!!

"கந்தசாமி" ... நொந்தசாமி... கந்தல் சாமி.... எனப் பதிவுலகம் துவங்கிப் பத்திரிக்கை உலகம் வரை டார் டாராகக் கிழிக்கப்பட்டுவரும் இந்தப் படத்தை வந்த அன்றே பார்த்தாகிவிட்டது!

இந்தமாதத்திலிருந்து கொஞ்சம் ஜரூராக எழுதிவருவதால்... "கந்தசாமி: விமர்சனம்" என்று ஓர் இடுகை இன்று இரவு எழுதுவதற்குத் தயாரான நிலையில் இருக்கும் என்ற‌ உற்சாகத்தோடு நண்பர்களுடன் கிளம்பிப்போனேன்.... படம்பார்த்து வந்தவுடன் கணிணியைத் திறந்து ஒரு விமர்சனத்தையும் தடதடவென கொட்டித் தீர்த்துவிட்டேன்..... மூன்று மணிநேரத்துக்கும் மேலாகப், படத்தின் வில்லன்களை விட அதிகமாக அடிவாங்கிய கோபத்தில், பதிலடிகளை வெடித்துத் தள்ளிக்கொண்டிருந்தேன்..... அப்போது ஏதோவொன்று மனதுக்குள் தோன்ற அந்த இடுகையைப் பதியாமலேயே விட்டுவிட்டேன்....

வேறென்ன..... "இன்னா செய்தாரை ஒறுத்தல்..." திருக்குறள்தான் மனதுக்குள் தோன்றியது!!!...... "நன்னயம் செய்து விடல்" என்று பாஸிடிவ்வாக ஒரு விமர்சனம் எழுதியிருக்கலாமே (விகடனைப் போல!) என்று கூடத் தோன்றியது ஆனால் ஒரு பாவமும் அறியாத என் நண்பர்களுக்கு இன்னா செய்தலையும் நான் விரும்பவில்லை...... அவர்களாகவே ஆசைப்பட்டு ஆளுக்கொரு தியேட்டரில் அகப்பட்டு யான்பெற்ற "இன்பத்தை"த் தானும் பெற்று ஐ.எஸ்.டி கால்போட்டு எனக்கு அர்ச்சனைகள் செய்தபின்தான் இதையும் எழுதுகிறேன்.....!! எப்படியோ எந்தப் பாவத்திலும் எனக்குப் பங்கில்லை!!!

இனிமேல் "விமர்சனம்" எழுதப்போவதில்லை என்று நினைத்திருக்கிறேன்.... எதற்கு விமர்சனம்....?? சினிமா பார்க்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு காரணம்.... எனது "காரணங்களை"த் தெளிவுபடுத்திக் கொள்ள உதவியமைக்குக் "கந்தசாமி"க்கு நான் நன்றி சொல்லியே ஆகவேண்டும்!! இத்தனைக்கும் நான் எந்த மரத்திலும் எதுவும் எழுதிவைக்கவில்லை.... தானாக வந்து வேண்டிய வினைதீர்த்தார் கந்தஸ்வாமி!!

நிச்சிய‌ம் ப‌ட‌ங்க‌ளில் ந‌ல்ல‌ப‌ட‌ம் கெட்ட‌பட‌ம் என்று எதுவும் இல்லை.... என‌க்குச் சின்ன‌ வ‌ய‌து க‌ன‌வு ஒரு திரைப்ப‌ட‌ இய‌க்குன‌ராவ‌து என்ப‌து!! அந்த ஆர்வத்தில் "திரைக்க‌தை" என்னும் ம‌ந்திர‌த்தைத், திரையுலக வாசம் கொஞ்சமுமின்றிப் புத்த‌க‌ங்க‌ளாலும், சினிமாக்க‌ளாலும் ப‌யில‌த் தொட‌ர்ந்து முய‌ற்சித்து வ‌ருகிறேன்.. அட‌ ரெண்டு ஸ்க்ரிப்ட் கூட‌ வைத்திருக்கிறேன்!!

1) INT Day / xxxxxx

Fade in

xxxx xxxxx xxxxx

என்றெல்லாம் பக்கா Proffessional ஆக "முவீ மேஜிக்" சாஃப்ட்வேர் வைத்தெல்லம் நாங்க‌ திரைக்கதை எழுதியிருக்கோம்ல‌!!!

இப்ப‌டியெல்லாம் ப‌ம்ப் அடித்தாலும்.... பீட்டர் விட்டாலும்.... திரையுல‌க‌த்துக்கு வெளியே இருந்துகொண்டு திரைப்ப‌ட‌ம் ப‌யிலமுயற்சிப்பது, அஞ்ச‌ல்வ‌ழியில் நீச்ச‌ல் க‌ற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ம‌மான‌ காமெடிதான்... தெரிந்திருந்தும் ஏனோ நான் இன்றுவரையிலும் கோட‌ம்பாக்க‌த்துக்கு ஒரு கேஷுவ‌ல் விசிட் கூட‌ அடித்த‌தில்லை.... ஆனாலும் இன்றுவரை யார்கேட்டாலும் த‌வ‌றாம‌ல் சொல்லும் ப‌ஞ்ச் ட‌ய‌லாக்....

"நாங்க‌ளும் வ‌ருவோம்ல...!!" என்ப‌துதான்!!
ஹி ஹி ஹி.... கிடக்கட்டும்... அது த‌னிக‌தை.....

ஸோ ப‌ர்ச‌ன‌லாக‌ நான் "க‌ந்த‌சாமி" பார்த்த‌தால் குறையொன்றுமில்லை!! அதைத் திட்டி விம‌ர்ச‌ன‌ம் எழுதும் நேர‌த்தில் வேறு ஒரு ந‌ல்ல‌ப‌ட‌ம் பார்க்க‌லாம்.... அல்ல‌து ஒரு சிறுக‌தை எழுதுவது எனக்கு நலம்... என்று தோன்றிய‌து..... ஒருவேளை என் க‌ன‌வு நினைவாகித் திரைஉல‌க‌த்தின் "டைர‌க்ட‌ர்" சேரில் அமர நேர்ந்தால்.... மூன்றும‌ணி நேர‌ம் இந்த‌த் தியேட்ட‌ர் இருக்கையில் நெழிந்த‌ த‌ருண‌ங்க‌ளை நினைவில் வைத்து சில‌ த‌வ‌றுக‌ளைக் கூட‌க் க‌ளைய‌லாம் பாருங்க‌ள்!! (எப்ப‌டியெல்லாம் யோசிக்க‌ வைக்கிறாய்ங்க‌!!)

மொத்த‌மாக‌ப் ப‌ழைய‌ ப‌ட‌ங்க‌ளின் தாக்க‌ங்க‌ள் ஆக்கிர‌மித்தாலும் "கந்தசாமி"யில் சில‌ ப‌ளிச் விஷயங்களும் இருந்தன என்பதையும் குறிப்பிடுவ‌துதான் நேர்மை...

Well..... சினிமா ஆசையைப் ப‌திவுல‌கில் ப‌கிர்ந்துகொள்ள‌ விழைந்தேன்.... அதற்கொரு வாய்ப்பாக‌ அமைந்துவிட்ட‌ க‌ந்த‌.. க‌ந்த‌... க‌ந்த‌...கந்த... க‌ந்த‌சாமீக்கு மீண்டும் ந‌ன்றி!! குறையொன்றுமில்லை க‌ந்தா!!!


பொக்கிஷம்: விமர்சனம்


சோம்பலான ஒரு காலைப் பொழுதில்... வீட்டில் தனியாக... காதல் கன்ஃபார்ம் ஆகிவிட்டதால் கொஞ்சம் கசக்கும் காதலியின் ஸ்வீட் நத்திங் எஸ்.எம்.எஸ்களுக்கு இடையே மறைந்துபோன தந்தை தன் கைப்படப் பதித்துவைத்திருக்கும் ஓர் உணர்வுப்பூர்வமான காதல் கதை பொதிந்துவைத்த பொக்கிஷமாக மகனின் கண்ணில் பட்டால்..... எத்தனைப் பக்கங்களில் புனைந்து தள்ளியிருந்தாலும், சைக்கிள் வேக ஸ்க்ரீன்ப்ளே என்றாலும் பொருட்படுத்தாது ஒரேமூச்சில் படித்துவிடத்தானே தோன்றும்... அதே துளிர்க்கும் ஆர்வத்தையும் பங்களிப்பையும் நம்மிடமும் எதிர்பார்த்துச் சேரன் (ரொம்பவே ஆழமாக) புதைத்து வைத்திருக்கும் "பொக்கிஷம்" தான் படம்!

"இன்னுமொரு புதுமையான‌ காதல் கதை" என்று ஃப்ளாஷ் கார்டு போட்டுதான் இப்போதெல்லாம் காதல் கதையே எடுக்கிறார்கள்.... இங்கு சேரனோ "இதோ ஒரு பழமையான காதல் கதை" என்று நம்பிக்கையாகக் களம் கண்டிருக்கிறார்!

எடுத்துக் கையாளப்பட்டிருப்பது ஓர் அழகான கதைதான் என்பதில் நிச்சியம் ஐயமில்லை... அஞ்சல் கடிதங்களால் பரிமாறிக்கொள்ளப்படும் காலம்சென்றதொரு கண்ணியமான காதல் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த்துபோல் ஃப்ரெஷாகப் பதிவுகொள்ளப் பட்டிருக்கிறது டிஜிட்டல் செல்லுலாய்டில்!! மொத்தப்படத்தையும் கண்ணுக்கு வலிக்காத வண்ணங்கள் தெளித்துத் திருத்தமாய் வடித்த ஒரு கிரீட்டிங் கார்டு போலப் பார்த்துப் பார்த்துப் புனைந்திருக்கிறார் சேரன்....

நீண்டவெளியான‌ கதைக்களத்தில்.... இரண்டே இரண்டு காதலர்களை அருகருகே அமரவைத்துப் படமாய் எடுத்திருந்தால் வசனப் பொட்டலங்களை குவித்து வைத்திருப்பார்கள் இண்டர்வல் வரை.... ஆனால் இங்கு காதலன் கோல்கத்தாவில்... காதலி நாகூரில்....எனவே வசனப் பொட்டலங்களுக்குப் பதிலாகப் பருமனான கடிதப் பொட்டலங்களாக‌ நிரப்பிவைத்திருக்கிறார்கள. கடைசி சொட்டு இங்க் இருக்கும்வரை எழுதப்பட்ட அத்தனை காதல்கடிதங்களும் வரிவிடாமல் வாசிக்கப்பட்டிருக்கின்றன படம் முழுதும்!! விளைவு நாகூரிலிருந்து கோல்கத்தாவிற்கு ஸ்கூட்டரில் போகும் எஃபெக்ட் நமக்கு....

நீள நீளமாய் நட்பு பாராட்டும் கடிதக் கவிதைகளைவிட ஆரம்பத்தில் சேரன், பத்மப்ரியா அறிமுகம் கொள்ளும் மருத்துவமனைக் காட்சிகளும் அந்தக் குட்டிக் குட்டிப் பேச்சுகளால் பரிச்சியம் வளர்ப்பதுமான விஷுவல் கவிதைகள் ரொம்பவே பாந்தம்....
கடிதப் போக்குவரத்து தொடங்குமட்டும் சேரன் தெரிகிறார்... அங்கங்கே பன்னீர் தெளித்து சிலிர்க்கவும் வைக்கிறார்... ஆனால் கடிதம்மூலம் சீனப் பெருஞ்சுவராய்க் காதல் வளர்க்க ஆரம்பித்தவுடனேயே நடிகர் சேரன்தான் வந்துபோகிறார் படமோ நீளமான வார்த்தைக் கவிதைகளால் மட்டுமே நகர்கிறது அங்குலம் அங்குலமாக‌.... அந்தக் காட்சிகளில்தான் ஏதோ ஒருவித வறட்சி ஆட்கொள்கிறது.....

அழகான காதல்கதை ஒன்றை "ஆட்டோகிராஃப்" சேரன் சொல்லும்போது அங்கே வெள்ளித்திரை சுவாரஸ்யங்கள் ஏதுமின்றி வெறும் காட்சிகளால் படம் நகரும்போது ரீல் சுற்றும் தியேட்டர் ஆபரேட்டரின் கை வலியை உணரமுடிகிறது! திடீரென்று விழித்துக் கொண்டவராய்... நதீராவிடம் பேசும்வரை வேறு யாருடனும் பேசமாட்டேன் என்ற மூன்று நாள் மவுன விரதம் அநியாயமாய்க் காலேஜ் ஃபோனை எடுக்கும் அட்டெண்டரிடம் முறிந்து போவது டிப்பிக்கல் சேரன் டச்... ஆனால் அவ்வளவுதான் ஒரு டச் வைத்துவிட்டு மீண்டும் கடிதம் எழுதப் போய்விடுகிறார்!

ஆறு அங்குலத்துக்கு நீண்ட ரொட்டிக்கு (Soft Bread) இரண்டே ஸ்பூன் ஜாம் தடவிக் கொடுத்திருக்கிறார்... இடையிடையே சில ஸீன்கள் தித்தித்தாலும் மொத்தமாக வெறும் ரொட்டியை சவைக்கும் உணர்வே மிஞ்சுகிறது!

கடிதப் போக்குவரத்து திடீரென நிற்பதும்... தவித்துப் போகும் சேரன் பத்மப்ரியாவைத் தேடி அலைவதும்... வாழ்நாள் முழுக்க சேரன் தேடியும் கிடைக்காத தூரத்துக்குத் தன் மகளைக் குடும்பத்தோடு கடத்திவிடும் நதிராவின் தந்தையின் சூழ்ச்சியும் வலியோடு கதையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகின்றன... ஆனால் அதுவும் ஆமை நகர்வுதான்!

இறந்துவிட்ட சேரனின் ஒரே மகன் ஆர்யன் ராஜேஷ், முகவரி இல்லாமல் உரைக்குள் மாட்டிக்கொண்ட சேரனின் கடைசி கடிதங்களைப் பொக்கிஷமாகப் பத்மப்ரியாவைத் தேடிக் கண்டுபிடித்து கை சேர்க்கும் காட்சிகள்.... கடுகடுக்கக் காத்திருந்தபின் வந்து கால்நனைக்கும் கடலலைகள்! சில்லிட வைக்கும் உணர்வுப் புதையலுக்காய் ரொம்பவே காத்திருக்க வேண்டியிருக்கிறது.... ஒட்டுமொத்த வாழ்க்கையே ஏமாற்றமாய் மிகவும் உருக்கமாய் எதிரொலிக்கிறது பாட்டியாகிவிட்ட பத்மப்ரியாவின் ஈனஸ்ருதி அழுகை அந்த உச்சக்காட்சியில்....

நடிப்பில் சேரன் அதே அதே அதே சேரன்தான்.... ஆனால் பத்மப்ரியா.... முகத்தை மூடிக்கொண்டு கண்களாலேயே க(வி)தை சொல்லியிருக்கிறார்.... அன்புள்ள‌ படவா... அன்புள்ள திருடா.. அன்புள்ள மன்னா... என்று பாடலில் கொஞ்சும் அழகுமுகம் சமூகத்தின் அர்த்தமற்ற‌ சில வறட்டுப் பிடிவாதங்களினால் இறுதியில் தோல்சுருங்கிக் கசங்கிப் போன ஒரு கனவாய்ப் போய்விடுவ‌தின் வலியை லைஃப்டைம் பெர்ஃபார்மன்ஸாகப் பதிவுசெய்திருக்கிறார் என்றே செல்லலாம்... வைரபாலனின் கலையும், ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவும் திகட்டாத அலங்காரத்தினால் கச்சிதமாக அழகுபடுத்திக் கொடுத்திருக்கின்றன பொக்கிஷத்தை! நீ.....ளமான படத்துக்குக் காட்சிகளை முடிந்தவரை சுருக்கமாய்க் கத்தரிபோட்டிருக்கும் எடிட்டரின் ரூமில்தான் இந்தக் கடிதக்கோர்வை திரைப்படமாக உருப்பெற்றிருக்கிறது.... இளையராஜாவாய்ப் பின்னணி இசையில் பேசியிருக்க வேண்டியப் பல இடங்களில் இசையமைப்பாளர்கள் சபேஷ்-முரளியின் "இசை" ஊமையாகிப் போயிருப்பது பெரும் ஏமாற்றம்... பாடல்கள் நன்றாக இருப்பது ஆச்சர்யமான ஆறுதல்..

மாறுபட்ட நேர்மையான சமூகக் கருத்துக்களால் கவர்ந்த "பாரதி கண்ணம்மா" , "பொற்காலம்", வரிசையிலான ஆரம்பகாலப் படங்களே சேரனின் நிஜமான‌ பொக்கிஷங்கள்... இது வெறும் நிழல்தான்...

ஒரே ஒரு சச்சின்..எத்தனை வினோத் காம்ப்ளிகள்?? -- 2



சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி....

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு ஒரு வலிமை வாய்ந்த அணியாகத்தான் களம்கண்டது இந்தியா. கென்யாவுடனான முதல்போட்டியில் 127 ரன்கள் குவித்துக் கலக்கினார் சச்சின்.. கடுமையான பயிற்சி, இலக்குகளின் மீதான சிதறாத கவனம் என சச்சின் அந்தக் காலகட்டத்தில் தனது விஸ்வரூபத்தைத் துவக்கிவிட்டிருந்தார்.... காம்ப்ளியோ ஒரு காதில் கடுக்கன், ஒட்ட வெட்டிய தலைமுடி,ஃப்ரெஞ்ச் தாடி, அவரின் டிரேட் மார்க்காகிப் போயிருந்த தங்க நகைகள் என வித்தியாசமான உருவம் தரித்துப் போயிருந்தார்....

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சச்சின் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த சூழ்நிலையில் ஆட்டம் மெல்ல வெஸ்ட் இண்டீஸுக்கு சாதகமாக நகரும் சூழ்நிலை... சித்து, அசார், சச்சின் அடுத்தடுத்து அவுட்டாகிவிட மனோஜ் பிரபாகர் ஒரு முனையில் மறுமுனையில் காம்ப்ளி.... க்வாலியரில் நடந்த மேட்சில் பிரபாகரைக் கூட நம்பும் மக்கள் காம்ப்ளியை நம்பவில்லை அந்தளவு விளையாட்டில் கவனமின்றி அதிருப்தி சம்பாதித்து வைத்திருந்தார்... ஒரு கட்டத்தில் பிரபாகரும் அவுட்டாகிவிட... மோங்கியாவும், காம்ப்ளியும் நிற்கிறார்கள் கர்ட்லி அம்புரோஸ் பந்துவீச வர ரசிகர்கள் நகம் கடித்துக் கொண்டிருந்தனர்.... காம்ப்ளியை நோக்கி அம்புரோஸ் வீசிய பவுண்சரை லெக் திசையில் ஹூக் செய்து சிக்ஸராக்கினார் காம்ப்ளி.... புத்துணர்வுடன் ஆடி (33ரன்கள்*) வெற்றியும் தேடித்தந்தார்!! காம்ப்ளியின் கம் பேக் (come back) என மகிழ்ந்தது இந்தியா!!

அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டி ச‌ச்சின், காம்ப்ளியின் சொந்த‌ ம‌ண்ணாம் வான்க‌டே மைதான‌த்தில்... இந்தியா தோல்விய‌டைந்த‌ இந்த‌ப் போட்டியில் ச‌ச்சின் க‌டுமையாக‌ப் போராடி 90ர‌ன்க‌ள் குவித்தார் காம்ப்ளியோ ட‌க்-அவுட் ஆகிவிட்டு அல‌ட்சிய‌மாக‌ப் பெவிலிய‌ன் திரும்பினார்.... க‌டும் அவுட் ஆஃப் ஃபார்மினால் அதிக‌ப்ப‌டியான‌ விம‌ர்ச‌ன‌த்துக்குத் தின‌ம் ஆளாகிவ‌ந்த‌ காம்ப்ளி தான் ஒரு சாதார‌ண‌மான‌ குடும்ப‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர் என்ப‌தையெல்லாம் ம‌ற‌ந்துவிட்டு ஏதோ ஒரு ஹாபி போல‌க் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த‌து தேர்வுக் குழுவின‌ரைக் கூட‌ எரிச்ச‌லுக்குள்ளாக்கிய‌து... ஜிம்பாப்வேக்கு எதிரான‌ ஆட்ட‌த்தில் அதிர்ச்சியாக சச்சின் 3 ரன்களுக்கு போல்டாகிவிடத் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தவித்த அணியை 106ரன்கள் அடித்து மீட்டார் ஆட்ட நாயகன் காம்ப்ளி....

அதன்பின் காலிறுதியில் அதிரடியாகப் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி சென்ற இந்திய அணி தன் வ‌ர‌லாற்றின் க‌ருப்புதின‌மாக‌, இல‌ங்கைக் கெதிராக‌ ஈட‌ன் கார்ட‌ன் மைதான‌த்தில் ந‌ட‌ந்த‌ ஆட்ட‌த்தைப் ப‌திவுசெய்த‌து.... இந்தியா வெறும் 120 ர‌ன்க‌ளுக்கு 8 விக்கெட்டுக‌ள் இழ‌ந்த‌ நிலையில் க‌டுப்ப‌டைந்த‌ ர‌சிக‌ர்க‌ள் ர‌க‌ளையில் ஈடுப‌ட‌, காம்ப்ளி க‌ண்ணீர் சிந்தி அழுத‌வாறே மைதான‌த்தைவிட்டு வெளியேறினார்.... இந்தியா தோல்விய‌டைந்த‌து.... ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் அர‌ங்கில் இத்த‌னை பெரிய‌ அவ‌மான‌ம் ஏற்ப‌ட்டுவிட்ட‌தைத் தொட‌ர்ந்து க‌டுமையான‌ சில‌ முடிவுக‌ளைத் தேர்வுக்குழு எடுக்கத் த‌யாரான‌து.... "குட் ஸ்டூட‌ண்ட்" ஆக‌ எல்லார் ந‌ன்ம‌திப்புக‌ளையும் பெற்றிருந்த‌ "ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌ம்" ச‌ச்சின் அணியின் கேப்ட‌ன் ஆனார்... அனைத்துத் த‌ர‌ப்பின‌ரின் கோப‌ம் ம‌ட்டும் அவ‌ந‌ம்பிக்கைக்கு ஆளாகிப் போயிருந்த‌ காம்ப்ளி அணியிலிருந்தே நீக்க‌ப்ப‌ட்டார்...

அந்த‌ சூழ்நிலையில் கூட‌ விழித்துக்கொண்டு உத்வேக‌த்துட‌ன் செய‌ல்ப‌ட்டிருந்தால் அணிக்குள் மீண்டு வ‌ந்திருக்க‌லாம் ஆனால் அவ‌ரோ ஃபோர் ஸ்க்ய‌ர், செவ‌ன் அப் என‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் த‌ன்னை பிஸியாக்கிக் கொண்டார்... அல‌ட்சிய‌த்தின் மொத்த‌ உருவாகிப் போன‌ காம்ப்ளிக்குக் க‌டைசிவ‌ரைக் கைகொடுத்த‌து உண்மை ந‌ண்ப‌னாக‌ இருந்த‌ ச‌ச்சின்தான். காம்ப்ளிக்காக‌த் தொட‌ர்ந்து போராடி மீண்டும் அணியில் இட‌ம் வாங்கிக் கொடுத்தார்... ப‌ல‌னில்லை... பின்னொரு க‌ட்ட‌த்தில் காம்ப்ளி ப‌ழைய‌ சேட்டைக‌ளைக் குறைத்துக் கொண்டு பொறுப்பான‌ ஆட்ட‌க்கார‌ராக‌ ச‌ச்சின் கொடுத்த‌ தைரிய‌த்தில் அணியில் இண்டிபெண்ட‌ன்ஸ் க‌ப், ச‌ஹாரா க‌ப், பாகிஸ்தான் ப‌ய‌ண‌ம் என‌ வ‌ந்துகொண்டிருந்த‌ போது... துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ ஓர் ஆட்ட‌த்தில் ப‌ந்தைத் த‌டுக்கையில் கால் எலும்பு முறிவுக்கு ஆளானார்.... அத்துட‌ன் முடிந்துபோன‌து அவ‌ர‌து கிரிக்கெட் வாழ்க்கை.... க‌ங்குலி, டிராவிட், ராபின் சிங் என‌ இவ‌ர் இட‌த்துக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் தொழிலில் மிகுந்த‌ சிர‌த்தையாக‌த் த‌ங்க‌ள் இட‌த்தைத் த‌க்க‌வைத்துக் கொள்ள‌க் காம்ப்ளியோ த‌ன் ஒழுங்கீன‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளால் அற்புத‌மான‌ திற‌மையையும், க‌டின‌ உழைப்பையும், ர‌சிக‌ர்க‌ளின் எதிர்பார்ப்புக‌ளையும், நண்பன் ச‌ச்சின் க‌டைசிவ‌ரை கொடுத்த‌ ஊக்க‌த்தையும் எல்லாவ‌ற்ற‌வையும் ஒருங்கே கோட்டைவிட்டு இன்று கிரிக்கெட் அகாடமி ஒன்றைத் துவ‌ங்கி அந்த‌ விழாவிலேயே த‌ன் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கெட் வாழ்விலிருந்து ஓய்வுபெறுவ‌தாக‌ எவ்வித‌ப் ப‌ர‌ப‌ர‌ப்புமின்றி அறிவித்திருக்கிறார்!!

ஒரு தோற்றுப்போன‌ ஒருவ‌னைப் ப‌ற்றி, ஒரு சாதார‌ண‌ப் பெட்டிச் செய்தியை எத‌ற்கு இவ்வ‌ள‌வு விரிவாக‌ எழுத‌வேண்டும் என்று நிச்சிய‌ம் தோன்றலாம்... அத‌ற்கான‌ கார‌ண‌ம்.... ந‌ம்மிடையே ஓரிரு ச‌ச்சின்க‌ளைத் தான் காண‌முடியும் ஆனால் கிட்ட‌த்த‌ட்ட‌ ந‌ம் எல்லோருக்குள்ளுமே எண்ண‌ற்ற‌ வினோத் காம்ப்ளிக‌ள் இருக்கிறார்க‌ள்.... வாழ்வில், இல‌க்கில் க‌வ‌ன‌மின்றி, சின்ன‌ச் சின்ன‌க் க‌ளிப்புக‌ளில் க‌வ‌ன‌மிழ‌ந்து ந‌ம்முன் நாமே வைத்து நட‌க்க‌த் துவ‌ங்கிய‌ இல‌க்கு நோக்கிய‌ ப‌ய‌ண‌ங்க‌ளில் பிச‌கும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துப் பார்க்க‌ வேண்டிய‌ விளையாட்டு வீர‌ர் ந‌ம‌து வினோத் காம்ப்ளி.... காம்ப்ளியின் க‌தையிலிருந்து பாட‌ம் க‌ற்றுப் ப‌ல‌ ச‌ச்சின்க‌ள் ப‌ல்வேறு துறைக‌ளிலும் உருவாக‌ வேண்டும்.... சுக‌வாசம் ப‌ழ‌கிவிட்டால் வாழ்வில் வ‌ன‌வாச‌ம் வ‌ந்தே தீரும் என்று எங்கெருந்தோ ம‌வுன‌ சாட்சியாகியிருக்கிறார் காம்ப்ளி....

அவ‌ரின் எதிர்கால‌ செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்பாக‌ இருக்க‌ வாழ்த்துவோம்!

பிர‌பு எம்

ஒரே ஒரு ச‌ச்சின்.. எத்த‌னை வினோத் காம்ப்ளிக‌ள்??



செய்தி: வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்...

37 வயதாகிவிட்ட வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு நாள் ஓய்வில்தானே இருந்தார் என்று மனதில் கேள்வி எழுந்தால் ஆச்சர்யம் அல்ல... அவர் கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2000ம் ஆண்டில்! ச‌ச்சின் ஒரு ச‌காப்த‌ம் என்றால் அவ‌ருட‌ன் இணையாய்க் கிள‌ம்பிய‌ காம்ப்ளி வெகுசீக்கிர‌ம் ம‌ற‌ந்துபோய் விட‌க் கூடிய‌ ஒரு வ‌ர‌லாறாகிப் போன‌த‌ற்கு முழுப்ப‌ங்கும் அவ‌ரையே சாரும்... ச‌ச்சினின் க‌தையைப் போல் காம்ப்ளியின் க‌தையும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌து... இவ‌ர்க‌ளின் எழுச்சியையும், காம்ப்ளியின் வீழ்ச்சியையும் அவை சொல்லும் பாட‌த்தையும் ப‌திய‌ முனைகிறேன்.....

குட்டிப் புயல்களாய் சச்சினும் காம்ப்ளியும் பள்ளிக் கிரிக்கெட்டில் 664 ரன்கள் குவித்து உலகசாதனை புரிந்தனர்... அடுத்த சில நாட்களிலேயே சச்சின் எனும் இளம்புயல் சர்வதேச கிரிக்கெட்டில் மையம் கொண்டது... சச்சின் எனும் ஒரு வரலாறு விதையாகி வேறூன்ற ஆரம்பித்திருந்த நாளில் மூன்று வருடம் கழித்து ஷார்ஜாவில் நடந்த விலஸ் டிராபி'91ல் பெவிலியனில் இருந்து புது பேட்ஸ்மேனாகக் கள்மிறங்கினார் வினோத் காம்ப்ளி... அதே போட்டியில் இந்திய அணியில் களம்கண்ட இன்னொரு புதுமுகம் ஜவகல் ஸ்ரீநாத்!!

ஆர‌ம்ப‌த்தில் த‌டுமாறினாலும் மிக‌விரைவில் ச‌ர்வ‌தேச‌ ஆடுக‌ள‌த்தைப் புரிந்துகொண்டு துடிப்பான‌ இளைஞ‌னாக‌ ஜொலிக்க‌த் தொட‌ங்கிய‌ காம்ப்ளியும், "எவர்கிரீன் அட்ராக்ஷன்" ச‌ச்சினும் இந்திய‌ அணியின் அப்போதைய‌ ர‌ஜினி-க‌ம‌ல் ஆனார்க‌ள்!! ஆஸ்திரேலியாவிட‌மும் பாகிஸ்தானிட‌மும் த‌வ‌றாம‌ல் ம‌ர‌ணஅடி வாங்கும் அன்றைய‌ இந்திய‌ அணியில் ஸ்ரீகாந்துட‌ன் சித்துவோ அல்ல‌து ர‌விசாஸ்திரியோ துவ‌க்க‌ ஆட்ட‌க்காரராக‌க் க‌ள‌மிற‌ங்குவ‌ர்... அதிர‌டி ஸ்ரீகாந்த் அவுட் ஆகிவிட்டால் அடுத்து க‌ள‌மிற‌ங்குப‌வ‌ர் கேப்ட‌ன் அசாருதீன்... அடுத்த இடமான பொறுப்பான 2- டவுனை (2-down) நீண்ட‌ நாட்க‌ளாக‌ ஆக்கிர‌மித்துவ‌ந்த‌ ச‌ஞ்ச‌ய் ம‌ஞ்ச்ரேக்க‌ரிட‌மிருந்து ச‌ச்சினுக்கு முன்பாக‌வே ப‌றித்துவிட்டார் காம்ப்ளி.... அசார்-காம்ப்ளி இணை அணியை ச‌ரிவிலிருந்து மீட்கும் வ‌லுவான‌ மிடிலஆர்டர் அஸ்திரமாகப் ப‌ல‌முறை புக‌ழ‌ப்ப‌ட்ட‌து.... அசார், காம்ப்ளி, ம‌ஞ்ச்ரேக்க‌ர் ஆகியோருக்கு அடுத்துக் க‌ள‌மிற‌ங்குவ‌தால் ச‌ச்சினால் கபில்தேவோடு இணைந்து நாற்ப‌து ஓவ‌ருக்கு மேலான‌ அதிர‌டி ஆட்ட‌ம் ம‌ட்டுமே ஆட‌ முடிந்தது.... அந்த‌ நேர‌த்தில் இங்கிலாந்திற்கு எதிரான‌ ஹோம்சீரிஸ் ஒன்றில் திடீரென்று த‌ன் முத‌ல் ச‌த‌ம‌டித்துக் க‌ல‌க்கினார் காம்ப்ளி!!

த‌ட‌த‌ட‌வென‌ முன்னேறிய‌ காம்ப்ளி ச‌ச்சினை மெல்ல‌ மெல்ல‌ ஓவ‌ர்டேக் செய்து ஸ்டார் அவ‌தார‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ எடுத்தாகிவிட்ட‌ நாட்க‌ளில் ச‌ச்சினும் காம்ப்ளியும் ப‌ங்குபெறும் பெப்ஸி விள‌ம்பரம் டிவிக்க‌ளில் மிக‌வும் ஹாட்டான‌து!! ஸ்பின்ன‌ர்க‌ளை ச‌மாளித்து ஆடுகையில் காம்ப்ளியின் அபார‌மான‌ ஃபுட் வொர்க் உல‌க‌ம் முழுவ‌தும் பிரிசித்து பெற்றுவ‌ந்த‌து... அதற்கேற்ப ஓர் ஒருநாள் போட்டியில் ஷேன் வார்னின் ஒரே ஓவ‌ரில் காம்ப்ளி அனாய‌ச‌மாக‌ 22 ர‌ன்க‌ளை விளாசித்த‌ள்ளினார்.... 90க‌ளில் ஷேன் வார்ன் ஓர் உயிர்வாங்கும் ப‌ய‌ங்க‌ர‌ சுழ‌ல் அஸ்திர‌ம் என்ப‌தையும், அப்போதைய‌ ச‌ராச‌ரி ர‌ன்ரேட்க‌ள் 3 அல்ல‌து 4 ஆக‌த்தான் இருக்கும் என்ப‌தையும் க‌வ‌ன‌த்தில் கொள்ள‌வேண்டும்! தொட‌ர்ந்து இர‌ண்டு இர‌ட்டை ச‌த‌ங்க‌ள் அடித்த‌ காம்ப்ளி கிட்ட‌த்த‌ட்ட‌ ச‌ச்சினை முந்திக்கொண்டு அணியில் த‌ன‌க்கென‌ ஓர் த‌னி இட‌த்தை முத்திரை வீர‌ராக‌ ஆட்கொண்டேவிட்டார் என்றுதான் சொல்ல‌வேண்டும்....

ம‌றுபுற‌ம் ச‌ச்சினுக்கோ தொட‌ர்ந்து சோத‌னைகள்... அருமையாக‌ ஆடிவ‌ந்தாலும் நிலையான‌ ஃபார்ம் இல்லாத‌து ச‌ச்சினுக்குப் பெரும் த‌லைவ‌லியாக‌ இருந்துவ‌ந்தது. பெரும் எதிர்பார்ப்புக‌ளால் க‌டுமையான‌ அழுத்த‌த்தையும் அவர் ச‌ந்தித்து வ‌ந்தார்... இருப்பினும் த‌ன்ன‌ம்பிக்கையுட‌ன் த‌ன் தொழிலில் ஆர்வ‌த்துட‌னும் சிர‌த்தையுட‌னும் தொட‌ர்ந்து செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌ ச‌ச்சினுக்கு ஒரு நியூசிலாந்து ப‌ய‌ண‌த்தில் நீண்ட‌நாள் காத்திருந்த‌ துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ர் வாய்ப்பு கிடைக்க‌த் த‌ன்னை முழுமையாக‌ நிலை நிறுத்திக் கொண்டார் மாஸ்ட‌ர் பேட்ஸ்மேன்!! தொட‌ர்ந்து சிற‌ப்பாக‌ ஆடிவ‌ந்த‌ ச‌ச்சின், "நீண்டநாட்களாகியும் ஒரு ச‌தம்கூட‌ அடிக்கவில்லை" எனத் தொடர்ந்து விம‌ர்சிக்க‌ப் ப‌ட்டுவ‌ந்த‌ க‌ள‌ங்க‌த்தையும் துடைத்தார், கொழும்புவில் ந‌ட‌ந்த‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் துவ‌க்க‌ ஆட்ட‌க்கார‌ராக‌ இற‌ங்கிய‌ ச‌ச்சின் த‌ன் ஒருநாள் போட்டியின் முத‌ல் ச‌த‌த்தைக் க‌ட‌ந்தார் அந்த‌ப் போட்டியில் 110 ர‌ன்க‌ளைக் குவித்திருந்தார்... அடுத்த‌டுத்து ச‌த‌ங்க‌ளைக் குவிக்கத் தொடங்கிய ச‌ச்சின் பின்னாளில் உல‌கில் யாருமே குவித்திராத‌ அள‌வுக்கு ச‌த‌ங்க‌ளைக் குவிப்பார் என்று அந்நாளில் அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ளே கூட‌ நினைத்திருக்க‌ மாட்டார்க‌ள்!!

ச‌ச்சினின் க‌வன‌மும் ஆர்வ‌மும் தொட‌ர்ந்து ர‌ன்குவிப்பிலேயே ஊறித்திளைத்துக் கொண்டிருந்த‌ அதேக‌ண‌ம் த‌ங்க‌ ந‌கைக‌ள் அதிக‌ம் அணிந்துகொள்ளும் ஆர்வ‌த்துக்காக‌ சில‌ ப‌த்திரிக்கைக‌ளில் க‌வ‌ர்ஸ்டோரி ஆனார் வினோத் காம்ப்ளி.... வித‌வித‌மான‌ கெட்-அப்க‌ளோடு ஆட‌ ஆர‌ம்பித்த‌ காம்ப்ளி ஷார்ட் பால்க‌ளுக்குத் (Short ball) தொட‌ர்ந்து இறையாக‌ ஆர‌ம்பித்தார்... ஹேர் ஸ்டைலையும், கேர்ள் ஃப்ரெண்டையும் அடிக்க‌டி மாற்ற‌த் துவ‌ங்கிய‌ காம்ப்ளி க‌ல்லி பொஸிஷ‌னில் (Gully Slips) ப‌ல‌முறைத் தொட‌ர்ந்து த‌ன் விக்கெட்டைப் ப‌றிகொடுத்தும்கூட‌ப் பிர‌ச்னைக்குரிய‌ த‌ன் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொள்ள‌வே இல்லை!!

1996ம் ஆண்டு வில்ஸ் உல‌க‌க்கோப்பை இந்தியாவில் ந‌ட‌ந்த‌போது காம்ப்ளி உள்ளிட்ட‌ப் ப‌ல‌வீர‌ர்க‌ளுக்குத் தெரியாது அது அவ‌ர்க‌ளின் த‌லையெழுத்தையே மாற்ற‌ப் போகிற‌து என்று!


தொட‌ரும்......


பி.கு

(ச‌ச்சினின் க‌தை இன்ஸ்பிரேஷ‌ன் என்றால் காம்ப்ளியின் க‌தை நம் அனைவ‌ருக்கும் ஒரு எச்ச‌ரிக்கைப் பாட‌ம்... திற‌மை, உழைப்பு, வாய்ப்பு மூன்றும் வாய்த்த‌போதும் காம்ப்ளி ஒரு தோல்வி நாய‌க‌னாய்ப் மாறிப்போன‌து துர‌திர்ஷ்ட‌ம்!! அவ‌ர் க‌தை முன்னேற‌த் துடிக்கும் ஒவ்வொரு இளைஞ‌னுக்கும் ஓர் எச்ச‌ரிக்கை ம‌ணி... ச‌ச்சினிட‌ம் do's ஐயும் , காம்ப்ளியிட‌ம் dont's ஐயும் க‌ற்றுக்கொள்ள‌ வேண்டும்!!)

ஷாருக்கானின் க‌ச‌ப்பான‌ அமெரிக்க‌ அனுப‌வ‌ம்!


உலகளாவிய பாலிவுட் ரசிகர்களின் "மோஸ்ட் வான்டட் ஹீரோ" ஷாரூக் கான் நியூஜெர்ஸி விமான நிலையத்தில் இரண்டு மணி நேரம் இம்மிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டடு சோத‌னைக்கு உட்ப‌டுத்த‌ப் ப‌ட்டிருக்கிறார்!!

விதிகளுக்கு உட்பட்ட சந்தேகக் காரணங்களால் இரண்டாம் கட்ட இமிகிரேஷன் சோதனைக்கு ஆட்படுத்தப் பட்டவர்களின் பட்டியலில் ஒரு சூப்பர் ஸ்டார் மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்டமே!! மிகவும் பொதுப்படையான பெயரைக் கொண்டிருப்பதால் இரண்டாம் கட்ட குடியேற்ற சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டார் என்பது அமெரிக்க அதிகாரிகளின் விளக்கம்...ஆனால் "இதுவரைத் தன் வாழ்வில் "ஷா ருக்" எனும் பெயரில் வேறு எந்தவொரு மனிதரையும் நான் சந்தித்ததேயில்லை அப்படியிருக்க எப்படிப் பொதுவான பெயராகக் கருத முடியும்?" இது ஷாரூக்கின் வாதம்... பிரச்னை "ஷாரூக்" இல் இல்லை இரண்டாவது பெயர் "கான்" இல் தான் இருந்திருக்கிறது!!!

"என் பெயர் கான்"(My Name is Khan) இதுதான் கரண் ஜோகர் இயக்கத்தில் ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் அடுத்த படத்தின் பெய‌ர்.... ஆனால் பாவ‌ம் இவர் பெயர் கான் என்று சந்தேகிக்கப் பட்டதாலேயே இவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்கிறார் மிஸ்டர். கான்!!

அமெரிக்க அதிகாரிகளைச் சொல்லியும் குற்றமில்லைதான்... அனைத்து விஜயகாந்த் பட வில்லன்களின் பெயரும் அநேகமாகக் "கான்" என்றுதானே முடிந்துத் தொலைக்கிறது!! உல‌க‌ளாவிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ப் போர்க‌ளினால் ஒட்டுமொத்த‌மாக‌ ஒரு ம‌த‌த்தின் பெய‌ரால் ஒரு சமூகமே துன்புறுவ‌து வேத‌னையாக‌ இருந்தாலும் அதற்கான‌ பதிலைப் பாதிக்க‌ப்ப‌டும் பொதும‌க்க‌ள் அந்த ம‌தத்தின் பெய‌ரால் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ச் செய‌ல்க‌ளில் ஈடுப‌டும் வ‌ன்முறையாள‌ர்க‌ளிட‌ம்தான் கேட்க‌ முடியும்...

ச‌ரி.. மாட்டிக்கொண்ட‌ ஷாருக்கிடம் வ‌ருவோம்.... ப‌ய‌ண‌ம் செய்த‌ பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான‌ம் ஏற்கென‌வே ஷாரூக்கின் ல‌க்கேஜ்க‌ளைக் கொண்டுவ‌ருவ‌தில் தாம‌த‌ம் நேர்ந்திருக்கிற‌து என‌வே நிச்சிய‌ம் நொந்து நூடுல்ஸாக‌த் தான் இமிகிரேஷ‌னுக்கே சென்றிருப்பார் ஷாருக்... அவ‌ரின் போர்ட்(Boarded) செய்ய‌ப்ப‌ட்ட‌ உட‌மைக‌ள் ம‌ட்டும‌ன்றி ஹேண்ட் ல‌க்கேஜ்க‌ளையும் கூட‌ சோத‌னை செய்திருக்கிறார்க‌ள் அதிகாரிக‌ள்... "நான் ஒரு ந‌டிக‌ன்... இங்கு அட்லாண்டிக் சிட்டியில் ஒரு ஷோ வுக்காக‌த்தான் வ‌ந்திருக்கிறேன்" என்று ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையைச் செய்துகொண்டிருக்கும் போது அப்பாவியாகப் புல‌ம்பியிருக்கிறார் "கிங் கான்"!!

"நான் மிக‌வும் அசௌக‌ரிய‌ப்ப‌ட்டேன்... மிக‌வும் கோப‌மாக‌வும் எரிச்ச‌லாக‌வும் உண‌ர்ந்தேன்... ந‌ல்ல‌வேளை என் குடும்ப‌த்துட‌ன் நான் வ‌ர‌வில்லை, வ‌ந்திருந்தால் என்னென்ன‌ இன்ன‌ல்க‌ளுக்கு ஆளாகியிருப்பேனோ!!... சுத‌ந்திர‌ தின‌த்தன்று எனது சுத‌ந்திர‌ இந்தியாவிலேயே நான் இருந்திருக்க‌லாம் போலும்!!" என்றெல்லாம் நொடித்துப் போய் இப்பொழுது முத்துதிர்த்திருக்கும் ஷாருக்... இவ்வாறு ந‌ட‌ப்ப‌து முத‌ன்முறைய‌ல்ல‌ எப்போதுமே அமெரிக்கா செல்லும்போது தான் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆட்ப‌டுவ‌தாக‌வும் முண‌கித் தீர்த்திருக்கிறார்....!!

ஷாரூக்கிற்கு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்....

"அமெரிக்கா செல்லும்போதெல்லாமே நான் க‌டும் அசௌக‌ரிய‌ங்க‌ளுக்கு ஆளாகிறேன்" என்று இப்பொழுது கதறும் பாலிவுட் பாட்ஷா... சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு பூச்சி ம‌ருந்து க‌ல‌ப்பு போன்ற‌ குற்ற‌ச்சாட்டுக‌ளால் பெப்ஸியை இந்தியாவில் த‌டை செய்ய‌க்கோரி மாண‌வ‌ர்க‌ளும் சுற்றுச்சூழ‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ளும் ஒட்டுமொத்த‌மாகக் கிள‌ர்ந்தெழுந்த‌போது இதே ஷாரூக் கான்,
"பெப்ஸியை இந்தியாவில் த‌டைசெய்தால் நான் அமெரிக்கா சென்று பெப்ஸி பான‌ங்க‌ளைப் ப‌ருகுவேன்!" என்று நிர‌ந்த‌ர பிராண்ட் அம்பாஸிடராக ஆண்டுதோறும் கூலி கொடுத்த‌ அமெரிக்க‌ முத‌லாளிக‌ளுக்காக‌ முந்திக்கொண்டு வ‌ந்து ஜால்ரா அடித்தார்... அடுத்த‌முறை மீண்டும் பெப்ஸிக்குப் பிர‌ச்னை வ‌ந்தால் தங்க‌ள் பெய‌ருக்குப் பின்னால் உள்ள‌ "கானை" நீக்கிக்கொண்டு அமெரிக்கா போய் பெப்ஸி குடிப்பீங்க‌ளா ஷாருக் சார்??!!

டெயில் பீஸ்:

இதே அமெரிக்க‌ விமான‌த‌ள‌த்தில் "மொஹ‌ம‌த் குட்டி" என்ற‌ இய‌ற்பெய‌ர் தாங்கியதால் ந‌ம்ம‌ "த‌ள‌ப‌தி தேவராஜ்" ம‌ம்முட்டியும் இதேபோன்ற‌தொரு அசௌக‌ரிய‌த்துக்கு ஆளாகியிருக்கிறார் ஆனால் அவ‌ர் இதைப் ப‌ற்றி யாரிட‌மும் முணுமுணுத்துக் கொண்டிருக்க‌வில்லை.... உண‌ர்ச்சி வேக‌த்தில் உளறித்தள்ளும் ஷாருக்கைப் பொறுத்த‌வரை யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ஃப்ளாஷ்பேக்கால் சொல்லிழுக்குப் ப‌ட்டு!!

பேருந்துக்குள் வன்முறை


(குறிப்பு: இது நான்குபேர் உருட்டுக்கட்டையுடன் வழிமறித்து வண்டியேறி அட்டகாசம் செய்த வன்முறையல்ல... கதை, திரைக்கதை வசனமெழுதித் திரைத்துறையினருடன் போக்குவரத்துத் துறை இணைந்து வழக்கமாகவே பேருந்துகளில் அரங்கேற்றப்படுகின்ற ஒரு வன்முறை!!)

குடும்ப அலுவலாகச் சென்னை சென்றிருந்தேன்... அங்கிருந்து திரும்ப மதுரைக்கு வர எப்போதும் செல்லும் பிரபல தனியார் டிராவல்ஸின் பஸ்ஸில் டிக்கெட் புக் செய்தோம்.. இதுவரை நான் அந்த டிராவல்ஸின் பஸ்ஸில் பயணித்தது எல்லாமே நள்ளிரவுப் பேருந்துகளில்தான்... அப்போதெல்லாமே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இரு இருக்கை வரிசைகளுக்கு இடையே உயரத்தில் அமைதியாகத் தொங்கிக்கொண்டு வந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன்.... அவர்களது பேருந்துகளில் திரைப்படங்கள் போடுவதில்லைப் போலும் என்று தப்புக் கணக்கு போட்டவனாக எப்போதும் போல் அதே கம்பெனி பஸ்ஸில் இம்முறை மாலை 7 மணி பஸ்ஸில் பயணமானேன்...

இதுவரை சும்மாவே தொங்கிக்கொண்டு வந்தே நான் பார்த்த அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி பயணம் ஆரம்பித்த‌ சில நிமிடங்களிலேயே உயிர்பெற்றது... ஓபனிங்கிலேயே பெருங்குரலெடுத்து மிரட்டத்துவங்கிய டிவிப்பொட்டியில் சிம்பு மற்றும் தனுஷ் குத்தாட்டம் போட்ட பாடல்கள் மாறி மாறி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.... இந்தப் பாடல்கள் எல்லாம் பிரபலமானதாக இருந்தும், சுதந்திர‌ இந்தியாவின் பேச்சுரிமை எழுத்துரிமை போன்ற பல உரிமைகள் பெற்ற குடிமகனாகிய நான் எனது சொந்த உரிமைகளின் பேரால் "பார்க்க வேண்டாம்" எனத் தவிர்த்திருந்த திரைப்படங்கள் இவை என்ற காரணத்தினால், இந்தப் பாடல்கள் எனக்குப் புதிதாக இருந்தன....

"சிலம்பாட்டம்" படத்தில் ஒருபாடலில் சிம்பு ஒரு கூட்டத்தோடு ஆடிக்கொண்டிருந்தார்... அவ்வப்போது சுற்றி ஆடுபவர்கள் அனைவரும் சுற்றி நின்று ஆர்ப்பரிக்க சிம்பு மட்டும் நடுவே தனியாவர்த்தண நடனம் (?) செய்வதாகக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது.... சிம்பு முழங்காலில் நின்றுகொண்டு "வெடுக் வெடுக்" கென எழுந்து நிற்கிறார்.... பின்பு முழங்காலில் நின்றவாறே கைகளைப் பின்பக்கமாகத் தரையில் ஊன்றிக்கொண்டு இப்பொழுது கால்பாதங்களைத் தரையில் பதித்து, மல்லாந்த உடலைக் கை ஊன்றித் தாங்கிக் கொண்டு கால்களை மேலே உதறுகிறார்... பிறகு மீண்டும் "வெடுக் வெடுக்" என எழுந்து அமர்கிறார்.... பின்னணியில் அதிரடிக்கும் குத்தாட்ட இசை வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது.... அந்த‌ ந‌ட‌ன‌க்காட்சியை என் ம‌ன‌துக்குள் இசையைத் தவிர்த்து 'ம்யூட்' செய்து பார்க்கையில்.... க‌டுமையான‌ ம‌ல‌ச்சிக்க‌லால் ப‌ல‌ச்சிக்க‌லுக்கு ஆளாகிவிட்ட‌ ஓர் இளைஞ‌ன் காலையில் ஃப்ரீயாக‌ப் போவதற்காக‌ மேற்கொள்ளும் க‌டும் பிர‌ய‌த்த‌ன‌ங்கள் இவை என்று டைட்டில் போட்டுக் காட்டினால் ந‌ம்பும் மாதிரியாக‌ இருந்த‌து!!

இவ்வாறாக‌ செங்க‌ல்ப‌ட்டு தாண்டி எங்கோ ஒரு மோட்டலில் சாப்பாடுக்காக‌ நிறுத்தினார்க‌ள்.... சாப்பிட்டு ஏறிய‌தும் அதே டி.வி மீண்டும் உயிர்பெற்று எழுந்த‌து!
இம்முறை ஒரு திரைப்ப‌ட‌ம்.... க‌லாநிதி மாற‌ன் வ‌ழ‌ங்கும், த‌னுஷ் ந‌டிக்கும் என்று பில்ட‌ப் கொடுத்து "ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தைப் போட்டார் டிரைவ‌ர்.... அடுத்த‌ சில‌ நொடிக‌ளிலேயே புரிந்தது இத்த‌னை நாள் இந்த‌ ப‌ஸ்ஸில் நான் அல‌ட்சிய‌மாக‌ப் பார்த்துவ‌ந்த‌ அந்த‌த் தொலைக்காட்சி இய‌ந்திர‌ம் தூங்கும் ஓர் மிருகம் என்று! அது விழித்துக் கொண்டால் என்னென்ன‌ அவ‌ல‌ங்க‌ளை உருவாக்கும் என்ப‌த‌ற்கு நான் க‌ண்ணால் க‌ண்ட ஒரு சாட்சியானேன்!!

"ப‌டிக்காத‌வ‌ன்" ப‌ட‌த்தை நான் பார்த்திருக்க‌வில்லை... ஆனால் அதுவொரு வெற்றிப் ப‌ட‌ம் என்று கேள்வியுற்றிருக்கிறேன்.... வ‌ன்முறையாக‌ அந்த‌ப் ப‌ட‌த்தைப் பார்த்தேயாக‌ வேண்டுமென்று நிர்ப‌ந்திக்க‌ப் ப‌ட்ட‌தில் நான் பார்த்த‌வ‌ரை அப்ப‌ட‌த்தில் ச‌த்த‌த்தையும் ர‌த்த‌த்தையும் த‌விர‌ வேறெதுவுமே இல்லை! ஸ்பென்ஸ‌ர் ப்ளாஸாவிலும் ஆந்திராவின் ஒரு ப‌ப்ளிக் மார்க்கெட்டிலும் துப்பாக்கி ம‌ற்றும் வாள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் தாங்கிய‌ இர‌ண்டு ப‌டைக‌ள் பெரும்போர் புரிகின்ற‌ன‌... மூன்று நான்கு ர‌வுடிகளைப் போர்வீர‌ர்க‌ளுட‌னும் அர‌ண்ம‌னையோடும் குறுநில‌ ம‌ன்ன‌ர்க‌ளாக‌க் காட்டுகிறார்க‌ள்.... அட‌ எதுக்கு இந்த டுபாக்கூர் ப‌ட‌த்த‌ப் ப‌த்தி இவ்ளோ பேசிக்கிட்டு.... கேவ‌ல‌மான‌ ஒரு குப்பைப் ப‌ட‌ம் பாஸ்.... ப‌ஸ்ஸூக்குள்ள‌ ஏத்தி மூச்சுத் திண‌ற‌த் திண‌ற‌ முழுப் ப‌ட‌த்தையும் போட்டுக்காட்டித் திருச்சி வ‌ரைக்கும் சாவ‌டிச்சுட்டுதான் விட்டாங்க...

இப்போ மேட்ட‌ருக்கு வ‌ர்றேன்....

பேருந்துக‌ளுக்குள் க‌ண்டிப்பாக‌த் திரைப்ப‌ட‌ம் போட‌வேண்டுமா?

இது வியாபார‌ உல‌க‌ம்... ந‌ட‌ந்துகொண்டிருப்ப‌தோ "இல‌வ‌ச‌" யுக‌ம்....
வார‌ இத‌ழ் வாங்கினால் சிம்கார்டு இல‌வ‌ச‌ம்.... காஃபித்தூள் வாங்கினால் பாத்திர‌ம் துல‌க்கும் ஜெல் இல‌வ‌ச‌ம்... ஏன் வோட்டு போடுற‌துக்கு இல‌வ‌ச‌மா ஹாட்கேஷ் (hot cash) கொடுக்கும் அள‌வு வ‌ந்துவிட்ட‌ இந்த‌ உல‌கில் ப‌ஸ்ஸில் டிக்கெட் வாங்கினால் இல‌வ‌ச‌மாக‌ ஒரு ப‌ட‌ம் போடுவ‌து சாதார‌ண‌ம்தான்... ஆனால் கோதுமை ரொட்டி வாங்கினால் ரெண்டு வாழைப்ப‌ழ‌ம் இல‌வ‌ச‌ம் என்று கையில் கொடுத்தால் ஓகே... ஆனால் வாங்குப‌வ‌ன் ச‌ர்க்க‌ரை நோயாளியாக‌ இருந்தாலும் கூட‌ கோதுமை ரொட்டி வாங்கிவிட்டாய் என்று இல‌வ‌ச‌ வாழைப்ப‌ழ‌த்தை வ‌ன்முறையாக‌ வாயில் திணித்தால்???... அதுபோன்ற‌தொரு ம‌னித‌ உரிமை மீற‌லாக‌த்தான் என‌க்குத் தெரிகிற‌து பேருந்துக்குள் இப்படி ம‌கா ச‌த்த‌மாக‌ப் ப‌ட‌ம் போட்டு மிர‌ட்டுவ‌து! "உன‌க்குப் பிடிக்குதோ பிடிக்க‌லையோ போடுற ப‌டத்த நீ பாத்துத்தான் ஆகணும்... என்ன‌து தூங்கிடுவியா??...அடீங்க்க‌... ம‌வ‌னே எங்க‌ ஹீரோ ப‌ற‌ந்து பறந்து தாவி... தார‌ த‌ப்ப‌ட்டையெல்லாம் தெறிக்க‌ வில்ல‌னை வ‌த‌ம் செய்யுற‌ ச‌வுண்டு எஃபெக்ட்ல‌ நீ எப்டி டா ராசா தூங்குவ‌!!" என்று க‌ண்ட‌க்டர் க‌லாய்க்காத‌ குறைதான்....

சரி... லீக‌லா ஒரு லா பாயிண்ட்டு வைக்கிறேன்..... எல்லா திரைப்ப‌ட‌ங்களிலும் டைட்டில் கார்டு போடுவ‌த‌ற்கு முன்பாக‌ ச‌ம்பிர‌தாய‌மாக‌ இன்றும் கூட‌ "யு" , "ஏ" , "யுஏ" என்றெல்லாம் சென்சார் போர்டு ச‌ர்டிஃபிகேட்டுக‌ள் போடுகிறார்க‌ள்.... 18 வ‌ய‌து வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் என்று (ஏட்டில் ம‌ட்டும்) சில‌ க‌ட்டுப்பாடுக‌ள் இன்றும் இருக்கிற‌து... அட்லீஸ்ட் இதை வெகுசில‌ வீட்டிலாவ‌து சில‌ பெற்றோர்க‌ள் பின்ப‌ற்றுகிறார்க‌ள்.... இப்ப‌டி பொத்தாம் பொதுவாக‌ ஆபாச‌ம் வ‌ன்முறை என்று எந்த‌க் கட்டுப்பாடும் இல்லாம‌ல் ஏற‌க்குறைய‌ எல்லா ப‌ஸ்ஸிலுமே திருட்டு விசிடிக் க‌ளில் ப‌ட‌ம் போடுகிறார்களே.... ஆபாச‌ போஸ்ட‌ர்க‌ளில் சாய‌ம் அடிக்கும், தியேட்ட‌ர்க‌ளை உடைக்கும் ந‌ம‌து "க‌லாச்சார‌ பாதுகாவ‌ல‌ர்க‌ள்" இதையெல்லாம் க‌ண்ட‌தே இல்லையா???

ப‌ர்ச‌ன‌லாக‌ அன்றைக்கு நான் பேருந்தில் வ‌ந்த‌ ச‌ம‌ய‌ம் விப‌த்தில் ப‌லியான‌ உற‌வின‌ரின் வீட்டுக்கு சென்றுவிட்டு வ‌ந்து கொண்டிருந்தேன்... இப்ப‌டிப் ப‌ல‌ரும் ப‌ல‌ க‌வ‌லைக‌ளுட‌னும் நிம்ம‌தியான‌ ஒரு ப‌ய‌ண‌த்தைத் தேடி வ‌ந்து அம‌ர்ந்திருக்க‌லாம்... அந்த‌ வேளைக‌ளில் அத்துமீற‌லாக‌ இப்ப‌டிப்ப‌ட்ட‌ திரைப்ப‌ட‌ங்க‌ளை வ‌ம்ப‌டியாக‌த் திணிப்ப‌து என்ன‌ ம‌னிதாபிமான‌மோ தெரிய‌வில்லை.....

பேருந்துக‌ளில் ப‌ய‌ண‌க்க‌ளைப்பு இல்லாம‌ல் இருக்க‌ வாத்திய‌ இசை இசைக்க‌லாம்... அல்ல‌து ப‌ய‌னுள்ள‌ சில‌ வீடியோக்க‌ளைக் கூட யாருக்கும் கஷ்டம் தராத வண்ணம் ஒளிப‌ர‌ப்ப‌லாமே.... அட‌... அப்போகூட‌ த‌மிழ‌னுக்கு சினிமாதான் வேணுமா?? அம‌ர‌ர் ஊர்திக‌ளிலும் ஆம்புல‌ன்சிலும் நான் ப‌ய‌ணித்த‌து இல்லை.. அதில் கூட‌ திரைப்ப‌ட‌ம் போடுகிறார்க‌ளா?? தெரிந்த‌வ‌ர்க‌ள் சொல்லுங்க‌ள்...

பிர‌பு. எம்