பாட்டி கதை (சிறுகதை - பாகம் 2)

சென்ற‌ இடுகையின் தொட‌ர்ச்சி.......

மஞ்சள் நிற மாலை வெயிலில் கூட வெப்பத்தின் தடயங்கள் தோய்ந்திருக்கின்றன அந்தக் கிராமத்தில்... கரடுமுரடான பாதையில் கவனமாகக் காரை செலுத்துகிறார் ஓட்டுநர்... குளிரூட்டப்பட்ட பின்னிருக்கையில் ஜீவா!! அதே பாதை... ஆனால் இம்முறைப் பயணமோ தன் அணுதின வாழ்வை நோக்கி... அந்தக் காரிலும் சரி அவன் வீட்டிலும் சரி இன்னும் இடம் நிறையவே உள்ளது எனினும் பாட்டியின் நினைவுகளை மட்டும் முடிந்தவரை அந்தக் காரில் நிரப்பிக்கொண்டுப் பாட்டியை அந்த‌ச் சிறிய‌ வீட்டிலேயே விட்டுவிட்டுதான் சென்றுகொண்டிருக்கிறான்.... தன்னுடன் வந்துவிடுமாறு பாட்டியிடம் ஜீவா இறுதிவரை ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லை!! எப்படித் திடீரென்று என்னைத்தேடி வந்தான் என் பேரன்?? என்று இந்நேரம் பாட்டி நினைத்துக்கொண்டிருக்கலாம் ஆனால் அந்த அழகிய கிராமத்துக் குடில் இன்று சந்தோஷத்தால் நிரம்பிப்போனது மட்டும் நிதர்சனம்.. இயல்பாகப் பனித்திருந்த கண்களைத் தன் கையால் துடைக்கையில் வலதுகையில் பருப்புருண்டைக் குழம்பு வாசம்!!!

சமையலறையில் பாட்டி சமைத்துக் கொண்டிருந்த‌ போது ஜீவா ஓர் அண்டாவைக் கவுத்திப்போட்டு அதன்மேல் அமர்ந்துகொண்டு பாட்டியின் ஒவ்வோர் அசைவையும் அதிசியத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... விடாது பல கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள் பாட்டியும் பேரனும்!!! சட்டியில் குழம்பு கொதிக்கத் துவங்கிவிட்டது.... பாட்டியோ, வீட்டின் பின்புறம், கொள்ளைப்புற வாழைமரத்தில் இலைவெட்டிக்கொண்டிருந்தார்.... வேகமாக ஓடிவந்து சரியான நேரத்தில் குழம்பைச் சட்டியிலிருந்து இறக்கிவைத்து... ஒருமுறை ருசிபார்த்தபின்புதான் சந்தோஷமாய்ப் பரிமாறினார் தன் கைமணத்தை!!!.... மீண்டும் தனது கையை முகர்ந்து பார்க்கிறான் ஜீவா... பாட்டி வாசம்!!! .....செல்போன் அழைக்கிறது.... மறுமுனையில் அஞ்சலி!! "சொல்லுங்க....சொல்லுங்க.... என்ன ஆச்சு?? பாட்டி ஹேப்பியா??" ஜீவாவுக்கு இணையான ஆர்வமிகுதியில் அஞ்சலி துவங்க மீதமுள்ள பயணம் இனிமையாய் நகர்ந்தது....

"இனிமேலும் என் பாட்டியைத் த‌னிமையில் த‌விக்க‌விட‌ மாட்டேன்" என்று சூளுரைத்துக் கிள‌ம்பிய‌வ‌ன் பாட்டியைத் த‌ன்னுட‌ன் வந்துவிடுமாறு சொல்ல‌க்கூட‌ இல்லை என்ப‌து புதிராக இருந்தது அஞ்ச‌லிக்கு!! ஜீவாவோ, "ராஜா மாதிரி இருக்க வேண்டிய என் பேர‌ன் இப்படி நகர வாழ்வில் சிக்கித் தவிக்கிறானே!!" என்று தனக்காகப் பாட்டி வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை எப்ப‌டிப் புரியவைப்பேன் நான்??? என்று ம‌ன‌துக்குள் குழ‌ம்பிக் கொண்டிருந்தான்!!!!

த‌ன்னையும் த‌ன் வ‌ள‌ர்ச்சியையும் க‌ண்டுப் பெருமித‌ப் ப‌டுப‌வ‌ர்க‌ளை ம‌ட்டும்தான் க‌ட‌ந்த‌ சில ஆண்டுகளாகவே பார்த்திருக்கிறான் ஜீவா....ஆனால் த‌ன்மீது பேர‌ன்பு கொண்ட தன் பாட்டியோ தன் வாழ்வை நினைத்துத் தனக்காகப் பரிதாபப் பட்டுக்கொண்டிருக்கிறார் என்று அறிந்தபோது அதிர்ந்து போய்விட்டான் ஜீவா!!! அஞ்சலியும் மௌனமாகிப் போனாள்!!! 'சிட்டியிலேயே ரொம்ப‌க் காஸ்ட்லியான‌ அபார்ட்மெண்டில் சொந்த‌வீடு, இவ்வ‌ள‌வு சின்ன‌ வ‌ய‌சிலேயே வாங்கியிருப்பதுதான் ப‌ரிதாப‌நிலையா???' என்று இப்போது கேட்கும் அஞ்ச‌லியைப் போலத்தான் ஜீவாவும் எண்ணினான்.... ஆனால் பாட்டி,

"ஒரே க‌ட்ட‌ட‌த்துக்குள்ள மூச்சப் பிடிச்சுக்கிட்டு நாப்ப‌த்துயேழு வீட்டக் கட்டிவெச்சிருக்கான் ....வாசக்க‌த‌வ‌க்கூட‌ திற‌ந்து வெச்சுக்க‌ முடிய‌ல‌... ஆசையா ஓர் ஆட்டுக்குட்டி வ‌ள‌ர்க்க வழியிருக்குமா??"

என்று கேட்டால் பாவம் என்னதான் பதில் சொல்லுவான் ஜீவா!!! பூமியைத் தொழுது நிலத்தை உழுது வாழும் ம‌ண்வாச‌னை ம‌னித‌ர்க‌ளுக்கு சொந்த‌ பூமியில் வேய்ந்த குடிசை பெருமித‌மாக‌வும், அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆட‌ம்ப‌ர‌வீடுக‌ள் அந்த‌ர‌த்தில் அம்மாஞ்சிகள் வாங்கிப்போடும் அசையா சொத்தாக‌வும்தான் தெரிகிறது போலும்!! அடுக்குமாடிக‌ளின் இன்றிய‌மையா தேவையான‌ லிஃப்டுக‌ளை ம‌னித‌ர்களின் வெளிஉல‌க‌த்தொட‌ர்பைத் துண்டிக்கும் வில்லனாக‌ விம‌ர்சிக்கிறார் பாட்டி!! (பாட்டிக்கு லிஃப்டை இயக்க‌த்தெரியாது.... ப‌தினோருமாடிக்கு ப‌டிக்க‌ட்டில் போவ‌தும் முடியாத‌ காரிய‌ம்.. அந்த‌ ஆற்றாமைதான்!!)

இதையெல்லாம் கூட‌ப் பொறுத்துக் கொண்டான் ஜீவா... மிக‌ப்பெரிய சாக்லேட் க‌ம்பெனியின் ரீஜின‌ல் ஹெட் என்ற தன்னுடைய அல‌ங்கார‌ப் பத‌வியைப் பாட்டி, த‌ன் பேர‌ன் ஒரு "மிட்டாய் க‌ம்பெனி"யில் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு உழைத்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் கணித்திருக்கிறார் என அறிந்த கணத்தில் பாட்டியின் மனதில் வாழ்ந்துகொண்டிருக்கும் "ஜீவா"வின் வறுமை (!) நிலையைப் புரிந்துகொண்டுப் பேச வார்த்தையின்றி அமைதியானான்!!! அதோடு விடாமல் பாட்டி, ப‌க்க‌த்து வீட்டு அல‌மேலுவின் ம‌க‌ன் அந்த‌ கிராம‌த்தில் ப‌டித்த‌வ‌ன்தான் என்றாலும் ஒரு பெரிய்ய்ய்ய‌ மோட்டார் க‌ம்பெனியில் வேலைபார்ப்ப‌தாக‌ப் பெருமையாய்க் கூறினார்!! "என் பேர‌ன் பாவ‌ம்ப்பா உன்னைவிட‌ அதிக‌மாப் ப‌டிச்சிட்டு ஏதோவொரு மிட்டாய் க‌ம்பெனியில‌ வேலை பாத்துட்டு இருக்கான்... உன்ன‌ப்போல‌ ந‌ல்ல‌ பெரிய‌ க‌ம்பெனில‌ உத்தியோக‌ம் எதுவும் கிடைச்சா அவ‌னுக்கும் சொல்லுப்பா!!" என்று அவ‌னிட‌ம் பாட்டி சொல்லி வைத்திருந்ததை நல்லவேளை ஜீவா அறிந்திருக்கவில்லை!!... ஜீவாவின் க‌ம்பெனியில் அவ‌னுக்குக் கார் எல்லாம் கொடுத்திருக்கிறார்களே... அட.. அந்த‌ப் பைய‌னையும்தான் ஒரு பெரிய‌ வ‌ண்டியில் வைத்து சக மெக்கானிக்குகளுடன் வேலைக்கு தின‌மும் அழைத்துப் போகிறார்களே!!!

எக்க‌ச்ச‌க்க‌மாய் Damage ஆகிப்போயிருக்கும் தன் ஜீவாவுக்கு ஆறுத‌ல் சொல்ல‌வா?... என்ன‌ சொல்லவோ? என்று மௌன‌மாகவே இருந்தாள் அஞ்சலி, இன்னொருபுற‌ம் அவனது பேச்சைவைத்து இந்த‌க் கணம் அவ‌ன் முக‌த்தைக் கணித்துப் பார்க்கையில் அவளுக்குக் கொஞ்ச‌ம் சிரிப்பும் வ‌ந்த‌து...!! இவற்றையெல்லாம் தாண்டி.. அந்த‌ச் சிறிய‌ கிராம‌த்து வீட்டில் வ‌சிப்ப‌தில் பாட்டியிட‌ம் ஒரு க‌ம்பீர‌த்தைக் கவனித்தான் ஜீவா..... தாத்தாவுடைய‌ ப‌டைபுலன்க‌ளுட‌ன் தான் வாழ்ந்த‌ பெரிய‌ வீட்டைப் புற‌க்க‌ணித்துவிட்டு, க‌ண‌வ‌ன் ம‌னைவியாய் ஆர‌ம்ப‌கால‌த்தில் அவர்கள் வாழ்க்கையைத் துவ‌க்கிய, வ‌ச‌திக‌ள‌ற்ற இந்தச் சிறிய‌ வீட்டில் பாட்டி தனியாக வாழ்ந்துவருவதில் ஏதோவொரு ஜீவனுள்ள அர்த்தமுள்ளது என்றும் இது த‌ன் த‌ந்தையும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எண்ணுவ‌தைப்போல வெறும் "வ‌ற‌ட்டுப் பிடிவாத‌ம்" கண்டிப்பாக இல்லை என்றும் ஜீவாவால் தெளிவாக‌ உண‌ர‌முடிந்த‌து......

இர‌வுநேர‌த் த‌னிமை ஜீவாவுக்கு மிக‌வும் பிடித்த‌மான‌து.... தின‌மும் இர‌வில் த‌ன் த‌னி அறையில் ம‌ன‌துக்குப் பிடித்த‌மான‌ ச‌ங்கீத‌த்தைத் த‌ன‌க்கு ம‌ட்டும் கேட்கும் ர‌க‌சிய‌ ஒலிய‌ள‌வில் கேட்டுக்கொண்டே தன் ம‌ன‌துட‌ன் கொஞ்சதூரம் "வாக்கிங்" போய்தான் தூக்க‌த்தைப் பிடிப்பான்... இன்று போகும் பாதையின் தூர‌ம் அதிக‌மாக‌ப் புல‌ப்ப‌டுகிற‌து!!
"பாட்டி வீடு" என்று தனக்கொரு இடம் பூமியில் இன்னும் எத்தனை நாள் இருக்கும்?? இன்று நாள்முழுதும் கேட்ட‌ அந்த‌க் கணிந்த‌ குர‌ல் இன்னும் எவ்வ‌ள‌வு நாள் ஒலிக்கும்...???.... இன்று உற‌ங்கிவிடுவ‌து அவ்வ‌ள‌வு எளித‌ல்ல‌ என்று புரிந்த‌து!!

பாட்டிவீட்டுச் சுவ‌ரில் க‌ம்பீர‌மாய் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் புகைப்ப‌ட‌ம் ம‌னதைக் காரணமின்றி வ‌ட்ட‌ம‌டித்துக் கொண்டேயிருந்தது... தான் புகைப்ப‌ட‌த்தில் ம‌ட்டுமே க‌ண்டிருக்கும் தன் தாத்தா, மிக‌க் க‌ம்பீர‌மாக‌த் த‌ன்னுடைய‌ பெருமித‌ அடையாள‌மான, அவருடைய‌ கார் அருகில் வைத்து எடுத்துக்கொண்ட‌ ப‌ட‌ம் அது!!
அந்த‌க் கிராம‌த்து ம‌ண‌ல்வெளியில் முத‌ன்முத‌லில் கார் ட‌யரின் அச்சுப்ப‌தித்த‌ பெருமைக்குரிய‌வ‌ர் அவ‌ர்!! அந்த‌ப் பெருமையை இன்றும் பாட்டி ச‌ந்தோஷ‌மாய்ச் சும‌ந்துவ‌ருகிறார் த‌ன் ஊருக்குள்!! இன்றைய உலகில் சாதார‌ண‌மாகிப் போய்விட்டாலும்... டிராஃபிக், பார்க்கிங்.. என‌ ஆயிர‌ம் இன்ன‌ல்க‌ள் இருந்தாலும்... "கார்"... தேவையும் ஆசையும் ஒருங்கே ஈடேறும் ஓர் அழ‌கிய‌ முத‌லீடு!! "தாத்தாவின் அந்த‌க் கார் இப்போது எங்கே??" கேள்விக்கு ஜீவாவிடம் போதுமான தகவல் இல்லை!... தாத்தா முக‌த்தின் பெருமித‌ப் புன்னகையோடு இன்றுவரைப் பாட்டியை அக‌ம‌கிழ‌ச்செய்கிற‌துபுகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ அந்தப் ப‌ழைய‌ மெட்ட‌லிக் ர‌த‌ம்!! கம்பெனி காரில் சென்றதைவிட சொந்த‌மாய் வாங்கிய‌ காரில் சென்று பாட்டி வீட்டுவாச‌லில் இற‌ங்கியிருந்தால் தன் பேர‌னின் செழிப்பை நிச்சிய‌ம் உண‌ர்ந்து உள‌ம் ம‌கிழ்ந்துபோயிருப்பார் பாட்டி என்று உறுதியாக‌த் தெரிந்த‌து ம‌ன‌துக்கு!!! இந்தத் திடீர் சிந்த‌னை மின்ன‌லில் ஜீவாவின் உள்ளுண‌ர்வுக‌ள் பிர‌காச‌ம‌டைந்த‌ன‌!!! ச‌ந்தையின் ச‌மீப‌த்தைய‌ ஆட‌ம்ப‌ரக் கார்களைக்கூட‌ சொந்த‌மாக்கிக் கொள்ளுமள‌வு வாங்கும் திற‌னுள்ள‌ ஜீவா பாட்டி ம‌ற்றும் கார் க‌ன‌வுக‌ளுட‌ன் தூங்கிப்போனான்!!

வேக‌மாய் விடிந்துவிட்ட‌து பொழுது..... முதுகைத் த‌ட்டிக்கொடுத்து ஆமோதித்தார் ராஜ‌கோபால‌ன் தன் ம‌க‌னின் கார் வாங்கும் திட்டத்தை!! வங்கிக‌ள் எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் லோன் த‌ர‌க்காத்திருப்ப‌தால் (க‌தைக்க‌ள‌த்தில் recission-ன் தாக்க‌ம் இல்லை!!)திரும‌ணச் செல‌வுக‌ளில் கார் குறுக்கிட‌ப் போவ‌தில்லை!! அடுத்தக்க‌ண‌மே ஃபோன் கால் ப‌ற‌ந்த‌து அஞ்ச‌லிக்கு.... அம்முனையும் ஆன‌ந்த‌ம‌ழை!!
"என்ன‌ கார் வாங்க‌லாம்??" என்ற‌ மில்லிய‌ன் டால‌ர் கேள்வியை அஞ்ச‌லியின் இஷ்ட‌த்துக்கு விட்டுவிட்டான் ஜீவா... ஆனால் த‌ன‌க்கு luxury கார் ப‌ற்றியெல்லாம் ஞான‌ம் அதிகம் கிடையாது என்று சொல்லிக் க‌ழன்றுகொண்ட‌ அஞ்ச‌லி த‌ன‌க்குப் பிடித்த‌ மெட்டாலிக் க‌ரும்ப‌ச்சை நிற‌ம் அமைந்தால் ம‌கிழ்ச்சி என்று ம‌ட்டும் கோரிக்கை வைத்தாள்!!!

"பாட்டிகிட்ட‌ சொல்லியாச்சா....??" ஆர்வமாய்க் கேட்ட அஞ்சலியிடம்...
"நேர்ல‌ போறேன்.. என் பாட்டியோட‌ப் ப‌ல்விழுந்த‌ சிரிப்பு பார்க்க‌..!!" சொல்லிக் கிள‌ம்பினான் ஜீவா!!!

முன்கூட்டி சொல்லாம‌ல்தான் இம்முறையும் பாட்டியின் முன்னால் போய் நின்றான் ஜீவா!!! மீண்டும் பேரனைக் கண்ட அதிர்ச்சி வில‌காத‌ பாட்டியை அப்ப‌டியே தாத்தாவின் ஃபோட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்று... "உன் பேர‌னும் கார் வாங்க‌ப் போறான் பாட்டி!!!" என்று போட்டுடைத்தான்.....

என்னவொரு த‌ருண‌மது!! "ஏழைப்பேர‌ன்" லாட்ட‌ரி அடித்தது போல் திடீரென பாட்டியின் ம‌ன‌தில் உச்ச‌த்துக்குப்போய் வெற்றிக்கொடி நாட்டினான்!!! இந்த‌ ம‌கிழ்ச்சிப் பேர‌லைக‌ளை அந்த‌ இத‌யத்தால் தாங்கமுடியுமா?? என்று ச‌ந்தேகமே வ‌ந்துவிட்ட‌து ஜீவாவுக்கு.... ஆன‌ந்த‌மாய்த் தாத்தா ஃபோட்டோ ப‌க்க‌ம் திரும்பி கைகூப்பி ஏதோ முணுமுணுத்துப் பேர‌னின் நெற்றியில் ப‌க்தியுட‌ன் தில‌க‌மிட்டார் பாட்டி... குழந்தையாய் சிரிக்கும் சந்தோஷப் பாட்டியிடம், தேர்வு செய்வ‌த‌ற்காக‌ வைத்திருக்கும் மிக‌வும் விலையுய‌ர்ந்த‌ லேட்ட‌ஸ்ட் ஆட‌ம்ப‌ர‌ ம‌கிழ்வுந்துக‌ளின் ப‌ட‌ங்க‌ளைத் தாங்கிய‌ மோட்டார் இத‌ழ்களைக் காட்ட‌ ஜீவா வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்..... அப்போது பாட்டி ச‌ற்று சீரிய‌ஸாக‌ ஜீவாவின் அருகில் வ‌ந்து....

"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!" என்று சொல்ல‌ ஒரு நொடி திகைத்து நின்ற‌ ஜீவாவுக்கு கார் மீது லாரி மோதிய‌துபோல் இருந்த‌து!!

அப்ப‌டியே நின்றுவிட்ட‌ ஜீவாவிட‌ம் பாட்டி, இப்போது வ‌ந்திருக்கும் ப‌ல‌ கார்க‌ளைத் தான் பார்த்திருப்ப‌தாக‌வும் அந்த‌க் கால‌க் கார்க‌ளின் வ‌லுவான‌ உறுதி எதிலும் இல்லையென்றும்... காசுபோட்டுக் காரை வாங்கிக் காலை ம‌டக்கிக் குனிந்து அம‌ர்வ‌து அசௌக‌ரிய‌ம் என்றும் அடுக்கிக்கொண்டே போனார்!!! க‌வ‌ன‌மாக‌ ந‌ல்ல‌ அம்பாசிட‌ர் காராக‌ப் பார்த்துவாங்குமாறு பேரனுக்கு சீரிய‌ஸாக‌ அறிவுரை சொன்ன‌ பாட்டி ஜீவா சொல்ல‌ வ‌ந்த‌ எதையும் ஏற்ப‌தாக‌ இல்லை!!

வெள்ளையாக‌ விழுந்து விழுந்து ஃபோனில் சிரிக்கிறாள் அஞ்ச‌லி!!! ஜீவா ஃபோனைக் காதில் வைத்திகொண்டு அப்பாவியாய் பாட்டி சொன்ன‌தையெல்லாம் சொல்ல‌ச் சொல்ல‌ சிரித்து ர‌சித்த‌ அஞ்ச‌லி , "இப்போ என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?? அம்பாசிட‌ர் கார் லேட்ட‌ஸ்ட் மாட‌ல் புக் ப‌ண்ணிடுவோமா!!" என‌க் குறும்பாய்க் கேட்க‌ ஜீவாவும் த‌ன் பாட்டியின் உல‌க‌ம‌றியா குழந்தைத்த‌ன‌த்தை நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.....!!

"பாட்டிக்காக‌த்தான் கார் வாங்குற கான்செப்டே ம‌ன‌சுல‌ வ‌ந்திச்சு அதுல இப்பவும் எந்த‌ மாற்ற‌மும் இல்ல‌... பாட்டியோட விருப்பப் படி வாங்கினால்தான் அதுல அர்த்தமே இருக்கு.... அந்த அப்பாவி மனுஷியோட மனச இன்னும் கொஞ்சம் ஆழமா படிக்க‌ ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவ்ளோதான்!!!"... என்றும் பாட்டியைத் த‌ன் தொழில்சார்ந்த‌ பேச்சுத்திற‌னால், தான் வாங்க‌ எண்ணியிருக்கும் காரையே வாங்க‌ச் சொல்ல‌வைக்க தன்னால் மிக‌ எளிதில் முடியும் ... ஆனால் தான் அவ்வாறு செய்ய‌ப் போவ‌தில்லையென்று உறுதியாக‌ இருந்த‌ ஜீவாவிட‌ம் அஞ்ச‌லி.. "இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!" என்று க‌லாய்க்க‌ ஆரோக்ய‌மான‌ இந்த‌ ச‌வாலை ஜீவா ஏற்றுக்கொண்டான்!!!

பிரபு. எம்
தொட‌ரும்.....

(மூன்றாவ‌து பாக‌த்தில் முடிவ‌டையும்!)

2 comments:

Anonymous said...

வாழ்க்கையில் நமது உயர்வைக் கண்டு புகழும் மற்றவர்களுக்கு இடையே தமது பேரனின் மகிழ்ச்சியினை மட்டும் பார்க்கும் பாட்டி.அவனது உள்ளத்தை புரிந்தப் பாட்டி; அவனது தேவைகளை அறிந்த பாட்டி; அஞ்சலியை அறிந்த மனதிற்கு அவனை அறிய முடியவில்லை போலும்; ஆனால், பாட்டி புரிந்து கொண்டார் அவனது ஆசைகளை; அவனது பிடித்தங்களை.

வாழ்க்கை பாடத்தில் முக்கிய அங்கம் நமது பாட்டி.. ஆம் நம்மை பாட்டியின் நினைவலைகளுக்கு இட்டு செல்கிறார் நமது எழுத்தாளர். இக்கதையினைப் படிக்கையில் கண்டிப்பாக ஒவ்வொருவர் மனதிலும் தாலாட்டும் நமது பாட்டியின் ஞாபகம்; அவரின் கை மணம்; அவரின் தாலாட்டு; அவரின் அறிப்பூர்வமான நுணுக்கங்கள். படித்த மேதைக்கில்லாத அனுபவ அறிவின் சிறப்பு. நம்மை வாய் கொள்ள புகழும் தன்மை; நமக்கில்லாதப் பெருந்தன்மை. இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பாட்டியின் அறியாமையில் திண்டாடும் பேரன்; அவரது அன்பில் திக்குமுக்காடும் பேரன்; படிக்காத மேதையாகிய பாட்டியின் சொல்லுக்குக் கட்டுப்படும் படித்த மேதையாகிய பேரன்; பட்டணத்தின் ஓடையில் அமிழும் கிராமிய படகா அல்லது கிராமிய கடலில் முழ்கும் பட்டண கப்பலா? பொறுத்து பார்ப்போம் இக்கதையின் நிறைவில்... அது வரை காத்து நிற்போம்.

காத்திருக்கிறோம் பிரபு அடுத்தத் தொடரை படிக்க...

சிவகாமி

Mahalingam said...

Excellent Prabhu!!I second Sivakami's comment!!To be honest, this time I felt it was bit long.. First part was bit emotional from Grandma's angle, so it was too touching, second was more from Grand Child's angle.. but I can see a lot of improvements.. Awaiting for your next part!!

Post a Comment